
பட மூலாதாரம், GETTY IMAGES/NATEE127
சீனாவில் பரவி வரும் புதிய தொற்று
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கோவிட் தொற்று உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்தது.
இந்நிலையில் தற்போது வடசீனப்பகுதியில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா கவலைதரும் விஷயமாக மாறியுள்ளது.
சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவிலான நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்களும் தெரிவிக்கின்றன.
சீனாவில் கோவிட் தொற்றுக்காக போடப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடு நீக்கம் மற்றும் சமீபத்தில் தொடங்கிய குளிர்காலம் ஆகியவையும் இந்த புதிய சுவாச நோயோடு தொடர்பு கொண்டிருக்கலாம்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், சீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய சுவாசக்கோளாறு தொடர்புடைய பிரச்னை கோவிட் அளவிற்கு அதிகமானதாக இல்லை என்றும், சமீபத்தில் புதிய அல்லது வழக்கத்திற்கு மாறான வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
சீனாவில் இரண்டாண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொதுக்கட்டுப்பாடு தான் இந்த புதிய வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்க காரணம் என்று கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனரான மரியா வென். இந்த கட்டுப்பாடு குழந்தைகளை குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலில் இருந்து தள்ளி வைத்திருந்ததாக கூறுகிறார் அவர்.
“பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த இதன் தாக்கத்தையும், தற்போது ஏற்பட்டுள்ள புதிய அலையின் தாக்கத்தையும் ஒப்பிட்டு 2018-2019 காலகட்டத்தில் இருந்தது போல் தற்போது இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அவர்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மை ஃபெங், அதிகரித்து வரும் சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் பல்வேறு வைரஸ்களால் வருவதாகவும், குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
சீனா இந்தியாவின் அண்டை நாடாகும். இது போன்ற சூழலில் இந்திய அரசாங்கமும் இந்த நோய்தாக்குதலை தடுப்பதற்காக அதுகுறித்து ஆய்வை செய்து வருகிறது.

பட மூலாதாரம், REUTERS
ஆய்வுக்கூட்டம் ஒன்றை சமீபத்தில் நடத்தியது மத்திய சுகாதார அமைச்சகம்.
நிலையை கையாள இந்திய அரசு தயாராக உள்ளதா?
இந்த சுவாசக்கோளாறு நோயை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை தயாரிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் ஒன்றை சமீபத்தில் நடத்தியது மத்திய சுகாதார அமைச்சகம்.
இதுகுறித்து பிஐபி(PIB) வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தேவையான அளவு முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் தேவையான அளவு மருந்துகள் மற்றும் காய்ச்சல் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்சிஜன், ஆன்டிபயோட்டிக்ஸ், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனை கருவிகள், ஆக்சிஜன் ப்ளேண்டுகள் வென்டிலேட்டர்கள் மற்றும் இதர அடிப்படை உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் , அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ‘கோவிட்-19 திருத்தப்பட்ட கண்காணிப்பு உத்தியின்’ வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இது இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.
இதில் காய்ச்சல் போன்ற நோய் (ILI) மற்றும் கடும் சுவாச நோய்கள் (SRI) ஆகியவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) நுரையீரல் & தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத்தின் தலைவர் டாக்டர் அனந்த் மோகன் பேசுகையில், உலக சுகாதார நிறுவனம் சீனாவில் இருந்து பெற்ற தகவலில் இருந்து, இது இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் பொதுவான கிருமிகள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
“இது போன்ற நோய்கள் உயர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதிக மருத்துவ சோதனையாக இருக்கலாம், ஆனால் இது ஒன்றும் புதிய கிருமி அல்ல” என்று கூறியுள்ளார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு தொற்று மற்றும் பரவும் வகை நோய்.
சீனாவில் இது குழந்தைகளுக்குள் பரவும் நோயா?
மருத்துவர்கள் கருத்துப்படி, இது ஒரு தொற்று மற்றும் பரவும் வகை நோய்.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், சுவாசம் தொடர்பான நோய்கள் தொற்றக் கூடியவை.
இந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவின் துளிகள் இருமல், சிரித்தல், தும்மல், பேசுதல் மற்றும் பாடுதல் உள்ளிட்ட வழிகளில் மற்றவர்களுக்கும் தொற்றி கொள்ளும்.
இதுகுறித்து லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நுரையீரல் & தீவிர சிகிச்சை மருத்துவ துரையின் தலைவர் மருத்துவர் வேத் பிரகாஷ் கூறுகையில், “சீனாவில் கடுமையான பொதுக்கட்டுப்பாடு விலக்கப்பட்டதற்கு பின்பு வந்துள்ள முதல் குளிர்காலம் இதுதான். எனவே அங்கிருக்கும் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “தற்போது சீனாவில் புதிய வைரஸோ அல்லது பாக்டீரியாக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், GETTYIMAGES/KATERYNA/SCIENCE
நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரு நுண்ணிய நோய்க்கிருமிகள்
மைக்கோபிளாஸ்மா, ஆர்எஸ்வி என்றால் என்ன?
இது போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரு நுண்ணிய நோய்க்கிருமிகள் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
“மைக்கோபிளாஸ்மா என்பது ஒரு பாக்டீரிய நோய்க்கிருமி. குறிப்பாக இது அதிகம் குழந்தைகளையே தாக்கும்” என்று கூறுகிறார் மருத்துவர் வேத் பிரகாஷ்
RSV என்பது ஆங்கிலத்தில் Respiratory Syncytial Virus என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் வகையாகும்.
மருத்துவர் அனந்த் மோகன் கூற்றுப்படி, இந்த வைரஸானது மேல் சுவாச பாதை, மூக்கு மற்றும் தொண்டையை பாதித்து சளி, இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்குகிறது.
மைக்கோபிளாஸ்மா, ஆர்எஸ்வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவை மிகவும் பொதுவானவையே மற்றும் தீவிரமானதாக இல்லாதபட்சத்தில் ஆன்டிபையோட்டிக்ஸ் மூலமே இவற்றிற்க்கு சிகிச்சையளிக்கலாம்.
இதன் அறிகுறிகள் என்ன?
இதில் தொண்டை வறட்சி, இருமல், தும்மல், அதிக காய்ச்சல் உள்ளிட்ட பல பொதுவான அறிகுறிகள் காணப்படும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
மருத்துவர்கள் கூற்றுப்படி, சிலநேரங்களில் இது தானாகவே குணமாகிவிடும். இதற்கு அலர்ஜி மருந்துகளும் கூட பரிந்துரைக்கப்படும். ஆனால், நிமோனியா பெறுக தொடங்கிவிட்டால் ஆண்டிபையோட்டிக் மருந்துகள் வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
புதிய காய்ச்சலோடு கோவிட்டை தொடர்பு படுத்துவது கடினம்
இந்த நோய்க்கும், கோவிட்டுக்கு பிந்தைய உடல்நிலைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா?
தற்போது சீனாவில் பரவி வரும் காய்ச்சலோடு கோவிட்டை தொடர்பு படுத்துவது கடினம் என்று கூறுகிறார் டாக்டர் அனந்த் மோகன்.
அவரது கூற்றுப்படி, “ கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு நோயெதிர்ப்பு வளராமல் இருக்க வாய்ப்புள்ளது.” ஆனால் இது வெறும் கருத்து மட்டுமே , கண்டிப்பாக கொரோனா நோயெதிர்ப்பு இதர வைரஸ்கள் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு வழங்கும் என்று அர்த்தமில்லை.
இப்போது காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் மற்றும் அதற்கான வழிகாட்டுதல்களும் உள்ளன. எனவே அதையும் கூட எடுத்து கொள்ளலாம்.
ஆனால், தடுப்பூசியே எப்போதும் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்புவது முட்டாள்தனம் என்றும் டாக்டர் அனந்த் வலியுறுத்துகிறார்.
அதேசமயம் டாக்டர் வேத் பிரகாஷ் மற்றொன்றையும் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அல்லது கோவிட் கூட தாக்காத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மாறி வரும் வானிலை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் காய்ச்சலுக்கு எதிரான நோயெதிர்ப்பை கொண்டிருக்க மாட்டார்கள். இந்நிலையில் இது போன்ற குறைத்திறன் கொண்ட பாக்டீரியா அல்லது வைரஸ்கள் கூட அவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிறிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாததால், அவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக கூறும் இவர், தடுப்பூசி போடாத அல்லது கோவிட் தொற்று பாதிக்காத பெரியவர்களும் இந்த பட்டியலில் வருவார்கள் என்று கூறுகிறார்.
அதே சமயம் இது போன்ற தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு அதிகம்.

பட மூலாதாரம், Getty Images
வானிலை மாறும்போதெல்லாம் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு பாதிக்கப்படுகிறது.
சுற்றுசூழல் மாசு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
மருத்துவர்கள் கூற்றுப்படி, வானிலை மாறும்போதெல்லாம் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு பாதிக்கப்படுகிறது.
உடலின் மீதான சுற்றுசூழலின் அதிகப்படியான தாக்கம் நுரையீரல், சுவாசப்பாதை ஆகியவற்றில் தான் எதிரொலிக்கிறது. எனவே அவை தொற்று நோய் உள்ளிட்டவற்றோடு போராட வேண்டியிருக்கிறது.
குளிர்காலம் போன்ற வானிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் உடல் தயாராகும் நேரத்தில், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக இது போன்ற வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது இன்ஃப்ளூயன்ஸாக்கள் உடலை தாக்குகிறது. இது அலர்ஜி மற்றும் நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
சுற்றுசூழல் மாசுபாடு அதிகரித்தால், பிஎம் 2.5 அல்லது பிஎம் 10 துகள்கள் உடலுக்குள் ஆழமாக சென்று நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.
எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள போகிறோம்?
முகக்கவசத்தை சிறிது இடைவெளி விட்டு அணிய வேண்டும் என்றும், அதே சமயம் எப்படி அதை தவிர்ப்பது என்றும் கோவிட் சமயத்தில் பல மருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.
கடந்த தசாப்தங்களில் கொடிய நோய்களான இருதய நோய், ஸ்ட்ரோக் அல்லது புற்றுநோய் போன்றவைதான் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த ஐந்து வருடத்தை பற்றி பேச வேண்டுமானால், சுவாசக்கோளாறு நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இது போன்ற சூழ்நிலையில், சுவாசம் தொடர்பான நோய்கள் வருங்காலத்தில் தொற்றுநோயாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
இதை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கைகளை செய்து வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், கண்காணிப்பு அமைப்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு உத்தி, மனித வளம் மற்றும் சிறப்பு வசதிகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் அதே நேரத்தில் மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்