
பட மூலாதாரம், Getty Images
பாலத்தீன ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 100 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தனது நாட்டுக்கு எதிரான போர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் உலகத்தை பிளவுபடுத்தியுள்ளது போல காணப்படுகிறது.
இஸ்ரேல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இக்கட்டான இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவிற்குள் மக்களின் கருத்துகள் ஏறக்குறைய மதஅடிப்படையில் பிரிந்துள்ளது போலத் தெரிகிறது.
பாஜக இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆனால் அதே நேரம் மற்ற கட்சிகள் பாலஸ்தீனர்களின் உரிமைகள் பற்றியும் பேசுகின்றன.
“நேற்று இஸ்ரேல் ஒரு கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது. 26/11/2008 அன்று மும்பை இலக்கு வைக்கப்பட்டதைப் போலவே இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. இஸ்ரேல் போரை அறிவித்தது. அதன் ராணுவம் பதிலடி கொடுத்தது,” என்று பாஜக, சமூக ஊடகத்தளமான X இல் எழுதியது.
“பலவீனமான காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்ன செய்தது? ஒன்றுமில்லை. அது ஆவணங்களை அனுப்பியது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்து அமைப்புகள் மீது பழியை சுமத்த முயன்றனர். பாகிஸ்தான் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தனர். ஒருபோதும் மன்னிக்காதீர்கள், மறக்காதீர்கள்,” என்று அது மேலும் குறிப்பிட்டது.
“இஸ்ரேலின் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. பாலத்தீன மக்களின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான நியாயமான ஆசைகள், இஸ்ரேலின் நியாயமான தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்த பிறகு நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் கருதுகிறது. வன்முறை, தீர்வு எதையும் தராது. அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று காங்கிரஸ் ’X’ சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளது.

பட மூலாதாரம், X/INC INDIA
பாஜகவின் சமீபத்திய நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக மக்கள், அடல் பிஹாரி வாஜ்பாயின் 46 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
1977 இல் ஜனதா கட்சியின் வெற்றி பேரணியில் வாஜ்பாய், பாலஸ்தீனர்களை வெளிப்படையாக ஆதரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தான் ஆக்கிரமித்துள்ள அரேபியர்களின் நிலத்தை இஸ்ரேல் காலி செய்ய வேண்டும்’ என்று வாஜ்பாய் அதில் கூறியுள்ளார்.
பாஜக நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images
“ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. அது அரேபியர்களுக்கு ஆதரவளிக்காது, இஸ்ரேலை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மதிப்பிற்குரிய மொரார்ஜி பாய்( அப்போதைய பிரதமர்) நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார். ஒவ்வொரு கேள்வியையும் தகுதி மற்றும் குறைபாடுகளின் அடிப்படையில் பார்ப்போம் என்று நான் கூற விரும்புகிறேன். ஆனால் மத்திய கிழக்கைப் பொருத்தவரை, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அரபு நிலத்தை அது காலி செய்தே ஆகவேண்டும்,” என்று அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த வீடியோவில் மேலும் கூறுகிறார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இதுகுறித்து ட்வீட் செய்து, “ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் இன் மகாராஷ்டிர மாநில எம்எல்ஏவும் செய்தித் தொடர்பாளருமான வாரிஸ் பதானும் அடல் பிஹாரி வாஜ்பாயின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சில பாலத்தீனியர்களின் புகைப்படங்களை வெளியிட்ட அவர், ’இவர்கள் பயங்கரவாதிகளா கொல்லப்படுவதற்கு’ என்று வினவினார்.
சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் சந்தன் குமார் ஷர்மா ட்விட்டரில், “நான் சந்தன் ஷர்மா இஸ்ரேலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன். இந்திய அரசு ஆணையிட்டால், இந்தியாவின் ஒவ்வொரு இந்து தேசியவாதியும் இஸ்ரேலுக்கு சென்று அந்த நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள். இந்துக்களே, நீங்கள் தயாரா? இஸ்ரேலுக்கு ஆதரவாக 100 கோடி இந்துக்கள் உள்ளனர். இந்தியாவும் இஸ்ரேலும் வாழ்க,” என்று பதிவிட்டுள்ளார்.
“காஸாவில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை குறித்து இந்தியாவில் ட்விட்டரில் வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சியானது மக்களுடைய உணர்வுகளின் தரம் தாழ்ந்திருப்பதை காட்டுகிறது. மக்கள் தங்கள் வெறுப்பை ஆயுதமாக பயன்படுத்துவதை இது குறிக்கிறது,” என்று செய்தியாளர் ராணா அயூப் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவர் பல ட்ரோல்களை எதிர்கொண்டார்.
இந்தியாவிற்குள் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு கிடைத்து வருவதாகவும், இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் எதிர்வினை இந்தியாவில் மத அடிப்படையில் பிரிந்துள்ளதா என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியரான அஸ்வினி குமார் மொஹாபாத்ராவிடம் கேட்டோம்.
“ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய விதம், அதை இஸ்லாத்துக்கான போராட்டமாக காட்ட முயற்சி செய்வதை குறிக்கிறது. ஹமாஸ், அல்-அக்ஸா மசூதியை குறிப்பிடுகிறது. அதன் பயங்கரவாதிகள் மக்களைக் கொல்லும் போது அல்லாஹு அக்பர் என்று முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்த சண்டையை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் போராட்டமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய ஹமாஸ் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறான நிலையில் மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வதில் வியப்பில்லை,” என்று மொஹாபாத்ரா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
“ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. பிரதமர் மோதியும் அதையே கூறியுள்ளார். ஆனால் பாலத்தீனம் மீதான இந்தியாவின் கொள்கை மாறிவிட்டது என்று இதற்கு அர்த்தமல்ல.” என்றார் அவர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய பயணத்தின் போது பிப்ரவரி 17 ஆம் தேதி அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
‘ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் மற்றும் ஜெய் இஸ்ரேல்’ என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. பிரதமர் நரேந்திர மோதியும் மகிழ்ச்சியுடன் கைதட்டினார்.
பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் மற்றும் ஜெய் இஸ்ரேல் என்ற முழக்கங்களை எழுப்பியதாக எழுதியது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 1973-லும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி 1980-லும் உருவாயின. இரண்டுமே வலதுசாரி கட்சிகள். இரண்டுமே தங்களை தேசியவாத கட்சிகள் என்று சொல்லிக் கொள்கின்றன.
லிகுட் கட்சி, கிரேட்டர் இஸ்ரேல் பற்றி பேசுகிறது. அதே நேரம் ’ஒன்றுபட்ட இந்தியா’ என்ற குரல் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) இருந்து தொடர்ந்து எழுகிறது.
ஆனால் இந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்தியல் ஒற்றுமையை தேடுவது சரியா? இரண்டு நாடுகளும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் உருவாயின.
யூதர்களின் நாடாகவும், அவர்களுக்கான பாதுகாப்பான புகலிடமாகவும் இஸ்ரேல் பிறந்தது. ஆனால் அதன் தொடர்பு, உலகம் முழுவதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களுடன் மட்டுமே உள்ளது என்று சொல்லமுடியாது.
தேசிய மற்றும் மத கருத்துகள் இஸ்ரேலின் அடையாளத்திற்குள் உள்ளன.
இஸ்ரேல் ஒரு ஜனநாயக மற்றும் மத சார்பற்ற நாடாக இருந்தாலும், அந்த நாடு யூதர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் சிறுபான்மை அரபு இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மறுபுறம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மதம், மொழி மற்றும் இன வேற்றுமைகளில் ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒரு ஜனநாயக மத சார்பற்ற நாடாக மாறியது.
இந்த சித்தாந்தத்தின் காரணமாக பல தசாப்தங்களாக தேசிய அடையாளத்தில் மதம் ஆதிக்கம் செலுத்தவில்லை.
1980களில் வாக்கு வங்கி அரசியலால் இந்திய அரசியலில் வகுப்புவாதம் அதிகரித்தது. பாரதிய ஜனதாவின் எழுச்சியும் இந்த அரசியலுடன் நேரடியாக தொடர்புடையது.
ஆனால் இஸ்ரேல் அல்லது பாகிஸ்தானுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்தியா இன்னும் மாறவில்லை.
பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது. இது உண்மை. இஸ்ரேல் யூதர்களுக்கானது. இதிலும் பொய் இல்லை.
ஆனால் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்பது ஒரு கட்சியின் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். ஆனால் இந்தியா உருவாக்கப்பட்ட சித்தாந்தத்தின் அடிப்படை இதுவல்ல.
பிறகு ஏன் பாஜக தலைவர்களும், இந்தியாவின் பெரும்பான்மை இந்து மக்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்?
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்படும் போதெல்லாம், பெரும்பாலான இந்தியர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் மத அடிப்படையில் பிளவுபட்டதாக காணப்படுகிறது.
பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவதைக் காண முடிந்தது. சமூக ஊடகங்களில் இஸ்ரேலை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ஏராளமான முஸ்லிம்கள் பாலஸ்தீனர்களை ஆதரித்தனர்.
பாஜக தலைவர் கபில் மிஷ்ரா 2021 மே 10 ஆம் தேதி இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். “இஸ்ரேலின் சகோதர சகோதரிகளுக்கு முழு ஆதரவு உள்ளது. உங்கள் தைரியத்தையும் வலிமையையும் உலகமே பார்க்கிறது. நீங்கள் வழி காட்டுகிறீர்கள். எல்லா நேர்மறை மற்றும் தெய்வீக சக்திகளும் இஸ்ரேலுடன் இருக்கட்டும். நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் – இன்றும் எப்போதும்,” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மறுபுறம், 2021 மே 21 ஆம் தேதி ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) செய்தித் தொடர்பாளர் சையத் ஆசிம் வக்கார் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக “அல்ஹம்தோ லில்லாஹ், பாலஸ்தீனத்தின் வெற்றிக்கு நம் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பயங்கரவாதிகள் எல்லோரும் இஸ்ரேலுடன் இருந்தனர். மனித நேயத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீனர்களுடன் இருந்தனர். மனிதநேயம் வாழ்க, இஸ்ரேலின் ஆதரவாளர்கள் ஒழிக, பயங்கரவாதிகள் ஒழிக,” என்று ட்வீட் செய்தார்.
2021 இல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஆசிம் வக்கார் கூறியிருந்தார்.
ஆனால் இந்தியாவில் சாதாரண மக்கள், இஸ்ரேல்- பாலத்தீன மோதலை, இந்து – முஸ்லிம் மோதல் போலப் பார்க்கிறார்களா?
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து வாரிஸ் பதானிடம் கேட்டபோது, “முஸ்லிம்கள் பாலஸ்தீனர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார்கள். எங்கள் முதல் கிப்லா(அல் அக்ஸா மசூதி) அங்குதான் உள்ளது. மக்கா-மதீனாவுக்குப் பிறகு இது எங்களுக்கு மிகவும் புனிதமான இடம். எனவே முஸ்லிம்கள் இஸ்ரேலை எப்படி ஆதரிப்பார்கள்?,” என்று அவர் பதில் அளித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்வினை ஏன் மத அடிப்படையில் பிரிந்துள்ளது?
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களின் பிரச்சனை இந்தியாவில் ஏன் இந்த அளவிற்கு வகுப்புவாத ரீதியாக பார்க்கப்படுகிறது?
ஜேஎன்யுவில் உள்ள மேற்காசிய ஆய்வு மைய பேராசிரியர் ஏ.கே.பாஷாவிடம் 2021 இல் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, “இது 1980களில் அத்வானி தொடங்கிய அரசியலின் விளைவு இது” என்று பதில் அளித்தார். ”இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற கதையை இந்துக்கள் மத்தியில் பரப்புவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிம்பம் உருவாகியுள்ளது. பாஜகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் அரசியலைச் செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜக ஆதரவாளர்கள் இஸ்ரேலை விரும்புகின்றனர். இந்தியாவில் இஸ்ரேலுக்கு ஆதரவு என்பது முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வால்தான் ஏற்படுகிறது,” என்று பாஷா கூறினார்.
“முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளால் இந்துக்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். ஆனால் மனித உரிமைகள் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதால் இந்திய முஸ்லிம்கள் பாலஸ்தீனர்களை ஆதரிப்பது இல்லை. மாறாக இங்கும் மத ரீதியான காரணம் இருக்கிறது. இஸ்லாத்தின் முதல் கிப்லா அல்-அக்ஸா மசூதி காரணமாக முஸ்லிம்கள் பாலஸ்தீனர்களை ஆதரிக்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
2021 மே 20 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த சுரக்ஷா தோடாய் என்ற இந்துப் பெண், தனது நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவைப்பற்றி ட்வீட் செய்து ஒரு கூர்மையான கேள்வியைக் கேட்டிருந்தார்.
சுரக்ஷா தனது ட்வீட்டில், “பாகிஸ்தான் மக்களே, உங்கள் சொந்த நாட்டில் முஸ்லிம் அல்லாத வேறு மதத்தை சேர்ந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்கு நீங்கள் எப்போதாவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறீர்களா? ஆனால் நீங்கள் பாலஸ்தீனர்கள் விஷயத்தில் இஸ்ரேலை எதிர்க்கிறீர்கள். பாலஸ்தீனர்கள் முஸ்லிம்கள் என்பதால் இதை செய்கிறீர்களா? உங்கள் போலித்தனம் ஆச்சரியத்தை அளிக்கிறது. இது ஒரு அவமானம்,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
“பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் இஸ்ரேலை எதிர்ப்பதை இப்போது நான் காண்கிறேன். ஆனால் கட்டாய மத மாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை பற்றிப்பேச யாரும் முன்வருவதில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், @BJP
இந்துத்துவ அரசியல் உண்மையில் யூதர்கள் மீது அன்பு செலுத்தவில்லை என்று ஏ.கே.பாஷா சுட்டிக்காட்டினார்.
“முஸ்லிம்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். ஆனால் யூதர்களின் அரசியலுக்கும் இந்துத்துவ அரசியலுக்கும் இடையே எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை. இஸ்ரேலில் எத்தனை வலதுசாரி அரசுகள் வந்தாலும் அவற்றின் அறிவியல் சிந்தனையில் மத மரபு மற்றும் மத வெறி, ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் இந்துத்துவ அரசியலின் பிரதிநிதியும் எம்.பி.யுமான ஒரு பெண்மணி, பசுமாட்டின் சிறுநீரை குடிப்பதால் கொரோனா குணமாகும், நானும் அதை உட்கொள்கிறேன் என்று கூறுகிறார்.
யூத வலதுசாரிகளுக்கும் இந்துத்துவாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம், பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போன்றது,” என்று பாஷா தெரிவித்தார்.
“இஸ்ரேல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக கல்விக்காக செலவிடுகிறது. இந்துத்துவ அரசு இரண்டரை முதல் மூன்று சதவிகிதத்தில் நின்றுகொண்டிருக்கிறது. அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் யூதர்கள். இதில் ஒரு சில இந்துக்களை மட்டுமே பார்க்க முடியும். அவர்களும் இந்துத்துவ அரசியலின் தீவிர எதிர்ப்பாளர்கள்,” என்று அவர் கூறினார்.
“இந்துத்துவ அரசியலால் இடைக்கால சிந்தனைக்கு அப்பால் செல்ல முடியாது. அதேசமயம் யூதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தால் அரபு நாடுகள் கடலில் இருந்து சுத்தமான தண்ணீரை தயாரித்து பயன்படுத்தி வருகின்றன. இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை உலகமே பாராட்டி வருகிறது. இந்துத்துவ அரசியலால் யாருடைய வாழ்க்கை எளிதானது? எனவே இரண்டுக்கும் இடையிலான ஒப்பீடு பல முனைகளில் தர்க்க ரீதியாக இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்துத்துவ அரசியலும் யூதர்கள் மீதான அன்பும்
இந்துத்துவ அரசியல் உண்மையில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்ததா? வரலாற்று ஆவணங்களைப் பார்த்தால் அப்படி இல்லை என்று தெரிய வருகிறது..
விநாயக் தாமோதர் சாவர்க்கரை இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவத்தின் தந்தை என்று அவரது விமர்சகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று இருவருமே கருதுகின்றனர்.
1923 ஆம் ஆண்டு சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய ‘இந்து நேஷனலிஸம்: இந்துத்வா; ‘ஹூ இஸ் எ ஹிந்து’ என்ற புத்தகம் வெளியானது.
இந்த நூல் வெளியான பிறகு, ‘இந்துத்வா’ என்ற சொல் மிகவும் பிரபலமடைந்தது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டன. அத்வானியும் இந்த அடிப்படையில்தான் இந்தியர்களின் பிறந்த இடம் மற்றும் புண்ணிய பூமி பற்றிப்பேசினார்.
சாவர்க்கர் 1930களில் அரசியல் களத்தில் நுழைந்தார். அது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம். இந்த காலகட்டத்தில், சாவர்க்கர் இத்தாலி மற்றும் ஜெர்மனியை வலுவாக ஆதரித்தார்.
சாவர்க்கர் 1937 இல் இந்து மகாசபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1942 வரை அதன் தலைவராக இருந்தார். அவரது பதவிகாலம் இந்திய மற்றும் சர்வதேச வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை இடையே கருத்தியல் மட்டத்தில் மிக ஆழமான உறவு இருந்தது.
ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1926 முதல் 1931 வரை இந்து மகாசபையின் செயலராக இருந்தார் என்பதிலிருந்தும் இந்த உறவைப் புரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
சாவர்க்கரின் உரைகள் முக்கியமாக இரண்டு தலைப்புகளில் கவனம் செலுத்தின. ஒன்று சர்வதேச நிலைமை. மற்றொன்று இந்து-முஸ்லிம் உறவுகள்.
சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கர் அரசியலுக்கு வந்தார். அந்த நேரத்தில் ரோம்-பெர்லின் கூட்டணி இருந்தது. பின்னர் ஜப்பானும் அதில் சேர்ந்தது.
இத்தாலி மற்றும் ஜெர்மனியின் அரசுகள் ஜப்பானுடன் கூட்டு சேர்வதற்கு 1936 இல் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டன. இந்த முக்கியமான சம்பவத்தை இந்து மகாசபை மற்றும் இந்து தீவிர தேசியவாதிகள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
1938 ஆகஸ்ட் 1 ஆம் தேதி புனேவில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் சாவர்க்கர் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் ஜெர்மனியில் நாஸிசத்தையும், இத்தாலியில் பாஸிசத்தையும் ஆதரித்துப்பேசிய அவர், “இந்தியா எந்தப்பிரிவையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ கூடாது. ஜெர்மனிக்கு நாசிஸம் மற்றும் இத்தாலிக்கு பாஸிசம் ஆகியவற்றை பின்பற்ற எல்லா உரிமைகளும் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றுவதை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு ’போல்ஷிவிக்’ சித்தாந்தம் பிடிக்கிறது. பிரிட்டனுக்கு ஜனநாயகம் பிடிக்கிறது,” என்று குறிப்பிட்டார். (இந்து மகாசபாவின் பம்பாய் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு)
ஜெர்மனியில் நாசிஸத்தையும் இத்தாலியில் பாசிஸத்தையும் ஆதரிப்பதற்காக சாவர்க்கர் நேருவைத் தாக்கத் தொடங்கினார்.
சாவர்க்கர் புனேயில் ஆற்றிய உரையில், “ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா அல்லது இத்தாலியின் அரசுகள் என்ன கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்? ஒரு குறிப்பிட்ட கொள்கையின் மீது நமக்குள்ள பிடிப்பால் அதை செய்யலாமா? ஜெர்மனிக்கு எது நல்லது எது கெட்டது என்பது பண்டித நேருவை விட ஹிட்லருக்கு அதிகம் தெரியும். நாஸிசம் மற்றும் பாஸிசத்திற்குப் பிறகு ஜெர்மனியும் இத்தாலியும் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறியிருப்பது உண்மை. இரண்டு சித்தாந்தங்களும் அவற்றுக்கு மந்திரக்கோலாகவும், அவற்றின் ஆரோக்கியத்திற்கு ஒரு டானிக்காகவும் நிரூபணமாகியுள்ளன,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசிய நலனே பிரதானம்
“ஒரு குறிப்பிட்ட வகை அரசை தன் தேவைக்கேற்ப இந்தியா ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் பண்டித நேரு எல்லா இந்தியர்களின் பிரதிநிதியாக ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு எதிராக நிற்கத் தொடங்குகிறார். காங்கிரஸின் ஒரு பிரிவினர் சார்பில் பண்டித நேரு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிற நாடுகளைப் பற்றி தனது தவறான எண்ணத்தை வெளிப்படுத்தினால், நாட்டின் கோடிக்கணக்கான சனாதன இந்துக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்பதை நேரு இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று சாவர்க்கர் தனது உரையில் தெரிவித்தார்.
சாவர்க்கரின் தலைமையில் இந்து மகாசபையின் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் வெளிச்சத்திற்கு வந்தது.
மறுபுறம் சாவர்க்கர் ஆதரிக்கும் நாஸிசம் சிறுபான்மை யூதர்களுக்கு எதிரான அட்டூழியங்களையும் வெறுப்பையும் ஊக்குவித்தது.
சாவர்க்கர் தனது பல உரைகளில் ஹிட்லரின் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்தார்.
1938 அக்டோபர் 14 ஆம் தேதி சாவர்க்கர் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைத்தார். “ஒரு நாடு அங்குள்ள பெரும்பான்மை மக்களால் உருவாகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும். ஜெர்மனியர்களின் தேசியவாத இயக்கம் அந்த நாட்டில் உள்ளது. ஆனால் அங்குள்ள யூதர்கள் வகுப்புவாதிகள். தேசியவாதம் என்பது பகிரப்பட்ட புவியியல் பகுதியை சார்ந்து இருக்க முடியாது, மாறாக அது கருத்தியல், மதம், மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமையுடன் தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில் ஜெர்மானியர்களும் யூதர்களும் ஒரே நாடாக ஒன்றாக வாழ முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.
யூதர்களை சித்திரவதை செய்த ஹிட்லரை ஆதரித்த சாவர்க்கருக்கு பாஜகவிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் நல்ல மதிப்பு உள்ளது. நாடாமன்றத்தின் மைய மண்டபத்தில் நேரு போன்ற தலைவர்களுக்கு அருகே சாவர்க்கரின் படத்தை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு நிறுவியது.
அப்போதிருந்து பாஜக அரசுகள் சாவர்க்கரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், மைய மண்டபத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கின.
இஸ்ரேல் தொடர்பாக பாஜக தலைவர்கள் அல்லது இந்தியாவின் உள்நாட்டு அரசியல் என்னவாக இருந்தாலும், வெளியுறவுக் கொள்கையின் பார்வையில் பார்த்தால் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒருவித தொடர்ச்சி இருக்கிறது என்று பல வளைகுடா நாடுகளில் இந்திய தூதராக இருந்த தல்மீஸ் அகமது, கூறினார்.
“பாஜகவின் சித்தாந்தத்தின் அடிப்படையில், ஒத்த சித்தாந்தம் கொண்ட கட்சிகளுடன் உறவுகளை ஏற்படுத்த முடியும். இடதுசாரி கட்சிகளை பார்த்தால் அங்கும் இதேதான் காணக்கிடைக்கும். சதாம் உசேனின் பாத் கட்சியுடனும் யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர நலன்களிலிருந்து தொடர்கின்றன. வகுப்புவாத கோணத்தில் அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.
“வகுப்புவாத கோணம் மட்டுமே இருந்திருந்தால், வளைகுடா நாடுகளுக்கு பாகிஸ்தான் மிகவும் பிரியமான நாடாக இருந்திருக்கும். ஆனால் அது அப்படி இல்லை. இந்தியாதான் எண்ணெய் வாங்கும் என்பது வளைகுடா நாடுகளுக்கு தெரியும். பாகிஸ்தான் அவர்களுக்கு ஒரு சுமை. யாருமே சுமையை சுமக்க விரும்பமாட்டார்கள்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டணியாக மட்டுமே பார்க்க முடியாது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள், காலம் மற்றும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப முன்னேறி வருகின்றன. மோதி ஒரு இந்துத்வா தலைவர். ஆனால் அவரது ஆட்சியில் அரபு நாடுகளுடன் வணிகம் அதிகரித்துள்ளது. செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அவருக்கு தங்களின் உயரிய சிவிலியன் கெளரவத்தை வழங்கியுள்ளன,” என்று தல்மீஸ் அகமது குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக அரசுகளும் இஸ்ரேலும்
பாஜக தலைமையிலான அரசு முதன்முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். அவருடைய ஆட்சியின்போது இஸ்ரேலுடனான உறவுகள் மேலும் ஆழமடைந்தன.
இஸ்ரேலுடன் பொருளாதாரம், செயல் உத்தி, அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
வாஜ்பாய் ஆட்சியின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு பயணங்கள் நடந்தன. 1992ல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு 2000 வது ஆண்டில் முதல் முறையாக இந்தியாவின் தரப்பில் இருந்து அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியும், வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
தனது ‘மை கன்ட்ரி மை லைஃப்’ என்ற புத்தகத்தில் தனது இஸ்ரேல் பயணம் குறித்து லால் கிருஷ்ண அத்வானி எழுதியுள்ளார். ” 2000 வது ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு நான் மேற்கொண்ட ஐந்து நாள் பயணம் அந்த நாட்டுடனான எனது பழைய உறவைப் புதுப்பித்தது. புதிய சூழ்நிலைகளில் நட்பை அதிகரிக்கவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 1995 இல் பாஜக தலைவராக நான் இஸ்ரேல் சென்றிருந்தேன். பல பொதுவான விஷயங்களைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதில் எனது பங்கைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அத்வானி இந்த சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேலிடம் வலியுறுத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அத்வானி பாலஸ்தீன தலைவர் யாசர் அராஃபத்தை காஸாவில் சந்தித்தார்.
இதற்குப் பிறகு அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் 2003 இல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்றாக நிரூபணமானது.
ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, இன்று இந்தியாவிற்கு அதிக ஆயுதங்களை சப்ளை செய்யும் நாடு இஸ்ரேல்.
2017 ஜூலையில் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்குச்சென்றார். இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு செல்வது அதுவே முதல்முறையாகும்.
இந்தியாவில் இருந்து எந்த உயர்மட்ட தலைவர் இஸ்ரேலுக்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக பாலத்தீன பகுதிக்கு செல்வார். ஆனால் மோதி இந்த சுற்றுப்பயணத்தின் போது பாலத்தீன பகுதிக்கு செல்லவில்லை. சுற்றுப்பயணத்தின் போது ஒருமுறை கூட பாலத்தீனர்களை பற்றி குறிப்பிடவில்லை.
ஆனால் 2018 இல் மோதி பாலத்தீன பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவை அமெரிக்காவுடன் நெருக்கமாகக் கொண்டு வந்ததில் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள யூதர்கள் சமூகமும் அவர்களின் ஆதரவாளர்களும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு குழுவாக கருதப்படுகின்றனர். பாஜக ஆட்சியின் போது இந்தியா இந்த சமூகத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்