சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “கடந்த 12 மணி நேரத்தில் சென்னையின் மழையளவு சராசரியாக 10 -11 செ.மீ பதிவாகியிருக்கிறது என்றாலும், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 25 செ.மீ அளவு கனமழை பெய்திருக்கிறது. ஆனால், முதல்வரின் மழைநீர் வடிகால் திட்டம் இன்று பெருமளவில் கைகூடியிருக்கிறது. மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 800 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன் கட்டப்பட்ட 2,100 கிமீ மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டிருக்கிறது. சென்னையில் இருக்கும் அடையாறு, கூவம்,பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலை பகுதிகளும் தூர்வாரப்பட்டிருக்கிறது.
அதனால், மழை நீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. செம்பரப்பாக்கத்திலிருந்து 3,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டாலே, அடையாறு கரையோர குடிசைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், தற்போது 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பிறகும் அந்தப் பகுதி பாதிக்கப்படவில்லை என்றால், தூர்வாரும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுதான் அதற்கு காரணம் . சைதாப்பேட்டை அதன் சுற்றுவட்டார சில பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தோம்.

அங்கு இருக்கும் பல்வேறு குடிசைப் பகுதி மக்களுக்குப் பெரியளவிலான பாதிப்பு இல்லை. ஆனால், மேற்கு மாம்பலம் கால்வாயில், செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் 6000 கன அடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டிருப்பதால், அதை 4000 கன அடி நீராகக் குறைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதனால் மாம்பலம் பகுதியில் மட்டும் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் படிப்படியாகக் குறையும். இன்னும் 1,2,3, 4-ம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
எனவே, தற்போது எங்கெல்லாம் மழையின் தீவிர பாதிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உரியப் பாதுகாப்புப் பணியை மேம்படுத்தவும், பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரி செய்வதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்னை சீர் செய்வதற்கானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டிருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “வட சென்னையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு கொசஸ்தலை மழை நீர் வடிகாலுக்காக கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் சாலை 5,500 கி.மீ நீளம் இருந்தாலும், சென்னையைச் சுற்றி பழைய கால்வாய்களை இடித்து அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை ஏற்படுத்தியதில் 1,450 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.
இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்வதற்கு முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். மருத்துவ முகாம், மாநகராட்சி ஊழியர்கள் என அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தூங்கவே இல்லை. தொடர்ந்து அதிகாரிகளிடம் போனில் பேசிக்கொண்டே இருந்தார். மக்களின் பாதுகாப்பில் முதல்வர் அதிக அக்கரையுடன் செயல்படுகிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com