லெனின் பிறப்பால் மேதையா? மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?

லெனின் பிறப்பால் மேதையா? மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?

லெனின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லெனின் மூளை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர்.

ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா?

இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட முயன்றனர்.

ஜனவரி 21, 1924. லெனின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த சில மருத்துவர்கள், அவருடைய “மேதைமை” எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன், அவருடைய மூளையை அகற்றி பாதுகாக்கவும் ஆராயவும் யோசனை ஒன்றை முன்மொழிந்தனர்.

இந்த யோசனை சோவியத் உயர் மட்ட தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் நிறுவனமும் உருவாக்கப்பட்டது.

நூற்றாண்டுக்குப் பிறகு லெனினின் மூளை எங்கே உள்ளது, அந்த ஆய்வின் முடிவுகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பிபிசி முண்டோ பேசியது.

லெனின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூளை பற்றிய ஆய்வில் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவராக இருந்த ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட், லெனின் மூளையை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார்.

பதப்படுத்தப்பட்ட லெனின் மூளை

“சுகாதார அமைச்சர் நிகோலாய் செமாஷ்கோ மற்றும் ஸ்டாலினின் உதவியாளர் இவான் டோவ்ஸ்டுகா ஆகியோர், லெனின் மூளையை ஆய்வுக்காக பெர்லினுக்கு அனுப்ப முன்மொழிந்ததில் இருந்து இக்கதை தொடங்குகிறது,” என அமெரிக்க வரலாற்றாசிரியர் பால் ரோட்ரிக் கிரிகோரி.

“லெனின் மூளை மற்றும் சோவியத் ரகசிய ஆவணக் காப்பகங்களிலிருந்து சில கதைகள்” (Lenin’s Brain and Other Stories from the Soviet Secret Archives) என்ற புத்தகத்தை எழுதியுள்ள பால் ரோட்ரிக், லெனின் இறந்த நேரத்தில், ரஷ்யாவில் நரம்பியல் நிபுணர்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனவே, பிரேத பரிசோதனையில் அகற்றப்பட்ட மூளை, ஃபார்மால்டிஹைடு எனும் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப்பட்டது. லெனின் மூளையை ஆய்வு செய்ய சோவியத் அதிகாரிகள் ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட்டை (1870-1959) அழைத்தனர்.

வோக்ட் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர். அவர் மூளை ஆராய்ச்சிக்கென பேரரசர் வில்லியம் இன்ஸ்டிட்யூட்-ஐ நிறுவினார்.

லெனின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லெனின் மூளை 30,000-க்கும் மேற்பட்ட பாகங்களாக வெட்டப்பட்டு, அவை கண்ணாடித் தகடுகளில் வைக்கப்பட்டு, சில ஆய்வுக்காக சாயங்கள் பூசப்பட்டன.

“அப்போது ஜெர்மனியில் அறிவியல் துறை சிறந்து விளங்கியது. மேலும், நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகமாக இருந்தனர்” என்று சலமன்கா பல்கலைக்கழகத்தில் (ஸ்பெயின்) நியூரோபயாலஜி பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

“அப்போது அந்த பணியை ஏற்க வோக்ட்டுக்கு சில தயக்கம் இருந்தபோதிலும், ஜெர்மன் அரசாங்கம் அப்பணியை ஏற்குமாறு அவரை வற்புறுத்தியது. அந்த நேரத்தில், ஜெர்மனி சோவியத் ஒன்றியத்துடன் நல்ல உறவைப் பேணுவதில் ஆர்வமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதங்களை தயாரிப்பதில் ஜெர்மனிக்கு இருந்த தடையை நீக்க சோவியத் ஒன்றியத்தின் உறவு தேவைப்பட்டது,” என்கிறார், தனது “ஹிஸ்டரி ஆஃப் பிரெய்ன்” (History of the Brain) புத்தகத்திற்காக இதுகுறித்து ஆய்வு செய்த ஜோஸ் ரமோன் அலோன்சோ.

இருப்பினும், லெனின் மூளையை பெர்லினுக்குக் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.

“வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால் தன்னால் இந்த ஆய்வை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை” என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹூவர் இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் கிரிகோரி விளக்கினார்.

சோவியத் ஒன்றியத்தின் சந்தேகங்கள்

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

லெனின் மேதையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியை வெளிநாட்டவரின் கைகளில் விடுவது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை.

இதற்கு சோவியத் தலைமை தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், வோக்ட் இறுதியில் ஆய்வில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், லெனின் மூளையின் பிரிக்கப்பட்ட 30,953 பாகங்களில் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஜெர்மனியில் உள்ள தனது ஆய்வகத்திற்கு அவர் எடுத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

பதிலுக்கு, அவர் நரம்பியல் துறையில் ரஷ்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்ய மூளை நிறுவனம் (இன்றைய ரஷ்ய மருத்துவ அறிவியல் அகாடமி) உருவாக்கத்தை வழிநடத்தவும் ரஷ்யா கேட்டுக்கொண்டது.

இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாஜி ஆட்சியுடன் வோக்ட் கொண்டிருந்த மோதல்களால், ஜெர்மனியில் தன் பதவிகளை இழந்தது மட்டுமல்லாமல், ஸ்டாலினை விட்டு விலகுவதற்கும் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார்.

வெளிநாட்டு தலையீடு பற்றிய சோவியத் சந்தேகங்கள் நியாயமானதாகத் தோன்றியது.

அதனால்தான், கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில், வோக்ட்டின் கைகளில் இருந்த லெனினின் மூளையின் ஒரு பாகத்தை மீட்க மாஸ்கோ ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடங்கியது என்று பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் எல். வான் போகார்ட் மற்றும் ஏ. டெவல்ஃப் தெரிவித்தனர்.

“வோக்ட் வைத்திருந்த லெனின் மூளையின் பாகம், அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிடும் என சோவியத் அஞ்சியது. அமெரிக்கா அதைப் பயன்படுத்தி, ’லெனின் சிபிலிஸால் அவதிப்பட்டார்’ அல்லது ’அவர் மேதையே இல்லை’ என்று கூறி அவரை இழிவுபடுத்தலாம் என சோவியத் சந்தேகித்தது” என்று பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ விளக்கினார்.

லெனின் மூளையில் என்ன இருக்கிறது?

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

நாஜிக்கள் லெனினை நோயுற்றவராகவும் குற்றவாளியாகவும் சித்தரித்து, அவரது மூளை ஓட்டைகளை கொண்டிருந்ததால் “சுவிஸ் சீஸ்” (Swiss Cheese) போல இருப்பதாகக் கூறினர்.

1920களின் பிற்பகுதியில், வோக்ட் தனது ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளை ஐரோப்பாவில் தொடர்ச்சியான விரிவுரைகள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினார். “லெனின் பெருமூளைப் புறணியின் அடுக்கு III-ன் நியூரான்கள் விதிவிலக்காக பெரிதாகவும் ஏராளமானதாகவும் இருந்தன” என்று அவர் இந்த விரிவுரைகளில் கூறினார்.

இது லெனினின் “சுறுசுறுப்பான மனம்” மற்றும் “கருத்துகளை மிக விரைவாக தொடர்புபடுத்தும் திறன் மற்றும் அவரது யதார்த்த உணர்வை” விளக்குவதாக, வோக்ட் கருதினார்.

அதேசமயம், மூளையின் அடுக்கு நியூரான்கள் பெரிதாக இருப்பது, மன வளர்ச்சி குன்றிய தன்மையின் குணாதிசயங்கள் என்று அக்கால மற்ற வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ஸ்டாலினை எச்சரித்திருந்தார்.

“வோக்ட்-ன் கண்டுபிடிப்புகள் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், லெனின் மூளை தனித்துவமானது மற்றும் விதிவிலக்கானது என, ரஷ்யர்கள் கேட்க விரும்புவதை அவர் சொன்னார் என்று நம்பப்படுகிறது” என்று அலோன்சோ கூறினார்.

“சோவியத் அதிகாரிகள் லெனின் சிறந்த மேதை என்று நம்பினர். மேலும், அவரது மூளைக்கு சிறப்புத் தன்மைகள் இருப்பதாகவும் , வேறு எந்த மனிதனைப் போலவும் அவருடைய மூளை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப தனித்துவமான ஒன்று அதில் இருப்பதாகவும் அவர்கள் நம்பினர்” என்று ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார்.

மூளையின் அமைப்பு (அளவு மற்றும் வடிவம்) மற்றும் மக்களின் நுண்ணறிவுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக வோக்ட் நம்பினார்.

மூளைக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டா?

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சோவியத் தலைவர்கள் லெனினை ஒரு மேதை என்றுகூறி அவரது மூளையை ஆய்வு செய்து அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முயன்றனர்.

மக்களைக் கட்டுப்படுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தவர் அல்லது தன் தாயார் இறக்கும் வரை அவரை சார்ந்தே வாழ்ந்தவர் அறிவு ரீதியாக உயர்ந்தவராகக் கருதப்பட முடியுமா? சோவியத் குறித்த வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றை புறக்கணித்தாலும் அவர் சிறந்த நினைவாற்றல் கொண்டவர் என்றும் ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததாகவும், ஒரு மணிநேரத்தில் ஒரு செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதவும் அவரால் முடிந்தது என கூறுகின்றனர்.

லெனினின் “மேதைமை”யின் வேரைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்தன. ஏனென்றால், மற்ற மனித மூளைகளும் ஆய்வுக்குத் தேவையாக இருந்தது. அப்போதுதான் அவற்றை லெனின் மூளையுடன் ஒப்பிட முடியும்.

மருத்துவ அறிவியல் அகாடமியின் அலமாரிகளில் இப்போது லெனின் மூளை மட்டுமல்ல, உடலியல் நிபுணர் இவான் பாவ்லோவ், ஏரோநாட்டிகல் பொறியாளர் கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி மற்றும் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி ஆகியோரின் மூளையும் வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பத்து சாதாரண குடிமக்களின் மூளைகளுடனும் லெனின் மூளை ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

இது 63 பக்கங்கள் கொண்டது. தற்போது அறிக்கை மோசமான நிலையில் உள்ளது. மேலும், அதில் அறிவியல் ரீதியான பல வார்த்தைகள் உள்ளன. லெனின் நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், தன் இறுதி நாட்கள் வரை ஒரு மேதையாக இருந்தார் என அறிக்கை முடிவு செய்துள்ளது” என்று கிரிகோரி கூறினார்.

“இந்த ஆவணத்தைப் படிப்பது நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் ஆய்வாசிரியர்கள் தான் அடைய விரும்பிய முடிவுக்காக விஷயங்களை தேடியதாக தோன்றியது” என்று அவர் மேலும் கூறினார்.

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

1922 முதல் லெனினுக்கு குறைந்தது நான்கு பக்கவாதம் ஏற்பட்டது.

லெனின் மூளையில் சில தனித்தன்மை வாய்ந்த இயல்புகள் இருப்பதாக கோவியத் ஆய்வாளர்கள் உறுதியளித்தனர். அந்த இயல்புகள் “மிகுதியான அறிவுசார் திறன்கள்” கொண்ட ஒருவருக்கு தகுதியானவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அலோன்சோ வோக்ட் அவருக்குப் பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தார்.

“மூளையின் அளவு அல்லது வடிவத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மூளை கொண்டவர்கள் சிறந்த கலை அல்லது அறிவியல் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் சிறிய மூளை கொண்டவர்களும் உள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

“அறிவு என்றால் என்ன என்பதையே நாம் இக்காலத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அலோன்சோ.

“(ஓவியர் வின்சென்ட்) வான்கா ஒரு கலை மேதையாகக் கருதப்படுகிறார், ஆனால் அவர் பல பிரச்னைகளைக் கொண்டவர். வரலாற்றில் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்படும் ஐசக் நியூட்டனுக்கும் இதேதான் நடந்தது. அவருக்கு நண்பர்களே இல்லை. பணம் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட துன்பத்தில் வாழ்ந்தார்” என்று அலோன்சோ தெரிவித்தார்.

உருவ வழிபாட்டை ஆதரித்த தலைவர்கள்

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷியன் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸில், லெனின் மூளையின் மாதிரி மெழுகு வடிவில் உள்ளது.

1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, லெனின் மூளையைப் பாதுகாத்த அல்லது ஆய்வு செய்த சில விஞ்ஞானிகள் அதிகாரபூர்வ பதிப்பைத் தவிர வேறு சில கருத்துகளையும் வழங்கத் தொடங்கினர்.

“மூளைக்கு என சிறப்பு எதுவும் இல்லை என்று மட்டுமே நாம் இதிலிருந்து ஊகிக்க முடியும்” என்று லெனினின் மூளையை பாதுகாக்கும் மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர். ஒலெக் அட்ரியானோவ் 1993-ல் ஒப்புக்கொண்டார்.

“அவர் ஒரு மேதை என்று நான் நினைக்கவில்லை” என்று ரஷ்ய விஞ்ஞானி பிரிட்டிஷ் பத்திரிகைகளிடம் தெரிவித்தார்.

சோவியத் ஒன்றியத்தின் நிறுவனர் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஸ்டாலின் முயன்ற ஆயுதங்களில் லெனின் மூளை பற்றிய ஆய்வும் ஒன்றாகும் .

“லெனின் இறந்தவுடன் தொடங்கிய அதிகாரப் போராட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த லெனின் மேதைமையை நிரூபிக்க நினைத்தார்” என்று கிரிகோரி மேலும் கூறினார்.

லெனின்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான ஸ்டாலினின் உத்தியின் ஒரு பகுதியாக லெனினின் இறவா நிலை இருந்தது.

ஆனால், லெனின் மூளையை மட்டும் ஸ்டாலின் அதிகாரத்திற்கான போரில் பயன்படுத்தவில்லை. தனது முன்னோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களைப் புறக்கணித்து, கிரெம்ளின் சுவர்களின் கீழ் கட்டப்பட்ட கல்லறையில் ஒரு துறவியின் உடலை போன்று லெனின் உடலை பாதுகாக்கவும், பகிரங்கமாகக் காட்டவும் முடிவு செய்தார். அந்த இடம் இன்றும் உள்ளது.

இருப்பினும், கியூப வரலாற்றாசிரியர் அர்மாண்டோ சாகுவேடா போன்ற வல்லுனர்கள், லெனினே தனது தெய்வீக செயல்முறைக்கு உயிர் கொடுத்தார் என்று நம்புகிறார்கள்.

“லெனின் சோவியத் சர்வாதிகார அரசை உருவாக்கியவர்” என்று அவர் கூறினார்.

“தலைவர்கள் சொல்வது ஒன்று, நடைமுறையில் நடப்பது இன்னொன்று. லெனின், பிடல் காஸ்ட்ரோ அல்லது மாவோ சே துங் போன்ற தலைவர்கள் அனைவரும் தங்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டை விரும்பவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது வெறும் வார்த்தைகள் தான். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தங்கள் உருவ வழிபாட்டை ஆதரித்தனர். அது அவர்களின் மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது,” என்று அவர் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *