
பட மூலாதாரம், Congress
இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விதான் எல்லாவற்றிலும் முக்கியமானது.
இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று துவங்குகிறது. கூட்டணியில் பல தலைவர்களுக்கும் பல கணக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க. தவிர்த்து, அந்தக் கூட்டணி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன?
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மாலையில் துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் 26 (இன்னும் சில கட்சிகள் சேரலாம்) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 62 தலைவர்கள் பங்கேற்பார்கள்.
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் ஜூலை மாத மத்தியில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடைபெறுகிறது.
எல்லாக் கட்சிகளுக்குமான இலட்சினை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஹாரின் முதலமைச்சர் நிதீஷ் குமார், அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். வியாழக்கிழமையன்று மாலையில் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் இந்தத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
ஏற்கனவே இருந்த கட்சிகளோடு, புதிதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி (பிடபிள்யுபி) என்ற கட்சியும் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள், இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சில தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டணிக்கான இலச்சினையை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர்களை நியமிப்பது, முறையான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி 9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்றில் எந்த இலச்சினை அதிகாரபூர்வமானதாக இருக்கும் என்பது மும்பை கூட்டத்தில் முடிவுசெய்யப்படும்.
பிரதமர் வேட்பாளர் யார்?
மேலும், இந்தக் கூட்டணியின் சார்பில் சமூக வலைதளங்களில் தகவல் தொடர்பு, ஊடகங்களில் தகவல் தொடர்பு, ஒருங்கிணப்பு ஆகியவற்றுக்கு தனித் தனி குழுக்களை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் விவகாரம் அவ்வளவு சுலபமானதாக இருக்காது. ஷரத் பவார், மமதா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கான போட்டியில் இருக்கின்றனர்.
அதே சமயம் ஒருங்கிணைப்பாளர் என ஒருவரை அறிவிப்பதிலும் சில கட்சிகளுக்கு விருப்பமில்லாததைப் போலத் தெரிகிறது. பதிலாக, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அறிவிக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். மேலும், மாநில அளவிலும் தேசிய அளவிலும் இடங்களைப் பிரித்துக்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
ந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை வெகு நாட்களுக்கு தவிர்க்க முடியாது.
இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விதான் எல்லாவற்றிலும் முக்கியமானது. ஆனால், இப்போதைக்கு இந்தக் கேள்விக்கான பதிலை இந்தியா கூட்டணி தவிர்க்கவே விரும்பும். சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் இது குறித்துக் கேட்டபோது, தங்களிடம் நிறைய பேர் அந்தப் பொறுப்புக்கு வரும் வகையில் இருப்பதாகவும் ஆனால், தற்போதைய பிரதமரின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துவிட்ட நிலையில், பா.ஜ.கவிடம் வேறு யார் இருக்கிறார்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார்.
ஆனால், இப்படி பதில் கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை வெகு நாட்களுக்கு தவிர்க்க முடியாது.
காங்கிரசிற்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான மோதலும் கூட்டணிக்கு ஒரு சவாலாகவே இருக்கும். கட்சி நிர்வாகிகள் மட்டத்தில், ஒரு கட்சி மீது இன்னொரு கட்சிக்கு எந்த அளவுக்கு விரோத மனப்பான்மை இருக்கிறது என்பது புதன்கிழமை நடந்த சம்பவத்தைப் பார்த்தாலே புரியும்.
புதன்கிழமையன்று காலையில் காங்கிரசின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் ராகுல் காந்தி மையமாக இடம்பெற்றிருந்தார். ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலின் படம் இடம்பெறவில்லை. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், தாங்கள் அரவிந்த் கேஜ்ரிவாலையே பிரதமர் வேட்பாளராக காண விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், விரைவிலேயே காங்கிரஸின் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட புதிய பதிவில் இந்தியா கூட்டணியில் உள்ள எல்லா முதலமைச்சர்களின் படமும் இடம்பெற்றிருந்தது, அரவிந்த் கேஜ்ரிவாலின் படம் உட்பட.
கூட்டணியின் முன் உள்ள சவால்

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது
இந்தக் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணியாக அமைய, வேறு சில சவால்களையும் இந்தக் கூட்டணி தாண்டியாக வேண்டும் என்கிறார் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்களில் ஒருவர். “கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மாநிலக் கட்சிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. சில கட்சிகளுக்கு இரண்டு மாநிலங்களில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மாநிலக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், ஒருவரால் இன்னொருவருக்கு பலன் கிடைக்காது. அதேபோல பாதிப்பும் இருக்காது. ஆனால், காங்கிரசிற்கு மட்டும் பலனும் இருக்கும் பாதிப்பும் இருக்கும். காரணம், பல கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இடங்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ளாது.
குறிப்பாக, தில்லியிலும் பஞ்சாபிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொள்ளாது. அதேபோல, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில் தங்களுக்குப் பெரிய பலனேதும் இல்லை என சமாஜ்வாதி கட்சி கருதுகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் சி.பி.எம்முடன் கூட்டணியில் இருப்பதால், அங்கே திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடியாது. கேரளாவில், சிபிஎம்முடன் கூட்டணி அமைக்க முடியாது. இந்தச் சிக்கல்களுக்கு காங்கிரஸ் ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும்.
ஒரே தேர்தல் அறிக்கையை முன்வைத்து போட்டியிடுமா ?
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை நாடு முழுவதும் ஒரே கூட்டணியாக போட்டியிடுகிறதா என்பது முக்கியம். அதாவது ஒரு தொகுதியில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர்தான் களத்தில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது, தில்லி, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் அம்மாதிரி போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
இந்த மாநிலங்களை விட்டுவிட்டால், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஒரிசா, உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலாவது ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும். மீதமுள்ள குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும்தான் நேரடிப் போட்டி. பிற கட்சிகள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
அதேபோல, இந்த இந்தியா கூட்டணி ஒரே தேர்தல் அறிக்கையை முன்வைத்து போட்டியிடுமா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக, பா.ஜ.கவின் சார்பில் நரேந்திர மோதி என்ற வலுவான பிரதமர் வேட்பாளர் நிற்கும்போது, இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக ஒருவரை முன்னிறுத்தாமல் இருப்பதோ, நாடு முழுவதும் தெரியாத ஒருவரை முன்னிறுத்துவதோ பாதகமாகவே முடியும். இந்தச் சிக்கல்களுக்கு இந்தியா கூட்டணி என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் அந்தத் தலைவர்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள்
ஆனால், பல்வேறு வகைகளில் இந்தியா கூட்டணி பா.ஜ.கவுக்கு கடுமையான சவாலை முன்வைக்கும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பு செயலரான எஸ்.வி. ரமணி. “இந்தக் கூட்டணியில் பல கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. இவை மொத்தமாக 40 சதவீதத்திற்கு அதிக வாக்குகளைப் பெறக்கூடும். இந்தியாவின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பதால், இந்தியாவே பா.ஜ.கவை எதிர்க்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இந்திய ஒற்றுமை அபாயத்தில் இருக்கிறது என்ற பார்வையை உருவாக்கும். அந்தப் பார்வை மிக வலுவானதாக இருக்கும். கருத்து ரீதியான மோதலில் இந்தியா கூட்டணிக்கு ஒரு வலுவான நிலையை இவை ஏற்படுத்தும். அது தேர்தலிலும் வெகுவாக உதவும்” என்கிறார் எஸ்.வி. ரமணி.
ஆனால், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை நிறுத்தினால்தான் வெற்றிகிடைக்கும் என்பதில்லை என்கிறார் அரசியல் விமர்சகரான ஆழி செந்தில்நாதன். “2004ஆம் ஆண்டு தேர்தல் உட்பட பல தேர்தல்களில் பிரதமர் வேட்பாளர் யார் எனச் சொல்லாமல் வெற்றி கிடைத்திருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்காவிட்டால் அது நகர்ப்புறங்களில் வேண்டுமானால் விவாதமாக இருக்கலாம். மற்றபடி, மையமாக ஒரு சக்தி இருக்கிறதா என்பதுதான் முக்கியம். அது இந்தியா கூட்டணியில் இருக்கிறது” என்கிறார் செந்தில்நாதன்.
ஆனால், இந்தக் கூட்டணிக்கு வேறு சில சவால்கள் இருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “குறிப்பாக கூட்டணியை மக்கள் மத்தியில் சென்று சேர்ப்பதற்கான காலம் மிகக் குறைவாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பிரச்னையில்லை. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் இன்னமும் பொதுக்கூட்டம், சாலை ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவைதான் மக்களைத் திரட்டுவதற்கான முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அப்படிச் செய்து மக்களை அடைவதற்கான காலம் வெகு குறைவாகவே இருக்கிறது” என்கிறார் செந்தில்நாதன்.
காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையிலான மோதலில், ஆம் ஆத்மி கூட்டணியிலிருந்து விலகினால் இழப்பு அந்தக் கட்சிக்குத்தான் என்கிறார் அவர். “ஆம் ஆத்மிக்கு முக்கியமான இடமே பஞ்சாப்தான். பஞ்சாபில் காங்கிரசோடு மோதியே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறது ஆம் ஆத்மி. ஆனால், இந்தக் கூட்டணிக்குள் அவர்கள் வரவில்லையென்றால் இழப்பு அவர்களுக்குத்தான். காரணம், ஆம் ஆத்மியால் காங்கிரசிற்கு மட்டுமல்ல, பல மாநிலக் கட்சிகளுக்கும் சிக்கல்தான். ஆகையால், அவர்களும் அந்தக் கட்சி வெளியேறினால் நல்லது என்றுதான் நினைப்பார்கள். இந்த நிலையில், ஆம் ஆத்மியும் மற்றவர்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் செந்தில்நாதன்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மொத்தமாக 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன. 2019ஆம் தேர்தலில் மொத்தமாக 134 இடங்களையும் 35 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 19 கட்சிகளிடம் 3 அல்லது மூன்றுக்குக் குறைவான இடங்களே இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்