கும்பமேளா: பக்தர்களுக்கு கொடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்தால் புதிய ஆபத்து – ஏன்?

கும்பமேளா: பக்தர்களுக்கு கொடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்தால் புதிய ஆபத்து - ஏன்?

கும்பமேளா: பக்தர்களுக்கு கொடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் வந்துள்ள புதிய சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரயாக்ராஜ், நாசிக் உள்ளிட்ட இந்தியாவின் நான்கு நகரங்களில் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.

உலகின் மிகப்பெரிய இந்து பண்டிகையாகக் கருதப்படும் கும்பமேளாவுக்கு பக்தர்கள் பலரும் வருகை தருவதுண்டு. அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் (நோய் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து) பரிந்துரைக்கப்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கும்பமேளாவுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் அப்படி என்ன தொடர்பு?

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய இந்து பண்டிகையான கும்பளமேளாவில் நிறுவப்படும் சிகிச்சை மையங்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பக்தர்கள் பெரும்பாலும் சுவாசப் பாதையில் நோய்த்தொற்றுடன் வருவதால் அவர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் இயங்கி வரும் சில ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். தொழிலதிபர் லஷ்மி மிட்டல், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தெற்காசிய நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அமைப்பின் ஆதரவுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்டிபயாடிக் மருந்துகளால் என்ன ஆபத்து?

பிரயாக்ராஜ், நாசிக் உள்ளிட்ட இந்தியாவின் நான்கு நகரங்களில் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அவை எந்த நோக்கத்திக்காக நோயாளிகளுக்குத் தரப்படுகிறதோ அந்த நோக்கத்திற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதாவது குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படும்போது, அதன் விளைவாக தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் காலப்போக்கில் உருமாறக்கூடும்.

இதனால், நோய்த்தொற்று கிருமிகளுக்கு எதிராக வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சரிவர வேலை செய்யாமல் போகலாம். அவற்றை எதிர்க்கவோ, சிகிச்சை அளிக்கவோ முடியாமல் அந்த மருந்துகள் பயனற்றுப் போகலாம்.

உடலில் உள்ள பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராகவே மாறுவது மருத்துவ மொழியில் ‘ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு’ என்று அழைக்கப்படுகிறது.

இதன் விளைவாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்த்துச் செயலாற்றக்கூடிய திறன் வாய்ந்த நுண்ணுயிர்கள் அதிகரித்து அவற்றால் ஏற்படும் தொற்றுகளும் அதிகரிக்கும் சிக்கலை மருத்துவ உலகம் எதிர்கொள்கிறது.

இத்தகைய நோய்த்தொற்றுகள் அதிகரிப்பது பொது சுகாதாரத்திற்கு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கும்பமேளா ஆன்டிபயாடிக்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 2021ஆம் ஆண்டு ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவின் போது ஒரு பக்தரின் நாசியில் இருந்து சவ்வு மாதிரியைச் சேகரிக்கும் சுகாதாரப் பணியாளர்.

1.27 மில்லியன் இறப்புகள்

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய் நுண்கிருமிகள் செயலாற்றியதன் விளைவாக, 2019ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 12.7 லட்சம் பேர் இறந்துள்ளதாக ‘தி லான்செட்’ என்ற மருத்துவ ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

அதோடு, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு கோடியாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால், இதன் எதிர்விளைவால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் காரணமாக மட்டுமே, ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

70 ஆயிரம் பேரின் தரவுகள் சேகரிப்பு

பிரயாக்ராஜ், நாசிக் உள்ளிட்ட இந்தியாவின் நான்கு நகரங்களில் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

பிரயாக்ராஜ், நாசிக் உள்ளிட்ட இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறும் கும்பமேளா, வாரக்கணக்கில் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விழா நடைபெறும் நகரங்களின் ஆற்றங்கரைகளில் புனித நீராடுவது வழக்கம்.

கடந்த 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பிரயாக்ராஜ் (முன்பு அலகாபாத்) மற்றும் நாசிக் நகரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களில் பல்வேறு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற சுமார் 70 ஆயிரம் பேர் தொடர்பான தரவுகளை ஆய்வாளர்கள் சேகரித்தனர்.

விழாவையொட்டி அரசு அமைத்திருந்த 40க்கும் மேற்பட்ட மையங்களில், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அப்போது சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரயாக்ராஜ், நாசிக் நகரங்களில் குறிப்பிட்ட ஆண்டுகளில் நடைபெற்ற கும்பமேளாவில் 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இவர்களில் 2013இல் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களில், நோய்த்தொற்றுகளுக்கு ஆளானவர்களாக கண்டறியப்பட்டவர்களின் சராசரி வயது 46 மற்றும் அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள்.

காய்ச்சல், இருமல், சளி, தசை வலி, வயிற்றுப் போக்கு போன்ற பொதுவான அறிகுறிகளுடன் அவர்கள் சிகிச்சைக்கு வந்திருந்தனர்.

கும்பமேளா ஆன்டிபயாடிக்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அதிக அளவு ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்றில் ஒருவருக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரை

பல்வேறு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை மையங்களுக்கு வந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசு இலவச சிகிச்சை மையங்களுக்கு வந்தவர்களில் ஏறக்குறைய 69 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு சுவாசக் குழாய் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு அந்தத் தொற்று பாதிப்பைப் போக்குவதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த மையங்களில் அளிக்கப்பட்டன.

இந்த எண்ணிக்கைடை “ஆபத்தான உயர் விகிதம்” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, “மேல் சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகள் இயற்கையில் வேகமாகப் பரவக்கூடியவை” என்று சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

கும்பமேளா நடைபெற்ற குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையங்களுக்கு பல்வேறு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்றவர்களில் சராசரியாக மூன்றில் ஒருவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுவே, சளித் தொல்லைக்காக சிகிச்சைக்கு சென்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு ஆன்டிபயாடிக் தரப்பட்டுள்ளது.

ஆன்டிபாயடிக்கின் இந்தப் பரிந்துரை விகிதம், இந்தியாவில் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக் விகிதங்களின் முந்தைய மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது.

வெளிநோயாளிகளுக்கான (outpatient) சிகிச்சையில் இந்த விகிதம் பொதுவாக 39% முதல் 66% வரை இருக்கும்.

துரிதகதியில் சிகிச்சை

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள், குறைந்த நேர சிகிச்சை, நோயறிதல் குறித்த விரிவான தகவல் இல்லாதது என்று கும்பமேளாவில் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் என்பதையும் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஒவ்வொரு மையத்திலும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் – நோயாளி இடையிலான ஆலோசனை துரிதகதியில் நடைபெற்றன என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

“மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியுடனும் சராசரியாக மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே நேரத்தைச் செலவழித்தனர்.

அதாவது நோயாளிகளை நன்கு பரிசோதிக்காமல் அவர்களுக்கு ஆன்டிபாயடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. அத்துடன் இவை குறித்த மருத்துவர்களின் தேர்வு தன்னிச்சையாகத் தோன்றியதாக உள்ளது,” எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை மையங்களுக்கு வந்தவர்களுக்கு மூன்று நாட்கள் ஆன்டிபயாடிக் மருந்துகள் அல்லது மாத்திரைகள் எடுத்து க்ண்டு, மீண்டும் சிகிச்சைக்கு வர மருத்துவர்கள் பரிந்திரைந்தனர்.

ஆனால், ஒருநாள் பயணமாக கும்பமேளாவுக்கு வருகை தந்திருந்த பெரும்பாலான பக்தர்கள் விழாவில் பங்கேற்றுவிட்டு தங்களின் சொந்த ஊர் அல்லது வீடுகளுக்குத் திரும்பியதை ஆராய்ச்சியாளர்களால் அறிய முடிந்தது.

கும்பமேளா ஆன்டிபயாடிக்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சூப்பர்பக் நோய்த்தொற்றுகள் 2019இல் உலகளவில் 12.7 லட்சம் இறப்புகளை நேரடியாக ஏற்படுத்தியதாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது சிகிச்சை முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்

கடந்த 2013 மற்றும் 2015இல் கும்பமேளா நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையங்களின் மூலம் தாங்கள் அறிந்த பல்வேறு விஷயங்களின் அடிப்படையில், இதுபோன்ற திருவிழாக்களில் எதிர்காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய சிகிச்சை வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

  • கும்பமேளா போன்ற திருவிழாக்களில் அமைக்கப்படும் சிகிச்சை மையங்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வருவோருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தருவதைக் குறைக்கும் நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சிகிச்சை மையங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலோருக்கு மருத்துவர்களின் நேரடி கவனிப்பு தேவையில்லை. மாறாக மருத்துவ மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மூலம் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.
  • கும்பமேளா போன்ற திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் அமைக்கப்படும் சிகிச்சை மையங்களுக்கு வருவோரின் நோயறிதலை எளிதாக்கும் விதத்தில், ஆய்வகங்கள் அல்லது கதிரியக்கச் சோதனை வசதிகளுடன் அவை அமைக்கப்பட வேண்டும். ஏனெனில், நோயறிதலுக்கு உரிய பரிசோதனை வசதிகள் இல்லாமல் போனால், அதுவே நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாகப் பரிந்துரைக்க வழிவகுத்துவிடும்.
  • நோய்த்தொற்றுக்கு ஆளாவோருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்குப் போதுமான புரிதல் இருக்க வேண்டும்.
  • ஆன்டிபயாடிக் மருந்துகளை மூன்று நாட்களுக்கு வழங்கும் நடைமுறையையும் மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2025 கும்பமேளா புதிய தொடக்கமாக இருக்குமா?

2025 கும்பமேளா புதிய தொடக்கமாக இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2013இல் பிரக்யாராஜில் நடைபெற்ற கும்பமேளா, நோய்த்தொற்றுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட முதல் வெகுஜென விழாக்களில் ஒன்று.

இதன் தொடர்ச்சியாக, 2015இல் நாசிக்கில் நடைபெற்ற விழாவில் நோய்த்தொற்று குறித்த ஆய்வுகள், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.

“இவ்விரு ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் வரும் 2025இல் பிரக்யாராஜ் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் நவீன சுகாதார கட்டமைப்புக்கான அடித்தளம் அமைக்கப்படலாம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவரும், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் உதவிப் பேராசிரியருமான சச்சித் பல்சாரி.

இந்த சுகாதார கட்டமைப்பானது, சிகிச்சை மையங்கள் அடிப்படையிலான நோய் கண்டறியும் ஆய்வக வசதிகள், மருந்துகளின் பயன்பாடு மற்றும் கழிவுநீர் வசதிகள் தொடர்பான துல்லியமான தரவுகளைக் கொண்டிருப்பது ஆகிய மூன்று முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக பல்சாரி கூறுகிறார்.

நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவோருக்கு மருத்துவர்கள் ஆன்டிபாயடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பது தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

உலகில் அதிக அளவு மக்கள் கூடும் திருவிழாவான கும்பமேளா இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *