நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம், கடந்த மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, விண்ணில் செலுத்தியது. சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறக்க, விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக பல உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன.
இந்நிலையில், நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் எந்த பகுதியில் தரையிறங்க வேண்டும் என்பது தொடர்பாக கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது அது தரையிறங்கும் இடத்தை இஸ்ரோ கணித்துள்ளது. திட்டமிட்டபடி, இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இன்று மாலை 5.40 மணியில் இருந்து சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் பணியை துவங்க உள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com