
யானைக் கூட்டம் நேற்று முன்தினம் (செப்.19) மோயர் சதுக்கத்தில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கின.
கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்குள் நுழைந்த யானை கூட்டம், அங்குள்ள 10 கடைகள் அடித்து நொறுக்கின. இதனால் 3 நாள்களாக மோர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக் காடுகள் ஆகிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன.
கொடைக்கானலுக்கு யானைகள் வரக் காரணம் என்ன?
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அனைவராலும் அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இங்கு பரந்து விரிந்த ஏரி, சூசைட் பாயிண்ட், மலர் பூங்கா, மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. காடுகளில் காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.
இங்கு நிலவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக, தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் ஆர்வமுடன் கொடைகானலுக்கு வருகை புரிகின்றனர். அவர்கள் இங்குள்ள சுற்றுலா இடங்களையும், இயற்கையின் அழகையும் ரசித்துவிட்டு செல்கின்றனர்.
பைன் மரக்காடுகள், குணா குகை, மோயர் பாயிண்ட்,பேரிஜம் உள்ளிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடியவை. இந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்ல வனத்துறையின் அனுமதி சீட்டு பெற வேண்டும்.

யானைக் கூட்டத்தால் சுற்றுலாவை நம்பித் தொழில் செய்வோரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி அடங்கிய 5 யானைகள் பேரிஜம் பகுதியில் சுற்றித் திரிவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்த யானைக் கூட்டம் நேற்று முன்தினம் (செப்.19) மோயர் சதுக்கத்தில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கின. அங்கிருந்த கூல்டிரிங்ஸ், சோளம், பிஸ்கட், காய்கறி போன்ற திண்பண்டங்களையும் அவை கபளீகரம் செய்தன.
யானைகள் அடித்து நொறுக்கிய கடைகள்
யானைக் கூட்டம் அடித்து உடைத்ததில் கடையை இழந்த சுரேஷ், இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
அப்போது அவர், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல யானைக் கூட்டம் இந்த பகுதியில் சுற்றி திரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூணாறு அருகில் இருப்பதால் யானைகள் இந்த பகுதிக்கு எளிதில் வந்துவிடுகின்றன,” என்கிறார் அவர்.
மேலும் அவர் கூறும்போது, “யானைகள் அடித்து நொறுக்கியதில் மோயர் பாயிண்ட் பகுதியில் இருந்த எனது கடை உட்பட 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கடைகளை சீர்செய்ய 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
வனத்துறையினரும் யானைகளை இங்கிருந்து துரத்த தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருகின்றனர்” என்றும் சுரேஷ் தெரிவித்தார்.

“கொடைக்கானலில் பேரிஜம் பகுதிக்கு காட்டு யானைகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக வருகை தந்தன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பு
யானைக் கூட்டத்தால் சுற்றுலாவை நம்பித் தொழில் செய்வோரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டியான அருண் பிபிசி தமிழிடம் பேசினார்.
அப்போது அவர் “நாங்கள் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
கடந்த 10 நாட்களாக பேரிஜம், பைன் மரக் காடுகள் போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அந்தப் பகுதிகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.
இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து என்னை போன்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறை யானைகளை விரட்டி மீண்டும் சுற்றுலா தலங்களை திறந்தால்தான் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்”, என்று கூறினார் அருண்.

மழைக்காலம் என்பதாலும், குட்டியுடன் இருப்பதாலும் யானைகள் இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின் யானைகளின் வருகை
இதுகுறித்து வனத்துறை அதிகாரியை பிபிசி தமிழிடம் கூறியபோது, “கொடைக்கானலில் பேரிஜம் பகுதிக்கு காட்டு யானைகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக வருகை தந்தன. அதற்கு பின் தற்போதுதான் அங்கு அவை மீண்டும் வந்துள்ளன.
மோயர் பாயிண்ட் பகுதியில் 20க்கும் மேற்பட்ட உணவு உள்ளிட்டக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் உள்ள உணவு வகைகளின் வாசனையால் ஈர்க்கப்பட்டு ஒரு குட்டியுடன் சேர்ந்த ஐந்து யானைகள் அந்த பகுதியில் நுழைந்துள்ளன.
அங்கு இருக்கக்கூடிய 10க்கும் மேற்பட்டக் கடைகளை அடித்து நொறுக்கி கடைகளில் இறந்த உணவை உண்டுவிட்டு சென்றிருக்கின்றன.
அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட 15 பேர் கொண்ட பேரிஜம், கொடைக்கானல் சரக வனக் குழுவினர் தீவிரமான முயற்சிகள் இறங்கி இருக்கின்றனர்,” என்று அதிகாரி கூறினார்.
மழைக்காலம் என்பதாலும், குட்டியுடன் இருப்பதாலும் யானைகள் இந்த பகுதிக்கு வந்திருக்கலாம்.
யானைகள் தற்போது வனத்துறையினர் கண்ணில் படவில்லை.
இந்த நிலையில் மீண்டும் மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக் காடுகள் வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்