சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை வருகிறது – மாணவர்களுக்கு என்ன பயன்?

சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை வருகிறது - மாணவர்களுக்கு என்ன பயன்?

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு சோதனை முறையில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் ‘Open Book Examination’ தேர்வு முறையை அமல்படுத்த உள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி இந்து உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் இது குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.

அந்த செய்திகளின்படி, இந்த வாரியத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வில் கேள்விகளுக்கு விடையளிக்கும் மாணவர்கள், தங்களது அருகில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டோ அல்லது அனுமதிக்கப்பட்ட குறிப்புகள் கொண்டோ பதிலை தேர்வு செய்து எழுதலாம்.

இந்த சோதனை திட்டத்தின்படி, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கு கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கும் இந்த தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகாரிகளின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் நோக்கம் மாணவர்கள் எவ்வளவு நேரத்தில் இந்த தேர்வை முடிக்கின்றனர் என்பதை பார்ப்பதாகும். மற்றுமொரு நோக்கம் தற்போதைய கல்வி முறை தொடர்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெறுவதாகும்.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் சிந்திக்கும், பகுப்பாய்வு செய்யும், விமர்சன ரீதியாக அணுகும், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்கள் மதிப்பிடப்படும்.

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

புதிய கல்விக் கொள்கை – 2020இல் புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புத்தகம் பார்த்து தேர்வெழுதும் முறை குறித்து ஆய்வுகள் கூறுவது என்ன?

உலகின் பல நாடுகளில் இந்த முறையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான ‘Open Text Based Assessment’ முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது.

9 ஆம் வகுப்புக்கு இந்தி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11 ஆம் வகுப்புக்கு பொருளாதாரம், அறிவியல் மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் மாணவர்களிடையே விமர்சனப் பார்வையை ஏற்படுத்துவதில் வெற்றிபெறாததால், 2017-18ல் இந்தப் சோதனை நிறுத்தப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை – 2020இல் புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதில் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் போக்கிற்குப் பதிலாக, பாடங்களின் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் போக்கை அவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் புவனேஸ்வர் நடத்திய ஆய்வின் முடிவின்படி, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை உதவும் என்று கூறப்பட்டுள்ளது என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2020 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, இந்த முறையிலான தேர்வில் பங்கேற்ற மாணவர்களும், இதனால் மன அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் நடந்த தனஞ்சய் ஆஷாரி மற்றும் விபு பி சாஹுவின் ஆய்வில், தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறையில் நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், வழக்கமான பாரம்பரிய தேர்வை விட இதில் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“9-10 மற்றும் 11-12 வகுப்புகளுக்கு இந்த வகை தேர்வை ஒரு முன்னோட்டமாக தொடங்க சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பது நல்லது”

நிபுணர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து முன்னாள் சிபிஎஸ்இ தலைவர் அசோக் கங்குலி பிபிசியிடம் பேசுகையில், இந்த புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை ஒன்றும் புதிதல்ல என்கிறார்.

1985-86ல் உத்தரபிரதேசத்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில், உத்தரபிரதேச கல்வி வாரியம் ஒன்பதாம் வகுப்பிற்கு இந்த தேர்வை நடத்தியது. ஆனால் அதன் பிறகு அது குறித்து வந்த கருத்துகள் சரியில்லை.

அந்த வாரியம் இந்தத் தேர்வை முறையாக நடத்த தவறிவிட்டது, எனவே மீண்டும் அதை முயற்சிக்கவில்லை என்கிறார் அவர்.

“9-10 மற்றும் 11-12 வகுப்புகளுக்கு இந்த வகை தேர்வை ஒரு முன்னோட்டமாக தொடங்க சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பது நல்லது. ஆனால் இந்தத் தேர்வு முறையைச் செயல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன” என்று கங்குலி கூறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தற்போது வினாத்தாள் தயாரிப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. புதிய முறைக்கேற்ப கேள்விகளை தயார் செய்யும் திறன் நமது வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. இதற்கான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது தவிர, இந்த தேர்வு முறைக்கு கேள்விகளை தயாரிக்கும் அளவிற்கு அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.” என்கிறார்.

இந்தியாவில் இதற்கான உள்கட்டமைப்பு சவால்கள் பற்றியும் கங்குலி குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தற்போது இதுபோன்ற தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என்று கூறுகிறார் அவர்.

உதாரணமாக, நாடு முழுவதும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் 30 லட்சம் மாணவர்களுக்கு நீங்கள் தேர்வுகளை நடத்தினால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மேற்கோள் நூல்கள் (Reference Material) மற்றும் பிற கற்றலுக்கான உபகரணங்களை (Study Material) எவ்வாறு வழங்குவீர்கள். இது மிகவும் சிக்கலான பணி” என்று கூறுகிறார் கங்குலி.

பத்மஸ்ரீ கல்வியாளரான ஜே.எஸ். ராஜ்புத் இந்த கருத்தில் உடன்படவில்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காலகட்டத்திலிருந்து இந்தியா வெகுதூரம் வந்துவிட்டது. நாம் பழைய சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். இன்று தகவல் தொழில்நுட்பத்தின் வசதி நம்மிடம் உள்ளது. அது முன்பு சாத்தியமற்றதாகத் தோன்றிய பல மாற்றங்களை சாத்தியப்படுத்தியுள்ளது. ‘தேவை தான் பரிசோதனையை உருவாக்குகிறது. பழைய சிந்தனைகள் புதுமைக்கு தடைகளை உருவாக்குகின்றன” என்கிறார் அவர்.

சிபிஎஸ்இ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர்”

மாணவர்களுக்கு என்ன பயன்?

நிபுணர்கள் கூற்றுப்படி, தற்போதைய தேர்வு முறை குழந்தைகளின் பாடங்களைப் பற்றிய புரிதலை வளர்ப்பதற்குப் பதிலாக வாய்வழி கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர்.

இதுகுறித்து ஜக்மோகன் சிங் ராஜ்புத் கூறும்போது, “இந்தியாவில் இது மாதிரியான தேர்வுகளின் தேவை அதிகம். ஏனெனில் தற்போதைய தேர்வு முறை குழந்தைகளிடையே மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இன்று, கோட்டாவில் ஒவ்வொரு வாரமும் சில குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வதைக் கேள்விப்படும்போது, எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனவே, புத்தகம் கொண்டு தேர்வெழுதும் முறை எவ்வளவு விரைவில் தொடங்கப்படுகிறதோ, அவ்வளவு நல்லது” என்கிறார் அவர்.

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் புத்தகம் கொண்டு தேர்வெழுதும் முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள சோமர்வில்லே பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கும் மூத்த ஆசிரியர் டிம்பிள் ஜோசப் இதுகுறித்து கூறுகையில், “எந்த ஒரு புதிய திட்டம் வரும்போதும் கொஞ்சம் தயங்குவோம். புத்தகம் கொண்டு தேர்வெழுதும் முறையிலும் இதேதான் நடக்கிறது. இந்த தேர்வில், குழந்தைகள் பகுப்பாய்வு திறனை அதிகரிக்கும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்கிறார் அவர்.

“இந்த முறையில் கற்பிக்கப்படும் எந்தவொரு பாடமும் அவர்களின் கண்ணோட்டத்தை கட்டமைக்கும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது அவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிக்கும்.”

இருப்பினும், அசோக் கங்குலி கூறுகையில், “புத்தகம் கொண்டு தேர்வு எழுதும் முறை மூலம், தேர்வில் நடைபெறும் மோசடி மற்றும் பிற முறைகேடுகளை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது நடக்காது. ஏனென்றால், உச்சகட்டமாக குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்” என்கிறார் அவர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *