தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்துப் பேசியது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வினர், இந்து அமைப்பினர் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “`திட்டங்கள் ஏதுமில்லா ஊதாரிகள்’ என்று, தி.மு.க-வினரை அன்று பெரியார் சொன்னதை இன்று ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்கள் அவரின் வாரிசுகள். மத்திய அரசு எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் வழங்கியிருக்கும்போதும், அதை சரியாக எடுத்துச் செல்லாமல், தனது ஆட்சியின்மீதிருக்கும் அதிருப்தியை மடைமாற்ற எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதற்காக, இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் ‘சனாதனத்தை’ கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.
தாத்தா, மகன், பேரன் என்று இன்றளவும் அரசியலில், குடும்ப ஆதிக்கத்தைச் செலுத்தும் இவர்கள்தான் சனாதனத்தின் எதிரிகள். அண்ணா உருவாக்கிய கட்சியை, எத்தனையோ சிறந்த தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு வழிவிடாமல் ஒரே ஒரு குடும்பம் அபகரித்திருப்பதும் சனாதனத்துக்கு எதிரானது. இன்னும் சொல்லப் போனால் திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம்தான். சனாதனம் என்றால் இந்து மதம், தர்மம் என்று பொருள்படுகிறது. சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் இந்துமத ஒழிப்பு மாநாடு என்றுதான் பொருள்.

அப்படி இருக்க, கிறிஸ்தவ மத ஒழிப்பு மாநாடு அல்லது இஸ்லாம் மத ஒழிப்பு மாநாடு என ஒரு மாநாட்டை உதயநிதியோ அல்லது போலி மார்க்சிஸ்ட் கட்சியோ கற்பனையில்கூட நடத்த இயலுமா… உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின்மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் என்பதற்கு சாட்சி, நாடே கொத்தித்திருப்பதுதான். ஏதோ சினிமாவில் பேசும் வசனம்போல், தனது அரசியல் அறியாமையால் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளைப் பெற, சமூகத்தின் அமைதியைக் கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்கியிருக்கும் உதயநிதியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதனால்தான் தீவிர பா.ஜ.க எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்கூட அவரின் பேச்சைக் கண்டித்து, ‘அரசியலில் பொடிப்பையன்’ என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கீழ்வெண்மணி ஆரம்பித்து நாங்குநேரி வரை நாறிக் கொண்டிருக்கிறது திராவிட மாடலின் சனாதன ஒழிப்பு. நூற்றாண்டை நெருங்கும் தி.மு.க-வில் ஏன் இதுவரை ஒரு பெண் தலைவர், தலித் தலைவர் தலைமை வகிக்கவில்லை… ஆணாதிக்கத்தின் ஆணிவேறாக ஊடுருவி இருக்கும் தி.மு.க சனாதனம் குறித்துப் பேசுவது நகைச்சுவையாக இல்லையா?

மாவட்டச் செயலாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை பொறுப்பு வகிக்க தி.மு.க-வில் தலித்துகளுக்கு என்ன பஞ்சமா… இல்லையே! சாதிய ஆதிக்கத்தின் மொத்த உருவமாக நிமிர்ந்து நிற்கிறதே தி.மு.க. இதில் சமூகநீதி குறித்து வகுப்பெடுக்கிறார்கள். வெறும் ஏட்டளவிலும், சொல்லளவிலும் சானதன ஒழிப்பு, சமூகநீதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை வாய்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டு மக்கள் நலனைக் கெடுத்து, தன் அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறது.
தொடர்ந்து மதத்தை வைத்து அரசியல் நாடகமாடி ஒன்றாக இருக்கும் மக்களை பிளவுப்படுத்துகிறது, குளிர்காய்கிறது! இனியும் உங்கள் போலி அரசியல் முகமூடியை நம்ப நாட்டு மக்கள் தயாராக இல்லை. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com