சபரிமலை: கூட்ட நெரிசலுக்கு மதச் சாயம் பூசப்படுகிறதா? உண்மையில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

சபரிமலை: கூட்ட நெரிசலுக்கு மதச் சாயம் பூசப்படுகிறதா? உண்மையில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

’டைனமிக் க்யூ’வில் காத்திருந்த பக்தர்கள்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கித்திணறி, 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள்.

பக்தர்கள் போராட்டம், எதிர்க்கட்சிகள் விமர்சனம் என சபரிமலை விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? என அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரியில் நடக்கும் மண்டல பூஜை, மகர ஜோதிக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்தாண்டு தரிசனத்துக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன, போதிய ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதால் கடும் சிரமத்துக்கு மத்தியில், நெரிசலில் சிக்கித்தவிப்பதாக பக்தர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தோல்வியை சந்தித்துள்ளதாக, காங்கிரஸ் மற்றும் பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

உண்மையில் சபரிமலையில் என்ன தான் நடக்கிறது? என்பதை அறிய பிபிசி தமிழ் சபரிமலைக்கு கள ஆய்வுக்காக நேரில் சென்றிருந்தது.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

நிலக்கல் பக்தர்கள் பார்க்கிங்

சபரிமலை எப்படி இருக்கிறது?

பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு நமது குழு சென்றபோது, மாலை அணிந்த பக்தர்கள் முதற்கட்டமாக பேட்டை துள்ளி வழிபாடு நடத்தும் எரிமேலி பகுதியில் இருந்தே பெருங்கூட்டமாக இருந்ததை பார்க்க முடிந்தது. பக்தர்களின் கூட்டத்துக்கு மத்தியில் வாகனங்கள் ஊர்ந்து மெதுவாக சென்றன.

அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் என்ற பகுதியை அடைந்தோம். பக்தர்களின் வாகனங்களை நிலக்கல் பகுதியிலேயே நிறுத்திய கேரள காவல் துறையினர், பார்க்கிங் வசதி ஏற்படுத்தியிருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலக்கல் பகுதியிலும் பக்தர்கள் பெருங்கூட்டம் தான்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறும் பக்தர்கள்

நிலக்கல் பகுதியில் இருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டுமே பக்தர்கள் பயணிக்க முடியும் என்பதால், நிலக்கல் பேருந்து நிலையத்தில் முண்டியடித்துக்கொண்டு பக்தர்கள் பேருந்தில் இடம்பிடித்து பம்பைக்கு பயணப்பட்டனர். 50 – 70 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பயணிப்பதை கண்டபோதே பேருந்து வசதி போதிய அளவில் இல்லை என்பதை உணரமுடிந்தது.

பக்தர்களின் பெருங்கூட்டத்தில் நாமும் ஒரு மணி நேரம் பயணித்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பம்பையை அடைந்தோம். அங்கு நாம் பேருந்தில் இருந்து இறங்கிய போது, மறு முனையில் சாமி தரிசனம் செய்து விட்டு நிலக்கல் செல்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள், அங்கும் பேருந்தில் இடம் பிடிக்க போராடிக்கொண்டிருந்தனர்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

செந்தில் குமார்

பக்தர்கள் சொல்வது என்ன?

தரிசனம் செய்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த சில பக்தர்களிடம் பயணம் குறித்து விசாரித்தது பிபிசி தமிழ்.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த செந்தில்குமார், ”10 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு வந்துள்ளேன், இந்த ஆண்டைப்போல மோசமான ஒரு ஏற்பாட்டை நான் பார்த்ததே இல்லை. திருப்பதி கோவிலில் இருப்பதைப்போன்ற வரிசை முறையை கடந்த சில ஆண்டுகளாக சபரிமலையில் அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த முறை ’டைனமிக் க்யூ’ என்ற பெயரில், குறிப்பிட்ட இடைவெளியில் கூட்டத்தை கொட்டகையில் அடைத்து பின் திறந்து விட்டு மீண்டும் அடைத்து அனுப்புகின்றனர்,’’ என்கிறார் அவர்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

பம்பையில் பக்தர்கள் கூட்டம்

‘மிக மோசமான ஏற்பாடு’

மேலும் தொடர்ந்த அவர், ‘‘திருப்பதியில் மக்கள் அடைக்கப்படும் இடத்தில் குடிநீர், அவசர உதவி, பிஸ்கட் போன்றவை வழங்குவார்கள், இங்கு பெயரளவுக்கு மட்டுமே அப்படி செய்கிறார்கள். கொட்டகையில் இருட்டில் மூச்சுவிடக்கூட இடமின்றி நின்றோம், மழை பெய்து நனைந்துகொண்டே சன்னிதானத்தை அடைந்தோம். கழிப்பிட வசதி இல்லாததால் பம்பை ஆற்றின் ஒரு பகுதியில் தான் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மறு பகுதியில் இந்த அசுத்தமான நீரில் பக்தர்கள் நீராடுகின்றனர். இப்படி மோசமான ஏற்பாடுகளைச் செய்தால் யாரும் இனி சபரிமலை வரமாட்டார்கள்,’’ என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

பெண் பக்தர்கள்

‘இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட வசதியில்லை’

பிபிசி தமிழிடம் பேசிய பெண் பக்தர்கள் சிலர், ‘‘இந்தாண்டு அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கிறது. இந்த கூட்டத்தில் சிக்கித்தவிப்பது பெண்களும், குழந்தைகளும் தான். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வரையில் பெண்கள், குழந்தைகளுக்கு என எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை. போதிய அளவு கழிப்பிடம் கூட இல்லை. வயதான பெண்களுக்கு என தனி வரிசை இல்லாமல், ஆண்களுடன் நாங்களும் பெரும் கூட்ட நெருக்கடியில் பயணத்து தான் தரிசனம் செய்தோம். ஆண்களாவது திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கிறார்கள், பெண்கள் என்ன செய்ய முடியும்? இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட வசதி இல்லாததால் சிரமப்பட்டோம்,’’ என வருத்தமாக தெரிவித்தனர்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

சங்கிலி முத்து

‘சாமியைக் காண 16 மணி நேரம் காத்திருந்தேன்’

பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூரை சேர்ந்து சங்கிலி முத்து, ‘‘15 ஆண்டுகளாக நான் சபரிமலைக்கு வருகிறேன். ஒருபோதும் பக்தர்களை இப்படி அடைத்து அனுப்பியது இல்லை. இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யாதபோது கூட, இதைவிட கூட்டம் இருந்தும் பக்தர்கள் நிம்மதியாகத்தான் சாமி தரிசனம் செய்தனர்,’’ என்கிறார் அவர்.

இதற்கு சான்றாக சிலவற்றை முன்வைத்த சங்கிலி முத்து, ‘‘வழக்கமாக பம்பையில் இருந்து 4 – 5 மணிநேரத்தில் சன்னிதானத்தை அடைந்து சாமியை தரிசித்து விடுவோம். இந்தாண்டு பல இடங்களில் பல மணி நேரம் அடைத்து நிறுத்தி அனுப்புவதால், 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தேன்.

சாமி தரிசனத்திற்கு 16-20 மணி நேரமாவதால், குழந்தைகள் வைத்திருந்தவர்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்யாமல் பம்பையிலேயே வீடு திரும்பிவிட்டனர். கேரள அரசு இனியாவது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார் வருத்தத்துடன்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம்

பம்பை – சன்னிதானம் பயணம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே அடைத்து நிறுத்தப்பட்டிருந்த கொட்டகைகளை கடந்து பிபிசி தமிழ் குழுவும் சன்னிதானத்தை நோக்கி பயணப்பட்டது.

பக்தர்கள் அடைக்கப்பட்ட கொட்டகையில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் இருந்தன. தவிர சில இடங்களில் போலீசார் குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினர். சிறுநீர் கழிக்க மட்டுமே சிறியளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததே தவிர கழிப்பறைகள் இல்லை. சில இடங்களில் சிறிய அறையைக்கொண்ட அவசர மருத்துவ உதவி மையங்கள் இருந்தன.

மழைக்கு ஒதுங்க ஏற்பாடுகள் இல்லை

செல்லும் வழியில் கனமழை பெய்தது. ஆனால், மழைக்கு ஒதுங்கி நிற்கக்கூட எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் இருந்தது. மழையில் நனைந்து கொண்டு சிலர் குழந்தைகளை தங்களுக்குள் அணைத்தபடி மழையில் இருந்து தற்காத்ததையும், முதியவர்கள் சாக்குப்பைகளை பிடித்தபடி ஆங்காங்கே நின்றதையும் காண முடிந்தது.

சன்னிதானத்தை நாம் அடைந்த போது, ஆயிரணக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்ததுடன், கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் ஆங்காங்கே கிடைக்கின்ற இடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்.

அங்கேயே தங்கிய நாம் அதிகாலையில் சாமி தரிசனம் செய்வதைக் காண சன்னிதானத்துக்குச் சென்றோம். 18-ம் படியில் ஏறி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கருவறையில் இருக்கும் ஐயப்பனை அதிகபட்சமாக 5-10 விநாடிகள் தரிசனம் செய்தனர்.

அங்கிருந்து புறப்பட்டு தரிசனம் முடித்து பம்பைக்கு திரும்பச் செல்லும் கழுதைப்பாதை வழியில் நடந்து பம்பையை அடைந்தோம். இந்தப்பாதையிலும் சிறுநீர் கழிக்க ஏற்பாடுகள் இருந்ததே தவிர, மழைக்கு ஒதுங்க ஒரு கூடாரம் கூட இல்லை.

இந்த ஒட்டுமொத்த பயணத்திலும், பெருங்கூட்டத்தில் பக்தர்கள் சிக்கித்திணறியதையும், ’டைனமிக் க்யூ’ வரிசையில் உயிரை பணயம் வைத்து மூச்சுத்திணறலில் நின்றதையும், அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் சிரமத்தை சந்தித்ததையும் நாம் காண முடிந்தது.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

’டைனமிக் க்யூ’ திறந்ததும் வரிசைக்கு செல்ல ஓடும் பக்தர்கள்

தேவஸ்தானம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா?

பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் சிலர், ‘‘தேவசம் போர்டு முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை. பக்தர்களுக்கும், இங்கு பணியாற்றும் பலதுறை அதிகாரிகளுக்கும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. நுழைவுப்பகுதி எங்கே, கழிப்பறை, தகவல் மையம், பேருந்து நிலையம் எங்குள்ளன என அறிவிப்பு பலகைகள் கூட போதிய அளவில் வைக்கவில்லை. நாங்கள் பக்தர்களிடம் நாள் முழுவதிலும், ’அங்க போங்க, இங்க போங்க’ என அறிவுரை கூற வேண்டியுள்ளது. அட்டையை எடுத்து நாங்களே அதில் எழுதி அறிவிப்புப் பலகையாக மாற்றியுள்ளோம்,’’ எனக்கூறி, தாங்கள் கைகளில் எழுதி தயாரித்த அறிவிப்பு பலகைகளை நம்மிடம் காண்பித்தனர்.

சபரிமலை கூட்ட நெரிசல்

கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள்

சபரிமலை விவகாரம் தொடர்பாக முன்பு பிபிசி தமிழிடம் பேசியிருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

சபரிமலை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கேரள காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வி.பி.சஜீந்திரன், ‘‘கேரள கம்யூனிஸ்ட் அரசு சபரிமலை தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் இம்முறை ‘முற்றிலும் தோல்வியை’ சந்தித்துள்ளது. தரிசனத்துக்கான ஏற்படுகளைச் செய்ய வழக்கமாக அனைத்து துறைகளையும் கூட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். இம்முறை அதைக்கூட செய்யவில்லை.

