அயோத்தி ராமர் கோவில்: இழப்பீடு ரூ.1 லட்சம், புதிய கடை ரூ.35 லட்சம் – கடைகளை இழந்த வியாபாரிகளின் நிலை என்ன?

அயோத்தி ராமர் கோவில்: இழப்பீடு ரூ.1 லட்சம், புதிய கடை ரூ.35 லட்சம் - கடைகளை இழந்த வியாபாரிகளின் நிலை என்ன?

அயோதியில் ராமர் கோவில்

2022ல் பிபிசி குழுவினர் அயோத்தியை அடைந்த போது, ராமர் பாதை, பக்தி பாதை மற்றும் ஜென்மபூமி பாதை ஆகிய மூன்று பாதைகளையும் அகலப்படுத்தும் பணி தொடங்கியிருந்தது.

சில கடைகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டும், பல கடைகள் சிறிதாக்கப்பட்டும் வந்தன. இந்த கடைக்காரர்களில் பலர் பல ஆண்டுகளாக தங்களது சிறு கடைகளை வாடகைக்கு நடத்தி வந்தனர்.

இந்தச் சாலைகள் அமைப்பதற்கு அவர்கள் வருத்தமும் கோபமும் அடைந்தனர். அவர்கள் தங்களது குடும்பம் மற்றும் வணிகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டனர்.

இப்போது ராமர் கோவிலுக்குச் செல்லும் இந்த மூன்று வழிகளும் தயாராகிவிட்டன. அயோத்தியின் சந்தைகள் பக்தர்களுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சாலைகளை அகலப்படுத்துவதற்காக சுருக்கப்பட்ட பெரும்பாலான கடைகள் தயாராக உள்ளன.

2022ல் பிபிசி குழுவினர் பேசியிருந்த அதே கடைக்காரர்களை மீண்டும் ஒருமுறை சந்தித்தோம். அவர்களின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பதை அறிய முயற்சித்தோம்.

அயோத்தியில் ராமர் கோயில்

சாலை விரிவாக்கத்தால் சுருங்கிய கடைகள்

2022 ஆம் ஆண்டில், எரிவாயு மற்றும் வன்பொருள் தொழிலதிபர் அபிஷேக் குமார் கசேராவை நாங்கள் சந்தித்தபோது, ​​ராமர் பாதையை விரிவுபடுத்துவதற்காக அவரது கடையின் சில பகுதியும் இடிக்கப்பட்டது.

அப்போது பிபிசியிடம் பேசியிருந்த அபிஷேக், “ராமர் பாதைக்காக எடுக்கப்படும் நிலத்திற்குப் பிறகு, எங்களின் வாழ்வாதாரத்திற்காக மீதமுள்ள நிலத்தை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமா, வேண்டாமா?” என்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது ஓராண்டுக்குப் பிறகு, அபிஷேக்கின் கடை 10 முதல் 15 அடியில் இருந்து 10 முதல் 5 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டப்படுவதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார், ஆனால் கடை சிறிதாகிவிட்டது என்ற வருத்தமும் அவருக்கு உள்ளது.

அபிஷேக்கின் அப்பா இத்தனை வருடங்களாக இந்தக் கடையை வைத்துத்தான் குடும்பத்தை நடததி வந்துள்ளார். ஆனால் தந்தையும் கோரோனாவால் இறந்த பிறகு, தற்போது அபிஷேக் தந்தையின் தொழிலைத் தொடர்கிறார்.

“ஏதாவது ஒன்றை உருவாக்க, சில வளர்ச்சி அவசியம். ஏதாவது உடைந்தால், அது கட்டப்படும். அதனால் நாங்கள் கோபமாக இருந்தோம், ஆனால், யோகி ஆட்சியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என அவர் நம்பினார்.

தந்தையை நினைவு கூர்ந்து பேசிய அவர், “அப்பா இருந்திருந்தால் எல்லாம் இருப்பதைப் போல உணர்ந்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே மிகவும் கடினமாக உழைத்தார். அவர் விதைத்து, வளர்த்த ஒரு நிலம், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள போது, அவர் அதனை பார்க்க உயிரோடு இல்லை,”என்றார்

அயோத்தியில் ராமர் கோயில்

கோபத்தில் இருக்கும் மக்கள்

நவம்பர் 2022 இல், கமலா தேவி மற்றும் அவரது குடும்பத்தின் வாடகைக் கடையும் இடிந்து விழுந்தது. அப்போது அரசு மீது கடும் கோபத்தில் இருந்தார். தனக்கு இழப்பீடு வேண்டாம், பதிலுக்கு ஒரு கடைதான் வேண்டும் எனக் கூறியிருந்தார்.

2022ல் ராமர் பாதையில் அவரைச் சந்தித்தபோது, ​​”எங்கே போக வேண்டும்? நாங்கள் வீடற்றவர்களாக ஆக்கப்படுகிறோம். ஒரு லட்ச ரூபாயில் (அரசு உதவித் தொகை) என்ன செய்ய முடியும்? ஒரு லட்ச ரூபாயில் தூண் கூட அமைக்க முடியாது. பணத்தை என்ன செய்வோம்? எங்களுக்கு பணம் வேண்டாம், எங்களுக்கு ஒரு கடை வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

ஜனவரி 2024 இல், கமலா தேவியின் கடையும் சரிந்து சிறிதாக மாறிவிட்டது. ஆனால் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரால் இன்னும் அந்தக் கடையை கட்ட முடியவில்லை. நிர்வாகத்திடம் இருந்து ரூ.1 லட்சம் உதவியும் பெற்றார். ஆனால் அது அவருடைய கோபத்தை தணிக்கவில்லை.

“நாங்கள் இன்னும் கோபமாக இருக்கிறோம், எங்களுக்கு இருக்க இடம் இல்லை, எங்களுக்கு உணவு தேவை, எங்களுக்கு தினமும் உணவு இல்லை, நாங்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இருக்கிறோம்,” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ​​”கோயில் கட்டப்படுவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால், ஒரு காலம் வரும் என்று நாங்களும் நினைத்தோம். கடவுள் வருவார், அவர் இங்கு அமர்வார் என நினைத்தோம்.

ஆனால், மோடியிடமோ, யோகியிடமோ நாங்கள் வந்தால் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள் என்று ராமர் கூறவில்லை. இதை ராமர் கூறினாரா?, ராமர் என்ன சொன்னார், நான் வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தான் சொன்னார்,” என்றார் கமலா தேவி.

அயோதியில் ராமர் கோயில்

சில கடைகளை தகராறு காரணமாக கட்ட முடியவில்லை

உண்மையில், அயோத்தியின் பாபு பஜாரில் உள்ள ராம்பத், பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக வாடகைக்கு கடைகளை நடத்தி வருகிறார். தற்போது, தனது கடை உரிமையாளரான அயோத்தியை சேர்ந்த ராஜாவுடன் தகராறு செய்துள்ளார்.

அயோத்தி மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, கடைக்காரர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே தொடர்ந்து தகராறு இருந்தும், கடைக்காரர்கள் அங்கிருந்து அகற்றப்படவில்லை. கடைகள் இயங்கி வருவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை.

நிர்வாகத்தின் கூற்றுப் படி, அவர்கள் அயோத்தி மன்னரிடம் பேசி இந்த குத்தகை கடைக்காரர்களுடன் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அவர்களின் கடைகள் இன்னும் இடிந்து கிடக்கின்றன.

இந்த கடைகளை வெளியில் இருந்து சரி செய்து தர முன்வந்ததாகவும், ஆனால் கடைக்காரர்களுக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முடியவில்லை என்றும் நிர்வாகம் கூறுகிறது.

பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தனர்.

அயோதியில் ராமர் கோயில்

அயோத்தியில் மூன்று வழித்தடங்கள் அமைக்கும் திட்டம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதுடன், 2022 முதல் அயோத்தியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது.

இதில், 13 கிலோமீட்டர் நீளமுள்ள ராமர் பாதை, 800 மீட்டர் நீளமுள்ள பக்தி பாதை மற்றும் 800 மீட்டர் நீளமுள்ள ஜென்மபூமி பாதை ஆகியன அகலப்படுத்தப்பட்டுள்ளன.

ராமர் கோவிலுக்குச் செல்லும் இந்தச் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக, அவற்றில் ஏற்கனவே இருந்த பல நூறு கடைகளின் சில பகுதிகள் இடிக்கப்பட்டதுடன், சில கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. அயோத்தியின் வணிகத் தலைவர்களின் கூற்றுப்படி, இந்த சாலைகள் அமைப்பதால் மொத்தம் 4,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2022க்குள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்ல இழப்பீடு வழங்கவும், மீதமுள்ள கடைகளை புனரமைக்கவும், முற்றிலும் இடம்பெயர்ந்த கடைக்காரர்களுக்கு அரசால் கட்டப்பட்ட புதிய கடைகளை ஒதுக்கவும் வணிகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அயோதியில் ராமர் கோயில்

“இழப்பீடு ரூ.1 லட்சம், புதிய கடை – ரூ.35 லட்சம்”

பகவத் பிரசாத் பஹாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 1985 ஆம் ஆண்டு முதல் ராமர் விராஜ்மானின் ஆடைகளைத் தைத்து வருகின்றனர். அப்போது ராமர், பாபர் மசூதியின் குவிமாடத்தின் கீழ் இருந்தார்.

முன்னதாக, ராமரின் ஆடைகளை தைக்க மத்திய அரசிடம் இருந்தும் அவர் உத்தரவு பெற்று வந்தார். ஆனால், தற்போது பெரும்பாலான ஆர்டர்கள் வரும் பக்தர்களால் கொடுக்கப்படுகிறது.

நவம்பர் 2022 இல், ராமர் பாதையை விரிவுபடுத்துவதற்காக, அவர் வாடகைக்கு எடுத்த 3 கடைகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டன. இப்போது குழந்தையைப் போன்ற ராமர் புனிதப்படுத்தப் போவதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆனால், தங்களது கடைகள் இடிந்து விழுந்ததால் வருத்தமும் அடைந்துள்ளனர்.

“ராமர் பாதையில் எனக்கு மூன்று கடைகள் இருந்தன. கடைக்கு தலா ஒரு லட்சம் வீதம் எனக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கிடைத்தது. அரசாங்கம் இரண்டு கடைகளை ஒதுக்கியுள்ளது. அதன் தொகை ரூ. 35 லட்சம். நஷ்டத்தை நாங்கள் உணர்ந்தோம். ஆனால்,கோவில் அமைவதை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”இப்படி ராமருக்கு இடமளிக்க பல தியாகங்கள் செய்யப்பட்டன, கோயில் கட்டுவதில் பல போராட்டங்கள் நடந்தன. நம் யோகியும் மோதியும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அவதார புருஷர்களாகவே கருதலாம். அவர்கள் காலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,”என்றார்.

இறுதியில், “ஆனால், எங்கள் வாழ்வாதாரத்திற்கான ஆதரவு முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது,”என்றார்.

அயோதியில் ராமர் கோயில்

குத்தகை மற்றும் வங்கிக் கடனில் புதிய கடைகள் கிடைக்கும்

பகவத் பிரசாத் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இரண்டு புதிய கடைகளுக்கான ஆர்டர்களைக் காட்டுகிறார். ஆனால், தற்போது பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கடைகளை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வங்கிக் கடன் பெற முயற்சிக்கின்றனர்.

பகவத் பிரசாத் பஹாடி போல 212 குத்தகைக் கடைக்காரர்கள், சாலை அமைக்கும் போது முழு கடைகளும் இடிக்கப்பட்டதால், நிர்வாகத்திடம் இருந்து புதிய கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி நிர்வாகம் கூறுகிறது.

நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்த குத்தகைதாரர்கள் கடைகளின் சந்தை மதிப்பை செலுத்த வேண்டியதில்லை, ஆனால் அடிப்படை விலையை மட்டுமே செலுத்த வேண்டும். உதாரணமாக, கடைகளின் விலை 50 முதல் 60 லட்சம். ஆனால் அடிப்படை விலையின்படி, சில கடைகளின் ஆரம்ப விலை 13-14 லட்சம் மட்டுமே.

ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்ட கடைக்காரர்களையும் கடன் வாங்க ஊக்குவித்து வருவதாக அரசு கூறுகிறது. இவர்களுக்கு வங்கியில் கடன் பெற முழு உதவி அளிக்கப்படுகிறது.

மேலும், 30 ஆண்டு குத்தகைக்கு கடை கொடுக்கப்பட்டால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டணம் செலுத்தி, குத்தகையை எளிதாக நீட்டிக்க முடியும் என்றும் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இடம்பெயர்ந்த வியாபாரிகள் கடையை நிரந்தரமாக தங்களுக்கு விற்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அயோத்தியில் கடை உரிமையாளர், கடையை ஆக்கிரமிப்பவர், கடையை கட்டியவர், வாடகைக்கு கடை நடத்துபவர் என அனைவரும் கடையின் மீது உரிமை கொண்டாடுகிறார்கள். இந்த காரணத்திற்காக, அயோத்தியில் வளர்ச்சிப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது மிகவும் சவாலான பணியாகும்.

ஆனால் இந்த கடைக்காரர்களும் பல தசாப்தங்களாக இங்கு குடியேறி உள்ளனர். அவர்களின் எதிர்காலம் மற்றும் நம்பிக்கைகள் நகரத்தின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *