
பட மூலாதாரம், YOUYU COUNTY POLICE RELEASE
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியைச் சில கட்டுமானப் பணியாளர்கள் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
சீனாவின் மத்திய ஷாங்சி மாகாணத்தில் கட்டுமானப் பணியாளர்களால் சீனாவின் பெரிய சுவரின் ஒரு பகுதி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்கவேட்டர் எனப்படும் பூமியைத் தோண்டப் பயன்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு பணியாளர்கள், தங்கள் கட்டுமானப் பணிகளுக்கு ஒரு குறுக்கு வழியை உருவாக்க முயன்று இந்தச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் போலீசார் கூறுகின்றனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘எக்ஸ்கவேட்டர்’ இயந்திரம் செல்வதற்காகச் சேதப்படுத்தப்பட்டப் புராதனச் சின்னம்
கைது செய்யப்பட்டிருக்கும் 38 வயதான ஆணும் 55 வயதான பெண்ணும் பாதிக்கப்பட்டப் பகுதியான 32வது சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பெருஞ்சுவற்றில் ஏற்கனவே இருந்த ஒரு சிறு குழியைத் தோண்டி விரிவுபடுத்தி இந்த இருவரும் சுவற்றில் ஒரு ‘பெரிய இடைவெளியை’ உருவாக்கியுள்ளனர். இதனூடாக அவர்களது எக்ஸ்கவேட்டர் இயந்திரம் செல்வதற்காக இதனைச் செய்திருக்கின்றனர். அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை குறைக்கவே இவ்வாறு செய்ததாகப் போலீசார் கூறுகின்றனர்.
“இருவரும் மிங் சாம்ராஜ்ஜியத்தின் பெருஞ்சுவற்றின் மதிப்புக்கும், கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்,” என்றும் காவல்துறை கூறியிருக்கிறது.
யூயு பிரதேசத்தில் அமைந்துள்ள 32வது பெரிய சுவர் சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியாகும். மேலும் இது மாகாண அளவில் பாதுகாக்கப்படும் வரலாற்று மற்றும் கலாச்சார தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24-ம் தேதி சுவரில் ஒரு பெரிய இடைவெளி தோன்றியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அதிகாரிகளிடம் சேதம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
1,800 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டப்பட்டச் சுவர்
1987-ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டச் சீனப் பெருஞ்சுவர், கி.மு. 220-ம் ஆண்டு முதல் 1600-களின் மிங் மன்னர் வம்சம் ஆண்ட காலம் வரை தொடர்ந்து கட்டப்பட்டது. அப்போது இது உலகின் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பாக இருந்தது.
இப்பெருஞ்சுவற்றின் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மிங் வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இப்போது சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இப்பெருஞ்சுவற்றின் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மிங் வம்சத்தின் அட்சியின் போது கட்டப்பட்டன
30% முற்றிலும் அழிந்துவிட்டச் சீனப் பெருஞ்சுவர்
சீனப் பெருஞ்சுவற்றின் நன்கு அறியப்பட்ட பகுதிகள், பழங்காலக் கண்காணிப்பு கோபுரங்களுடன் கூடிய அழகாகன கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெருஞ்சுவற்றின் மற்ற பகுதிகள் சிதிலமடைந்துவிட்டன அல்லது முற்றிலுமாக மறைந்துவிட்டன.
பெய்ஜிங் டைம்ஸ் நாளிதழின் 2016-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மிங் காலத்துப் பெருஞ்சுவற்றின் 30%க்கும் மேற்பட்டப் பகுதிகள் முற்றிலும் மறைந்துவிட்டன. அதில் 8% மட்டுமே நன்கு பாதுகாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இப்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களைப் போல, இந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னத்தின் மீது சிலர் ஏன் மோசமான அணுகுமுறையைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ள, இச்சுவர் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏன் அழிந்து வருகிறது சீனப் பெருஞ்சுவர்?
சீனப் பெருஞ்சுவர் என்பது வடக்கு சீனாவில் பரந்து நீண்டு கிடக்கும் அரண்களின் வரிசையாகும். இது பல இடங்களில் பலவாறு சிதைந்து கிடக்கிறது. இதன் சில பகுதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படுகிறது, ஆனால் இவற்றின் பெரும்பாலான பகுதிகள் தொலைதூரப் பகுதிகளில் இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சுவற்றின் பழமையான பகுதிகள், மண்ணால் கட்டப்பட்டவை. இவை இப்போது மண்மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. முதல் பார்வையில் இவற்றைச் சீனப் பெருஞ்சுவற்றின் பகுதிகளாக அடையாளம் காண முடியாது.
பெருஞ்சுவர் சிதைந்து போனதற்கு முக்கியமான காரணம் உள்ளூர் விவசாயிகள் வீடுகள் அல்லது விலங்குப் பண்ணைகள் கட்டுவதற்காக அதிலிருந்து செங்கற்கள் அல்லது கற்களை திருடுவதே என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக, பெருஞ்சுவற்றைப் பாதுகாக்க அரசு தீவிரமான முயற்சி எடுத்து வருவதால், கைது செய்யப்பட்டிருக்கும் இந்த இரண்டு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படலாம்.
பெருஞ்சுவற்றின் முந்தைய அழிவைக் கருத்தில் கொண்டால், இப்போது நடந்திருப்பது அசாதாரணமானவை அல்ல. ஆனால் இந்த கட்டமைப்பின் மகத்தான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டால், இது வருத்தமளிப்பதுதான், சீனாவுக்கு மட்டுமல்ல. மொத்த மனித குலத்திற்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்