ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரோடமைன் பி கண்டறியப்பட்டுள்ளது
புற்றுநோய் உண்டாக்கும் நிறமிகள் எந்தெந்தப் உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகின்றன?
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரோடமைன் பி எனும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரோடமைன் பி பஞ்சுமிட்டாயில் மட்டும் தான் கலக்கப்படுகிறதா?
இந்த கேள்விக்கு பதில் ‘நிச்சயமாக இல்லை.’
ரோடமைன் பி எனும் நிறமி, பஞ்சு மிட்டாய் மட்டுமல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் பூசப்படும். சில சமயங்களில் கேழ்வரகிலும் சிவப்பு நிறம் கிடைப்பதற்காக சேர்க்கப்படும்.
ரோடமைன் பி மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உணவுப் பொருட்களில் ரோடமைன் பி பயன்பாட்டை தடை செய்துள்ளது. இந்த தடையை மீறி உணவு தயாரிப்பதில் பதப்படுத்துவதில் விற்பனை செய்வதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி தண்டிக்கப்படுவர்.

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?
ரோடமைன் பி என்பது துணிகளுக்கும் காகிதங்களுக்கும் நிறம் கொடுக்கும் சாயமாகும். இதை பயன்படுத்துவதால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு, கொட்டைப் பாக்கு, மில்க் பேடா மேலே தூவப்படும் சீவல், ரோஸ் மில்க் என பல உணவுப் பொருட்களில் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என , சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறுகிறார்.’
ரோடமைன் பிக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு உலக அளவில் பல ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரோடமைன் பி உட்கொள்வதால் மூளையின் பின் பகுதி பாதிக்கப்படும். இதனால் உடல் அசைவுகள் பாதிக்கப்படும், தள்ளாட்டம் ஏற்படும் என , பொது நல மருத்துவர் அதிதி கூறுகிறார். “கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம் என்பது எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் வகையில் மரபணுக்களை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது ரோடமைன். மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும்” என்கிறார் அவர்.
ரோடமைன் பி மட்டுமல்லாமல் வேறு பல நிறமிகளும் பலர் விரும்பி சாப்பிடும் பழம், காய்கறிகளில் சட்டவிரோதமாக சேர்க்கப்படுகின்றன என உணவு பாதுகாப்புத் துறை கூறுகிறது.
“தர்பூசணியில் எரித்ரோசன் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. வெண்டைக்காய் மீது மாலசிட் கிரீன் எனும் நிறமி பூசப்படுகிறது” என்கிறார் , சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார்.

மருத்துவர் அதிதி
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆப்பிள் கிரீன், அலூரா ரெட், சன்செட் எல்லோ என சில நிறமிகளை பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அனுமதிக்கிறது. ஆனால் அவை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இதை வாடிக்கையாளர் உட்கொள்வதற்கு முன் கண்டறிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதே போன்று, ரோடமைன் பி அல்லது தீங்கு விளைவிக்கும் பிற நிறமிகள் உணவுப் பொருளில் இருப்பதையும் வாடிக்கையாளர்கள் எல்லா நேரங்களிலும் தெரிந்து கொள்ள முடியாது.
இந்நிலையில் நச்சுப் பொருள்களின் ஆபத்திலிருந்து விலகியிருக்க, மருத்துவர்கள் கூறும் ஒரே ஒரு யோசனை – கண்ணை கவரும் நிறம் கொண்ட உணவுப் பொருட்களை தவிர்த்து விட வேண்டும்.
பிபிசியிடம் பேசிய சதீஷ்குமார், “கண்களை கவரும் விதமாக பளிச் சென்று இருக்கும் எந்த பொருளையும் சாப்பிடாதீர்கள். இயற்கையாக சில உணவுப்பொருள்களுக்கு நிறம் உண்டு. அதை தவிர்த்து செயற்கையாக தோன்றும் எதையும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மைசூர்பா அதன் வழக்கமான நிறத்தை விட மிகவும் மஞ்சளாக சில இடங்களில் கிடைக்கும், கேசரி பச்சை நிறம் உட்பட பல நிறங்களில் வழங்கப்படும். இவற்றில் எல்லாம் நிறமிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கும், குழந்தைகள் வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். ஆனால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் ” என்றார்.
“நாம் உட்கொள்ளும் ஒரு உணவுப் பொருளில் நச்சுப் பொருளின் அளவு மிக மிக குறைவு. எனவே சாப்பிட்ட உடன் பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக இது போன்ற பல உணவுகளை நாள்பட எடுத்துக் கொள்ளும் போது அது ஆபத்தான அளவை எட்டும், அப்போது உடலில் பாதிப்புகள் ஏற்படும்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் அதிதி.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்