
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆலாந்துறை ஆர் ஜி நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டிலும், காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் விஷ்ணு வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை
பட மூலாதாரம், Saattaidurai/X
யூடியூபரும், நாம் தமிழர் கட்சியின் பிரமுகருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை நடத்தியுள்ளனர்.
திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. இன்று காலை 5 மணிக்கு வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வீட்டில் இருந்த அவருடைய மனைவி மாதரசியிடம் சம்மன் கடிதத்தை கொடுத்துவிட்டு 3 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு 8 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்
தென்காசி மாவட்டம் இராயகிரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் (39) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலாந்துறை பழைய தபால் நிலைய வீதியில் வசிக்கும் மோகன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் மண்டல செயலாளர் தெரிவித்தார்.
இவரது வீட்டில் காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 4 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ள காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் திருச்சியை சேர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் குருதி பாசறை உறுப்பினராக இருந்தவர், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். முருகனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கு வந்த அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். 9 மணிக்கு சோதனையை முடித்து சென்றுள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