குறைந்த அளவு போலீசார், மின், குடிநீர், கழிப்பிட வசதி, வரிசைகளை அமைக்கும் கட்டமைப்புகள் என எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லை. லட்சணக்கணக்கான பக்தர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதே இதற்கு சாட்சி, சபரிமலையை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு அவசியமில்லை,’’ எனக்கூறியிருந்தார்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

கேரள காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வி.பி.சஜீந்திரன்

‘இந்துக்களுக்கு எதிரானது கேரள அரசு’

பிபிசி தமிழிடம் பேசிய கேரள பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் நம்பூதிரி, ‘‘இந்துக்களின் நம்பிக்கையை தகர்க்கும் நோக்கில் பெண்களை கம்யூனிஸ்ட் அரசு தரிசனத்துக்கு அனுமதித்ததில் இருந்தே, அவர்கள் இந்துக்களுக்கு எதிரானது என்பது உறுதியானது. தற்போது, வேண்டுமென்றே சபரிமலையில் ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல் விட்டு, இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கூட்ட நெரிசலுக்கு கேரள அரசின் அலட்சியப்போக்குதான் காரணம், நாங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகிறோம், அரசியல் செய்யவில்லை,‘‘ எனக்கூறியிருந்தார்.

கேரள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் விளக்கம் என்ன?

இத்தனை குற்றச்சாட்டுகள் குறித்து சபரிமலைக்கு ஆய்வு செய்ய வந்திருந்த கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமாரிடம் விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.

விளக்கமளித்த அமைச்சர் கணேஷ் குமார், ‘‘இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம் உள்ளதால் தான் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எங்களால் முடிந்த அளவு வசதிகளை மேம்படுத்தி உள்ளோம்.

சில குறைபாடுகள் உள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பக்தர்கள் சொல்லும் அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளிலும் பிரச்சினைகள் இல்லை. இங்கு தேவஸ்தானம், காவல்துறை, வனத்துறை என அனைவரும் இணைந்து தான் பணியாற்றி வருகிறோம்,’’ என விளக்கமளித்தார்.

சபரிமலை கூட்ட நெரிசல்
படக்குறிப்பு,

போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார்

‘அரசியல் ஆதாயத்துக்காக பொய் சொல்கின்றனர்’

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பக்தர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், பேருந்து வசதியின்றி திணறுகின்றனர் இது அரசின் தோல்வியை காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளதே? என கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த அமைச்சர் கணேஸ்குமார், ‘‘700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 800 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சபரிமலையை வைத்து அரசியல் செய்கின்றனர், இது ஆளும் கேரள அரசின் தோல்வி என அரசியல் ஆதாயத்துக்காக பொய் சொல்கின்றனர். பக்தர்கள் போராட்டத்துக்குப்பின் எதிர்கட்சிகள் தான் உள்ளனர்,’’ என விளக்கமளித்தார்.

அறநிலையத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

பக்தர்கள் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் விளக்கமளித்த, கேரள தேவசம் போர்டு (அறநிலையத்துறை) அமைச்சர் ராதாகிருஷ்ணன், ‘‘கொரோனாவுக்குப்பின் இந்தாண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. ஆனாலும், நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதால், இந்த ஆண்டு தினமும், 1 லட்சம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.

வரிசை ஏற்பாடுகளில் சிக்கல், அடிப்படை வசதிகள் இல்லை என எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே கூறுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்கின்றனர், பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம்,’’ எனக்கூறினார்.

ஆட்சியர் சொல்வது என்ன?

‘குழந்தைகள், பெண்களுக்கு ஏன் தனியான ஏற்பாடுகள் இல்லை? பல கடைகளில் தரமற்ற உணவு விற்பனையாவதுடன் கூடுதல் விலை வைக்கின்றனர்?’ என்ற கேள்வியை, பத்தினம்திட்டமா மாவட்ட ஆட்சியர் சிபுவிடம் முன்வைத்தோம்.

பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் சிபு, ‘‘பெண்களுக்கு உடைமாற்றும் அறை, கழிப்பிடம் போன்ற வசதிகள் உள்ளன. பிரத்யேகமாக குழந்தைகள், பெண்களுக்கு என இதுவரை சபரிமலையில் தனியான ஏற்பாடுகள் ஏதும் இல்லை. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். கடைகளில் தொடர்ந்து திடீர் ரெய்டுகள் நடத்தி, அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *