வரலாறு: வல்லபாய் படேல் மீதான ரூ.1.68 லட்சம் பணமோசடி வழக்கை ஜின்னா பணம் வாங்காமல் வாதாடியது ஏன்?

வரலாறு: வல்லபாய் படேல் மீதான ரூ.1.68 லட்சம் பணமோசடி வழக்கை ஜின்னா பணம் வாங்காமல் வாதாடியது ஏன்?

முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுக்கும், சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையேயான உறவு, சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும், பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகவே இருந்திருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானபோது சர்தாருக்கும் ஜின்னாவுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஒருமுறை ஆங்கிலேய அரசு படேல் மீது முறைகேடு செய்ததாக வழக்குப் பதிவு செய்தபோது, அவர் சார்பாக ஜின்னா வழக்குரைஞராக ஆஜராகும் அளவுக்கு இருவருக்கும் இடையேயான உறவு நல்ல முறையில் இருந்த காலமும் உண்டு.

ஆங்கிலேய அரசு படேலை சிறையில் அடைத்தபோது, ஜின்னா டெல்லியின் மத்திய சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜின்னா காங்கிரஸில் ஒரு முக்கிய தலைவராகவும், வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுவான ஆதரவாளராகவும் இருந்த காலம் இருந்தது.

இருப்பினும், காங்கிரஸில் காந்தி சகாப்தம் தொடங்கியபோது, அவர் முஸ்லிம் லீக்கில் சேர்ந்த பிறகு, இருவருக்கும் இடையே கசப்பு வளர்ந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

ஆங்கிலேய அரசால் படேல் மீது தொடரப்பட்ட வழக்கு என்ன? படேல் சார்பாக ஜின்னா ஆஜராக காரணம் என்ன?

இது தொடர்பாக, பிபிசி பல புத்தகங்களை அலசியது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தகவலறிந்தவர்களிடம் பேசியது.

சர்தார் படேல்

பட மூலாதாரம், PHOTO DIVISION

படக்குறிப்பு,

சர்தார் படேல்

ரூ.1.68 லட்சம் முறைகேடு செய்ததாக படேல் மீது குற்றச்சாட்டு

அப்போது வல்லபாய் படேல் ‘சர்தார்’ ஆகவில்லை. ஒத்துழையாமை இயக்கம் முழு வீச்சில் இருந்தபோது, ஆகமதாபாத் நகராட்சியிலும் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.

1917-இல், வல்லபாய் படேல் ஆகமதாபாத் நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1919-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம் 1920-இல் தொடங்கியது. செப்டம்பர் 28, 1920 அன்று வல்லபாய் படேல் தலைமையில் எல்லிஸ்பிரிட்ஜ் அருகே நடந்த கூட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கைவிடுமாறு அனைத்து மாணவர்களையும் காந்தி அழைத்தார்.

வல்லபாய் படேல் ஆகமதாபாத் நகராட்சியை சுதந்திர போராட்ட ஆயுதமாக பயன்படுத்தினார். முதல் ஆகமதாபாத் நகராட்சி அரசு கட்டுப்பாட்டில் இருந்து இலவச ஆரம்பக் கல்விக்கான மானியங்களை நிறுத்தியது.

ஆகமதாபாத் நகராட்சியின் பள்ளிக் குழு, அரசு மானியம் கிடைக்காததால், எந்த அரசாங்க கல்வி ஆய்வாளரும் பள்ளிக்கு வருகை தர முடியாது என்று முடிவு செய்தது. 

இதற்கிடையில், டிசம்பர் 1921-இல், இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு ஆகமதாபாத்தில் கூடியது. மேலும் நகராட்சி பள்ளிகளுக்கு ஒரு மாத விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் இந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவராக படேல் இருந்தார். அந்த நேரத்தில் ஜின்னாவும் ஆகமதாபாத் வந்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இதையெல்லாம் விரும்பாததால், ஆகமதாபாத் நகராட்சியை 1922-இல் நிறுத்தி வைத்தது.

‘சர்தார் படேல் ஏக் சிங் புருஷ்’ என்ற புத்தகத்தில், குஜராத்தின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான டாக்டர். ரிஸ்வான் காத்ரி, “அரசு 23-9-1921 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், பிரிவு 5-ன் கீழ் நகராட்சிப் பள்ளிகளுக்குச் செலவிடப்படும் தொகை சட்டத்தின் 42-வது பிரிவின் கீழ் சட்டவிரோதமாகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் கருதப்படும். அதன்படி, அத்தகைய செலவினத்தைச் செய்யும் கவுன்சிலர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும்.” (பக்கம் எண். 169-170) என எழுதியுள்ளார்.

படேல்

பட மூலாதாரம், DINODIA PHOTOS/GETTY IMAGES

டாக்டர். ரிஸ்வான் காத்ரி பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “இந்தத் தீர்மானத்தின்படி, ஆகமதாபாத் மாநகராட்சியின் 19 கவுன்சிலர்கள் மீது அரசாங்கம் ஆகமதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின்படி, நகராட்சியின் 1,68,600 ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது. 28- 4-1922 அன்று, பிரிட்டிஷ் அரசாங்கம் 19 கவுன்சிலர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. அந்த பணத்தை மீட்டெடுக்க ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சர்தார் படேலின் பெயரும் இருந்தது” என்றார்.

பள்ளிக் குழு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததால் வல்லபாய் படேலின் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில், அரசு மானியங்களை நிராகரிப்பதன் மூலம் தொடக்கப் பள்ளிகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க அவர் முடிவு செய்தார்.

“ஒரு வருடமாக நீடித்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி டிசோசா, இதில் பணப் பட்டுவாடாவும், சட்டவிரோத நடவடிக்கையும் இல்லை என்று கூறினார்” என்றார் ரிஸ்வான்.

இதனால் வல்லபாய் படேல் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வழக்கில் வெற்றி பெற்றனர்.

ஆனால் இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு, அதை எதிர்த்து பாம்பே உயர் நீதிமன்றத்தில் (இப்போதைய மும்பை) வழக்குத் தொடர்ந்தது.

சர்தார் சார்பாக வாதாடிய ஜின்னா

முகமது அலி ஜின்னா - சர்தார் படேல்

பட மூலாதாரம், RIZVAN KADRI

இந்த வழக்கு பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நார்மன் மெக்லியோட் மற்றும் நீதிபதி க்ரம்ப் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

டாக்டர். ரிஸ்வான் காத்ரி தனது ‘சர்தார் படேல் ஏக் சிங் புருஷ்’ புத்தகத்தில், “இரு தரப்பும் இரு நீதிபதிகள் முன் நீண்ட நேரம் வாதிட்டன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் கங்காவும், அரசு வழக்குரைஞர் பட்கரும் ஒத்துழையாமைக்கு எதிராக வலுவான வாதங்களை முன்வைத்தனர். சர்தார் படேல் தரப்பில் முகமது அலி ஜின்னா, ஹர்சித்தாபாய் திவேதியா, கோவிந்த்லால் நரபேராம் தாக்கூர், ஏ.ஜி.தேசாய் மற்றும் பி.என்.தேசாய் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் இருந்தனர். ஆனால் இரண்டு நீதிபதிகளும் பிரிட்டிஷ் அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர் (பக்கம் எண். 172)” என எழுதுகிறார்.

காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும் தனது ‘படேல், எ லைஃப்’ புத்தகத்தில், “தலைமை நீதிபதி மெக்லியோட் மற்றும் நீதிபதி க்ரம்ப் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். 

‘ஏக் சிங் புருஷ்’ புத்தகத்தில் சர்தார் படேல் முன்வைத்த ஆவணத்தின்படி, இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 25, 1924 அன்று வழங்கப்பட்டது.

முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், GETTY IMAGES

இலவசமாக வாதாடிய ஜின்னா

“1923-இன் மேல்முறையீட்டு எண். 155-இல், ‘தவறான விண்ணப்பம்’ என்ற வார்த்தையை விவாதித்த இரு நீதிபதிகளும், பட்ஜெட்டில் செய்யப்பட்ட விதியின்படி, நகராட்சி பள்ளியின் பராமரிப்புக்காக உறுப்பினர்கள் பணத்தை விண்ணப்பித்ததாகக் கூறினர். எனவே, அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், 19 கவுன்சிலர்களுக்கு வழக்காடு செலவுகளை வழங்குமாறும் பிரிட்டிஷ் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது,” என, ரிஸ்வான் காத்ரி எழுதுகிறார்.

பாம்பே உயர் நீதிமன்றம் பிரிட்டிஷ் அரசிடம் இந்த செலவுகளை செலுத்துமாறு கூறினாலும், வல்லபாய் படேலும் மற்ற கவுன்சிலர்களும் இழப்பீடு கோரவில்லை.

“இந்த வழக்குக்காக ஜின்னா ஒரு பைசா கூட வாங்கவில்லை. சர்தார் படேல் ஜின்னாவிடம் வாதாடியதற்கான கட்டணம் குறித்து கேட்டபோது ஜின்னா அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் ‘நாம் இந்த பிரிட்டிஷ் அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக” டாக்டர். ரிஸ்வான் காத்ரி கூறுகிறார்.

“இந்த வழக்கை எதிர்த்துப் போராட எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று ஜின்னா கூறினார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து வேலைகளையும் சர்தாரின் நெருங்கிய நண்பர் தாதாசாகேப் மல்வங்கர் மற்றும் முஸ்தபா மின்யா ஆகியோர் கையாண்டனர். ஜின்னா பணம் வேண்டாம் என சொல்வதற்கு முன்பே, சர்தார் படேல் வழக்குரைஞர்களின் கட்டணம் மற்றும் பிற செலவுகள் குறித்து முடிவு செய்தார். ஆனால், ஜின்னா அவரது கட்டணத்தை எடுத்துக்கொள்ளவில்லை” என ரிஸ்வான் காத்ரி கூறுகிறார்.

முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், TORNATO STAR ARCHIVES

படேலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜின்னா

சர்தார் படேலை ஜின்னா பாதுகாத்த மற்றொரு சந்தர்ப்பம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

மார்ச் 12, 1930 அன்று சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மகாத்மா காந்தியின் யாத்திரை தொடங்க இருந்தது. இதில், சர்தார் படேலுக்கு பெரும் பொறுப்பு இருந்தது. ஆனால் இந்த யாத்திரை புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, மார்ச் 7, 1930 அன்று, சர்தார் படேல் ராஸ் கிராமத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.

அவர் அரசுக்கு எதிராக ஆவேச பேச்சுகளை பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் போர்சாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

“அனைத்து வழக்குரைஞர்களையும் வெளியேறச் சொன்னார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் மட்டுமே இருந்தனர். சாட்சிகள் இல்லை, சாட்சியம் இல்லை. நேராக தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை எழுத நீதிபதி ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். 8 வரிகள் மட்டுமே அடங்கிய தீர்ப்பு அது. நீதிபதி படேலுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும், அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்” என, ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.

இந்த வகையான நடவடிக்கையால், நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது மிகப்பெரிய கோபம் வெடித்தது.

பல சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நூல்கள் எழுதிய ஆசிரியர் டி. வி. தம்ஹங்கர் தனது ‘சர்தார் படேல்’ புத்தகத்தில், “அவர் (ஜின்னா) சபையில் உரையாற்றும் போது, சபை உறுப்பினரின் கூற்றுப்படி, சர்தார் வல்லபாய் படேல் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல உரைகளை நிகழ்த்தியதாகக் கூறினார். அந்த பேச்சுகள் சட்டத்திற்கு எதிரானவையா என ஜின்னா கேள்வி எழுப்பினார்.

சர்தார் படேல் ஏதேனும் சட்டத்தை மீறியுள்ளாரா?, இந்த விவகாரம் குறித்து, சபையில் எங்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை, அவர் இதற்கு முன் ஏதேனும் சட்டத்தை மீறியிருந்தால், அவர் அதே வழியில் சட்டத்தை மீறப் போகிறார் என்று அதிகாரிகள் கருதினால், அத்தகைய நடவடிக்கை பொருத்தமானது என ஜின்னா பேசியுள்ளார் (பக்கம் எண். 118)” என எழுதுகிறார்.

சட்டசபையில், சர்தார் படேல் கைது குறித்து விவாதிக்க, சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க, பண்டிட் மதன் மோகன் மாளவியா முன்மொழிந்தார் என தம்ஹங்கர் மேலும் எழுதுகிறார்.

அதுகுறித்த விவாதத்தின் போது, ஜின்னா, “படேலுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கை பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகும். எனவே சர்தார் படேலின் வழக்கு முக்கியமானது என்பதை நான் சபையில் கூற விரும்புகிறேன். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். இது போன்ற தேவையற்ற வாதங்களால் சபையை தவறாக வழிநடத்தக்கூடாது” என பேசியுள்ளார்.

ஜின்னா படேலை ’சர்தார்’ என்று குறிப்பிட்டதாக, ராஜ்மோகன் காந்தி இதைப் பற்றி மேலும் எழுதுகிறார்.

சர்தார் வல்லபாய் படேல்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சர்தார் வல்லபாய் படேல்

ஜின்னா – சர்தார் படேல் இடையிலான உறவுகள்

இந்திரா காந்தியின் காலத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தலைவர் ரஃபிக் ஜகாரியா தனது ‘சர்தார் படேல் மற்றும் இந்திய முஸ்லிம்’ புத்தகத்தில், “படேல் ஜின்னாவையும் அவரது அரசியலையும் விரும்பவில்லை. ஆனால்,  தனிப்பட்ட முறையில் அதை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை சர்தார் படேல் எப்போதும் உறுதி செய்தார்” என எழுதுகிறார்

“மாஸ்டர் தாராசிங் மற்றும் அவரது கூட்டாளி ஜின்னாவைக் கொல்ல அகாலி தலைவர் திட்டமிட்டிருப்பதாக சில ஆதாரங்கள் படேலுக்குக் கிடைத்தன. படேல் உடனடியாக பஞ்சாபின் பிரிட்டிஷ் ஆளுநரான இவான் ஜென்கின்ஸ் உடன் தொடர்பு கொண்டு தாராசிங்கைக் கைது செய்வது குறித்து விவாதித்தார். தாராசிங்கைக் கைது செய்ய ஜென்கின்ஸ் உடன்படவில்லை. இது சீக்கிய-முஸ்லிம் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். இருப்பினும், தாராசிங்கின் திட்டம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரான கராச்சிக்கு அனுப்ப சர்தார் ஏற்பாடு செய்தார்(பக்கம் எண். 80)” என எழுதியுள்ளார்.

முஸ்லிம் லீக்கும் ஆங்கிலேயர்களும் சந்தித்துக் கொண்டார்கள் என்று சர்தார் பயந்ததாக ஜகாரியா எழுதுகிறார். சர்தார் படேலை பொறுத்தவரை, அவர் பின்னர் பிரிவினையை ஏற்றுக்கொண்டாலும், முன்பு பிரிவினைக்கு எதிரியாக இருந்தார். இருப்பினும், அபுல் கலாம் ஆசாத் படேலை ‘பிரிவினையின் சிற்பி’ என்று கருதுகிறார்.

‘சர்தார்-சச்சோ மான்சா, சாச்சி வாதா’ (Sardar-Sachho Mansa, Saachi Vata) என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஊர்விஷ் கோத்தாரி பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “ஜின்னா 1937 வரை கடும்போக்கு கொண்டவராக இருக்கவில்லை. ஆனால் அந்த ஆண்டில் பல்வேறு மாகாணங்களில் நடந்த தேர்தல்களில் முஸ்லிம் லீக் தோல்வியடைந்தது. பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார் ஜின்னா. ஆட்சிக்கான கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதுதான் பிரிக்கப்படாத இந்தியாவின் திருப்புமுனையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்களை அடக்கி ஆட்சி செய்ய விரும்புவதாக ஜின்னா உணர்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தானே வெற்றி பெற்றதால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முஸ்லிம் லீக்குடன் கைகோர்ப்பது சரியென காங்கிரஸ் நினைக்கவில்லை என்பது இயல்பானது என்கிறார், ஊர்விஷ் கோத்தாரி.

“பின்னர் ஜின்னா காங்கிரஸால் அதிகமாக எரிச்சலடைந்தார். முஸ்லிம்களுக்கான தனி நாடு என்ற எண்ணம் வலுவடைந்தது. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஈடுபடுத்தியபோது, காங்கிரஸ் மாகாண அரசாங்கங்கள் ராஜினாமா செய்தபோது, ஜின்னா மகிழ்ச்சியடைந்து, முஸ்லிம்களிடம் இதுகுறித்து கேட்டார். விடுதலை தினத்தைக் கொண்டாடுங்கள் என ஜின்னா மகிழ்ச்சியுடன் கூறினார். 1940-இல், லாகூரில் தனி பாகிஸ்தான் கோரி முஸ்லிம் லீக் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, உறவுகளில் விரிசல் ஏற்பட்டது” என ஊர்விஷ் கோத்தாரி கூறுகிறார்

“காங்கிரஸ் மாகாண அரசுகள் ராஜிநாமா செய்தபோது ஜின்னாவுடன் இந்து மகாசபை மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் மகிழ்ச்சியடைந்தனர். இவர்களுக்கும் காங்கிரஸுடன் பிரச்னை இருந்தது” என ஊர்விஷ் கோத்தாரி கூறுகிறார்.

முகமது அலி ஜின்னா

பட மூலாதாரம், GETTY IMAGES

“ஜின்னா 1937 வரை படித்த இந்துக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். ஜின்னா தனது மதச்சார்பற்ற கருத்துக்கள் மற்றும் தேசிய நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புக்காக போற்றப்பட்டார். சரோஜினி நாயுடு அவரை இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் மிகச்சிறந்த ராஜபுத்திரன் என்று அழைத்தார்” என  ஜகாரியா எழுதுகிறார்.

“முஸ்லிம் லீக் மீது வெறுப்பு இருந்தபோதிலும், சர்தார் படேல் ஜின்னாவுக்கு தனிப்பட்ட முறையில் தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை. சர்தார் எப்போதும் அரசியல் சாதுர்யத்துடனும், ராஜதந்திரத்துடனும் ஜின்னாவை சமாளித்து, காங்கிரஸுக்கு, அதாவது இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்தார். சர்தார் படேல் ஜின்னாவை அரசியல் சதுரங்கத்தில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஜின்னாவின் அனைத்து கோரிக்கைகளும் திருப்திகரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த சர்தார் எல்லா முயற்சிகளையும் செய்தார்” என ஊர்விஷ் கோத்தாரி கூறுகிறார்.

“ஜின்னா, பாகிஸ்தானைப் பெற்ற பிறகு, தனக்கு ‘கரையான் தின்ற பாகிஸ்தான்’ கிடைத்துவிட்டதாகக் கூறினார். ஜின்னாவின் இந்த உணர்வுக்குப் பின்னால் எங்கோ சர்தார் படேலுக்கு பெரும் பங்கு இருந்தது, ஏனென்றால் சர்தார் படேலின் பிடிவாதத்தால், ஜின்னாவால் விரும்பிய பாகிஸ்தானைப் பெற முடியவில்லை” என ஊர்விஷ் கோத்தாரி கூறுகிறார்.

‘ஜீனா- இந்தியா, பிரிவினை மற்றும் சுதந்திரம்’ (Jeena- India, Partition and Independence) என்ற புத்தகத்தில், “ஜின்னா ஆகஸ்ட் 7, 1947 அன்று கராச்சிக்கு புறப்பட்டார். இங்கு அரசியலமைப்பு சபையில், சர்தார் படேல் இந்திய அன்னையின் உடலில் இருந்து விஷம் அகற்றப்பட்டதாகக் கூறினார். இப்போது நாம் எல்லோரும் ஒன்று. இந்திய அன்னையின் வேர்கள் இங்கே உள்ளன. நதி மற்றும் கடல் நீரை நாம் பிரிக்க முடியாது, அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றால் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் திரும்பும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை (பக்கம் எண். 396)” என ஜஸ்வந்த் சிங் எழுதுகிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *