அமெரிக்க எல்லையில் காத்திருக்கும் ஆப்கன் மக்கள் சித்ரவதைகளை அனுபவிப்பது ஏன்?

அமெரிக்க எல்லையில் காத்திருக்கும் ஆப்கன் மக்கள் சித்ரவதைகளை அனுபவிப்பது ஏன்?

அமெரிக்க எல்லையில் உள்ள தங்குமிடத்தில் மக்கள்

மெக்சிகோ நகரத்தின் எல்லையில் உள்ள டிஜுவானாவுக்கு அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் வருவதால், அப்பகுதி நீண்ட காலமாக மனிதாபிமான நெருக்கடியின் மையமாக உள்ளது. அமெரிக்காவுக்குள் நுழையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

வரலாற்று ரீதியாக, பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், லத்தீன் அமெரிக்காவில் இருந்து அங்கு வந்தவர்கள். தற்போதைய சூழலில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து அதிகமானோர் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க எல்லையில் இருந்து கல் எறியும் தூரத்தில் இருக்கும் டிஜுவானா நகரத்தில் இருக்கும் ஆப்கான் குடும்பத்தினர், தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறுகின்றனர். “முஸ்லிம்கள் மட்டுமே இருக்கும் ஒரு குடியிருப்பில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்,” என்றனர்.

ஆனால், 11 நாடுகளைக் கடந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு வந்ததால், அவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியே செல்வதற்கு பயப்படுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து, அமெரிக்காவிற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த அவர்கள், ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை எனக் கூறுகிறார்கள். அதனால், அவர்கள் முதலில் இரானுக்கும், பாகிஸ்தானுக்கும் தப்பிச் சென்று அங்கு பல மாதங்கள் காத்திருந்தனர்.

பிறகு, அங்கிருந்து பிரேசிலுக்கு சென்று, அங்கு பனாமாவின் டேரியன் இடைவெளியை கால்நடையாகக் கடந்தனர். அங்கிருந்து கொள்ளையர்களால் இவர்கள் தாக்கப்பட்டு, தங்களது பொருட்களையும் இழந்தனர்.

ஒரு முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதக்குழுவினர், தங்களுடன் பயணித்த ஒரு ஆப்கன் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டதாகக் கூறுகிறார் அவர்களுடன் பயணித்த சுக்ரியா.

முன்னாள் பத்திரிகையாளரான சுக்ரியா, தனது ஒன்பது வயது மகள் கண்ணில் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது போனில் காட்டினார். “எங்களிடம் இருந்து அதிக பணம் கிடைக்கும் வரை, அந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் எங்கள் குழந்தைகளை அடித்துக்கொண்டே இருந்தனர்,” என்கிறார் சுக்ரியா. “அதைப் பற்றி இதற்கு மேல் பேசுவது மிகவும் கடினமாக உள்ளது,” என்கிறார் அவர்.

அமெரிக்க எல்லையில் உள்ள சுவர்

பட மூலாதாரம், Getty Images

ஆல்பர்கு அசாபில்/ மெஸ்கிடா தைபா தங்குமிடம் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. மக்களின் சத்தம், குழந்தைகளின் விளையாட்டு, சமையலறையில் சமைக்கும் ஆண்கள் என மக்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கு விளையாடும் குழந்தைகளிடம் ஒரு கால்பந்து உள்ளது. ஆனால், அவர்கள் விளையாடுவதற்குp போதுமான இடம் இல்லை. ஒரு சிறிய முற்றத்தில் பந்தை முன்னும் பின்னுமாக உதைத்து அவர்கள் விளையாடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து இந்தக் குழுந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை.

அமெரிக்காவிடம் எப்படி புகலிடம் கோருவது என்பதைக் கண்டுபிடித்து, அங்கு தங்களது வாழ்க்கையை எப்படியாவது மீண்டும் தொடங்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். சிலர் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க இரண்டு மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க வேண்டுமா என அவர்கள் யோசிக்கிறார்கள். சிலர் எல்லைச் சுவர்களில் உள்ள இடைவெளி வழியாக எல்லையைக் கடந்து சென்றதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவே விரும்புகிறார்கள்.

அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவியாக இருந்த சோஃபியா, “நாங்கள் கைவிடப்பட்டோம்,” என்கிறார்.

அங்கு தங்கியுள்ள மற்றவர்களைப் போலவே, சோஃபியாவும் தனது உண்மையான பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், அது அவர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கலாம் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாம் என அவர் பயப்படுகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூலில் உள்ள விமான நிலையத்தைச் சூழ்ந்தனர். பலரும் தங்களது குழந்தைகளை முன்வரிசையில் உள்ளவர்களிடம் கொடுத்து அனுப்பினர். அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் வெளியேற்ற விமானத்தைப் பிடிக்க முயன்றனர்.

அமெரிக்க தூதரகம் தனக்கு ஒரு விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறுகிறார் சோஃபியா. “ஆனால், அன்று நடந்த குழப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் என்னால் விமான நிலையத்திற்குக்கூட செல்ல முடியவில்லை,” என்றார் அவர்.

அதற்குப் பதிலாக, சோஃபியா, இரானுக்கும், பிறகு பாகிஸ்தானுக்கும் சென்றார். அங்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள், புலம்பெயர்வதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கூறியுள்ளார்கள்.

எட்டு மாதங்களுக்குப் பிறகும், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதனால், அவர் அங்கிருந்து பிரேசிலக்கு சென்று, பிறகு நடை பயணமாக, பேருந்து மூலமாக, படகுகள் மூலமாக, சில நேரங்களில் டாக்ஸி மூலமாக அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார்.

சோஃபியா சுக்ரியாவுடன் பயணம் செய்யவில்லை, ஆனால் பிபிசி பேசிய மற்ற புலம்பெயர்ந்தவர்களைப் போலவே பனாமாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையிலான டேரியன் இடைவெளியில் சோஃபியாவையும் ஒரு கும்பல் வழிமறித்துத் திருடியுள்ளது.

பலர் கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுத்து பனாமா வழியாகச் செல்கிறார்கள். அங்கு இதுவொரு நல்ல வியாபாரமாகிவிட்டது. ஆனால் ஆப்கானியர்கள், டேரியன் இடைவெளியைக் கடக்க சமூக ஊடக வழிமுறைகளை நம்பியிருந்தனர்.

எல்லையில் பயணிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இரண்டு துண்டாக்கப்பட்ட கைகள் ஆற்றில் அப்புறப்படுத்தப்பட்டதையும், வழியில் எண்ணற்ற சடலங்களையும் கண்டதாகக் கூறுகிறார் சோஃபியா.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், கேமரூனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், அங்கு பயணிக்கும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தனர். ஒரு காலத்தில் செல்ல முடியாததாகக் கருதப்பட்ட அடர்ந்த காடுகளின் வழியாக இப்போது புலம்பெயர்ந்தோர் செல்கின்றனர்.

“இது மிகவும் ஆபத்தானது. எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒருபோதும் அந்த வழியாகப் பயணித்திருக்க மாட்டேன்,” என்கிறார் சோபியா.

இரவில், காட்டுயிர்களின் சத்தம் கேட்டு, அச்சமடைந்தனர். பகலில், மழை பெய்தது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், அவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளையும், தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் சுமந்துகொண்டு மலைகளில் நடக்க வேண்டியிருந்தது. ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் அவர்களது பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றனர்.

அவர்களுடன் பயணித்த ஒருவர் ஆற்றைக் கடக்க முயன்று நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறுகிறார் சோஃபியா. “பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன்,” என்கிறார் சோஃபியா. இரண்டு துண்டாக்கப்பட்ட கைகள் ஆற்றில் அப்புறப்படுத்தப்பட்டதையும், வழியில் எண்ணற்ற சடலங்களையும் கண்டதாகக் கூறுகிறார் சோபியா.

“நாங்கள் அழுதோம். வழியில் இறந்து கிடந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. வெள்ளம் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம், அல்லது சில காட்டுயிர்கள் அவர்களைத் தாக்கியிருக்கலாம், அல்லது துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால், உண்மை யாருக்கும் தெரியாது,” என்கிறார் சோஃபியா.

சோஃபியா மற்றும் அவருடன் இருக்கும் மற்ற புலம்பெயர்ந்தவர்கள் தங்குமிடத்திற்கு வெளியே இருந்து அமெரிக்காவை பார்க்க முடிகிறது. சில நூறு அடிகள் நடந்தால், எல்லைச் சுவரைத் தொடலாம். இவ்வளவு தூரம் நடந்து வந்தும், சில நூறு அடிகளைக் கடப்பதற்காகக் காத்திருப்பதைப் பெரும் சித்திரவதையாக உணர்கிறார்கள் அங்கு காத்திருக்கும் மக்கள்.

அமெரிக்காவில் புகலிடம் பெறுவதற்காக, புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் சந்திப்பை ஏற்படுத்த சிபிபி ஒன் (CBP One) என்ற மொபைல் செயலிலை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த செயலி, புகலிடம் கோரும் நடைமுறையை எளிதாக்க உருவாக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறையில் அப்படி இல்லை.

புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள், அந்த செயலி சரியாக வேலை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பாதிக்கப்படக்கூடிய மக்கள், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவே பல மாதங்கள் மெக்சிகோவில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்த மக்கள் தங்குமிடம்

டிஜுவானாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் தங்குமிடங்கள், பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறுபவர்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது, ஆனால், இப்போது உலகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்கள் தெற்கு அமெரிக்காவை ஒட்டிய எல்லை நகரங்களுக்கு வருகின்றனர்.

அதனால்தான் லத்தீன் முஸ்லீம் அறக்கட்டளை 2022இல் இந்த தங்குமிடத்தைத் திறந்தது. வளர்ந்து வரும் முஸ்லீம் குடியேறிகளின் குழுவை பூர்த்தி செய்யவும், ஹலால் உணவு, தினசரி பிரார்த்தனைகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனி தங்குமிடங்களை உருவாக்கவும் இந்த அறக்கட்டளை முடிவு செய்தது.

அமெரிக்காவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரிந்த ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டால் கொல்லப்படலாம் அல்லத சிறைச்சாலைக்கு அனுப்பப்படலாம் என்கிற அச்சத்தில் உள்ளனர். ஆனால், அமெரிக்காவிற்கு வெளியேறிய ஆப்கானியர்களும்கூட ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

அமெரிக்க அரசு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்கானியர்களுக்கான தற்காலிக விசாக்களை நீட்டித்தது. ஆனால், இது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியாமல் எதிர்கால குடியேற்ற நிலை நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.

தற்போது, புலம்பெயர்ந்தோர் அதிகாரிகளைச் சந்திப்பதற்கே சிரமமாக உள்ள நிலையில், அவர்களைச் சந்தித்த பின்னரும் புகலிடம் கோருவது கடினமாக இருக்கும்.

அதிபர் பைடன் தலைமையிலான அரசு, எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளையும், தஞ்சம் கோருபவர்களுக்கான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்காவிட்டால், காங்கிரஸில் உள்ள சில குடியுரசுக் கட்சியினர் யுக்ரேன் மற்றும் இஸ்ரேலுக்கான உதவியை அங்கீகரிக்க மாட்டார்கள்.

இரண்டு மாதங்களாக அமெரிக்க எல்லையில் காத்திருக்கும் சோஃபியா, அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க தினமும் அந்த செயலின் மூலமாக முயன்று வருகிறார்.

“எனக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர். “நான் செல்வதற்கு வேறு இடம் இல்லை. அமெரிக்கா நட்பு நாடு என்று தாலிபன்களுக்கு தெரியும். அதனால், நான் மீண்டும் ஆப்கனுக்கும் செல்ல முடியாது,” என்கிறார் சோஃபியா.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *