
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கொம்பு சுற்றுலா தளம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை ஜீயபுரம் எஸ்.ஐ. சசிகுமார், நாவல்பட்டி காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர், ரோந்துப் பணியில் இருந்த முதல் நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன, ஜீயபுரம் போக்குவரத்துக் காவல் நிலைய காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் பணியில் இருந்த போது, உயர் அதிகாரிகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் முக்கொம்பு பகுதிக்குச் சென்று காவிரி ஆற்றின் கரையில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மது போதையில் காரை எடுத்துக் கொண்டு முக்கொம்பு சுற்றுலாத் தளத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்.
அங்கு அமர்ந்து இருந்த காதல் ஜோடிகளிடம் 4 போலீசாரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நிலையைப்பார்த்த காதல் ஜோடிகள் மது போதையில் இருந்த போலீசாரிடமிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சிறுமியிடம் அத்துமீறிய போலீசார்
பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது 19 வயது காதலனை அழைத்த மது போதையில் இருந்த போலீசார் நீங்கள் கஞ்சா விற்பதாக புகார் வந்தது எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து உங்களிடம் இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்துள்ளனர். அதனை எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞரை அடித்து விரட்டி உள்ளனர்.
பின் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், அந்த சிறுமியின் செல்போனை எண்ணை பெற்றுக் கொண்டு எப்போது அழைத்தாலும் வர வேண்டும் எனக் கூறி வீடியோவாக எடுத்துப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
மீண்டும் காருக்குள் அழைத்துச் சென்று சிறுமியிடம் உதவி ஆய்வாளர் சசிகுமார், சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். சிறுமி கூச்சலிட்டதால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
காவலர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது காதலன் இருவரும் முக்கொம்பு புறக் காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களிடம் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து கூறியுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் முக்கொம்புப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காவலர்களின் காரை மடக்கிப் பிடித்து நிறுத்தி போலீசார் விசாரணை இறங்கினர்.

“கஞ்சா வழக்குப் பதிவு செய்வேன்” என்று மிரட்டிய உதவி ஆய்வாளர்
காரில் இருந்து மது போதையில் கீழே இறங்கிய உதவி ஆய்வாளர் “உங்கள் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்வேன்” என்று காவல்துறையின் முன்னிலையிலேயே மிரட்டியுள்ளார். இதனை அடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜீயபுரம் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு நான்கு போலீசாரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் சசிகுமார் காவலர்கள் சங்கர் ராஜபாண்டியன் பிரசாத் சித்தார்த்தன் ஆகிய நான்கு பேரையும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “திருச்சி மாவட்ட காவல்நிலையம் ஒன்றில் பணியாற்றும் எஸ்.ஐ. சசிகுமார், காவலர்கள் சங்கர் பாண்டியன், பிரசாத், சித்தார்த்தன் ஆகிய 4 பேரும் பணி நேரத்தில் உயர் அதிகாரிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் முக்கொம்பு பகுதிக்குச் சென்று மது அருந்தி விட்டு அங்கு பூங்காவில் இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமி அளித்தப் புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நான்கு போலீசாரையும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார்.

ஹென்றி திஃபேன், மனித உரிமை ஆர்வலர்
நான்கு போலீஸ் அதிகாரிகளையும் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஹென்றி திஃபேன். அவர் பிபிசியிடம் பேசிய போது “திருச்சி மாவட்டத்தில் சிறுமிக்கு போலீசாரால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான நிகழ்வு. திருச்சி மாவட்ட காவல் துறை சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற காக்கி உடையில் இருக்கும் நபர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்,” எனக் கூறினார்
தொடர்ந்து பேசிய அவர் “இது ஒரு கொடூரமான நிகழ்வு. காவல் நிலையத்திலும் சரி, வெளியேயும் சரி காவல்துறை என்ன செய்தாலும் அதனை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள், எந்த நடவடிக்கை நம் மீது பாயாது என்ற தைரியத்திலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
உதாரணத்திற்கு திருநெல்வேலியில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரியான பல்வீர் சிங்கால் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை அவர் மீது தகுந்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை”, என்றார்
மேலும் இது குறித்து பேசிய அவர், “திருச்சி சிறுமி விவகாரத்தில் காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு வழக்குப்பதிந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு காவல்துறையினரை கைது செய்து, பணியிடை நீக்கம் செய்தது பாராட்டுக்குரியது.
ஆனால், இது போதாது. இது போன்ற சிறுவர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு போலீசாரையும் காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஒரு ஆசிரியர் பாலியல் ரீதியான குற்றத்தில் ஈடுபட்டால் அவரை ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் இங்கு உள்ளது. அதே போல காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால் காவல்துறையை விட்டு உடனடியாக அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து”, என்றார்.

சைலேந்திரபாபு, முன்னாள் டி.ஜி.பி.
கொடூர குற்றங்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு.
பிபிசியிடம் பேசிய அவர், “பொது மக்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு நீதித்துறை வழியாக ஒரு தண்டனை கிடைக்கும்.
ஆனால், சீருடையை அணிந்து பணி செய்யும் காவல்துறை அதிகாரிகள் குற்றம் செய்தால் அவர்களுக்கு காவல்துறையில் துறை ரீதியாக ஒரு தண்டனையும், குற்றவியல் நடைமுறைப்படி நீதிமன்றம் வழியாக ஒரு தண்டனை என இரண்டு தண்டனைகள் கிடைக்கும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் டி.ஜி.பி., “காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுமக்களை காக்கக் கூடிய பணியில் இருப்பவர்கள். அப்படி பாதுகாக்கக்கூடிய பணியில் இருக்கும் அதிகாரியே இது மாதிரியான கொடுங் குற்றங்களைச் செய்யும் போது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
நீதித்துறையில் சந்தேகம் இன்றி குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை விதிக்கப்படும். ஆனால், காவல்துறையில் அவர் குற்றம் செய்ததற்கான சந்தேகம் இருந்தாலே போதும். அதற்கான தண்டனைகள் அப்போதே விதிக்கப்படும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் தமிழ்நாடு காவல்துறை தலைமைப் பொறுப்பில் இருந்த போது இது மாதிரியான சில சம்பவங்கள் நடந்தன. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்து அவர்களை காவல் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்து இருக்கின்றேன்.
இந்த திருச்சி சம்பவம் மிகவும் மோசமான சம்பவம். தற்போது, அவர்கள் காவல்துறையினரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆறு மாதத்துக்குள் துறை ரீதியாக உரிய விசாரணை செய்து அவர்களை காவல்துறை பதவியில் இருந்தே நீக்க வேண்டும். இதனால், அவர்களுக்கு காவல்துறையிலிருந்து எந்தச் சலுகையும் கிடைக்காது. வேறு எந்த துறைக்கும் வேலைக்குச் செல்ல இயலாத அளவுக்கு தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்”, என்று கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்