
பட மூலாதாரம், Getty Images
“2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கும் , 2023-இல் விளையாடி வரும் இந்திய அணிக்கும் இரு பெரிய வேறுபாடு இருக்கிறது. 2011-ஆம் ஆண்டு இந்திய அணி மிக ஒற்றுமையாக இருந்தது. சச்சின் டெண்டுல்கருக்காக உலகக் கோப்பையை வென்றுதர வேண்டும் என்று விரும்பியது. ஆனால், இப்போதிருக்கும் அணியைப் பற்றி எனக்குத் தெரியாது. கோலிக்காக யார் உலகக் கோப்பை வென்றுதரப்போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், ‘இந்தியாவுக்காக’ உலகக் கோப்பையை உறுதியாக வெல்வார்கள். இதுதான் பெரிய வித்தியாசம்.”
இந்த வார்த்தைகளைக் கூறியது, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ‘கூல் கேப்டன்’ எம்.எஸ்.தோனி.
தோனியின் கணிப்பு, களத்திலும் களத்துக்கு வெளியேயேயும் பெரும்பாலும் தப்பியதில்லை. இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளுடனும் இருக்கிறது.
2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிவரை சென்ற இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஏறக்குறைய அரையிறுதியை எட்டிவிட்டது. அடுத்ததாக இரு படிக்கட்டுகள் மட்டுமே கோப்பையை வெல்ல இந்திய அணி கடக்க வேண்டியுள்ளது.
2013-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி சார்பில் இதுவரை எந்தக் கோப்பையையும் வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது. இது இந்தமுறை நிறைவேறும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
1985-ஆம் ஆண்டு என்ன நடந்தது?
தற்போதிருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால் 1985-ஆம் ஆண்டின் ‘வோர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட்’ போட்டி நினைவுக்கு வராமல் போகாது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தத் தொடரில் உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்றன. சுனில் கவாஸ்கர் தலைமையில் சென்ற இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி சென்றது. அரையிறுதியில் நியூசிலாந்தை வென் ற இந்திய அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சேர்த்த 176 ரன்களை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தத் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய ஆட்டம்தான் இப்போதுள்ள இந்திய அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போதும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிறப்பான ஃபார்மில் இந்திய அணி
பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் இந்திய அணி சமநிலையுடன் இருக்கிறது என்று கிரிக்கெட் நோக்கர்களும் ரசிகர்களும் கூறுகின்றனர். ரோகித் சர்மா விளையாடாவிட்டால், கோலி அணியை தூக்கி நிறுத்துகிறார். கோலி ஆட்டமிழந்துவிட்டால் ரோகித் கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்படுகிறார். நடுவரிசை முன் எப்போதும் இல்லாத வகையில் ஸ்திரமாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா காயத்தால் ஓய்விலிருக்கும் போதும், எந்த பாதிப்பும் குறையும் இல்லாத நிலையில் அணி தன்னைச் சரி செய்து கொள்கிறது, என்று பேசப்படுகிறது.
இதுவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் என 6 அணிகளையும் இந்திய அணி வென்றிருக்கிறது.
பந்துவீச்சில் இதுவரை எந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இல்லாத வகையில் துல்லியமான, கட்டுக்கோப்பான, உலக அணிகளுக்குச் சவாலான பந்துவீச்சை இந்திய அணி இப்போது வெளிப்படுத்தி வருகிறது. இத்தகைய சமநிலையுடன் இருக்கும் இந்திய அணிக்குக் கோப்பையை வெல்லும் சாத்தியமும், தகுதியும் உள்ளது என்று பரவலாகப் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 20 ஆண்டுகளுக்குப்பின் ஒரு வலுவான வலுவான பதிலிடியை இந்திய அணி வழங்கியிருக்கிறது
20 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி
கடைசியாக 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை உலகக் கோப்பையில் இந்திய அணி வென்றது. அதன்பின் 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில், லக்னோவில் நேற்று (ஞாயிறு, அக்டோபர் 29) நடந்த உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 20 ஆண்டுகளுக்குப்பின் ஒரு வலுவான வலுவான பதிலடியை இந்திய அணி வழங்கியிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளிலும் தோல்வி அடையாத அணியாக 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது. தனது நிகர ரன்ரேட்டை 1.405 ஆக வைத்துள்ளது.
முதல்முறை ‘டிஃபெண்ட்’ செய்து வெற்றி
இந்திய அணி கடந்த 5 ஆட்டங்களில் சேஸிங் செய்துதான் வெற்றி பெற்று வந்தது. அதனால், வலுவான பேட்டிங்கை வைத்துள்ள இந்திய அணியால் சேஸிங் செய்துதான் வெல்ல முடியும், பெரிய ஸ்கோரை அடித்து டிபெண்ட் செய்யும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்றெழுந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்திய அணி.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் முதல்முறையாக முதலில் பேட் செய்து, தாங்கள் சேர்த்த ஸ்கோரை டிபெண்ட் செய்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சவாலான ஆடுகளம்
லக்னோ ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சவாலானது. இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளின் பந்துவீச்சாளர்களுக்குமே ஆடுகளம் ஒத்துழைத்தது.
இந்த ஆடுகளத்தில் தொடக்கத்திலேயே இந்திய அணியின் 3 முக்கிய பேட்டர்களான சுப்மான் கில், கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் ரோகித் சர்மா அசரவில்லை. அவர் கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்து 87 ரன்கள் சேர்த்தார்.
நடுவரிசையில் ராகுல் 39 ரன்களும், சூர்யகுமார் 49 ரன்களும் சேர்த்து, மொத்தம் 229 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை எட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
கோலி ஆட்டமிழந்துவிட்டால் ரோகித் கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்படுகிறார்
டாப்-4 பேட்டர்கள் வரிசையில் ரோகித் சர்மா
பேட்டிங்கில் 3 முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்து சென்றாலும், ரோகித் சர்மா கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடியுள்ளார். கடந்த 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்ளிட்ட 398 ரன்கள் சேர்த்து டாப்-4 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல விராட் கோலியும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் கோலி ‘டக்-அவுட்’ ஆகியிருந்தாலும், ஒரு சதம், இரு அரைசதங்கள் உள்ளிட்ட 354 ரன்கள் சேர்த்து வலுவான பங்களிப்பை அளித்துள்ளார். நடுவரிசைக்கு கே. எல். ராகுல் வலு சேர்க்கிறார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 216 ரன்கள் சேர்த்து எதிரணிகளுக்கு சிம்மசொப்னமாக வலம் வருகிறார்.
இந்த ஆட்டத்தில், 8-வது வரிசைக்குப்பின் பேட்டர்கள் இல்லை எனத் தெரிந்தும், சவாலான ஆடுகளத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக ஷமியுடன் இந்திய அணி பயணித்த முடிவு சரியானது என்று நிரூபணமாகியிருக்கிறது.
பும்ரா-ஷமியின் மிரட்டல்
லக்னோ ஆடுகளத்தைப் பொறுத்தவரை இந்திய அணி சேர்த்த 229 ரன்களை சேஸிங்கை செய்வதுகூட கடினம்தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்தனர். ஏற்கெனவே இங்கிலாந்து பேட்டிங்கில் திணறிவந்த நிலையில், பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் மேலும் சிதைந்தது.
முதல் 10 ஓவர்களுக்குள் முகமது ஷமியும், பும்ராவும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் டாப்ஆர்டர் பேட்டர்களை வெளியேற்றினர். முதல் 5 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி 30 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வலுவாகத்தான் இருந்தது.
ஆனால், பும்ரா மற்றும் ஷமி வீசிய 6-வது ஓவரிலிருந்து 9-வது ஓவர் வரை இங்கிலாந்து அணியைப் புரட்டிப்போட்டது. இருவரும் 9 ரன்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பைக் கனவைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சில் பும்ரா-ஷமி கூட்டணி எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. இதுவரை பும்ரா 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி
தன் அவசியத்தை நிரூபித்த ஷமி
முகமது ஷமி 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினாலும், 9 விக்கெட்டுகளைச் சாய்த்து தனது இருப்பை நிரூபித்து வருகிறார். ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர், அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால், அவருக்கு தொடக்கத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் அளவுக்கு ஷமியால் பேட்டிங் செய்ய முடியாது என்றாலும், விக்கெட் எடுக்கும் வித்தை தெரிந்தவர்.
ஷர்துலைவிட, அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி. இந்தப் போட்டியில்கூட ஷர்துல் இருந்தால் கூடுதலாக 30 ரன்கள் அடித்திருப்பார் என்று யாரும் நினைக்காத அளவுக்கு ஷமியின் பந்துவீச்சு கடந்த போட்டிகளில் அமைந்திருந்தது. பும்ராவும் ஷமியும் இணைந்து எதிரணிக்கு கொடுத்த அழுத்தம் வேறு எந்த பந்துவீச்சாளர்களாலும் இருந்திருக்காது.
சுழற்பந்துவீச்சின் ஆதிக்கம்
உலகக் கோப்பை முழுவதிலும் ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில், பனிப்பொழிவு துவங்கியபின், இருவரும் இங்கிலாந்து பேட்டர்கள் ரன் எடுக்கவிடாத வகையில் நெருக்கடியாகப் பந்துவீசினர்.
குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 6 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளையும், ஜடேஜா 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சுழற்பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறார்கள். அஸ்வின் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிளேயிங் லெவனில் சேர்க்காதது விமர்சிக்கப்பட்டாலும், இருவரும் தங்களின் இருப்பை தங்களின் பந்துவீச்சால் நியாயப்படுத்தி வருகிறார்கள்.
இப்போதுள்ள இந்திய அணி, பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எதிலும் தன்மீது பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்குச் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி கூறுகையில், “இப்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாகப் பார்க்கிறேன். பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் சமநிலையுடன் இருப்பதாகப் பார்க்கிறேன். அனைத்தும் சரியாக சிறப்பாக இருக்கிறது, இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாகக் கூறமாட்டேன். இந்த சமிக்ஞைகளே நமக்குப் போதுமானது,” எனத் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்