தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களின் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்கிறதா? உண்மை என்ன?

தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களின் உண்டியல் பணத்தை எடுத்துக் கொள்கிறதா? உண்மை என்ன?

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன?

செவ்வாய்க் கிழமையன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தார்.

“தெற்கில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் (காங்கிரஸ்) கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? தன் வசம் எடுத்துக்கொள்வார்களா? சொத்துகளை மக்கள் பணிக்காக பயன்படுத்துவார்களா?” என்று கேள்வியெழுப்பினார் பிரதமர் மோதி.

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அங்கு பேசிய பிரதமர் அந்த மாநிலத்திற்குத் தொடர்பே இல்லாத தமிழ்நாடு குறித்து பேசியது, குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை குறித்துப் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே பாரதிய ஜனதா கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் இது தொடர்பாக பேசி வந்திருக்கின்றன. பா.ஜ.கவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரான நிலைப்பாட்டை நீண்ட காலமாக வலியுறுத்திவருகிறது.

ஆர்எஸ்எஸ்சின் சர்சங்கசாலக்கான மோகன் பகவத்தும் அரசு தங்கள் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து பேசிவருகிறார். 2021ஆம் ஆண்டு விஜயதசமியன்று பேசிய மோகன் பகவத், தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பான்மையான கோவில்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் இருப்பது குறித்து சுட்டிக்காட்டி, அவற்றை விடுவிக்க வேண்டுமெனப் பேசியிருந்தார்.

2012ஆம் ஆண்டில் சுவாமி தயானந்த சரஸ்வதி, கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பிரதமர் மோதி.

இருந்தபோதும் இந்த விவாதம் தீவிரமடைந்தது 2017 – 18ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறித்து பா.ஜ.க. தீவிரமாகப் பேச ஆரம்பித்தது. குறிப்பாக, அப்போது அக்கட்சியின் தேசியச் செயலராக இருந்த எச். ராஜா, இந்த விவகாரத்தை தீவிரமாக பேச ஆரம்பித்தார். அதே தருணத்தில், ஜக்கி வாசுதேவும் “கோவில் அடிமை நிறுத்து” என்ற பரப்புரையை முன்னெடுத்தார்.

ஆனால், 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத் துறை குறித்த விவாதங்கள் சற்று குறைந்தன. ஒரு பக்கம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது போன்ற விவகாரங்களில் தீவிரம் காட்டிய அதே நேரத்தில், இதுவரை, 1,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பதாக அறிவித்ததன் மூலம், கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாகவே இயங்குகின்றன என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது தி.மு.க. அரசு.

இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பது குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் கோவில்கள் அரசின் கண்காணிப்பில் வந்ததற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோவில்களைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் துறைகள் இருக்கின்றன.

இந்து சமய அறநிலையத் துறையின் நீண்ட வரலாறு

மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் சோழமண்டலக் கடற்கரையில் கால் பதித்த பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது அவர்கள் வசம் சென்றது. அந்தத் தருணத்தில் கோவில்கள், அறக்கட்டளைகள் தொடர்பான சில புகார்கள் கம்பெனிக்குச் சென்றன. ஆனால், இதனை ஒழுங்குபடுத்த விதிகள் ஏதும் இல்லாத நிலையில், புதிய சட்டத்தை உருவாக்க கிழக்கிந்திய கம்பெனி முடிவுசெய்தது.

அதன் அடிப்படையில்தான் ‘மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817’ல் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது. கொடைகளை, கோவில் சொத்துகளை பராமரிப்பதுதான் நோக்கமே தவிர, அவற்றிலிருந்து வரும் வருவாயை அரசுக்கு பயன்படுத்துவதல்ல என இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

கோவில்களைக் கண்காணிக்கும் பொறுப்பு அப்போதைய Board of Revenueவிடம் வழங்கப்பட்டது. இந்த வேலைகளைச் செய்ய உள்ளூர் அளவில் முகவர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்குக் கிடைத்தது.

ஆனால், இந்த உள்ளூர் முகவர்கள் சரியாக செயல்படாத நிலையில், இந்தச் சட்டம் திறனற்றதாக இருக்கிறது என்பது விரைவிலேயே உணரப்பட்டது. விக்டோரியா மகாராணி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு 1863ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது. ‘சமயக் கட்டளைகள் சட்டம் 1863’ என்று இந்தச் சட்டத்திற்குப் பெயர். இந்தச் சட்டத்தின் மூலம் உள்ளூர் முகவர்களைக் கண்காணிக்க உள்ளூர் கோவில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் குழுக்கள் நிர்வாகத்திலும் பிரச்சனைகள் இருந்தன.

இதற்குப் பிறகு, 1908ல் உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் – பிரிவு 92 – இயற்றப்பட்டது. திருக்கோவில்கள் தொடர்பான வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்கள் நடத்த ஆரம்பித்தன. ஆனால், இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவது கடினமாக இருந்ததால், திருக்கோவில் வசம் இருந்த பெரும் அளவிலான வளங்களும் சொத்துகளும் தனியார் வசம் சென்றன.

இந்த நிலையில்தான் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி அரசு, 1927ல் மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தை இயற்றியது. அதன் அடிப்படையில், மதராஸ் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது.

ஆனால், இந்தச் சட்டத்திற்கு உயர் வகுப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்போதைய வைசிராயாக இருந்த இர்வினிடம் சென்னை மாகாணப் பிரதமர் பனகல் அரசர் விளக்கமளித்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இதற்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக தொடர்ச்சியாக சட்டங்கள் 1947வரை இயற்றப்பட்டன. பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1951ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் சென்னை மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பரம்பரை அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959’ இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. இதன்படி, இந்து அறநிலையைத் துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலின் துணை, இணை ஆணையர்களையோ, அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளைக் கேட்க முடியும்.

1959ஆம் ஆண்டின் இந்தச் சட்டமே தற்போதுவரை அமலில் இருக்கிறது.

பிரதமரின் குற்றச்சாட்டு சரியா?

கோவில்களின் சொத்துகள் அரசால் சூறையாடப்படுவதாக பிரதமர் மோதி குற்றம்சாட்டியிருக்கிறார். அப்படிச் செய்ய முடியுமா?

“கோவில் சொத்துகள் தனியாரால் சூறையாடப்பட்டதால்தான் இந்து சமய அறநிலையத் துறை சட்டமே உருவாக்கப்பட்டது. அரசு தலையிட வேண்டுமென இந்து பக்தர்கள்தான் வேண்டுகோள் விடுத்ததால்தான் இந்தத் துறையே உருவானது. எந்த அரசும் கோவில்களின் பணத்தை தன்னுடைய விருப்பப்படி செலவழிக்க முடியாது.

கோவில்களுக்கு வரும் வருவாய் சம்பந்தப்பட்ட கோவில்களில் உள்ள கடவுள்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில்தான் வரவுவைக்கப்படும். அந்தப் பணத்தை செலவழிக்கவென விரிவான விதிமுறைகள் உள்ளன. முதலில் கோவிலின் நிர்வாகச் செலவுக்கான பணம் அதிலிருந்து எடுக்கப்படும். அதற்குப் பிறகு, உபரியான பணத்தை எந்தெந்த வகைகளில் செலவழிக்கலாம் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு பெரிய கோவிலின் உபரி வருவாயை எடுத்து நலிவடைந்த கோவில்களுக்கு செலவழிக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். கல்விக் கூடங்களை நடத்தலாம். மருத்துவமனைகளை நடத்தலாம். தொழுநோயாளிகளுக்கான இல்லமோ, முதியோர் இல்லமோ நடத்தலாம். “

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1959ல் ‘தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959’ இயற்றப்பட்டது.

கோயில் உண்டியல் பணத்தை அரசு எடுத்துக் கொள்கிறதா?

இந்த விதிமுறையின்படிதான் சில கோவில்களில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. தவிர, கோவிலின் வருவாயில் இருந்து செலவு செய்ய முடிவுசெய்தால், அதற்கு கோவிலின் அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படிதான் செலவுசெய்ய முடியும்” என்கிறார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான சி. ஜெயராமன்.

மேலும், கோவில்களின் நிலத்தையோ, உண்டியலில் விழும் பணத்தையோ அரசு எடுக்கவே முடியாது என்கிறார் அவர். “உண்டியலில் விழும் பணத்தை அரசு எடுத்துக்கொள்கிறது என்ற தவறான குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகச் சொல்லப்பட்டு வருகிறது. உண்டியலில் விழும் பணம் பொதுமக்கள் முன்னிலையில், பொதுமக்களின் பங்கேற்போடு எண்ணப்பட்டு, அந்தந்த கடவுள்களின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் வங்கி அதிகாரிகளே கோவிலுக்கு வந்து பணத்தை வாங்கி, சாமியின் பெயரில் வரவு வைத்து, அதற்கான சான்றை அளித்துவிட்டுச் செல்கிறார்கள்.

நிலத்தைப் பொறுத்தவரை, தனி நபர்களின் நிலத்தை அரசு விரும்பியதைப்போல கையகப்படுத்தலாம். ஆனால், கோவில்களின் நிலத்தை அப்படிச் செய்ய முடியாது. அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். நிலத்தின் சந்தை மதிப்பைவிட இரண்டரை மடங்கு அதிக தொகை அளிக்க வேண்டும்.

“நிலத்தை குத்தகை விடுவதற்கும், வாடகை விடுவதற்கும் இதுபோல பல விதிகள் உள்ளன. ஆகவே அரசு தனது நலத்திட்டங்களுக்காக கோவிலின் பணத்தை எடுப்பதாகச் சொல்வது முழுக்க முழுக்கத் தவறு” என்கிறார் ஜெயராமன்.

இந்து சமய அறநிலையத் துறையின் செலவுகளுக்கு, பொதுமக்களின் வரி வருவாயில் இருந்து மாநில அரசு எடுக்க முடியாது. எனவே கோவில்கள் தங்களது வருவாயில் வருமான வரி செலுத்த வேண்டிய பணம் எவ்வளவு எனக் கணக்கிட்டு, அந்தத் தொகையில் 7 முதல் 14 சதவீதத்தை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்துகின்றன. 1959ஆம் ஆண்டில் தற்போதுள்ள இந்து அறநிலையத் துறைச் சட்டத்தின் கீழே கோவில்கள் கொண்டுவரப்பட்டபோது எந்தக் கோவிலிலும் நிலையான வைப்புத் தொகை கிடையாது. தற்போது எல்லாக் கோவில்களிலும் சேர்த்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நிலை வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளன. அரசின் கண்காணிப்பின் கீழ் கோவில்கள் இருந்ததால்தான் இது சாத்தியமானது என்கிறார் ஜெயராமன்.

தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்திருக்கிறதா?

பட மூலாதாரம், அமைச்சர் சேகர்பாபு

படக்குறிப்பு,

கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாகவே இயங்குகின்றன என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது தி.மு.க. அரசு.

இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படுகிறதா?

இந்து சமய அறநிலையத் துறையில் தற்போதுள்ள சில பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறார் ஜெயராமன். “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல கோவில்களில் அறங்காவலர்கள் முழுமையாக நியமிக்கப்படுவதில்லை. பல கோவில்களில் ஒரே ஒரு அறங்காவலரை தக்கார் என்ற பெயரில் நியமிக்கிறார்கள். இதெல்லாம் தவறு. எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுவை முழுமையாக நியமித்தால் இவ்வளவு குற்றச்சாட்டுகள் வராது. அதனை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்” என்கிறார் ஜெயராமன்.

கோவில்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் புதிய அறங்காவலர்களை நியமிக்கும் விதியைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் அவர்.

அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் கோவில் தொடர்பான முடிவுகளை நிர்வாக அதிகாரிகள் மேற்கொள்வது குறித்து பலரும் ஆட்சேபங்களைத் தெரிவித்து வருகின்றனர். பல கோவில்களில் நிர்வாக அதிகாரிகளுக்கான வசதிகளை கோவிலின் நிதியில் இருந்து செய்துகொள்வது தொடர்பான குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன.

பிற மாநிலங்களில் என்ன நிலை?

சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அரசு கட்டுப்படுத்துவதில்லை என்பதும் சரியான தகவல் இல்லை என்கிறார் ஜெயராமன். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், சொத்துகளை நிர்வகிக்க நீண்ட காலமாகவே வக்பு வாரியம் இயங்கிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

கோவில்களைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் துறைகள் இருக்கின்றன. உத்தராகண்ட் மாநிலத்தில் சில கோவில்களை மட்டும் கண்காணிக்க ‘சார் தாம் தேவஸ்தான வாரியச் சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, 2021ல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

1960ல் இந்திய அரசு டாக்டர் சி.பி. ராமசாமி ஐயர் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையில், கோவில்கள் நன்றாக நிர்வகிக்கப்பட அவற்றின் மீது அரசின் கண்காணிப்பு அவசியம் என குறிப்பிட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 இந்து மத நிலையங்கள் உள்ளன. இவற்றில் கோவில்களின் எண்ணிக்கை 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57. குறிப்பிட்ட பணிக்கான அறக்கட்டளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பில் இல்லாமலும் ஆயிரக்கணக்கான கோவில்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டில் இருந்துவருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *