விசித்ரா முதல் திரிஷா வரை: தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? நடிகைகள் கூறுவது என்ன?

விசித்ரா முதல் திரிஷா வரை: தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? நடிகைகள் கூறுவது என்ன?

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், VIJAY TELEVISION / TRISHA

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்ரா திரைத் துறையில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் மற்றும் அதைத் தொடர்ந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுத்தான் இந்தத் துறையே வேண்டாம் என்று வெளியேறியதாக அந்நிகழ்வில் கூறியிருந்தார்.

விசித்ராவுக்கு முன், விசித்ராவுக்கு பின் எனப் பல ஆண்டுகளாகவே சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து வருவதை செய்திகள் வாயிலாகவும், அவ்வப்போது எழும் புகார்கள் வாயிலாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

“பொதுவாகவே இதுபோன்ற பிரச்னைகள் பொதுவெளிக்கு வரும்போது அதை வெளிக்கொண்டு வருபவர்கள் யார் என்பதைப் பொறுத்து பிரச்னையின் தீவிரம் இரண்டு நாட்களுக்கு உள்ளாகவோ சில நாட்களிலோ அடங்கி விடுவதாக” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி.

இப்படி ஒவ்வொரு முறையும் இரண்டு நாட்கள் பேசுவதும், மூன்றாம் நாள் மறந்து விடுவதுமாய் இருக்கும் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து முன்னாள், இந்நாள் நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.

திரைத்துறையில் பாதிக்கப்படும் பெண்கள்

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், JBISMI

திரைத்துறையில் கால்பதிக்கும் பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் சவாலாக பாலியல் ரீதியான அணுகுமுறை பேசப்பட்டு வருகிறது. ஏன் தொடர்ந்து சினிமாவில் பணியாற்றும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தபோது, “திரையுலக பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் கொடுமைகள் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உச்ச நடிகை தொடங்கி கடைநிலை பெண் ஊழியர் வரை இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் சினிமாவில் இருக்கும் ஆண்களின் பெண்கள் குறித்த பார்வைதான்,” என்று கூறுகிறார் பிஸ்மி.

இதே கேள்விக்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் காஸ்டிங் கவுச் நடப்பது உண்மைதான். சில பேர் வேறு வழியில்லாமல் இதில் மாட்டிக்கொள்வார்கள். சில பேர் அதைத் தைரியமாக எதிர்கொண்டு வெளிப்படுத்தி விடுவார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் நடக்கிறது. அது இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது,” என்கிறார்.

ஆனால், அறிமுக துணை இயக்குனரான கல்பனாவோ பெரும்பாலும் தான் பணிபுரிந்த இடங்களில் இதுவரை அதுபோன்ற பிரச்னைகளை சினிமா துறையில் எதிர்கொண்டதில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

அதே நேரம் மாடலிங் மற்றும் துணை நடிகை என்ற நிலையில் இருக்கும் பலரிடமும் இதுகுறித்துப் பேச முற்பட்டபோது, “அதைப் பற்றி வாயே திறக்காதீர்கள். எங்களால் பேச முடியாது. எங்களது வாய்ப்பு பறி போய் விடும்,” என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், GAYATHRI RAGURAM/TWITTER

சினிமாவில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

பொதுவாகவே எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார்கள். சினிமா துறையில் இது அப்பட்டமான விஷயமாக வெளியே தெரிகிறது. அதில், பொது சமூகத்தைப் போல பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு காரணம், “இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என ஆண்கள் யாராக இருந்தாலும் சினிமா துறையில் இயங்கும் பெண்களை வெறும் பாலியல் பிண்டமாகவே பார்ப்பதுதான். அவர்களை சக மனுஷியாக பார்க்கும் பக்குவமும் புரிதலும் பெரும்பாலான ஆண்களிடத்தில் இல்லை,” என்கிறார் பிஸ்மி.

அதே நேரம், “பெண்கள் மீதான அடக்குமுறையை அவர்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக முன்வைக்கிறார்’ காயத்ரி ரகுராம்.

உதாரணமாக ‘பல படங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தித்தான் எடுக்கப்படுகிறது. இயக்குநர்களே பெரும்பாலும் ஆண்கள்தான். பெண்களுக்கென்று சமமான இடம் கிடையாது. இதனால் எளிதில் அவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு இரையாவதாக’ கூறுகிறார் அவர்.

பெண்களை சினிமா மிரட்டுகிறதா?

சினிமா துறையில் இதுபோன்ற விஷயங்களை சகித்துக் கொண்டால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் “இல்லையென்றால் வாய்ப்புகளைப் பறித்து விடுவேன், எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுவேன் என்ற வகைகளில் பெண்கள் மிரட்டப்படுவதாக” தெரிவிக்கிறார் பிஸ்மி.

“இது போன்ற பாலியல் மிரட்டல்களால் எத்தனையோ பெண்கள் சினிமா துறையை விட்டே காணாமல் போயிருக்கிறார்கள். இதில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர், சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. துறைக்குள் நுழையும் அனைத்து பெண்களும் பாகுபாடு இல்லாமல் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,” என்கிறார் காயத்ரி ரகுராம்.

பெண்களை அங்கீகரிக்காத சினிமா அமைப்புகள்

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், KASTHURI SHANKAR / INSTAGRAM

பாலியல் ரீதியான பிரச்னைகளைத் தாண்டி பெண்களுக்கு பாகுபாடு ரீதியான பிரச்னைகளும் சினிமாவில் நிறைய இருப்பதாகக் கூறுகிறார் கஸ்தூரி.

இதுகுறித்துப் பேசுகையில், “இன்று வரை சினிமா ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தில் பெண்களுக்கு இடமில்லை. ஒப்பனையில் பெண்கள்தான் ஆண்களைவிடச் சிறந்தவர்கள் என்பது பல இடங்களில் நிரூபணம். ஆனால், இங்கிருக்கும் பெண் ஒப்பனைக் கலைஞர்கள் மும்பை சென்றுதான் உறுப்பினர் அட்டை வாங்க வேண்டியுள்ளது.

அதேபோல் யூனியன் வண்டிக்குள் பெண்களை அனுமதிப்பது கிடையாது. கேட்டால் வெளிப்படையாகவே தீட்டு என்று சொல்வார்கள். கேமரா ஸ்டூல் மீது பெண்கள் அமர்ந்துவிடக் கூடாது. ஆனால், ஆண்கள் அதில் அமர்ந்துகொண்டு சிகரெட் கூட பிடிப்பார்கள். இதுபோல சினிமாவில் உள்ள 18ஆம் நூற்றாண்டு சிந்தனைகள் களையப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று கூறுகிறார் கஸ்தூரி.

பாலியல் சீண்டல்களில் இருந்து தப்புவது எப்படி?

முன்பைவிட இப்போது பலரும் சினிமாவில் தங்களுக்கு நடக்கும் அநீதியை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதே வேளையில் அதற்கான எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதைத் தாண்டியும் சினிமா துறையில் பெண்கள் சாதிக்க முடியுமா என்பதே பில்லியன் டாலர் கேள்விதான் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

“பலரும் வெளிப்படையாக தங்களைத் தவறான எண்ணத்தோடு அணுகுபவர்களை ஒன்று வெளிப்படுத்தி விடுகிறார்கள் அல்லது எதிர்த்து விட்டு வந்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதும் உண்டு. உதாரணமாக, புகார் தெரிவித்தாலும் இவர்கள் பிரச்னைக்குரிய ஆட்கள் என்று யாரும் வேலைவாய்ப்பு தர மாட்டார்கள். நம் திறமையைக் காட்ட வாய்ப்பு கிடைக்காது. புகார் தெரிவிக்கவில்லை என்றாலும் வழக்கமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று கூறுகிறார் காயத்ரி ரகுராம்.

“எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உண்டு. பாலியல் சீண்டல்களைத் தவிர்ப்பது அந்தந்த தனிநபரைப் பொறுத்தது. சிலர் உடனே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் இவற்றை எதிர்ப்பதால் நீங்கள் நினைக்கும் உயரத்தை எட்ட முடியாது. ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தலையைக் காட்ட முடியுமே தவிர உச்சத்தை அடைய முடியாது. அதுதான் திரையுலக சூழலாக இருக்கிறது,” என்கிறார் பிஸ்மி.

ஆனால், “சினிமாவை பொறுத்தவரை நீங்கள் வெற்றியை லஞ்சம் கொடுத்து வாங்க முடியாது. இதில் மக்கள்தான் வெற்றியைத் தர வேண்டும். எனவே சினிமா துறைக்குள் வருபவர்கள் தங்கள் திறமையை நம்பி வந்தாலே போதும். யாராவது உங்களைத் தவறான முறையில் அணுகினால் அதற்கு இணங்க வேண்டும் என்று அவசியமில்லை,” என்று உறுதியாகக் கூறுகிறார் கஸ்தூரி.

குற்றங்களை அணுகுவதில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பொதுவாகவே யாருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அணுகும் தன்மையும் அமைவதாக சினிமா துறையினர் பலரும் கூறுகின்றனர். பணம் இருப்பவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் மட்டுமே இங்கு நீதியைக்கூட எளிதில் பெற முடிகிறது. இதுவே குற்றங்களை அணுகுவதில் பாகுபாடு காட்டப்படுகிறதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

இதுகுறித்துக் கேட்கையில், “அப்போது விசித்ராவுக்கு நடந்த பாதிப்பிற்கு சங்கம், சட்டம் என எதுவுமே நீதியைத் தரவில்லை. இதை இப்போது த்ரிஷாவுக்கு நடக்கும் சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனசு பதறுகிறது. இன்று திரிஷா போன்ற எல்லாருக்கும் வேண்டிய கதாநாயகிக்கு குரல் கொடுக்கும் யாருமே, அன்று விசித்ரா போன்ற துணை நடிகைக்கு குரல் கொடுக்கவில்லை என்றுதானே ஆகிறது. கதாநாயகியாக இருந்தால்தான் அவர்களுக்காகப் பேசுவேன், இதர சினிமா பெண் கலைஞர்களுக்காகப் பேச மாட்டேன் என்று இல்லாமல் எல்லாருக்காகவும் பேச வேண்டும்,” என்கிறார் கஸ்தூரி.

பத்திரிகையாளர் பிஸ்மியும் இதே கருத்தைக் கூறுகிறார், “குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் அல்லது யாருக்கு குற்றம் இழைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மீதான நடவடிக்கையும் இருக்கிறது. மன்சூர் அலிகான் பேசியது தவறுதான். இன்று அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் சங்கங்கள் உச்ச நடிகர் யாராவது இப்படி செய்திருந்தால் இதேபோன்ற வேகமான நடவடிக்கையை எடுத்து விடுமா?” என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

“இதற்கு முன்னாள் நயன்தாராவின் புகார் என்னவாயிற்று? ஜாகுவார் தங்கம் மீது ஒரு நடிகர் புகார் தொடுத்தாரே அவர் இப்போது எங்கிருக்கிறார்? அவருக்கு ஏதும் நீதி கிடைத்ததா?” என்ற கேள்வியையும் சுட்டிக்காட்டுகிறார் பிஸ்மி.

சினிமாவில் ஐசிசி கமிட்டியின் முக்கியத்துவம்

அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ICC – Internal Complaint Committee என்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும். ஆனால், நடிகர் சங்கத்தில் இப்படி ஒரு கமிட்டி இருக்கிறது என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை.

“விளம்பரத்திற்கு ஒரு கமிட்டியை போடுகிறார்கள். ஆனால், அதன் உறுப்பினர்களின் தொடர்பு எண்கூட யாருக்கும் தெரியாது என்ற நிலையே இருப்பதாகக் கூறுகிறார்,” பிஸ்மி.

தொடர்ந்து பெண்களுக்கு இப்படியான பாதுகாப்பற்ற சூழல் நிலவுமிடத்தில் கண்டிப்பாக வலுவான ஐசிசி கமிட்டி செயல்பட்டால் மட்டுமே குறைந்தளவுக்கு குற்றங்களை தடுக்க முடியும் என்கிறார். இதையேதான் கஸ்தூரி மற்றும் காயத்திரி ரகுராமும் வலியுறுத்துகின்றனர்.

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், KAAJAL PASUPATHI

தொடர்ந்து போராடி வரும் நடிகை

“ஐசிசி கமிட்டி என ஒன்று உள்ளது, அதில் புகார் செய்யலாம் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அப்படியே ஒரு கமிட்டி இருந்தாலும் அங்கும் ஒரு ஆண்தான் இருக்கப் போகிறார், அங்கும் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே நியாயம் கிடைக்கும்,” என்று கூறுகிறார் காஜல் பசுபதி.

சினிமா துறையில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தன் மீது அவதூறு பரப்புபவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாகக் கையாண்டு வருகிறார். இதுவரை சைபர் க்ரைமில் மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடுத்தும் 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்கிறார் காஜல் பசுபதி. அந்தக் குற்றவாளிகளே இவர் முன்தான் இயல்பாக உலவி கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

“பெண்களிடம் பாலியல் ரீதியில் அணுகுபவர்களை நாம் எதிர்த்தால் இப்போதெல்லாம் மிரட்டல் எல்லாம் இல்லை, நேரடியாக நமது வாய்ப்புகளை எப்படி தட்டிப்பறிக்க வேண்டுமோ அதற்கான வேலைகளைச் செய்து விடுகின்றனர். இதனால் எனக்கே பல பட வாய்ப்புகள் கையை விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அடுத்த படத்தை நோக்கிச் சென்று விடுவேன்,” என்கிறார்.

“அப்படி ஒரு படப்பிடிப்பிற்காகச் செல்லும்போது அங்கிருந்த பெரிய இயக்குநர் இதுபோல் என்னை அணுகியதால் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். அவர் யாரென்று வெளியில் சொல்லும் சூழல் இல்லை. அதே நேரம் நான் சொன்னாலும்கூட எப்படி விசித்ரா சொன்னதை தினேஷ் கொச்சைப்படுத்துவது போல் பேசினாரோ, அது போலத்தான் அந்த இயக்குநரைச் சார்ந்தவர்கள் என் புகாரை கொச்சைப்படுத்துவார்கள்,” என்று கூறுகிறார் காஜல் பசுபதி.

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், SIAA

நடிகர் சங்கத்தின் செயல்பாடு

இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “முதலில் அவர்களை நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டச் சொல்லுங்கள். எங்களுக்கு என ஒரு அலுவலகம் திறக்கச் சொல்லுங்கள். அதுவே முதலில் இல்லை,” என்று காட்டமாகப் பதிலளித்தார் காயத்ரி ரகுராம்.

“பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் நடிகர் சங்கத்தின் செயல்பாடு மிக மோசமாக இருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து புகார்கள் வரும்போது உங்களுடைய ஐசிசி கமிட்டி வலுவாக இருக்க வேண்டுமல்லவா?

சுகாஷினி மணிரத்தினம், லலிதா குமாரி உள்ளிட்ட சிலரை அறிவித்தார்கள். அவர்களுடைய செயல்பாடு என்ன? இதை விளம்பரத்துக்கான விஷயமாகச் செய்துவிட்டுக் கடந்து சென்று விட்டார்கள். நடிகர் சங்கமும் கண்துடைப்பான நடவடிக்கைகளையே செய்கிறார்கள்,” என்று விமர்சிக்கிறார் பிஸ்மி.

இதுகுறித்து தற்போதைய நடிகர் சங்கத்திடம் கருத்து கேட்க முயன்றபோது, “இவற்றை சங்க நிர்வாகிகளுடன் விவாதித்து விட்டுத்தான் வெளியில் பேச முடியும்,” என்று கூறினார் நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ்.

நடிகர்கள் குரல் எழுப்பாதது ஏன்?

பொதுவாகவே நடிகர்களுக்கு நடிகைகள் குறித்து ஒரே கருத்துதான் உள்ளது. அது பாலியல்ரீதியான நோக்கம் மட்டுமே. பெரும்பாலான சினிமா ஆண்களின் பார்வையே இப்படித்தான் இருக்கிறது என்பதால்தான் அவர்கள் இதைக் குறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை என்று கூறுகிறார் பிஸ்மி.

“எங்கே வாயைத் திறந்தால் நாம் செய்ததையெல்லாம் வெளியே சொல்லி விடுவார்களோ என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கிறது,” என்கிறார் அவர்.

சினிமாவில் பெண்களின் நிலை மாறுமா?

விசித்ரா முதல் திரிஷா வரை : பெண்கள் பாதுகாப்பில் சினிமா செய்ததும், செய்ய வேண்டியதும் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இப்படியே ஒவ்வொருமுறையும் ஒரு பெண் தனக்கு நடந்ததை வெளிப்படுத்தும்போது விவாதங்கள் நடந்து முடிவது மட்டுமே வழக்கமாய் இருக்கிறது. இதற்கான தீர்வுதான் என்ன, திரைத்துறையில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற நிலை மாறுமா என்ற கேள்வியை இவர்களிடத்தில் முன்வைத்தோம்.

“நம் துறையில் இருக்கக்கூடிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தவறு நடக்காமல் அமைப்புகள் கண்காணிக்க வேண்டும். தவறு நடந்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனாலும், சினிமா துறையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் குறைவுதான்,” என்கிறார் பிஸ்மி.

ஆனால், “பெண்களுக்கு சமமான வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். எந்த யூனியனாக இருந்தாலும் அதன் குழுக்களில் பெண்கள் சமமாக இருக்க வேண்டும். நமது நாட்டில் பாதி மக்கள்தொகை பெண்கள்தான். எனவே 50க்கு 50 என்ற இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்,” என்று வலியுறுத்திகிறார் காயத்திரி ரகுராம்.

“நான் ரஞ்சித் மற்றும் அதியன் ஆதிரை போன்ற இயக்குநர்களோடு பணியாற்றியுள்ளேன். இதுவரை ஒருமுறைகூட எந்தப் பிரச்னையையும் எதிர்கொண்டதில்லை. பெண்களை சமமாக நடத்தும் போக்கு அங்கு இருக்கும். பெண்கள் பணியாற்றப் பாதுகாப்பான இடமாக அது இருக்கும். இதனால் இதர இயக்குநர்களும்கூட பெண்களுக்கு சரியான இடத்தைட்ப தர வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதுவே மாற்றத்தை நோக்கி நகர்த்துகிறது,” என்று கூறியுள்ளார் இணை இயக்குனர் கல்பனா.

திரைத்துறை சமூகத்தில் எவ்வளவோ விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பெண்கள் பாதுகாப்பு சார்ந்து தன்னையே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

அதற்கு உடனடி தேவையாக இருக்கும் ஐசிசி கமிட்டி, பெண்களுக்கான இடஒதுக்கீடு, சம உரிமை ஆகியவை நிறைந்த சினிமா சூழலை உருவாக்குவதே மாற்றத்தை நோக்கிய முதல்படியாக இருக்கும் என்று சினிமா வட்டாரம் ஆழமாக நம்புகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *