விராட் கோலி: சேஸிங் கிங்கால் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர முடியுமா?

விராட் கோலி: சேஸிங் கிங்கால் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர முடியுமா?

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

“ உலகக் கிரிக்கெட்டில் நான் பார்த்தவரை மிகச்சிறந்த பேட்டர்களில் விராட் கோலியும் ஒருவர். சேஸிங் என்று வந்துவிட்டால் இவரின் பக்கத்தில் எந்த பேட்டரும் வர முடியாது. அதிலும் 50 ஓவர்கள் போட்டியி்ல் விராட் கோலி ஒரு அடையாளம், கிங் கோலிதான் உண்மையில் கிங்”

இந்த வார்த்தையை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரருமான தினேஷ் கார்த்திக் கூறியது. அது மட்டுமல்லாமல் “சேஸிங் கிங்” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனும் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சேஸிங் கிங் என்பதை நிரூபிக்கும் கோலி

ஒரு நாள் போட்டிகளில் சேஸிங் என வந்துவிட்டாலே விராட் கோலி அதை சவாலாக எடுத்துக்கொண்டு களத்தை ஆட்சி செய்துவிடுவார் என்பதை பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதில் இருந்து இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் மோதி 4 வெற்றிகளைப் பெற்று 2வது இடத்தில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த 4 போட்டிகளிலும் விராட் கோலியின் சேஸிங் முத்தாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சேஸிங்கில் அரைசதமும், வங்கதேசத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தும் “சேஸிங்கில் கிங்” என்று நிரூபித்துள்ளார்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கடைசி உலகக் கோப்பையா?

2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இந்திய அணி பல்வேறு வகைகளில் நிறைவான அணியாக உருவெடுத்து உலகக் கோப்பையையில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்தியாவும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சர்களும், முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடர், உள்நாட்டு ரசிகர்கள், மைதானம் ஆகியவை சாதகமாக இருந்தாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம். ஆதலால், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 4 பேரும் தங்களால் முடித்த அளவு முயற்சிகளை, திறமைகளை வெளிப்படுத்தி, கோப்பையை வெல்ல உழைக்கலாம்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

“வெற்றிகரமான கேப்டனாக இல்லை”

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, பல்வேறு போட்டிகளில் கோப்பையை அணிக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலும், ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்களில் எந்த கோப்பையைும் பெற்றுக் கொடுத்தது இல்லை. இதனால்தான், இன்றளவும் மகேந்திர சிங் தோனி, வெற்றிகரமான கேப்டனாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இந்திய அணிக்குள் ஒரு வீரராக சிறப்பாகச் செயல்பட்ட விராட் கோலி, கேப்டனாக பொறுப்பேற்றபோது வெற்றிகளை அளித்தாலும், அது ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்லும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆதலால், விராட் கோலி, இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அவரால் முடிந்த அனைத்துப் பணிகளையும் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் இந்திய அணி சேஸிங்கில் வெல்ல கோலியின் பேட்டிங் முக்கியமாக இருந்தது என்பதே போதுமானதாகும்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

சேஸிங் ஏன் சவாலானது?

கிரிக்கெட்டில் மிகவும் சவாலான விஷயம் என்பது வெற்றிகரமாக ரன்களை சேஸிங் செய்வதுதான். கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்யும் அணியைவிட, சேஸிங் செய்யும் அணிக்குத்தான் அழுத்தம், நெருக்கடி அதிகமாக இருக்கும். சேஸிங் என்று வந்துவிட்டாலே பேட்டிங் செய்யும் அணி வீரர்களுக்கு அழுத்தம் இருக்கும், அதிலும் பெரியஸ்கோர் என்றால் இன்னும் சவாலாகவும், சுமையாகவும் வீரர்களுக்கு மாறும்.

சேஸிங் என்று வந்துவி்ட்டாலே பெரும்பாலான அணிகள் அழுத்தத்தை தாங்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுக்கும். தனிப்பட்ட ரீதியில் பல சாதனைகளைப் படைத்த பேட்டர்கள்கூட சேஸிங் என்றவுடன் மிகப்பெரிய ஸ்கோரை விரட்டும்போது, விக்கெட்டுகளை இழந்துவிடுவதும் உண்டு.

அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற சர்வதேச முக்கியத்துவம் கொண்ட தொடர்களில் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி போன்ற நாக்அவுட் சுற்றுகளில் பெரும்பாலும் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்யும்.

“சேஸிங் செய்து அழுத்தத்தை தாங்கமுடியாமல், நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பேட்டர்கள் ஆட்டமிழந்தால் வெற்றியை இழந்துவிடுவோம் என்று எண்ணி பெரும்பாலும் நாக்அவுட் சுற்றுகளில் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவர்.” என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

அதிலும் சேஸிங்கின் போது களத்தில் விளையாடும் பேட்டருக்கு ஸ்கோர்கார்டில் மாறும் ரன்கள், தேவைப்படும் ரன்களைப் பார்க்கும்போது, மனதுக்குள் படபடப்பு எகிறும், இந்த பதற்றம் பல நேரங்களில் பேட்டர்கள் தவறு செய்து ஆட்டமிழந்து, போட்டியை கைமாற்றிவிடும் காரணியாகவும் செயல்பட்டுள்ளது.

ஆனால், எந்தவிதமான அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு, எத்தகைய சூழலிலும் விளையாடி, ஸ்கோர்கார்டில் எப்படி எழுதினாலும், தேவைப்படும் ரன்களைப் பார்த்தாலும் பதற்றமே இல்லாமல் சேஸிங்கை வெற்றியாக மாற்றும் வீரர்கள் சிலர்தான்.

அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன், தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி வீரர் ஏபிடி, இந்தியாவின் எம்எஸ் தோனி, விராட் கோலி, பாகிஸ்தானி்ன் மிஸ்பா உல்ஹக் ஆகியோர் வருவார்கள். இவர்கள் அனைவரும் பலமுறை, பல போட்டிகளில் வெற்றிகரமாக தங்களின் அணியை சேஸிங்கில் கரை சேர்த்துள்ளனர்.

மாஸ்டர் ஆஃப் சேஸிங்

இந்த வீரர்கள் வரிசையில் தற்போது சேஸிங்கில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுபவர் விராட் கோலி. சேஸிங்கில் சிறப்பாக இருந்த பிற வீரர்கள் அனைவரும் கிரி்க்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் கோலி மட்டுமே சர்வதேச கிரிக்கெட் களத்தில் முன்னணியில் இருக்கிறார்.

இப்போதுள்ள கிரிக்கெட்டில் சேஸிங்கில் சிறந்த பேட்டர், வீரராக யாரை எடுக்கலாம் என்ற கேள்விக்கு பலநாட்டு முன்னாள் வீரர்களும், பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறிய பெயர் சேஸிங் கிங் விராட் கோலிதான்.

விராட் கோலி சேஸிங்கில் மட்டும் 158 போட்டிகளில் 151 இன்னிங்ஸ்களில் 7,699 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 27 சதங்களும், 39 அரைசதங்களும் அடங்கும். சேஸிங்கில் மட்டும் விராட் கோலி 65.35 சராசரி வைத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 93.67 என்று உயர்ந்து நிற்கிறார்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலிடத்தில் இருக்கிறார். 232 இன்னிங்ஸ்களில் சச்சின் 8720 ரன்கள் சேர்த்துள்ளார், அதில் 17 சதங்கள் அடங்கும், 42 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். ஆனால், சச்சினைவிட கோலி கூடுதலாக சதத்தையும், சராசரியையும், ஸ்ட்ரைக் ரேட்டையும் குறைவான போட்டிகளில்தான் வைத்துள்ளார் .

இப்போதுள்ள நவீனகால கிரிக்கெட்டிலும் சரி, உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் சரி 50 ஓவர்கள் போட்டி என்றாலே சேஸிங்கில் கிங், “மாஸ்டர் ஆஃப் சேஸ்” என்றால் அது விராட் கோலிதான் என்ற கருத்து உள்ளது.

சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த பேட்டரும் விராட் கோலிதான், சேஸிங்கின்போது 33 முறை நாட்அவுட்டாகவும் இருந்துள்ளார், புள்ளிவிவரங்கள் அனைத்தும் கோலிக்கே சாதகமாக உள்ளன.

கிரேட் ஃபினிஷர் முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான சேஸிங் என்ற வகையில் பார்த்தால், தோனிக்கு அடுத்ததாக விராட் கோலி இருக்கிறார். சேஸிங்கின்போது அணியை வெற்றி பெற வைத்தவகையில் தோனி 75 இன்னிங்ஸ்களில் 2,876 ரன்கள் குவித்து 33 முறை நாட்அவுட்டாக இருந்துள்ளார், 102.71 சராசரியாக தோனி வைத்துள்ளார். விராட் கோலி, 99 போட்டிகளில் 90 சராசரி வைத்துள்ளார், ஏறக்குறைய 6ஆயிரம் ரன்கள் சேர்த்துள்ளார், 33 முறை நாட்அவுட்டாகவும் இருந்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஃபினிஷிங் மற்றும் சேஸிங் என இரண்டுமே வேறுபட்டவை. அதில் ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. சேஸிங் செய்வதில் அத்தகைய பெருமை கோலிக்கு கிடைத்திருக்கிறது.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கோலியின் பங்களிப்பு

ஆட்டத்தை ஃபினிஷ் செய்வது என்பது பொறுப்பேற்று பேட்டிங் செய்வதாகும். சேஸிங் அல்லது ஃபினிஷிங் என்றாலே திட்டமிடலைத்தான் குறிக்கிறது, ஒவ்வொரு பந்தையும் எப்படி அணுகுவது என்பதை மனதுக்குள் வைத்துக் கொண்டு களமாட வேண்டும். அந்த வகையில் கிரேட் ஃபினிஷர் தோனிக்குப்பின் அந்த இடத்தை நிரப்ப யாருமில்லை, அதேபோல சேஸிங்கில் கிங் எனப்படும் விராட் கோலிக்கு இணையாகவும் யாருமில்லை.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மோதிய 4 ஆட்டங்களிலும் சேஸிங்கில் விராட் கோலியின் பங்களிப்பு என்ன என்பது தெரி்ந்திருக்கும். அடுத்தவரும் போட்டிகளில் சேஸிங் என்றாலே, எதிரணிகளுக்கு சிம்மசொப்னாக இருக்கப் போவதும் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கும் விராட் கோலியின் பங்களிப்பும், சேஸிங்கில் விராட் கோலியின் ரன் குவிப்பும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

பிற அணிகளுக்கு சவாலாக இருக்கும் கோலியின் ஆட்டம்

அடுத்துவரும் போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள்தான் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் விராட் கோலி, 83 போட்டிகளில் விளையாடி 3,970 ரன்கள் குவித்துள்ளார், இதில் 8 சதங்கள், 23 அரைசதங்கள் அடங்கும்.

அதேபோல, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 57 ஒருநாள் போட்டிகளில் ஆடிய கோலி, 2957 ரன்கள் குவித்துள்ளார், இதில் 7 சதங்கள், 14 அரைசதங்களும் அடித்து 54 சராசரி வைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2610 ரன்களும், 48 சராசரி வைத்துள்ளார் விராட் கோலி. இதில் 8 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். ஆதலால், எதிர்வரும் 3 அணிகளுக்கு எதிராகவும் கோலியின் கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது தெரிகிறது. விராட் கோலியின் ஆட்டம் இந்த 3 அணிகளுக்கும் நிச்சயம் பெரிய தலைவலியாகவும், சவாலாகவும் இருக்கும்.

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு ஒரு பேட்டராகவும், முன்னாள் கேப்டனாகவும், விராட் கோலியின் பங்களிப்பு பல்வேறு வகைகளில் இருக்கும் என்று நம்பலாம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *