புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். 2011-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர் காங்கிரஸ் சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சரானார் கல்யாணசுந்தரம். அப்போது போலி ஆவணங்களைத் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதாக, கல்யாணசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்தது தமிழக காவல்துறை.


அதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் கல்யாணசுந்தரம். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கல்யாணசுந்தரம். அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அவர், அதே ஆண்டு திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை நடைபெற்றது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம், கல்யாணசுந்தரம் மற்றும் ஆதவன், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி சரிதா.
நன்றி
Publisher: www.vikatan.com