சாந்தன்: ராஜீவ் கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்

சாந்தன்: ராஜீவ் கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்

சாந்தன்

பட மூலாதாரம், HANDOUT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் சாந்தன் என்ற சுதேந்திரராஜா. இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரையும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென நால்வரும் கோரிவந்தனர்.

32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.

எப்படி உயிரிழந்தார் சாந்தன்?

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,” என்றார்.

“அவருக்கு Cryptogenic cirrhosis பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்துவந்தோம்.

“கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுயநினைவு இழப்பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 27) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

“அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்,” என்று கூறினார்.

சாந்தன் தனக்கு தற்காலிக பயண ஆவணங்களைக் கோரிவந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழக்கிழமை, அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று வெளிநாட்டவருக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் இருந்து பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

உடல்நலம் சரியானதும் அவர் இலங்கைக்கே திரும்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, உயிரிழந்திருக்கிறார்.

சாந்தன் குடும்பத்தினர்

பட மூலாதாரம், MINISTRY OF FISHERY

படக்குறிப்பு,

இலங்கையில் உள்ள சாந்தன் குடும்பத்தினர் சமீபத்தில், இலங்கை அமைச்சரை சந்தித்து சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

குற்றச்சாட்டு குறித்து சாந்தன் கூறிவந்தது என்ன?

சாந்தன்

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராசனின் உதவியாளராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சாந்தன் என்ற சுதேந்திரராஜா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையிலிருந்து இந்தியா வந்த சாந்தன், கோடம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இஞ்சினீயரிங் டெக்னாலஜியில் படித்தார்.

இந்த காலகட்டத்தில் சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். போராளிக் குழுவினரை உளவு பார்த்ததாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கூறின. பத்மநாபாவின் படுகொலைக்குப் பிறகு, இலங்கைக்குத் திரும்பிச் சென்ற சாந்தன், மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து ராஜீவ் காந்தியின் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறிவந்தார்.

சாந்தன் விடுதலையான பிறகு, அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் மகேஸ்வரி தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் கோரிக்கை வைத்திருந்தார்.

சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 30-ஆம் தேதியன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

சாந்தனின் குடும்பத்தினர் யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் வசித்துவருகின்றனர். சாந்தனின் உடலை ‘எம்பாமிங்’ செய்து இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். இன்று இரவு அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *