
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அந்த வாகனங்களை நான்கு சக்கர வாகனங்கள் என அரசு கருதுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் குறிப்பிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை அதற்கான காரணத்தை இணையதளத்தில் பார்த்த போது தங்களுக்கு நான்கு சக்கர வாகனம் உள்ளதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தின் இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் இணைக்கபட்டுள்ளன.
இதனை நான்கு சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அதனை நான்கு சக்கர வாகனம் என கருதி மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாகக் கருதப்படுவதால் அந்த வாகனங்களை வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளளன.
தாலுகா அலுவலகம் முன் மனு எழுதி பிழைக்கும் என்னிடம் கார் ஏது?
இது குறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சுபஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், அவர் 85 சதவீதம் மாற்றுத்திறனாளி என்றும், பெற்றோர்கள் இல்லாததால் சிவகங்கையில் நகர்ப்புற மேம்பாட்டு வீட்டு வசதி வாரிய தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு அங்கே அமர்ந்து மனு எழுதிக் கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்திவருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் மகளிர் உரிமை தொகைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி அவர் விண்ணப்பித்திருக்கிறார். அவருடன் விண்ணப்பித்த பெரும்பாலனோரின் மனுக்கள் ஏற்கப்பட்டும், அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 14ந்தேதி முதல் உரிமை தொகைக்கான மனு செய்திருந்த பலருக்கும் உரிமைத் தொகை கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு உரிமை தொகை கிடைக்காததால் அரசு சொன்ன வழி முறையின் படி கடந்த 18ஆம் தேதி மீண்டும் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
அப்போது அவரது பெயரில் சொந்த பயன்பாட்டில் நான்கு சக்கர வாகனம் இருப்பதால் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
“என்னுடைய பெயரில் வேறு யாரும் நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளார்களா அல்லது தவறுதலாக என்னுடைய செல்போன் எண் அதற்கு பயன்படுத்தப்பட்டதா என விசாரித்து பார்த்ததில் அப்படி ஒன்றும் இல்லை. என்னிடம் மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனம் உள்ளது. அதில், ஒரு மாற்றுத்திறனாளியாக எனது வசதிக்கு ஏற்ப இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இதனை நான்கு சக்கர வாகனம் என குறிப்பிட்டு மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது” என சுபஜா தெரிவித்தார்.

சசி என்ற மாற்றுத் திறனாளியிடம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாகக் கருதி அவரது மனைவியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் வேதனை தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய காரையும் காருக்கான சாவியும் கொடுங்கள் என கேட்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளதாக அங்கிருந்த ஆட்சியரின் உதவியாளர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.”
“பின்னர் சிவகங்கை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எனது நான்கு சக்கர வாகனம் தொடர்பாக புகார் அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என வேதனை தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 22ந்தேதி இ சேவை மையம் வாயிலாக மீண்டும் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த முறை மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனத்தின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து ஆர்சி புத்தகத்துடன் பதிவிட்டுள்ளேன்.
மேலும், “என்னைப்போல் ‘மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனம்’ வைத்துள்ள எட்டுக்கும் மேற்பட்டோருக்கு நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளதாகத் தெரிவித்து மகளிர் உரிமை தொகை மறுக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
“என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் தினந்தோறும் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் இவ்வாறான நலத்திட்ட உதவிகளை அளிக்க, மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து மனுவை பெற்று செல்ல வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் வெறும் கோரிக்கையாகவே உள்ளது.”
மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுபஜா கேட்டு கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் பலரும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்து வருகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் கைவிட்டு போன உரிமை தொகை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வை சேர்ந்த சசி என்ற மாற்றுத்திறனாளி, தன்னிடம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாகத் தெரிவித்து தனது மனைவிக்கு மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பிபிசி தமிழை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, அவர் தாம் நூறு நாள் வேலை செய்து வருவதாகவும், அவருடைய சொந்த செலவில் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதில் இருபுறமும் இரண்டு சக்கரங்களை இணைத்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது மனைவி மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது கணவர் சொந்த பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதாக மனு நிராகரிக்கப்பட்டது என அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது குறித்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளேன். இ சேவை மையத்தில் மீண்டும் பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.
அதனால் மீண்டும் மனுவில் வாகனத்தை குறிப்பிடாமல் உரிமை தொகைக்கான மனுவை அளித்துள்ளேன்” என்றார் அவர்.
மேலும், நான்கு சக்கர வாகனத்திற்கும் மாற்றுத்திறனாளி வாகனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் மனு நிராகரிக்கப்பட்டது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும், எனவே அரசு இனி வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வித பிரச்னையும் இன்றி மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சசி மிகுந்த ஆதங்கத்துடன் கேட்டு கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் அடிப்படை உரிமைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
இது போல் மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகனங்களை நான்கு சக்கர வாகனங்களாகக் கருதப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதீஷ் பாபு, “எங்களுடைய சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சுமார் 250 பேரில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாகக் கருதி மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சங்கத்தில் உறுப்பினராக இல்லாத பல மாற்றுத்திறனாளிகளுக்கும் அதே காரணத்தை முன் வைத்து உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதை ஒரு புகாராக எடுத்துச் செல்லத் தயங்கி பலரும் இதே பிரச்னையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே அரசு நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து அவர்களின் மனுக்களை ஆராய்ந்து தகுதியுடைய நபர்களுக்கு உரிமை தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், ஏனெனில் சமீபகாலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதில்லை என ஒரு புகாரைத் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகையைப் பொறுத்தவரை, சாதாரண மக்களுக்கு ஆயிரம் ரூபாய் என்ற நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவித்த அவர், எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு உரிமைத் தொகையை அரசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரினார்.
மேலும், உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்ட நபர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு அல்லது இ சேவை மையத்திற்கு செல்ல மற்றொரு நபரின் உதவியை நாடவேண்டியுள்ளது அல்லது ஆட்டோவை எதிர்பார்க்க வேண்டியுள்ளது என்றும், ஆட்டோவில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க பணம் செலவு செய்ய முடியாமல் பலரும் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்வதில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் சதீஷ் பாபு கோரிக்கை விடுத்தார்.

தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனம் என பதிவு செய்யப்பட்டு மகளிர் உரிமைத் தொகை அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவி மையத்திற்கு மாற்றுத்திறனாளிகளிம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இ சேவை மையம் மூலம் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், மேல் முறையீடு செய்பவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.
விண்ணப்பித்தவர்களின் ஆதார் எண் தரவுகளின் அடிப்படையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் இருசக்கர வாகனத்திற்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் என பதிவு செய்திருப்பின் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறினார்.
“மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்களை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அலுவலக அதிகாரிகள் நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து தகுதியுடைய நபர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே மனு நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் யாரும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை தகுதியான நபர்களுக்கு நிச்சயம் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்,” என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்