
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே பலத்த எதிர்ப்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் உருவாகிவிடும்.
அத போலவே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு அரங்கில் இன்று மதியம் நடைபெறும் இந்தப் போட்டியும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஏழு முறை விளையாடியுள்ளன. ஏழு முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ளுமா இந்தியா அல்லது பாகிஸ்தான் அதை முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முன்பு பெற்ற வெற்றிகளிலேயே திளைத்திருக்க விரும்பவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஷுப்மன் கில் இந்த அணியில் இடம் பெற 99% வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே தெரிவித்திருந்த ரோஹித் சர்மா, இன்று இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.
டாஸ் இழந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் , “நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்போம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.
ஷுப்மன் கில் சாதிப்பாரா?
ஷுப்மன் கில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா எனப் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.
ஓய்வுக்குப் பின்னர், தனது பயிற்சிகளை நரேந்திர மோதி விளையாட்டரங்கத்தில் மேற்கொண்ட அவர், இன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த விளையாட்டரங்கில் அவர் விளையாடப் போகும் முதல் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி இதுவே. ஆனால் இந்த அரங்கம் அவருக்குப் புதிதல்ல. இதே அரங்கில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியும் ஆடியுள்ள கில், இரண்டு சதங்களை இந்த மைதானத்தில் அடித்துள்ளார்.
உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இதுவரை…

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானும் இந்தியாவும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்த்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் 1947இல் தனி நாடாக உருவானது முதலே இரு அணிகளும் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர். பிரிவினைக்குப் பிறகு 1950களில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.
இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகர் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
குறைத்து மதிப்பிடப்படும் பாபர் ஆசம்
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமை எப்போதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமை சுற்றியே உள்ளது. அவர் திறமையான வீரராக இருந்தாலும், அவர் எப்போதும், குறைத்தே மதிப்பிடப்படுகிறார். அவர் எப்போதும் தனது இன்னிங்ஸை அமைதியாகவும், மெதுவாகவும் நகர்த்துபவர்.
அவர் என்ன செய்கிறார் என்பதை எதிர் அணியினர் உணரும் முன்னரே அவரது ஸ்கோ் 50 அல்லது 60ஐ தாண்டியிருக்கும். பின், அவர் தன் விருப்பப்படி, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்குவார்.
புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷானுடன் இன்னிங்ஸை தொடங்குவார்.
ரோஹித் இதுவரையிலான ஆட்டங்களில் ரன் குவித்ததைப் பார்த்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தனது தடையற்ற கவர் டிரைவ்கள், சிக்ஸர்கள் மற்றும் அச்சமற்ற புல் ஷாட்கள் மூலம் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் எளிதில் ஆட்டமிழந்தால், பாகிஸ்தான் அடுத்ததாக விராட் கோலியை எதிர்கொள்ள நேரிடும். கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக சதம் அடித்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி-ராகுல் இணை 200 ரன்கள் சேர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆட்டத்தைப் பல கோடி பேர் ஆன்லைனில் பார்த்தாலும், நேரடியாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணவுள்ளனர். எனவே ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நரேந்திர மோதி விளையாட்டு அரங்குக்கு அருகில் உள்ள சாலைகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும்கூட ஆமதாபாத் வந்திருப்பதால் நகரின் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.
எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இன்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையில்தான் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறப் போகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்