மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வங்கிகள் பிடித்தம் செய்தால் என்ன செய்வது?

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வங்கிகள் பிடித்தம் செய்தால் என்ன செய்வது?

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், tndipr

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் 13 பேருக்கு ஏடிஎம் கார்டு போன்ற அட்டையை வழங்கினார்.

பலரது வங்கிக்கணக்கிற்கும் திட்டம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாகவே பணம் செலுத்தப்பட்டது. அதேநேரம், ஒருசிலர் தங்களுக்கு இன்னும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

அதேபோல், இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் சிலரின் வங்கிக்கணக்கில் `மைனஸ் பேலன்ஸ்` இருக்கிறது. சிலருடைய கணக்கு டீஆக்டிவேட் ஆகியிருக்கிறது. எனவே, தங்களுக்கு எவ்வாறு உரிமைத் தொகை கிடைக்கும் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், ELAMBHAHAVATH IAS

மைனஸ் பேலன்ஸ், கணக்கு முடக்கப்பட்டு இருந்தால் என்ன ஆகும்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தோரில் பலரின் வங்கிக்கணக்கிலும் சிறுசிறு பிரச்னைகள் உள்ளன. சிலருக்கு அவர்களின் கணக்கில் உள்ள தொகை மைனஸில் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் ஒருசிலரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தபால்துறையுடன் இணைந்து மணி ஆர்டர் மூலம் உரிமைத் தொகை அனுப்பப்பட்டு வருகிறது. பயனாளர்களின் வீட்டுக்கே சென்று உரிமைத் தொகையை வழங்கும் தபால்காரர்கள் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்கும் விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

வங்கிக்கணக்கு இல்லாத 2.43 லட்சம் பயனாளர்களுக்கு மணி ஆர்டர் மூலம் மகளிர் உரிமைத் தொகை சென்று சேர்ந்துள்ளதாக இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியான கே. இளம்பகவத் ஐஏஎஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், ELAMBHAHAVATH IAS

மினிமம் பேலன்ஸ் பிடிக்கப்பட்டால் என்ன செய்வது?

ஒருசிலரின் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால் உரிமைத் தொகையில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏற்கனவே வாங்கிய கடனுக்காகவும் உரிமைத் தொகையை வங்கிகள் நேர் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்துகொள்வதாக புகார்கள் வந்துள்ளன. உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து முதல்வரின் முகவர் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளர்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், tndipr

விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்?

மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு எதற்காக எல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பொருந்துவதாக இருந்தால் உரிமைத் தொகை நிராகரிக்கப்படலாம்.

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள்

ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள்

ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள்

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள்

வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்

ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்

சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள்

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், tndipr

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர்

சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்

ஒருவேளை நீங்கள் விண்ணப்பிக்கையில் கொடுத்த மொபைல் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலோ, நெட்வொர்க் சிக்னல் இல்லாத இடத்தில் இருந்தாலோ, அல்லது ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் உள்வரும் அழைப்போ, குறுஞ்செய்தி வருகையோ தடைப்பட்டிருந்தாலோ உங்களுக்கு குறுஞ்செய்தி வராமல் போக வாய்ப்பிருக்கும். எனவே அதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல், கள ஆய்வுப் பணிகளுக்கு அலுவலர்கள் வரும்போது பூட்டப்பட்டிருக்கும் வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகள், விண்ணப்பதாரர்கள் புலம்பெயர்ந்து இருத்தல் போன்ற காரணங்களால் அவர்களின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்படும். முப்பது நாட்கள் அவகாசத்துக்குள் தங்களது விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், Getty Images

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

விண்ணப்பத்தின் முடிவு நிலை என்னவாயிற்று என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 18ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

அதில், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான விவரங்களை அறிந்து கொள்வதற்கான இலவச அலைபேசி எண்களையும் மறக்காமல் குறிப்பிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் அதில் தெரிவிக்கப்படும்.

நிராகரிப்பு காரணம் பற்றிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம். ஒருவேளை விண்ணப்பத்தில் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.

குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.

தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.

நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம். அதற்கும் 30 நாட்கள்தான் அவகாசம்.

இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கள ஆய்வு தேவைப்படும் எனில், அதுவும் மேற்கொள்ளப்படும்.

அந்தக் கள ஆய்வுக்கான முடிவுகள், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வாயிலாக சரிபார்க்கப்படும்.

இந்த மேல்முறையீடு தொடர்பான நடைமுறைகள் அனைத்துமே இணையம் வழியாகவே செய்யப்படவுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், ELAMBHAHAVATH IAS

மகளிர் உரிமைத் திட்டம் – பிரத்யேக ஏடிஎம் கார்டு ஏன்?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து தேர்வாகியுள்ள பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என குறிப்பிடப்பட்டு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருந்தும் அது பயன்பாட்டில் இல்லாதோர், பான் அட்டை இல்லாதவர்கள், ஆதார்-பான் எண்ணை இணைக்காததால் ஏடிஎம் கார்டு வங்கியில் கிடைக்கப் பெறாதவர்கள் ஆகியோருக்கு தபால் நிலையங்களிலும், கூட்டுறவு வங்கிகளிலும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முகாம்கள் நடைபெற்றன.

அந்த முகாமில் விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு வந்துள்ள உரிமைத் தொகையை எளிதில் எடுப்பதற்காக இந்த பிரத்யேக ஏடிஎம் கார்டு விநியோகம் செய்யப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை

பட மூலாதாரம், Getty Images

மகளிர் உரிமைத் தொகையைப் பெற தகுதிகள் என்ன? – ஒரு நினவூட்டல்

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *