
பட மூலாதாரம், Getty Images
தன்பாலின தம்பதிகளின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று ஒருமனதாக உச்சநீதிமன்ற அமர்வு ஒப்புக்கொண்டது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தன்பாலின திருமணம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு சில விஷயங்களில் உடன்பட்டதாகத் தெரிந்தாலும், சில விஷயங்களில் தெளிவான கருத்து வேறுபாடும் இருந்தது.
தன்பாலின தம்பதிகளின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று ஒருமனதாக ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கூறியது.
மேலும், தன்பாலின தம்பதிகளுக்கு சமூக மற்றும் சட்ட உரிமைகளை வழங்குவதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சுமார் 14 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த சமூகம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வழக்கு விசாரணையின் வேகம் காரணமாக, அவர்கள் தங்களுக்கு சாதகமான முடிவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை வந்த தீர்ப்பால் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
ஏமாற்றத்தில் தன்பாலின தம்பதிகள்

தன்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கவிஞர் அசோக் ராவ் இந்த தீர்ப்பால்தான் ஏமாற்றமடைந்ததை வெளிப்படுத்தினார்.
கடந்த 19 ஆண்டுகளாக மும்பையில் தனது துணையுடன் வசித்து வரும் டாக்டர் பிரசாத் ராஜ் தாடேகர், பிபிசியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், “நான் தீர்ப்பைக் கேட்கத் தொடங்கியவுடன், என் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. நாங்கள் 19 ஆண்டுகளாக இதில் சிக்கிக் கொண்டுள்ளோம். சம உரிமைக்கான எங்களது போராட்டம் தொடரும்,” என்றார்.
தன்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கவிஞர் அசோக் ராவ் இந்த தீர்ப்பால் ஏமாற்றமடைந்ததை வெளிப்படுத்தினார்.
“பிரிவு 377இன் வரம்பிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, எங்களுக்கு ஏதோ கிடைத்தது என ஆசுவாசப்பட்டுக் கொண்டோம். ஆனால் இன்று குழு அமைக்க வேண்டும் எனக் கூறி அனைத்தையும் அரசிடம் விட்டுவிட்டார்கள். முடிவுக்காகக் காத்திருந்த எனக்கு வயதாகி விட்டது. ஆனால், வருடக்கணக்கில் காத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை,” என்றார் அசோக் ராஜ்.
கடந்த 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமில்லை எனக் கூறியது.
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கும்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தன்பாலின உறவு குற்றமல்ல. எந்தவொரு சாதாரண குடிமகனுக்கும் உள்ள அதே அடிப்படை உரிமைகள் தன்பாலினத்தவர்களுக்கும் உண்டு. கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு,” எனக் கூறியிருந்தார்.
அதே நேரத்தில், மத்திய அரசின் சார்பில் நிபுணர் குழுவை அமைப்பது குறித்து வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பரிந்துரையையும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டது.
தன்பாலின தம்பதிகளின் திருமணம் உட்பட பல உரிமைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கும் இந்த நிபுணர் குழு, அமைச்சக செயலாளரின் தலைமையில் இருக்கும்.
கடந்த 34 ஆண்டுகளாக தன்பாலின உறவில் இருக்கும் பியா சந்தா, இந்த முடிவு குறித்துப் பேசும்போது, “உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கைமாற்றிவிட்டு விளையாடுகிறது,” என்றார்.
‘கமிட்டியில் நாங்களும் இடம் பெறவேண்டும்’

பட மூலாதாரம், Getty Images
தீர்ப்பில், சிறப்பு திருமணச் சட்டம் 1954 குறித்தும் நீதிபதிகள் பேசினர். இந்தச் சட்டத்தின் கீழ், சாதி, மத மறுப்புத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.
தன்பாலின செயற்பாட்டாளர் ஹரிஷ் அய்யர் தீர்ப்பு குறித்துப் பேசுகையில், மத்திய அரசு சார்பில் அமைக்கப்படும் குழுவில் தங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில், திருமணம் செய்துகொள்ளும் உரிமையை அடிப்படை உரிமையாக நீதிமன்றம் கருதவில்லை. ஆனால், தற்போதுள்ள சட்டத்தின்படி திருநங்கைகள் மற்றும் இருபாலர் திருமணம் செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தீர்ப்பில், சிறப்பு திருமணச் சட்டம் 1954 குறித்தும் நீதிபதிகள் பேசினர். இந்தச் சட்டத்தின் கீழ், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.
வழக்கு விசாரணையின்போது, சட்டத்தின் வார்த்தைகளை மாற்றுவது பற்றிப் பேசப்பட்டது. ஆனால் இறுதியில், உச்சநீதிமன்ற அமர்வு, சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது நீதிமன்றத்தின் எல்லைக்குள் இல்லை எனக் கூறியது.
குழந்தை தத்தெடுப்பு குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், தன்பாலின தம்பதிகள் மற்றும் திருமணமாகாத தம்பதிகள் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்றார். இதை ஆதரித்து, தத்தெடுப்பு உரிமையில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினரையும் சேர்த்துக்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை மூன்று நீதிபதிகள் ஏற்கவில்லை. அதன்மூலம், தன்பாலின தம்பதிகளுக்கு இந்த உரிமை வழங்கப்படாது என்பது தெளிவாகியது.
‘ஹம்சஃபர் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையின் நிறுவனர் அசோக் காக் கூறுகையில், ”குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை, வாரிசு உரிமை, ஓய்வூதியம், ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்திலும் முடிவெடுக்கும் பொறுப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மிட்டாயைக் காட்டி ஏமாற்றுவதுபோல எங்களை ஏமாற்றிவிட்டார்கள்,” என்றார்.
விவாதத்தில் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம், REUTERS/ANUSHREE FADNAVIS
அரசமைப்பு அனைத்து குடிமக்களும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது.
முன்னதாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், திருமணம் என்பது இருவர் இணைவது, அது ஆணாகவும் பெண்ணாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை என வாதிட்டனர்.
“அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு திருமண உரிமையை வழங்காதது அரசமைப்பிற்கு எதிரானது. ஏனெனில், அரசமைப்பு அனைத்து குடிமக்களும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்குகிறது,” என வாதாடினர்.
அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காதலிப்பதும் ஒன்றாக வாழ்வதும் அடிப்படை உரிமை. ஆனால், திருமணம் என்பது ‘முழுமையான உரிமை அல்ல’ என்றும் அது இரு மாற்றுப்பாலின(ஆண்-பெண்) தம்பதிகளுக்கே பொருந்தும் என வாதாடினார். ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது முன்வைத்தார்.
தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்குப் பதிலாக, தன்பாலின ஈர்ப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கிடையில், சில மத அமைப்புகளும் தன்பாலின திருமண்த்தை எதிர்க்கின்றன. அத்தகைய உறவுகளை இயற்கைக்கு மாறானது எனக் கூறுகின்றன.
‘திருமணம் அடிப்படை உரிமை இல்லை’

பட மூலாதாரம், Getty Images
வழக்கறிஞர் கருணா நந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த வழக்கில் நான்கு வெவ்வேறு தீர்ப்புகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தன்பாலினத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகள் இதைச் செய்யலாம் என்றும் ஒப்புக்கொண்டனர்.”
“திருமணத்திற்கான உரிமை அடிப்படை உரிமை அல்ல. ஆனால் அரசமைப்பில் திருமண உரிமை தொடர்பான பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதில் 21வது பிரிவின் கீழ், உங்கள் நற்பெயரைப் பாதுகாக்கும் தனியுரிமைக்கான உரிமையைப் பெறுவீர்கள்,” என்றார் கருணா நந்தி.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் பிரசாத் ராஜ், தன்பாலினத்தவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம், அந்தப் பொறுப்பை அப்படியே அரசிடம் கொடுத்துவிட்டது எனக் கூறினார்.
“இந்த உரிமை எங்களுக்கு முக்கியம் என்பதை அரசு ஏற்கும். இது தேர்தல் காலம். எங்கள் சமூகத்திலும் வாக்காளர்கள் இருக்கிறார்கள், அது பெரிய வாக்கு வங்கி என்பதை அரசு அறியும். அதனால், இவ்வளவு பெரிய சமூகத்தை அரசு ஏமாற்ற விரும்பாது,” எனக் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாகப் படிக்க வேண்டும் எனக் கூறிய தன்பாலினத்தவர்கள், தங்கள் தரப்பு கோரிக்கைகளையும், நியாயங்களையும் அமைப்புகள் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என்பதைத் தாங்கள் புரிந்துகொண்டதாகக் கூறினர்.
இந்தியாவில் LGBTQ+ சமூகத்தின் மக்கள்தொகை 13.5 முதல் 14 கோடி வரை உள்ளது. உலகில் 34 நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது. ஆசியாவைப் பொறுத்தவரையில், தைவான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அதை அங்கீகரித்துள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்