சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால், சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. சென்னை பெருநகர வளரர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்திற்கு பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளபோதும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையிலும் நகரின் மத்தியில் நடத்தப்படுகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆர்வத்தில் தொடங்கிய எண்ணத்திற்கு, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பந்தயத்திற்கு வரும் வருமானம் அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு செல்கிறது. பந்தயத்தை நடத்தும் தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ள நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது?” என வாதிட்டனர்.
போட்டிக்காக மரங்களும் வெட்டப்படுவதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, “இதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நன்றி
Publisher: www.vikatan.com