
பட மூலாதாரம், Getty Images
சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்லுடன் காபி குடித்துக்கொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் பற்றிப் பேசப்பட்டது.
அது ஐபிஎல் மினி ஏலத்திற்கு அடுத்த நாள், ரோஹித் தனது பழக்கமான பாணியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் கில்லுக்கு தலைமைத்துவம் குறித்து சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த செய்தியாளர் அருகில் நின்று இவற்றையெல்லாம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரோஹித், ஒரு மூத்த சகோதரரைப் போல, கில்லிடம் விளக்குகிறார், “தம்பி, நீங்கள் இந்தியா அணி கேப்டனாக விரும்பினால், பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, ஐபிஎல் கேப்டன்சியிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்,” எனப் பேசிக் கொண்டிருந்தார்.
தரம்சாலா டெஸ்டின்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் ஷுப்மான் கில்லின் மூன்றாவது டெஸ்ட் சதத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார் என்றால், அது கேப்டன் ரோஹித் சர்மாதான்.
ரோஹித் – கில் இடையிலான ஒற்றுமை

பட மூலாதாரம், Getty Images
உண்மையில், பல வழிகளில், தனது ஆரம்ப நாட்களில் ரோஹித் கொண்டிருந்த மிகவும் திறமையான பேட்ஸ்மேனுக்கு உரிய அம்சங்களை ஷுப்மன் கில்லிடமும் காணலாம்.
தற்செயலாக, கில் தனது 24வது டெஸ்டில் விளையாடி, இதுவரை மூன்று டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மேலும் ரோஹித்தும் தனது முதல் 24 டெஸ்டில் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ரோஹித்தை போலவே, கில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட சவால்களைச் சமாளிக்க நேரம் எடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் புகழ்பெற்ற கபா டெஸ்டில் 91 ரன்களில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி கில் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்ததைப் போல, ரோஹித் முதல் இரண்டு டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்திருந்தார்.
ரோஹித் மிடில் ஆர்டரை விட்டு வெளியேறி, பின்னர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆனார். அவரது ஆட்டம் நிலையானதாக மாறியதால், கில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து விலகி இப்போது மிடில் ஆர்டருக்கு மாறினார், அதன் காரணமாக அவரது ஆட்டமும் சீராகி வருகிறது.
கோலியின் இடத்தை நிரப்புவாரா கில்?

பட மூலாதாரம், Getty Images
இதை வெறும் தற்செயல் என்று கூறலாம், நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்களை குவித்து 400 ரன்களை கடந்துள்ளனர்.
விராட் கோலி போன்ற வீரர் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அதிக பொறுப்புகளை ஏற்க ரோஹித்துக்கு சவால் விடப்பட்டது. அதனால், கில் ஒரு டெஸ்ட் தொடரிலாவது தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்தார்.
ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வாரிசாக கில் பார்க்கப்படுகிறார்.
வெள்ளிக்கிழமை, இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, இருவரும் வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக கில் மிகவும் ஆக்ரோஷமாகத் தெரிந்தார், அவர் தனது கேப்டனுக்கு முன்பாகத் தனது சதத்தை நிறைவு செய்வார் எனத் தோன்றியது. அது நடக்கவில்லை.
ஆனால் இந்த தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்கள் இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியை மிகவும் வலுவான நிலையில் வைத்தனர்.
இந்தக் காலகட்டத்தில் ரோஹித் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களை அடித்துள்ளார், இது அவரது சமகாலத்தவர்களான முரளி விஜய் (61 போட்டிகளில்) மற்றும் அஜிங்க்யா ரஹானே (85 போட்டிகளில்) ஆகியோருக்கு சமம்.
இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்தையும் சேர்த்தால், அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக 43 சதங்கள் அடித்துள்ளார். இது கிறிஸ் கெயிலை விடவும், டெண்டுல்கர் (45), டேவிட் வார்னர் (49) ஆகியோரை விடவும் அதிகம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலை பற்றிப் பேசினால், கேப்டன் ரோஹித் சர்மா தனது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் 48 சதங்களை சமன் செய்துள்ளார். இப்போது கோலி (80), டெண்டுல்கர் (100 சதங்கள்) மட்டுமே அவரைவிட முன்னிலையில் உள்ளனர்.
புதிய தலைமுறையினரை நம்ப வேண்டிய நேரம் இது

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரோஹித் ஷர்மா கில் உடன் இருப்பதைப் பார்த்தால், பஞ்சாபை சேர்ந்த இந்த வீரரை ரோஹித் மிகவும் உயர்வாக மதிப்பிடுவதை நீங்கள் உணர்வீர்கள்.
உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்த எழுத்தாளர் ரோஹித் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது, திறமை என்ற ஒரு வார்த்தை உங்களுக்குத் தெரிந்தால், எந்த முகம் முதலில் உங்கள் நினைவுக்கு வரும் என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார், ரோஹித் கண் இமைக்காமல் “கில்” என்று கூறினார்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கோலி மற்றும் ரோஹித் போன்ற திறமையான வீரர்களின் ஆரம்பப் போராட்டங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை வைத்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலையும் அளித்த ஒரு காலம் இருந்தது.
ஒருவேளை ரோஹித் இதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக, கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை வித்தியாசமாக வழிநடத்த வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதோடு, ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதையும் கண்டு ரோஹித் மகிழ்வார்.
இதன் காரணமாக, ஒரு காலத்தில் தோனி ரோஹித்-கோலி மீது காட்டிய அதே நம்பிக்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தலைமுறை பேட்ஸ்மேன்கள் மீதும் ரோஹித் காட்டலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்