அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின்கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரி, அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் மனு ஒன்றினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், `சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து, அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, `அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும்” என தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பின்னர், `சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதைத் தடுத்து, நடவடிக்கை எடுக்க சமூக ஊடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது’ எனக் காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மற்றொரு வழக்கை முடித்துவைத்திருக்கிறது. ஆனால், காவல்துறையை விட்டுவிட்டு `உண்மை சரிபார்ப்புக் குழு’ என்ற ஒன்றை அரசு அமைத்திருப்பது, ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது, குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின்மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியுமாகும்.
காவல்துறையின் வரம்புக்கு வெளியே இது போன்ற அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது போன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் ஓர் அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்திருக்கிறது. எனவே, அக்டோபர் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதித்து, திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்படத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இது சம்பந்தமாக மத்திய அரசு ஏற்கெனவே 2021-ல் விதிகள் வகுத்திருக்கின்றன. தமிழக அரசு அமைத்திருக்கும் உண்மை சரிபார்ப்புக் குழு, தகவல் தொழில் நுட்பச் சட்டவிதிகளுக்கு முரணானது.
நன்றி
Publisher: www.vikatan.com