முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திரா முதல்வராக 2014 – 2019 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக ரூ.118 கோடி ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதியில் டிஐஜி தலைமையில் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அவரது வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருப்பதால், அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
திருப்பதி செல்வதற்காக சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்காக பேருந்துக்கு காத்திருக்கின்றனர். வேலூர், திருப்பத்தூரில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 155 பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்படவில்லை. அத்துடன் ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை பகுதியிலேயே ஆந்திரா பேருந்துகள் நிறுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com