
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி பிறப்பால் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசாவில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, “பாஜக உறுப்பினர்கள் உங்களிடம் வரும்போதெல்லாம், அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள். உங்கள் பிரதமர் நாட்டு மக்களிடம் அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பொய் கூறியுள்ளார் எனக் கூறுங்கள். அவர் ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் பொது சமூகத்தைச் சேர்ந்தவர். அதை அனைத்து பாஜக உறுப்பினர்களிடமும் சொல்லுங்கள்,” என்று கூறினார்.
இருப்பினும், ராகுல் காந்தியின் கூற்று அப்பட்டமான பொய் என்று பாஜக கூறியதுடன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அவரது சாதியை சேர்க்கும் அறிவிப்பு அக்டோபர் 27, 1999 அன்று வெளியிடப்பட்டது என்றும் இது அவர் குஜராத் முதலமைச்சரான இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது என்றும் கூறியது.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, ஒடிசாவில் “உண்மையைக் கேளுங்கள்! நரேந்திர மோதி பிறப்பால் ஓபிசி அல்ல. குஜராத்தின் பாஜக அரசால் ஓபிசி ஆக்கப்பட்டார். அவர் ஒருபோதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பங்குக்குத் தேவையான நியாயமானதைச் செய்யமாட்டார். நரேந்திர மோதி சாதிவாரி கணக்கெடுப்பை செய்யப் போவதில்லை. காங்கிரஸ் மட்டுமே அந்தப் பணியைச் செய்ய்யும்,” என்று பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எதிர்வினை

பட மூலாதாரம், SCREENGRAB
பாஜகவின் ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தியின் கூற்று அப்பட்டமான பொய் என்று கூறி, இந்திய அரசின் அரசிதழுடைய ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார். அதில், ‘மோத் காஞ்சி’ சாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கும் பிரதமர் மோதியின் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஆவணத்தின்படி, ‘மோத் காஞ்சி’ சமூகம் அக்டோபர் 27, 1999 அன்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டது.
அதே தேதியில், ‘மோத் காஞ்சி’ தவிர ‘காஞ்சி (முஸ்லிம்)’, ‘தெலி’ மற்றும் ‘மாலி’ ஆகிய சமூகங்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டன. இந்த முடிவின்போது குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி இருந்தது. அதன் முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அதேநேர்த்தில் நரேந்திர மோதி குஜராத்தில் அக்டோபர் 7, 2001 அன்று முதல்வர் ஆனார்.
ராகுல் காந்தி முதல் ஜவஹர்லால் நேரு வரையிலான நேரு, காந்தி குடும்பம் முழுவதும் ஓபிசிக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் மீது அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளர்.
ராகுல் காந்தி என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று ஒடிசாவில் இருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “ஓபிசி வகுப்பினருக்கு ஏன் பங்கே
‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடர்பாக ராகுல் காந்தி வியாழக்கிழமை ஒடிசாவில் இருந்தார்.
அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “நான் ஒரு ஓபிசி. முதலில் நரேந்திர மோதி ஓபிசியாக பிறக்கவில்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறீர்கள்,” என்று கூறினார்.
“நரேந்திர மோதி ஜி ஓபிசியில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அவரது சமூகத்தை 2000ஆம் ஆண்டு பாஜக ஓபிசி ஆக்கியது. எனக்குப் பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை,” என்றார்.
பிரதமர் மோதிக்கும் தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் இடையே உள்ள உறவை மீண்டும் குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் பிரதமர் ஓபிசியாக பிறக்கவில்லை என்பது எனக்கு எப்படித் தெரியும்? அவர் எந்த ஓபிசி பிரிவினரையும் கட்டிப்பிடிப்பதில்லை. அவர் எந்த விவசாயியின் கையையும் தொடுவதில்லை. அவர் எந்தத் தொழிலாளியின் கையையும் பிடிப்பதில்லை. அவர் அதானியின் கையை மட்டுமே பிடித்துள்ளார்,” என்று தெரிவித்தார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பில் காங்கிரஸின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், “பிரதமர் வாழ்நாள் முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தமாட்டார். ஏனெனில், உங்கள் பிரதமர் நாடு முழுவதும் பொய் சொல்கிறார். அவர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர். சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணியை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும்தான் செய்வார்கள்,” என்றும் பேசினார்.
மற்ற பாஜக தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், SCREENGRAB
ராகுல் காந்தி கூறியதற்கு மாறாக, குஜராத் முன்னாள் துணை முதல்வரும் பாஜக எம்பியுமான நர்ஹரி அமீன், ஜூலை 25, 1994 அன்று ‘மோத்’ மற்றும் ‘காஞ்சி’ சமூகங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்க்கப்பட்டதாகக் கூறினார்.
அப்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததாகவும் பிரதமர் மோதி பிரதமராகவோ, முதல்வராகவோ இல்லையென்றும் அவர் கூறுகிறார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி மக்களை முட்டாளாக்க முயல்கிறார். குஜராத்தில் உள்ள அனைத்து ஓபிசி மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தவறான தகவல்களைத் தருகிறார். தொடர்ந்து முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்கிறார். அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் மோதியின் உயரத்தை அவர்களால் ஒருபோதும் அடைய முடியாது.
குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோதி பிரதமர் நரேந்திர மோதியின் சாதி தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்தி மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது பிரதமர் மோதியின் தெலி சமூகத்திற்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டது என்று கூறினார்.
கடந்த 1980ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கைப்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 52% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆளும் கட்சியான பாஜக அது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் எனக்கூறி அதைச் செய்ய மறுக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்