IND vs SA – சஞ்சு சாம்சன்: உலகக் கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரர் தொடரை வெல்ல உதவியது எப்படி?

IND vs SA - சஞ்சு சாம்சன்: உலகக் கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரர் தொடரை வெல்ல உதவியது எப்படி?

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல இந்தியாவுக்கு உதவியிருக்கிறது.

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் பாரல் நகரின் போலந்த் பார்க்கில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றக் காரணமாக அமைந்தன.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்து. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 78 ரன்களில் தோற்றது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கணக்குத் தீர்த்தது இந்திய அணி

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் நிலைத்தன்மை ஆட்டத்துக்கு தடுமாறி வந்த சஞ்சு சாம்ஸன்(108) நேற்று முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சஞ்சு சாம்ஸனின் முதல் சதம் வீணாகப் போகாமல் இந்திய அணியின் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது என்றென்றும் அவருக்கு மறக்காத வண்ணங்களைச் சேர்க்கும்.

இந்தத் தொடரில் அற்புதமாக பந்துவீசி முதல் போட்டியில் 5 விக்கெட், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கே.எல்.ராகுல் கேப்டன்ஷியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க வந்திருந்தபோது, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் அதே கே.எல்.ராகுல் தலைமையில் இளம் அணி புறப்பட்டு வந்து ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை சமன் செய்து, தென் ஆப்பிரி்க்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சாம்ஸன், திலக் வர்மா அமைத்த கூட்டணி முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சில் வாஷிங்டன் வீசிய 10 ஓவர்களும், அர்ஷ்தீப் ஓவர்களும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் குறைவுக்கும், விக்கெட் சரிவுக்கும் காரணம் என்று கூற முடியும்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சாம்சன் பற்றி கேப்டன் ராகுல் கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் கேப்டன் ராகுல் கூறுகையில் “உலகக் கோப்பை பைனல் தோல்வி தென் ஆப்பிரிக்க வந்த எனக்கு எங்கள் அணி வீரர்கள் அருமையான வெற்றியை அளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சாம்ஸன் அருமையாக ஆடி வருகிறார். துரதிர்ஷ்டமாக அவருக்கு 3ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க முடியவில்லை. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கெனவே 3ஆவது இடத்தை ஜாம்பவான்கள் நிரப்பியுள்ளனர். இனிமேல் 3வது இடத்துக்கான வாய்ப்பு சாம்ஸனுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

சுந்தர், அர்ஷ்தீப் நிகழ்த்திய மாயாஜாலம்

வாஷிங்டன் சுந்தர் நீண்டகாலத்துக்கு பின் ஒருநாள் தொடரில் இடம் பெற்று நேற்று தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றுதான் கூற முடியும். 10 ஓவர்கள் வீசிய சுந்தர் 38 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் மார்க்ரம், முல்டர் ஆகிய இரு விக்கெட்டுகளும் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்க உந்துகோலாக இருந்த விக்கெட்டுகளாகும்.

டி20 தொடரில் சொதப்பலாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் ஒருநாள் தொடரில் பந்துவீச்சுக்கான ரிதத்தை பிடித்துவிட்டார் என்றுதான் கூற முடியும். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் ரன்களை வழங்கினாலும், லைன் லென்த்தை அடையாளம் கண்டபின் தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தனது சீமிங், ஸ்விங் பந்துவீச்சில் சிம்மசொப்னமாகவே அர்ஷ்தீப் இருந்தார். அதிலும் பேட்டிங்கில் நங்கூரமிட்ட சோர்சியை(81) ஸ்விங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கவைத்து விக்கெட் எடுத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

நங்கூரமிட்ட பார்ட்னர்ஷிப்

சாம்ஸன்-திலக் வர்மா இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 136 பந்துகளில் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் சேர்ந்தபின் ரன் ரேட் மிகவும் மந்தமாக 11 முதல் 30 ஓவர்கள் வரை 73 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

டி20, ஒருநாள் தொடரில் பெரிதாக சோபிக்காத திலக் வர்மா இந்த ஆட்டத்தில் பொறுமையாக பேட் செய்தார். தனது முதல் பவுண்டரியைக்கூட 39 பந்துகளில்தான் அடித்தார். அதிலும் 9 ரன்களில் இருந்து பவுண்டரி அடித்து 13 ரன்களாக திலக் வர்மா உயர்த்தினார். அதன்பின் சாம்ஸனும், திலக் வர்மாவும் களத்தில் நங்கூரமிட்டபின் ரன்கள் குவியத் தொடங்கின. 31 முதல் 40 ஓவர்களில் 73 ரன்களை இருவரும் வேகமாகச் சேர்த்தனர். திலக் வர்மா பொறுமையாக பேட் செய்து 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

வெற்றியுடன் முதல் சதம்

சாம்ஸனின் ஒருநாள் போட்டி அதிகபட்சமே 86 ஆகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் மிகுந்த பொறுமையாக, தனக்கே உரிய ஸ்டைலில் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து சாம்ஸன் மிகுந்த நிதானத்துடன் பேட் செய்து முதல் சதத்தை 110 பந்துகளில் பதிவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். சாம்ஸன் மீது நிலைத்தன்மையற்ற பேட்டர் என்ற விமர்சனம் நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த பதிலடியாகவே தனது சதத்தின் மூலம் சாம்ஸன் வழங்கியுள்ளார் என்றுதான் கூற முடியும்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் ரன் வேகம்

இந்திய அணிக்கு ஃபினிஷ் டச் கொடுத்தது ரிங்கு சிங்கின் பேட்டிங்தான். அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களும், சிறிய கேமியோ ஆடிய சுந்தர் 14 ரன்களும் சேர்த்தனர். இந்தத் தொடர்முழுவதும் அக்ஸர் படேல் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

இந்திய அணி முதல் பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தாலும், அடுத்த 20 ஓவர்கள் மந்தமாக ரன் சேர்த்தது. ஆனால் கடைசி 20 ஓவர்களில் மட்டும் 164ரன்கள் சேர்த்தது, கடைசி 10 ஓவர்களில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

இந்திய அணிக்கு மாற்றத்துக்காக ரஜத் பட்டிதார், சுதர்ஷனுடன் சேர்த்து தொடக்க ஆட்டக்காரராக் களமிறக்கப்பட்டார். அதிரடியாக பட்டிதார் தொடங்கினாலும், 22ரன்களில் பர்கர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த இரு போட்டிகளில் அரைசதம் அடித்த சுதர்ஷன் இந்த ஆட்டத்தில்10 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

சிம்மசொப்னமான சுந்தர், அர்ஷ்தீப்

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை அர்ஷ்தீப், சுந்தர் இருவரின் பந்துவீச்சும் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் குறிப்பிட வேண்டும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு உகந்தது என்பதை மாற்றும்வகையில் சுந்தர் நேற்று பந்துவீசினார்.

தனது பந்துவீச்சில் துல்லியத்தன்மையை மாற்றாமல், லைன் லென்த்தில் வீசி தென் ஆப்பிரி்க்க பேட்டர்களை சுந்தர் திணறடித்தார். தனது சீனியர் அக்ஸர் படேலே வீட சுந்தர் அருமையாகப் பந்துவீசினார்.

அதிலும் தனது பந்துவீச்சின் வேகத்தில் வேறுபாடுகளைக் காண்பித்து பேட்டர்களை திணறடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்து லேகாத்தான் டர்ன் ஆகியது என்றாலும், பேட்டர்கள் பேட்டை வைக்க அச்சப்படும் “கிரே ஏரியா” வில் பந்தை பிட்ச் செய்து திணறடித்தார்.சுந்தர் வீசிய 10 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே வழங்கினார், 31 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஏறக்குறைய 5 ஓவர்கள் மெய்டனாகவே எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

7 ஓவர்கள் மெய்டன்கள்

அதேபோல அர்ஷ்தீப் சிங்கும் தனது முதல் ஸ்பெல்லில் மட்டுமே ரன்களைக் கொடுத்தார். அதன்பின் லைன்லென்த்தனை கண்டறிந்தபின் அதிலிருந்து நகற்றாமல் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். 9 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் ஒரு மெய்டன் கொடுத்து 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 39 டாட் பந்துகள் என்றால், ஏறக்குறைய 7.3 ஓவர்களை அர்ஷ்தீப் மெய்டன்களாக வீசி, தனது 10 பந்துகளில் மட்டும்தான் 30 ரன்களை கொடுத்தார் என்று எடுக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவின் ஆறுதல் இதுதான்

தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை இந்த ஒருநாள் தொடரில் அவர்களுக்கு கிடைத்த ஒரு ஆறுதல், கண்டுபிடிப்பு என்பது டோனி சோர்சி மட்டும்தான். 3போட்டிகளில் ஒரு சதம், இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் என சோர்சி தேர்ந்த பேட்டர் போன்று பேட் செய்தார். எதிர்கால தென் ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமான இடத்துக்கு அச்சாரமிட்டுள்ளார். இதைத் தவிர இளம் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெரிதாக 3 போட்டிகளிலும் சோபிக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் மார்க்ரமின் ஸ்வீப் ஷாட் குறிதத் மோசமான ஆலோசனைதான் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஏனென்றால் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்று வலுவாக இருந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 20 ஓவர்களில் 77 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

வெற்றி தருணம் கிடைக்கவில்லை

தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ துரதிர்ஷ்டமாக எங்களால் வெற்றியோடு முடிக்கமுடியவில்லை. அருமையான ஆடுகங்கள், எங்களுக்கு வெற்றிக்கான அந்தத் தருணம் கிடைக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் 290 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியதுதான், ஆனால், மொமென்ட்டத்தை தவறவிட்டோம். டாஸ் வெற்றி பெரிதாக பங்காற்றவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இரு அற்புதமான இடங்களில் நடக்கும் போட்டி சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

இந்தியா - தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சரிந்த விக்கெட்டுகள்

அதிலும் 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டிலிருந்து 6-வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரி்க்கா, அதேபோல, 26 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு சோர்சி, ஹென்ட்ரிக்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்து 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் என்று வலுவாகத்தான் இருந்தனர். ஆனால், அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் லைன்லென்த்தை பிடித்தபின் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட் படுத்துவிட்டது. அர்ஷ்தீப் வீசிய 9-வது ஓவருக்கு திணறிய ஹென்ட்ரிக்ஸ் அதே ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டவுடன் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அக்ஸர் ஓவரை எதிர்கொண்டு ஆட திணறிய டூசென், பந்து டர்ன் ஆகாது என்ற நினைப்பில் பேக்ஃபுட் எடுத்து ஆட முற்பட்டு கிளீன் போல்டாகினார்.

கேப்டன் மார்க்ரம், சோர்சியுடன் சேர்ந்து சிறிது நேரம் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுந்தர் பந்துவீச்சை அடிக்க திணறிய மார்க்ரம், அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக வாஷிங்டன் சுந்தரின் ஆப்ஸ்பின்னை சமாளித்து ஆட தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற முடியும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *