இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய், சஞ்சிவ் கன்னா, சூர்யா காந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையில், `ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க பரிந்துரைத்தது யார்? அரசியலமைப்பில் பிரிவு 370 தற்காலிகமானது என்று கூறப்படும் வேளையில், எவ்வாறு அது நிரந்தமாகும்? என மத்திய அரசுக்கும், மனுதாரர்கள் தரப்புக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.


அதற்கு, `மாநிலங்களை மறுசீரமைக்க மத்திய அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பிரிவு 370 தடையாக இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் ஜம்மு காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாத செயல்கள் குறைந்திருக்கிறது’ என மத்திய அரசு வாதிட்டது. மறுபக்கம், `பிரிவு 370-ஐ நீக்க அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை முக்கியம். ஆனால், ஜம்மு காஷ்மீரில் 1956-ல் இது கலைக்கப்பட்டுவிட்டதால், எவ்வாறு பிரிவு 370-ஐ நீக்க முடியும். மத்திய அரசின் இந்த செயல், சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுகிறது. இது, மக்கள் விருப்பத்துக்கு எதிரான அரசியல் நடவடிக்கை’ என மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


இறுதி வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். இவர்களிடமிருந்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக, இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக நீதிபதி சஞ்சிவ் கன்னா ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
தீர்ப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது
தீர்ப்பின் விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்…
நன்றி
Publisher: www.vikatan.com