சமூக ஊடகத்தில் வீடியோ போடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

சமூக ஊடகத்தில் வீடியோ போடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

சமூக ஊடகத்தில் முழு நேரமாக வேலை செய்து பணம் சம்பாதிக்க இருக்கும் எளிய வாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images

சாதாரணமாக மக்கள் தங்கள் செல்போனை எடுத்து செய்திகளைப் படிக்கும்போது, அப்படியே சமூக ஊடங்களில் வீடியோக்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். சில நிமிடங்கள் அல்ல எத்தனை மணிநேரங்களுக்குச் செல்லும் என்பதைக்கூட நாம் உணரமாட்டோம்.

இந்த வீடியோக்கள் இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் கண்டெண்ட் கிரியேட்டர்களால் (உள்ளடக்கம் உருவாக்குபவர்கள்) உருவாக்கப்படுகின்றன.

இவர்கள் சமூக ஊடகங்களில் ‘இன்ப்ளுயனசர்களாக’ தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இன்னமும் இது ஒரு உண்மையான வேலையாகப் பார்க்கப்படவில்லை.

இதைப் புரிந்துகொள்ள, முதலில் சமூக ஊடகங்களில் இன்ப்ளுயனசர்களாக இருப்பவர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

“என்னுடைய நாள் வீட்டு வேலைகளுடன் தொடங்குகிறது. என் மகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு, நான் எனக்காக சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறேன். அதன் பிறகு, காலை 11 மணிக்கு என் வேலையைத் தொடங்குகிறேன்.

முதலில், எதிர்கால திட்டம் குறித்து நாங்கள் ஆழ்ந்த விவாதம் நடத்தும் மீட்டிங் இருக்கும். இந்தக் கூட்டத்தில் நிதி ஆதாரம் முதல் வீடியோ குழு வரை அனைத்தும் விவாதிக்கப்படும். காலை நேரத்தை எங்களுடைய வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுத்துவோம்,” என்கிறார் ஃபரா ஷேக்.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், Getty Images

“நான் வழக்கமாக ஒரு வாரத்துக்கு 35-40 மணிநேரம் வேலை செய்வேன். நீங்கள் திரையில் காணும் வீடியோ ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நீளம் மட்டுமே இருக்கும். ஆனால் அதை உருவாக்க பலரின் கடின உழைப்பும் பல மணிநேரமும் எடுக்கும்.

நல்லவேளையாக, இப்போது எனக்காக வேலை செய்யும் ஒரு குழு உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் நானே எல்லாவற்றையும் தனியாகச் செய்ய வேண்டியிருந்தது,” என்று ஃபரா ஷேக் கூறுகிறார்.

ஆனால், வேறு வேலைகளில் இருப்பவர்களைப் போலவே, வாரத்திற்கு 35-40 மணிநேரம் வேலை செய்த பிறகும், மக்கள் இதை முழு நேர வேலையாகக் கருதுவதில்லை.

‘என்ன வேலை செய்கிறாய்?’

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், Getty Images

பராக் ஷேக் ஒரு தொழில்முறை உள்ளடக்கம் உருவாக்குபவர். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். ஆனால் இன்றும் இதைப் பலர் தொழிலாகக் கருதுவதில்லை.

உள்ளடக்க உருவாக்கம் தொடங்கும் முன், ஃபரா கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்தார். அந்த நேரத்தில் அவர் பல பிராண்டுகளின் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை கையாண்டு வந்தார்.

உள்ளடக்க உருவாக்கத் துறையில் நுழைவது குறித்த தனது முடிவை குடும்பத்தினருக்குத் தெரிவித்த தருணத்தை அவர் நினைவு கூறுகிறார்.

“அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். உள்ளடக்க உருவாக்கத் துறையில் பணி செய்யப் போவதாக என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், சரி இருக்கட்டும், கொஞ்ச நாள் இந்த வேலையில் இருப்பாள், சலிப்பு தட்டிவிட்டால், வேறு வேலைக்குச் சென்று விடுவாள் என்று நினைத்தனர்,” என்கிறார் ஃபரா.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, சுற்றத்தாரும் இதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே கருதுவதாக அவர் கூறுகிறார்.

“சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிடுகிறாய், அது சரி. ஆனால் என்ன வேலை செய்கிறாய்?” என்று கேட்பார்கள்.

“நான் உள்ளடக்க உருவாக்கத் துறையில் பணி செய்யத் தொடங்கியபோது, இது ஒருவரின் உண்மையான வேலையாக இருக்கலாம் என்று மக்கள் நினைக்கவில்லை. இதில் கொஞ்சம் பணமும் கிடைக்கும் என்ற அளவில் மட்டுமே நினைத்தார்கள். டிக்டாக் இருந்தபோது, “ஓ, நீ நடனமாடியே பணம் சம்பாதிக்க முடியுமா?” என்று பொதுவாகக் கேட்பதுண்டு.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், ஃபரா ஷேக்

படக்குறிப்பு,

ஆறு ஆண்டுகளாக ஃபரா ஷேக் சமூக ஊடக இன்ப்ளுயன்சராக இருந்து வருகிறார்.

ஆனால் தற்போது, மக்களின் மனநிலை மாறி வருவதாகவும், இதை ஒரு தொழிலாகப் பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும் நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ஃபராவுக்கு தற்போது விளம்பரங்கள் செய்யப் பல பிராண்டுகள் உள்ளன. இப்போது மக்களின் சிந்தனை மெதுவாக மாறி வருவதாகவே அவரும் குறிப்பிடுகிறார்.

“முன்பு இது ஒரு நிமிட வீடியோ மட்டுமே, இதில் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பார்கள். ஆனால் இப்போது இந்த வேலையில் எவ்வளவு கடின உழைப்பு செலுத்த வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்,” என்று ஃபரா கூறுகிறார்.

நீண்ட காலமாக, இந்த வேலையைச் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்களே என்று பலரும் நம்பினர். சிலர் இதை மரியாதைக்குரிய வேலையாகக்கூட பார்க்கவில்லை. ஆனால் இப்போது மக்களின் கருத்துடன் சேர்ந்து, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பணி முறையும் வேலைத்தன்மையும் மாறி வருகிறது.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், Getty Images

இன்ப்ளுயன்சர் மார்க்கெட் எப்படி வளர்கிறது?

influencers.inஇல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்ப்ளுயன்சர்களுக்கான சந்தை 25 சதவீதம் என்ற விகிதத்தில் வளரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2025ஆம் ஆண்டுக்குள் ரூ.2,200 கோடி சந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ப்ளுயன்சர் சந்தையின் சக்தியை 62.2 சதவீத பிராண்டுகள் நம்புவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் இன்ப்ளுயன்சர்கள் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்பதை இந்த பிராண்டுகள் அறிந்துள்ளன.

பெரிய நிறுவனங்களுக்கு இந்த சந்தை அவர்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்தியின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளது. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களும் இன்ப்ளுயன்சர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்றன. ஆனால் தற்போது அவர்கள் இந்த மார்க்கெட்டிங் உத்தியில் அவ்வளவாக முதலீடு செய்வதில்லை.

“மக்களின் மனநிலை மாறியிருப்பது மட்டுமல்லாமல், பிராண்டுகளும் மிகவும் தொழில்முறையாக மாறிவிட்டன. இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங் உத்தி நல்ல பலன்களை அளிப்பதை பிராண்டுகளும் நன்கு புரிந்து கொள்கின்றன. எப்படியும், பழைய மார்க்கெட்டிங் ஊடகங்களுடன் ஒப்பிடுகையில், இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங் மிகவும் மலிவானது மற்றும் பிராண்டுகளின் விற்பனையும் நன்றாக நடந்து வருகிறது,” என்று ஃபரா கூறுகிறார்.

இன்ப்ளுயன்சிங் ஒரு வேலை வாய்ப்பாக அமையுமா?

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், தேபரதி ரியா சக்ரபர்த்தி

படக்குறிப்பு,

சமூக ஊடக இன்ப்ளுயன்சர்களுடன் மக்கள் அதிகமான நெருக்கத்தை உணர்கிறார்கள் என டிஜிட்டல் வியூக வகுப்பாளர் தேபரதி ரியா சக்ரபர்த்தி கூறுகிறார்.

டிஜிட்டல் வியூக வகுப்பாளரும் வாழ்க்கை பயிற்சியாளருமான தேபரதி ரியா சக்ரபர்த்தி, இந்த வணிகத்தின் தன்மை முற்றிலும் மாறிவிட்டதாக நம்புகிறார்.

“சமூக ஊடக தளங்களின் வருகைக்குப் பிறகு, உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கு, என்ன உருவாக்க வேண்டும் என்ற சுதந்திரம் உள்ளது. மக்களும் இந்த இன்ப்ளுயன்சர்களுடன் அதிக நெருக்கத்தை உணர்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

இதனுடன், ‘இப்போது இன்ப்ளுயன்சர் நிறுவனங்களும் மேம்பட்டு வருகின்றன’ என்று அவர் நம்புகிறார். முன்பு அது பிராண்டுகளை உருவாக்குபவர்களுடன் இணைக்க மட்டுமே செயல்பட்டது. ஆனால் இப்போது அவை முழுமையான சேவையை வழங்குகின்றன. அது தற்போது பிராண்டுகள் மற்றும் இன்ப்ளுயன்சர்கள் இடையே ஒரு முக்கிய இணைப்பாக மாறியுள்ளது.

‘தி மொபைல் இந்தியா’வின் ஆசிரியர், நிறுவனர் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணரான சந்தீப் புத்கி, தற்போது இன்ப்ளுயன்சிங் துறையை ஒரு தொழில்முறையாகப் பார்க்கிறார்கள் என்று நம்புகிறார்.

“இதை தொழில்முறையாகப் பார்த்தால், அதன் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் எப்படிச் செய்வது என்பதில் ஒருவர் கவனம் செலுத்துவார். என் பெயரைக் கெடுக்காத மற்றும் நீண்ட காலம் செய்யக்கூடிய ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்,” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், Getty Images

இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங்கின் நன்மைகள்

பிராண்டுகள் பல்வேறு வழிகளில் இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங்கை பயன்படுத்த முயற்சிக்கின்றன.

உதாரணமாக, பேஷன் மற்றும் அழகு பிராண்டுகள் பேஷன் வலைப்பதிவர்கள் மற்றும் இன்ப்ளுயன்சர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

பயண பிராண்டுகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க பயண வலைப்பதிவர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. அதே நேரத்தில் உணவு பிராண்டுகள் உணவு வலைப்பதிவர்களைப் பயன்படுத்துகின்றன.

பிராண்டுகளுக்கு இன்ப்ளுயன்சர் மார்க்கெட்டிங்கின் ஒரு நன்மை என்னவென்றால், அவை குறிப்பிட்ட பார்வையாளர்களைக் குறிவைத்துச் சென்றடைய முடியும்.

பிராண்டுகள் தங்கள் இலக்காக உள்ள பார்வையாளர்களுக்காக உள்ளடக்கத்தை உருவாக்கும் இன்ப்ளுயன்சர்களை தேர்வு செய்யலாம்.

தேபரதி ரியா சக்ரபவர்த்தி, “உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களால் விளம்பரச் சந்தை நல்ல பலன் பெற முடியும். தொலைக்காட்சி அல்லது செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வதைவிட, இன்ப்ளுயன்சர்கள் மூலம் விளம்பரம் செய்வதில் பிராண்டுகள் ஆர்வம் காட்டுகின்றன.

இன்ப்ளுயன்சர் மூலம் விளம்பரம் செய்ய விரும்பும் பிராண்டு, இன்ப்ளுயன்சருக்கு எவ்வளவு பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உண்மையானவர்களா, இதற்கு முன் எந்த பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்து கொடுத்துள்ளார் என்பனவற்றைக் கருத்தில் கொள்ளும்” என்கிறார்.

ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் முதல் 80 வயது வரையிலானவர்கள் வரை இந்தத் துறையில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், Getty Images

சந்தீப் புத்கி கூறுகிறார், “பத்து வருடங்களுக்கு ஒருமுறை மார்க்கெட்டிங் உலகில் ஒரு புதிய போக்கு வரும். முன்பு விளம்பரங்களை வானொலியில் கேட்கலாம், பின்பு காட்சி விளம்பரங்களாக தொலைக்காட்சியில் அல்லது செய்தித்தாள்களில் தோன்றும். இப்போது நிறுவனங்கள் சிறப்பு இலக்கு பார்வையாளர்களுக்கு இன்ப்ளுயன்சர்களின் உதவியை நாடுகின்றன,” என்று விவரிக்கிறார்.

“ஒவ்வொரு பிராண்டுக்கும் அதன் சொந்த உத்தி உள்ளது. ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பின்தொடர்பவர்களைக் கொண்ட சில இன்ப்ளுயன்சர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வேலையைச் செய்ய முடியும். அதேநேரம், மில்லியன் கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்ட சில இன்ப்ளுயன்சர்களும் உள்ளனர். எனவே, அனைத்தும் பிராண்டுகள் மற்றும் இன்ப்ளுயன்சர்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தது. இந்த முழு ஆட்டமும் இலக்கு பார்வையாளர்கள் யார் என்பதைப் பற்றியது,” என்கிறார்.

ஆனால் “பழைய தலைமுறையினரின் வாங்கும் முறை இன்னும் ‘வாய்வழி விளம்பரம்’ மற்றும் ‘பணத்திற்கு மதிப்பு’ ஆகியவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. அதே நேரத்தில், இளம் பார்வையாளர்கள் இவருக்கு அதிக பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள், எனவே இவருக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும், அதனால் அவர் சொல்லும் செய்திக்கு ஒரு மதிப்பு உண்டு என்று நினைக்கிறார்கள்,” என்று சந்தீப் மேலும் கூறினார்.

சமூக ஊடக 'இன்ப்ளுயன்சர்' - பணம் ஈட்டும் முழு நேர தொழிலாகக் கூடுமா?

பட மூலாதாரம், ஃபரா ஷேக்

படக்குறிப்பு,

இன்ப்ளுயன்சர் பணியைth தீவிரமான வேலையாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஃபரா ஷேக் கூறுகிறார்.

சீர் செய்ய வேண்டியவை என்ன?

இந்தத் துறையில் என்னென்ன மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து, தேபரதி ரியா சக்ரபர்த்தி கூறுகையில், “தற்போது பெரும்பாலான மக்கள் இன்ப்ளுயன்சர்களின் வேலை ஒரு தீவிரமான வேலை அல்ல என்று உணர்கிறார்கள்.

இந்த ஊடகம் ஒரு ஒழுங்குக்குள் கட்டுப்பட்டது அல்ல. அதனால் தான் பலர் இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இந்தத் துறையில் சரிசெய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இங்கு சீரான சம்பள முறை இல்லை. இந்த இடைவெளியை சரிசெய்ய நிறுவனங்கள் முயன்று வருகின்றன,” என்றார்.

ஃபராவும் இந்தத் துறையின் நிச்சயமற்ற தன்மை குறித்து ஒப்புக் கொள்கிறார்.

“நான் அதிகமாக வேலை செய்யும் சில மாதங்கள் உள்ளன. எனினும் சில மாதங்களில் எனக்கு அவ்வளவு கிடைப்பதில்லை. ஆனால், பல துறைகளில் இதுபோன்ற நிலை தான் உள்ளது” என்கிறார் ஃபரா.

கடந்த சில ஆண்டுகளில் இன்ப்ளுயன்சிங் துறை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பார்த்து, “என் வேலையை எதிர்காலத்திலும் நிச்சயமாகச் செய்ய விரும்புகிறேன். நான் செய்வது எதுவாக இருந்தாலும் அது ஆன்லைனில் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்,” என்கிறார் ஃபரா.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *