இவர்கள் தீபாவளியை தியாகம் செய்து மக்கள் சேவை செய்யாமல் போனால் என்ன ஆகும்?

இவர்கள் தீபாவளியை தியாகம் செய்து மக்கள் சேவை செய்யாமல் போனால் என்ன ஆகும்?

தீபாவளி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

தீபாவளி என்றாலே, பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை, அனைவரும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் இனிப்புகள், புத்தாடை, பட்டாசுகளுடன் கொண்டாடுவது, ஆகியவை தான் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வரும். சிலருக்கு புதுப்படங்களுக்குச் செல்வது நினைவுக்கு வரும்.

தீபாவளியன்று வேலைக்குச் செல்வது பொதுமக்களில் பலருக்கும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று.

ஆனால், இந்தப் பண்டிகை நாளன்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளும் சேவைகளும் தடைபடாமல் கிடைக்க, பலர் தங்கள் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்துவிட்டு அலுவலகங்களுக்கும் பணிக்கும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள், தீயணைப்புத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகிய அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்களுக்கு தீபாவளியும் வேலைநாள்தான்.

அதேபோல், தீபாவளி சீசனிலும், பண்டிகையன்றும் விற்பனையாகும் பட்டாசுகள், இனிப்புகள், இறைச்சி ஆகியவற்றை வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகள் ஆகியோரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தீபாவளியைத் துறந்து வேலை செய்யத்தான் வேண்டும்.

இப்படி, தமிழகம் முழுவதும், பண்டிகை நாளன்றும் ஓய்வின்றி உழைக்கும் மக்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்து, தீபாவளி பற்றிய அவர்களது கருத்துகளைக் கேட்டது.

‘குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவதை நினைத்தும் பார்த்ததில்லை’

தீபாவளி கொண்டாட்டம்
படக்குறிப்பு,

டி.நகர் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு அதிகாரி மாரிச்செல்வம்

சென்னையிலேயே தீபாவளிக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடம் டி.நகர். அதனால் அங்கு காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும், என்றைக்கும் இருப்பதைவிட தீபாவளி நாளன்று கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

டி.நகர் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு அதிகாரியான மாரிச்செல்வம், தங்கள் துறையினர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட வேண்டும் என என்றைக்கும் நினைக்க முடியாது என்றார்.

“மற்ற நாட்களைவிட தீபாவளி நாளன்று கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்போம். அன்று ஒரு நாள் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். அன்று நாங்கள் வீட்டில் இருந்துவிட்டால், எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் மக்களுக்கு உடனே உதவுவது சிரமமாக இருக்கும்,” என்றார் அவர்.

தீபாவளி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

இது அவர்கள் குடும்பத்தாருக்கும் தெரியும் என்றும் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறுகிறார்.

மேலும், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே தங்கள் குடும்பத்தாருக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்றார்.

“தீபாவளி நாளன்று மதியம், ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை சற்று அவகாசம் கிடைக்கும். அப்போது ஒவ்வொருவராகத்தான் வீட்டுக்கு மதிய உணவுக்குச் செல்ல முடியும்,” என்றார்.

‘விபத்தில்லா தீபாவளியே எங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி’

மற்றவர்களைப் போல, எண்ணெய் தேய்த்துக் குளித்து, குடும்பத்துடன் இனிப்புகள் உண்டு, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது தங்களால் முடியாது, என்றார்.

“குடும்பத்துடன் கொண்டாடுவதைவிட, எங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி என்பது விபத்தில்லா தீபாவளிதான். மக்கள் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி.

இந்த தீபாவளி விபத்தில்லா தீபாவளியாக அமைந்தால், அடுத்த தீபாவளியும் அவ்வாறே அமைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வோம்,” என்றார்.

‘சிறு வருத்தம் உண்டு, மக்கள் சேவையில் அதை மறக்கிறோம்’

தீபாவளி கொண்டாட்டம்
படக்குறிப்பு,

த்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட அரசு சொகுசுப் பேருந்து நடத்துனர் இளையராஜா

அதேபோல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக, தென் மாவட்டத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத்தாவணி டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் தீபாவளி நாளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பரபரப்பாகத் தங்களின் பணிகளைச் செய்கின்றனர்.

இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளியைப் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவதால், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

ஆனாலும், தீபாவளியன்றும் சென்னைக்குச் செல்லும் பயணிகளை பேருந்து நிலையத்தின் முன் நின்று பயணிகளை அழைத்துக் கொண்டு இருந்தார் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட அரசு சொகுசுப் பேருந்து நடத்துநர் இளையராஜா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தான் கடந்த 11 ஆண்டுகளாக நடத்துனராகப் பணியாற்றி வருவதாகவும், இவ்வருடம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தீபாவளி நாளில் பணியாற்றுவதாகவும் கூறினார்.

“போக்குவரத்துத் துறை என்பது மக்களின் சேவைக்கான துறை. இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை என்ற சிறு வருத்தம் இருந்தாலும், மக்களுக்கான பணி இது என்பதால் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்,” எனக் கூறி தனது பேருந்தில் ஏறி சென்னை நோக்கிய பயணத்தைத் தொடங்கினார் நடத்துநர் இளையாராஜா.

அதேபோல் மதுரை பேருந்து நிறுத்தத்தில் நூற்றுக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் பண்டிகையை மறந்து தங்கள் பணிகளைச் செய்து கொண்டு இருந்தனர்.

‘பண்டிகை முடிந்தபின்தான் அதைக் கொண்டாடுவேன்’

தீபாவளி

இவர்களைப் போல் அரசுத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற வருமானம் ஈட்டும் சிறு வியாபாரிகளும் பண்டிகையை மறந்து வேலை செய்கின்றனர்.

துணிக் கடைகளும் நகைக் கடைகளும் நிறைந்த கோவை பெரியகடை வீதியில், பண்டிகைக் காலங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு நெரிசல் இருக்கும்.

அப்படிப்பட்ட பண்டிகை நெரிசலின் மத்தியில், தனது கையிலிருந்த மூங்கில் கழியில் பொருத்தப்பட்டிருந்த பொம்மையின் கைகளைத் தட்ட வைத்து பம்பாய் மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார் தங்கராஜ்.

குழந்தகளைக் கவரும் காற்றாடிகள், பொம்மைகள், கண்ணாடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரே மிட்டாய் வியாபாரியான தங்கராஜிடம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்த வண்ணம் இருந்தனர்.

அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

தீபாவளி கொண்டாட்டம்

எப்போதுமே, பண்டிகையன்று வியாபாரம் செய்வதால், அந்தப் பண்டிகை முடிந்துதான் அந்தப் பண்டிகையை கொண்டாடுவதாகச் சொன்னார் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜ்.

இவர் திருப்பூரில் தங்கி ‘பம்பாய் மிட்டாய்’ தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எந்த விசேஷ நாட்களையும், தனது குடும்பத்துடன் கொண்டாட வழியின்றி, பம்பாய் மிட்டாய் விற்பனை செய்து வருவதாகக் கூறினார் தங்கராஜ். தற்போது, தீபாவளிக்காக கோவைக்கு வந்து பம்பாய் மிட்டாய் விற்பனை செய்து வருகிறார்.

“பண்டிகை நாட்களில்தான் பம்பாய் மிட்டாய் ஓரளவுக்கு நன்றாக விற்கும் என்பதால், பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாட முடியாது. எல்லா பண்டிகையும் எனக்கு ஒரே மாதிரி தான்.

பண்டிகை முடிந்துதான் நான் அந்தப் பண்டிகையை கொண்டாடுவேன். தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகைக்கும் கோவைக்கு வந்து விற்பனை செய்வேன்,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *