மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது எனப் பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்தக்கட்டமாக, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்களை அமைத்து நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் முன்பே இளைஞரணி மாநாடு உள்ளிட்ட சில கூட்டங்களை நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற திட்டமிடலோடு தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தங்களுக்கு நெருக்கமான நிறுவனத்தின் மூலம் தொகுதிவாரியாக சர்வே ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த சர்வேக்கு இணையாக தனியார் அமைப்பு மூலமாகவும் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதன்படி, இப்போதைக்கு நாற்பது தொகுதிகளிலும் தாங்கள் வெற்றிபெறுவோம் என தி.மு.க முழு நம்பிக்கையில் இருக்கிறது. ஆளும் கட்சியாக இருப்பதும் தங்களுக்குப் பலமாக நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்தத் தேர்தலில் கைகொடுக்கும் என நம்புகிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவைல்லாம் தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தாலும் தொகுதிப் பங்கீடு என வரும்போது மிகப்பெரிய சறுக்கலையே சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். தொகுதிப் பங்கீடு என வரும்போது தி.மு.க-வுக்கு என்னென்ன சிக்கல்கள் வரும் என்ற விசாரணையில் இறங்கினோம்…
“மத்தியில் பலமாக இருக்கும் ஆளும் பா.ஜ.க-வை எதிர்த்துக் களம் காணும் தி.மு.க இந்தியா கூட்டணியின் பலத்தோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. பலவீனமும் தி.மு.க-வுக்கு இந்தக் கூட்டணிதான். அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகள் ஆட்சி, பா.ஜ.க-கூட்டணியிலிருந்து பிரிந்து அ.தி.மு.க பிரிந்துவிட்டதால் சிதறப்போகும் சிறுபான்மையினர் வாக்குகள் எனப் பல்வேறு சவால்களை இந்தத் தேர்தலில் தி.மு.க எதிர்கொள்ளப் போகிறது. அவற்றுள், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுதான் முதன்மையான சவாலாக இருக்கும்” எனப் பேச்சைத் தொடங்கினார் அறிவாலய சீனியர் ஒருவர்…
“சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியிலிருந்த அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலிலும் தொடரும். அதுதான் தி.மு.க-வுக்குப் பலமும் பலவீனமும். கடந்த முறை தங்களின் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டனவோ அதே எண்ணிக்கையில்தான் இந்த முறையும் தொகுதிகளை ஒதுக்கும் திட்டத்தில் தி.மு.க இருக்கிறது. புதிதாக இந்தக் கூட்டணியில் யாரும் இணையப் போவதில்லை என்றாலும் கமல் மட்டும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரும்பட்சத்தில் அவருக்கும் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும்.” என்றவர்…

“காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் அதே பத்து தொகுதிகளையோ அல்லது ஒன்றிரண்டு தொகுதிகள் குறைத்தோ கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறது தலைமை. ஆனால், அவர்கள் இந்த முறை கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட இரண்டு தொகுதிகளோடு சேர்த்து சில தொகுதிகளைக் கேட்கும் முடிவிலும் இருக்கிறார்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்தவர்… “மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளுக்கும் எம்.பி-க்களின் செயல்பாடுகள் குறித்த டேட்டா எங்களிடம் இருக்கிறது. பல இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லாத சூழல் நிலவுகிறது. அந்த இடங்களிலெல்லாம் தி.மு.க வேட்பாளர்களைப் போட்டியிட வைக்கும் முடிவில் தலைமை இருக்கிறது. அதற்குப் பதிலாக கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு சில இடங்களை ஒதுக்கும் முடிவிலும் இருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே கேட்கும் எண்ணத்தில்தான் இருப்பார்கள். தலைமை இந்தச் சிக்கலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை கமல் கூட்டணியில் இருந்தால் அவருக்கு கோவை தொகுதியை ஒதுக்கும் முடிவில் தலைமை இருக்கிறது. அப்படியானால் அங்கு கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு தொகுதி ஒதுக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலும் தி.மு.க எங்கே பலமாக இருக்கிறதோ அந்தத் தொகுதிகளைத்தான் கேட்பார்கள். கூட்டணி தர்மத்துக்காக அவர்கள் கேட்கும் தொகுதியைக் கொடுத்தால் கட்சிக்காரர்களிடம் அதிருப்தி எழலாம். அதையும் தி.மு.க தலைமைதான் சமாளிக்க வேண்டும்.” என்றவர்

“எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் தலைமையின் எண்ணம். அதற்கு கூட்டணிக் கட்சிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு தேர்தலைச் சந்திக்கும் என நம்புகிறோம்” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com