பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தது ஏன்?

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தது ஏன்?

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து காரணமாக அதிமுக பாஜக இடையே கடந்த காலங்களில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது அதில் உச்சக்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். பாஜக மேலிடம் சொல்லியே அண்ணாமலை பேசி வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சித்த போது அவருக்கு எதிராக தீர்மானம் மட்டுமே நிறைவேற்றிய அதிமுக, இம்முறை பாஜக தங்கள் கூட்டணியிலேயே இல்லை என்று கூறியிருப்பதற்கு காரணம் என்ன?

பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் அதிமுக உடனான அக்கட்சியின் அணுகுமுறை மாறத்தொடங்கியது. அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறுகிறார். அதேநேரம் அவர் பேசும் கருத்துகள் பல நேரங்களில் கூட்டணிக்குள் நெருடலை ஏற்படுத்தி விடுகிறது.

கடந்த மார்ச் மாதம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று பாஜக மேலிடம் முடிவெடுத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை பேசியதாகத் தகவல் பரவியது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்வினையாற்றிய அக்கட்சியின் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், அண்ணாமலை பேசியதாக கூறப்படும் முடிவை வரவேற்பதாக கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?

அதேகாலகட்டத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவப் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று அண்ணாமலையும் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, கூட்டணியில் குழப்பம் இல்லை என்றும் , கூட்டணிக்குள் சிறு சிறு சிராய்ப்புகள் வருவது இயல்புதான் என்றும் கூறினார். இதையடுத்து, மோதல் விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தன. முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது,” என்று கூறியிருந்தார்.

“முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்,” என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே அண்ணாமலை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று அ.தி.மு.க தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்துவிட்டனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?

பட மூலாதாரம், FACEBOOK/ANNAMALAI

படக்குறிப்பு,

கே. அண்ணாமலை- பாஜக மாநில தலைவர்

அதிமுக – பாஜக மோதல் சில காலம் அடங்கியிருந்த நிலையில், ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு மூலம் அது மீண்டும் அதிகரித்தது. இம்முறை அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஒருகட்டத்தில் அண்ணாமலையை பற்றியெல்லாம் என்கிட்ட கேட்க வேண்டாம். நீங்கள்தான் பேசிப் பேசி அவரை பெரிய ஆளா ஆக்குறீங்க என்று ஊடகத்தினரிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த சர்ச்சையை ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் அண்ணா குறித்தும், பெரியார் குறித்தும் அண்ணாமலை சமீபத்தில் பேசியதும் அதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் நிலைமையை மோசமாக்கியது.

அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது என்ன?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டின் 4-ம் நாளன்று, அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்து பேசிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, உமையாளை விமர்சித்து பேசினார்.”

“இதையடுத்து, சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து உமயவளை தப்பாக பேசியது யார் என முத்துராமலிங்கத் தேவர் கேள்வி எழுப்பினார். எல்லோரும் நெளிகிறார்கள். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருக்கிறார்கள். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. முத்துராமலிங்கத் தேவர் உக்கிரமாகப் பேசினார். கடவுளை நம்ப மறுப்பவர்கள், நம்புபவர்களைப் பற்றிப் பேசக்கூடாது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை அவ்வாறு பேசினால், அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடக்கும் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தவர்கள், பிடிஆர் மற்றும் அண்ணாதுரை” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலையின் பேச்சால் அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்துள்ளனர். மறைந்த தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை கைவிட வேண்டும். அண்ணாமலை எந்தப் புத்தகத்தில் படித்தார், எங்கு படித்தார் என தெரியவில்லை. திடீரென வந்து அண்ணாதுரையை தவறாகப் பேசினால் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அண்ணாமலை தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். மீண்டும் இப்படிப் பேசினால், அண்ணாமலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?

பட மூலாதாரம், C.V.SHANMUGAM

படக்குறிப்பு,

சி.வி. சண்முகம்- அதிமுக எம்.பி

அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி. சண்முகம், இந்த விவகாரத்தில் அண்ணாமலைக்கு காட்டமாகவே பதில் அளித்திருந்தார். “அதிமுக துணை இல்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது. அண்ணாமலையை பாஜக தேசிய தலைமை கண்காணிக்க வேண்டும். கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார். ஐபிஎஸ் படித்துவிட்ட ஆணவத்தில் பேசக்கூடாது. இதேபோல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தால், ஒருமுடிவை எடுக்க வேண்டும் என எங்கள் தலைமையை நாங்களும் வலியுறுத்துவோம்” என்று கூறியதோடு அண்ணாமலை போவது பாத யாத்திரையா, வசூல் யாத்திரையா என்று தெரியவில்லை என்று அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணத்தையும் விமர்சித்து பேசினார்.

சி.வி. சண்முகத்தின் விமர்சனத்துக்கு அண்ணாமலையும் சற்று காட்டமாகவே பதிலளித்தார். “நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன். ஆனால் எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விட மாட்டேன்.

வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு இது புரியாது. அவர்கள் அமைச்சர்களாக இருந்ததே வசூல் செய்யத்தான். அதனால், நான் நடைபயணம் செல்வதை வசூல் செய்யத்தான் என நினைக்கிறார்கள். நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்கள். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.” என்று கூறியிருந்தார்.

அதோடு, தமிழ்நாட்டில் கூட்டணி தேவை அனைவருக்கும் உள்ளது என்றும் இங்கும் லஞ்ச ஒழிப்பு துறை உள்ளது. பாதுகாப்பு அனைவருக்கும் தேவை என்றும் தனது பேச்சின்போது அண்ணாமலை குறிப்பிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச புகார்களை குறிப்பிட்டே அண்ணாமலை இவ்வாறு பேசியதாக கூறப்படும் நிலையில்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?
படக்குறிப்பு,

ஜெயக்குமார்- முன்னாள் அமைச்சர், அதிமுக

பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஜ் – ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று(செப்டம்பர் 18) பேசிய ஜெயக்குமார் அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்தும். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது. ஒரு அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசி வருகிறார்.

இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம், இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்” என்று அவர் பேசியிருந்தார்.

கூட்டணி இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாஜக

கூட்டணி இல்லை என்ற ஜெயக்குமாரின் அறிவிப்பு குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணனிடம் பேசினோம். அப்போது அவர், “இதனால் பாஜகவுக்கு எவ்வித பின்னடைவும் கிடையாது. அண்ணாமலையின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, அண்ணாதுரை குறித்து அவர் தவறாக பேசவில்லை. எனவே,இது குறித்து பேசுவோம் ” என்றார்.

கூட்டணி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்த திருப்பதி நாராயணன், “கூட்டணி இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது குறித்து அறிவிக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைமையும்தான்” என்றார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் கூறியதை தொடர்ந்து அதிமுகவின் தலைவர்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

மாநில விளையட்டு மற்றும் திறன் வளர்ப்பு பிரிவின் தலைவர் அமர்பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், “வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா?

அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “கோடநாடு கொலை, -கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுக ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்டத் தகுதி எங்கள் தலைவருக்கு இல்லை தான்” என்றும் கூறியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?
படக்குறிப்பு,

திருப்பதி நாராயணன் – பாஜக மாநில துணைத் தலைவர்

அதிமுக அறிவிப்புக்கு அண்ணாமலை காரணமா?

அண்ணாமலை விவகாரத்தில் அதிமுக திடீரென இத்தகைய முடிவை எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாமிடம் பேசியபோது, தொகுதி பங்கீடு விஷயத்தில் பாஜகவுக்கு செக் வைக்கவே இந்த முடிவை அதிமுக எடுத்திருக்கிறது என்றும் அண்ணா விவகாரத்தை அதற்கு சரியாக பயன்படுத்திக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார்.

“சமீப காலமாக திமுக எதிர்ப்பு என்றால் பாஜக என்ற கட்டமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா விவகாரத்தில் திமுக வலுவான எதிர்ப்பை காட்டவில்லை. திமுகவின் நிறுவனரே அண்ணாதான் என்றிருக்கும்போது ஆர்.எஸ்.பாரதியை வைத்து பொத்தம்பொதுவாக பேசவைத்தனர். ஆனால், அதிமுக சரியாக பயன்படுத்திக்கொண்டது.” என்றார்.

அண்ணாமலைக்கான அறிவிப்பாக இல்லாமல் பாஜகவின் மேலிடத்துக்கான அறிவிப்பாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது என்று மூத்த செய்தியாளர் பிரியன் கூறுகிறார். “அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு நடந்தது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றுகொண்டிருந்தது. இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவும் பாஜக தரப்பில் 20 தொகுதிகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதற்கு மத்தியில் அண்ணாமலை அதிகமாகவே பேசிவிட்டார். அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. ஆனாலும் அமித் ஷா உடனும் நட்டாவுடனும் தான் எங்களுக்கு பேச்சு என்று கூறிக்கொள்பவர்கள், அண்ணாமலைக்காக இவ்வாறு அறிவித்திருப்பார்கள் நான் கருதவில்லை. பாஜக கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது என்பதையும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை கூட்டணியில் சேர்க்க முடியாது என்பதை வெளிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் ”என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததா?
படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி – அதிமுக பொதுச் செயலாளர்

அதிமுகவும் பாஜகவும் நிழல் யுத்தத்தில்தான் ஈடுபட்டு வருகின்றனர் நிஜ யுத்தத்தில் இல்லை என்று கூறும் தராசு ஷ்யாம், அரசியலில் பொதுவாக நிழல் யுத்தம்தான் செய்யப்படும். அதைதான் இவர்களும் செய்கின்றனர். நிஜ யுத்தத்தில் ஏற்படும் காயம் ஆறாது. இதையெல்லாம் தாண்டி அதிமுக- பாஜக கூட்டணி இருந்தாலும் அது வெற்றிக்கூட்டணியாக இருக்காது

நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோதியை பல்வேறு விஷயங்களிலும் பாராட்டி பேசியிருந்தார். இதை சுட்டிக்காட்டும் தராசு ஷ்யாம், “கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பிரதமரை ஏன் பாராட்டி பேச வேண்டும்” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் நெருக்கடியில் இருக்கிறார் என்று கூறும் பிரியன், “அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கக் கூடாது என்று ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மறுபக்கம், கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்று வேலுமணி போன்றோர் கூறுகின்றனர். பாஜகவும் அழுத்தம் கொடுக்கிறது” என்றார்.

சில காலம் அமைதியாக இருப்பார்கள், மறுபடியும் பாஜக மேலிடம் அதிமுகவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் குறிப்பிடும் பிரியன், “கூட்டணியை முறித்துக்கொள்வது என்றால் நிரந்தரமாக முறித்துக்கொண்டிருக்கலாமே, தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருப்பது ஏன்? எனவே, இது இறுதி முடிவு அல்ல. மத்திய அரசையும் மாநில அரசையும் பகைத்துக்கொண்டு அதிமுகவால் இருக்க முடியாது” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *