
சில இந்திய இளைஞர்கள் ரஷ்யா சென்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விடலாம் என நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் முகவர்களின் வார்த்தைகளை நம்பியதால், தற்போது யுக்ரேனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பவதாகக் கூறுகிறார்கள்.
உதவியாளர் பணிக்கு அழைத்து வந்து, ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்ததாகவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள்.
தெலங்கானா உள்ளிட்ட கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர்.

இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்களை ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு முகவர்கள் உள்ளனர்.
பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த நான்கு பேரையும் ஒருங்கிணைத்துள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.
ரஷ்யாவில் ஹெல்பர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களைஅவர் ஈர்க்கிறார்.
அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களை வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
35 பேரை அனுப்ப திட்டமிட்ட முகவர்கள்
35 பேரையும் ரஷ்யாவுக்கு அனுப்ப முகவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் நவம்பர் 9, 2023 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினர். சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா, பின் மாஸ்கோவுக்கு 12 ஆம் தேதி சென்றுள்ளனர்.
நவம்பர் 16 அன்று, பைசல் கானின் அணி ஏழு பேரை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது.
அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
துபாயில் உள்ள முகவரான பைசல் கான், பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலைகள் பற்றி யாரிடமும் எங்கும் கூறவில்லை என இளைஞர்களின் குடும்பத்தினர் பிபிசியிடம் கூறினர்.
“நான் ராணுவ உதவியாளர் என்றேன். எனது முந்தைய வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். உதவியாளர் பணி குறித்து ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறேன். இதுவரை, பல்வேறு இடங்களில், இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்,” என அவர் அந்த வீடியோவில் பேசுகிறார்.
ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி பெற்றுள்ளது.
அவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்சன், தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியான், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பன் ஹுசைன், காஷ்மீரைச் சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தைச் சேர்ந்த ஹேமல், சையத் இலியாஸ் ஹுசைன், சமீர் அகமது மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த அப்துல் நயீம் ஆகியோர் அடங்குவர்.

உ.பி.யில் இருந்து ரஷ்யா சென்ற ஒருவர்
விஷயம் எப்படி வெளியே வந்தது?
குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லாதது குறித்து ரஷ்யாவில் இளைஞர்களிடம் இருந்து வெளியான காணொளிகள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரண்டு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த சையத் இலியாஸ் உசேன், முகமது சமீர் அகமது மற்றும் சுஃபியான் ஆகியோர் பேசுவதைக் காணலாம்.
“நாங்கள் பாதுகாப்பு உதவியாளர்களாக கொண்டு வரப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டாேம். ரஷ்ய எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, காட்டில் போர்க்களத்தில் இங்கே வைக்கப்பட்டுள்ளோம். பாபா விலாக்ஸின் முகவரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்,” என அந்த வீடியோவில் இளைஞர் கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஹுசைன் பேசுவதைக் காணலாம். கையில் காயம் இருப்பதைக் அவர் காட்டுகிறார்.
அதில், போர்க்களத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த வீடியோவில் கெஞ்சுகின்றனர்.

‘ரஷ்ய மொழியில் ஒப்பந்தங்களில் கையொப்பம் பெற்றனர்’
ரஷ்யா சென்றதும் அங்குள்ள அதிகாரிகள் பயிற்சிக்கு முன் இளைஞர்களை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர்.
அந்த பத்திரம் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், ஏஜென்டுகளை நம்பி அனைவரும் கையெழுத்திட்டதாகவும் நம்பப்பள்ளியைச் சேர்ந்த முகமது இம்ரான் தெரிவித்தார்.
பிபிசி அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது மூத்த சகோதரர் முகமது இம்ரானை சந்தித்தோம். அவர்கள் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கிறார்கள்.
அஃப்பானுக்கு மனைவியும், இரண்டு வயது மகனும், 8 மாத குழந்தையும் உள்ளனர். அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
யூடியூப்பில் பைசல் கான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
அஃப்ஸர் சகோதரர் முகமது இம்ரான் கூறுகையில், தனது சகோதரர் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது, எனக் கூறி தன் கவலையை வெளிப்படுத்தினார்.
“கடைசியாக டிசம்பர் 31ஆம் தேதி எங்களிடம் பேசினார். அதன் பிறகு அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை,” என்றார்.
“அங்கு பயிற்சியளிக்கப்படுவதாக அவர் எங்களிடம் சொன்னார், அது உதவியாளர் பயிற்சி போன்றது அல்ல. முகவர்களிடம் பேசினால், அது பயிற்சியின் ஒரு பகுதி, அழுத்தம் கொடுக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள் எனச் சொல்கிறார்கள்,” என்றார் முகமது இம்ரான்.
தொடர்ந்து பேசிய இம்ரான், “உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எனது அண்ணனின் காலில் இரண்டு தோட்டாக்கள் தாக்கியதாகக் கூறினார். அவரை உடனடியாக அழைத்து வர வேண்டும்” என இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி 18 முதல் எந்த தகவலும் இல்லை
தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சையத் சுபியான், ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடர்பில் இல்லை என்று அவரது தாயார் நசீம் பானு பிபிசியிடம் தெரிவித்தார்.
“இங்கே என்னிடம் போன் இல்லை. எப்போது கூப்பிடுவேன் என தெரியாது. நான் நலமாக இருக்கிறேன் என்றார் என் மகன். அதன்பின்னர் போன் திரும்ப வரவில்லை. எங்களுக்கு யாரும் இல்லை. மோதி அரசு தான் எங்கள் மகனை மீட்க வேண்டும்,” என்று அவர் புலம்பினார்.
இவர்களது குடும்பம் நாராயணப்பேட்டையில் வசித்து வருகிறது.
இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் இவர்கள் வாழ்கிறார்கள்.
24 வயதான சுஃபியான் இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி சுபியான் மேலும் 5 பேருடன் ரஷ்யா சென்றார். துபாயில் சந்தித்த இந்திய நண்பர்களுடன் ரஷ்யா செல்ல முடிவு செய்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை.
“வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கிறோம். போர்க்களத்தில் இருக்கும்போது தொலைபேசியில் பேசினால், சிக்னல்களின் அடிப்படையில் யுக்ரேன் படைகளால் அடையாளம் காண முடியும். தொலைபேசி சிக்னல்களை கண்டறிந்து ட்ரோன் தாக்குகிறது. போர்க்களத்தில் போன்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இல்லை” என்று பைசல் கான் பிபிசியிடம் கூறினார்.

10 இந்தியர்கள் எங்கே?
ரஷ்யா சென்ற 16 பேரில் 6 பேரின் இருப்பிடம் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும், மேலும் பத்து பேரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்றும் பைசல் தெரிவித்துள்ளார்.
வைரலான வீடியோவை அனுப்பிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹுசைன் என்னைத் தொடர்பு கொண்டார் அவர். “நாங்கள் அவரை வழிநடத்தி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றோம். அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். காணாமல் போனவர்களுக்காக தூதரகம் மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்” என்று பைசல் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
ரஷ்யா சென்ற தெலுங்கானா இளைஞர்களில் மேலும் சிலரின் இருப்பிடம் தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
“ஆறு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் என்னைத் தொடர்பு கொண்டு என்னை மாஸ்கோவிற்குப் பத்திரமாக அழைத்து வந்தான். இருவரும் முன்கள வீரர்களாகப் போரில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. உதவியாளர்கள் என்று சொன்னதால்தான் இளைஞர்களை அனுப்பினேன். ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அவர்களை ராணுவ வீரர்களாக மாற்றிவிட்டனர்,” என்றார்.

வாக்னர் குழுவில் சேர்க்கப்பட்டனரா..?
ரஷ்யாவில் தனியார் ராணுவம் என்று அழைக்கப்படும் வாக்னர் குழுமத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எங்கும் இல்லை.
அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவம் என்று அழைக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாக்னர் குழு ராணுவத்தில் பணியாற்றியதாக வதந்தி பரவுகிறது.
இதே விஷயத்தைப் பற்றி பைசல் கானிடம் பிபிசி கேட்டது.
அதற்கு அவர்,”முதலில் வாக்னர் குரூப் என்று சொன்னார்கள். பிறகு ரஷ்ய ராணுவத்தில் வேலைக்கு சேர்த்ததாக சொன்னார்கள். இருவரும் வெவ்வேறு குழுக்களா என்று கேட்டபோது, அனைத்தும் ரஷ்ய ராணுவம் என்று சொன்னார்கள்,” என்றார்.
இதே பிரச்னையில் ரஷ்யாவில் முகவராக இருக்கும் மொயினிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளியில் இருக்கும் அப்சானின் சகோதரர் முகமது இம்ரானிடம் பிபிசி பேசியது.
“ஒப்பந்த ஆவணங்கள் ரஷ்ய மொழியில் உள்ளன. பின்னர், எனது தம்பி பத்திரப்பதிவு விவரங்களை அனுப்பியபோது, அதை மொழிபெயர்த்து படித்தேன். “வாக்னர் குழு அதில் இல்லை, ஆனால் ரஷ்ய ராணுவம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
முகவராக செயல்படும் ‘பழனிசாமி’ யார்?
பிபிசியின் விசாரணையில், இந்த முழு விவகாரத்தின் பின்னணியிலும் ஐந்து முகவர்கள் இருப்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்.
ரஷ்யாவில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் வேலை என்ற பெயரில் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த மொயின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி ரமேஷ்குமார் ஆகியோர் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களுடன் தொடர்பில் உள்ள பைசல் கான் துபாயில் தங்கியுள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
விளம்பரம் கொடுத்து இளைஞர்களை சிக்க வைக்கிறார்கள்.
மும்பையில் உள்ள சுபியான் மற்றும் பூஜா என்ற ஏஜென்டுகளால் இந்திய இளைஞர்கள் சிக்குகின்றனர்.
சம்பவத்திற்குப் பிறகு மும்பையில் உள்ள முகவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பிபிசி பைசல் கானிடம் பேசியது. ரஷ்யாவில் மொயினிடமும் பிபிசியும் பேசியது. அவர் பிறகு பேசுகிறேன் என்று கூறி துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.
ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 3 லட்சம் வசூல்
ரஷ்யா சென்றால் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் என இளைஞர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், அங்கு சென்ற பிறகு பயிற்சி என்ற பெயரில் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.40-50 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். பைசல் கான் சம்பளம் பின்னர் அதிகரிக்கும் என்று சொல்லி வந்ததாக அந்த இளைஞர்கள் கூறினர்.
இளைஞர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்தை பைசல் கான் வசூலித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் தாங்கள் சேமித்த அல்லது கடன் வாங்கிய பணத்தில் அவருக்கு பணம் கொடுத்தனர்.
“எனது தம்பி துபாயில் இருந்தபோது முதல் வருடம் நன்றாக பணம் அனுப்புவார். ஏதாவது ஒரு மாதம் அனுப்பவில்லை என்றால் அடுத்த மாதம் அனுப்புவார். இரண்டாம் வருடத்தில் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். சம்பாதித்த தொகையை மறைத்து ஏஜெண்டுகளிடம் கொடுத்தார். ரஷ்யா சென்றால் அதிகம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், இப்போது நிலையும் மாறிவிட்டது” என்று தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியானின் மூத்த சகோதரர் சயீத் சல்மான் பிபிசியிடம் கூறினார்.
“ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ.3 லட்சம் வாங்கியுள்ளது உண்மைதான். அது செயல்பாட்டின் ஒரு பகுதி. நான் ரூ. 50,000 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை ரஷ்யாவில் உள்ள ஏஜென்டுகளுக்குக் கொடுத்து வந்தேன்” என்கிறார் ஏஜென்ட் பைசல் கான்.
ரஷ்யா போகும் வரை ரகசியம் காத்த முகவர்கள்
ரஷ்யா செல்லும் வரை அவர்கள் அங்கு செல்வது தெரியாது என்று சல்மான் கூறினார்..
“சுபியான் ரஷ்யா சென்றபோதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கிறேன் என்று முதலில் கூறி வந்தார். முகவர்கள் ரஷ்யா செல்வது பற்றி சொல்லவில்லை.
ஏனெனில் ரஷ்யா செல்ல ரூ. 20-25 லட்சம் செலவாகும். ஆனால், 3 லட்சத்தை மட்டும் எடுத்து ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எல்லோரும் எங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என வீட்டில் சொல்ல ஏஜெண்டுகள் விடவில்லை,” என்றார் சல்மான்.

பட மூலாதாரம், Getty Images
அசாதுதீன் ஒவைசி என்ன சொல்கிறார்?
கடந்த பிப்ரவரி 21ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சிலர் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியை சந்தித்தனர்.
ரஷ்யாவில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்து வரக் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தூதரக அதிகாரிகளிடம் பேசி இளைஞர்களை அழைத்து வருமாறு கூறினார்.
“இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ. 3 லட்சத்தை வசூலித்து ரஷ்யாவுக்கு கொண்டு சென்றனர். தற்போது இவர்களின் இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். நரேந்திர மோதியும் ஜெய்சங்கரும் ஒன்றிணைந்து அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அசாதுதீன் ஓவைசி கூறினார்.
மும்பையில் உள்ள இரு முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?
ரஷ்யாவின் போர்க்களத்தில் இந்திய இளைஞர்கள் சிக்கிய விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை பிரதிநிதி ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.
அவர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.
“இந்தியர்கள் கவனமாக இருக்குமாறும், இதுபோன்ற மோசடிகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
மறுபுறம், பிபிசி மின்னஞ்சல் மூலம் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும் தொடர்பு கொண்டது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இம்ரான் ஐதராபாத்தில் உள்ள நம்பல்லி காவல் நிலையத்தில் தனது சகோதரர் வராதது குறித்து புகார் அளித்தார்.
முகவர் பைசல் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
நம்பள்ளி போலீசார், பைசல் கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்