
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நடத்தும் ஆடவர் ஒருநாள் போட்டிக்கான 13-வது உலகக் கோப்பைப் போட்டித்தொடர் 5ம் தேதி(நாளை) இந்தியாவில் கோலாகலமாக தொடங்குகிறது.
அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டிகள், நவம்பர் 19ம் தேதிவரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தையும் முதல்முறையாக முழுமையாக இந்தியாவே நடத்துகிறது.
2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளையே மையமாக வைத்து, முதலாவது ஆட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை
வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 1983 முதல் 2019ம் ஆண்டுவரை இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 8 முறை வென்று 75 சதவீத வெற்றியைத் தக்கவைத்துள்ளது. இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பின்…
இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடைசியாக 1987ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதியுள்ளன. அதன்பின் ஏறக்குறைய, 36 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த 1987ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டம் நடக்குபோது, கிரிக்கெட் ரசிகர்கள் கிராமங்களில் சென்று சேராத காலகட்டம், ரசிகர்கள் நேரடியாக போட்டியை பார்க்கும் வாய்ப்பும் போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையால் குறைவாக இருந்தது. ஆனால், இந்த முறை நடக்கும் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அரங்கம் நிறைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்த சுவாரஸ்யத் தகவல் என்னவென்றால், இங்கு கடந்த 1987ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஒரு ரன்னில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியை இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன்னில் வென்றுள்ளது. அதுபோன்று இந்த முறை நடக்குமா அல்லது இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக் கோப்பை ஆட்டங்களில் ஸ்வாரஸ்யம் மிகுந்த சில போட்டிகள் குறித்துப் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
பதிலடி கொடுத்த இந்திய அணி
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முதல்முறையாக 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜூன் 13ம் தேதி, இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் மோதின. இரு அணிகளும் பி பிரிவில் இடம் பெற்று இருந்தன. ஒவ்வொரு அணியும் தன்னுடைய பிரிவில் உள்ள 3 அணிகளுடன் 2 முறை மோத வேண்டும்.
இந்த ஆட்டத்தில் அந்தக் காலகட்டத்திலேயே ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் சேர்த்தது. டிரிவோர் சேப்பல்(110) சதமும், கேப்டன் ஹக்ஸ்(52), கிரஹாம் யேலப்(66) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
310 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் இறங்கிய இந்திய அணி, 37.5 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டு, 162 ரன்களில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து. இந்திய அணியில் கேப்டன் கபில்தேவ்(40), ஸ்ரீகாந்த்(39) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினர்.
ஆனால், 2வது முறையாக ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதியபோது சரியான பதிலடி கொடுத்து திரும்பிப்பார்க்க வைத்தது. 1983, ஜூன் 20ம் தேதி கெம்ஸ்போர்டு நகரில் இந்த ஆட்டம் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 55.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்காவிட்டாலும், ஸ்ரீகாந்த்(24), யாஸ்பால் ஷர்மா(40), சந்தீப் பாட்டீல்(30), கபில்தேவ்(28) ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர்.
248 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் மதன்லால், ரோஜர் பின்னியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 38.2 ஓவர்களில் 129 ரன்களில் சுருண்டு, 118 ரன்களில் தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஆலன் பார்டர்(36) மட்டுமே ஓரளவு ஸ்கோர் செய்தார். இந்தியத் தரப்பில் மதன்லால், ரோஜர் பின்னி தலா 4 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சாந்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில்தான் இந்திய அணி முதல் முறையாக கபில்தேவ் கேப்டன்ஷியில் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு ரன்னில் தோற்ற இந்திய அணி
1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ரிலையன்ஸ் கோப்பை என்று அழைக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பை இந்தியா, பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தன. கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையைச் சந்தித்தது. கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பை 60 ஓவர்களாக நடத்தப்பட்ட நிலையில் இந்த உலகக் கோப்பையில் 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
1987ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 3வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. ஜெஃப் மார்ஷ் 110, டேவிட் பூன் 49, டீன் ஜோன்ஸ் 39,கேப்டன் பார்டர் 16 ரன்கள் சேர்த்தனர்.
271 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் களமிறங்கிய இந்திய அணிக்கு கவாஸ்கர், ஸ்ரீகாந்த் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீகாந்துக்கு சொந்த மைதானம் என்பதால், ஆஸ்திரேலியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கி, 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிக்ஸர் சித்து என அழைக்கப்படும் நவ்ஜோத் சிங் சித்து 5 சிக்ஸர்களுடன் 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவர்கள் 3 பேர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை அளித்தனர். நடுவரிசை, பின்வரிசையில் களமிறங்கிய பேட்டர்களான வெங்சர்கர்(29), அசாரூதின்(10), கபில்தேவ்(6), ரவி சாஸ்த்ரி(12), கிரண்மோர்(12) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
256 ரன்கள் வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில், அடுத்த 13 ரன்களில் 4 விக்கெட்டுகளையும் இழந்து ஒரு ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.
ஆஸ்திரேலியத் தரப்பில் மெக்டெர்மாட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டீவ் வாஹ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 22ம் தேதி டெல்லி பெரேஷா கோட்லா மைதானத்தில் நடந்த 2வதுலீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்தது இந்திய அணி. இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது. சுனில் கவாஸ்கர்(61), வெங்சர்கர்(63) சித்து(51), அசாருதீன்(54) என 4 பேரும் அரைசதம் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஒரு அணியில் உள்ள 4 பேட்டர்கள் அரைசதம் அடித்தது வரலாற்றில் 2வது முறையாக இருந்தது.
290 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 233 ரன்களில் ஆட்டமிழந்து, 56ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் பூன்(62), ஸ்டீவ்வாஹ்(42), ஜெஃப்மார்ஷ்(33), ஜோன்ஸ்(36) ரன்கள் சேர்த்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த ஜெஃப் மார்ஷை 33 ரன்னில் மணிந்தர் சிங் வெளியேற்றினார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு மணிந்தர் சிங்கின் சுழற்பந்துவீச்சு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. மார்ஷ், பார்டர், ஜோன்ஸ் ஆகிய முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசாருதீன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பட மூலாதாரம், Getty Images
2வது முறையாக ஒரு ரன்னில் தோற்ற இந்திய அணி
ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து 1992 உலகக் கோப்பைத் தொடரை நடத்தின. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் கோப்பை என்று பெயரிடப்பட்டது. 1992 பிப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இருந்துதான் வீரர்கள் வண்ண உடைஅணிந்து விளையாடினர். வெள்ளை நிறப் பந்து, கறுப்பு நிறத்திரை, மின்னொளி ஆட்டங்கள் முதல்முறையாக அறிமுகமாகின. ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டம் நடத்தப்பட்டது.
பிரிஸ்பேனில் மார்ச் 1ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையைச் சந்தித்து.
இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 237ரன்கள் சேர்த்தது. அதிபட்சமாக டீன் ஜோன்ஸ்(90) டேவிட்பூன்(43) ரன்கள் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் கபில்தேவ், மனோஜ் பிரபாகர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
16வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால், 47ஓவர்களில் இந்திய அணி 236 ரன்கள் சேர்க்க இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த முறை ஸ்ரீகாந்த் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கவாஸ்கர் இல்லாத நிலையில் ரவி சாஸ்திரி தொடக்க வீரராக களமிறங்கி 23 ரன்களில் வெளியேறினார்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலகட்டமாகும். சச்சின் இந்த ஆட்டத்தில் 11 ரன்னிலும், கபில்தேவ் 21ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் அசாருதீன் 93 ரன்களும், சஞ்சய் மஞ்சரேக்கர்47ரன்களும் அதிகபட்சமாகச் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்திலும் வெற்றியை நூலிழையில் இந்திய அணி தவறவிட்டது. அசாரூதீன், மஞ்சரேக்கர் ரன்அவுட் ஆகியதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாகி, ஆட்டம் ஆஸ்திரேலிய பக்கம் சென்றது. 216 ரன்கள் வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது, ஆட்டம் இந்திய அணி பக்கமே இருந்தது. மஞ்சரேக்கர் ரன்அவுட் ஆகியதும், அடுத்த 18 ரன்களில் 4 விக்கெட்டுகளையும் இழந்து ஒருரன்னில் இந்திய அணி தோற்றது.

பட மூலாதாரம், Getty Images
24 ஆண்டுகளாக தொடர்ந்த தோல்வி
1992 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து 2003 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது. 1996ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பிப்ரவரி 27ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய் அணியிடம் 16 ரன்னில் இந்திய அணி தோற்றது.
1999ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 4ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியிடம் 77 ரன்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
2003ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் செஞ்சூரியனில் பிப்ரவரி 15ம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
அதே ஆண்டில் மார்ச் 23ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி
2011ம் ஆண்டுதான் இந்திய அணி 2வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், உண்மையில் 2003ம் ஆண்டே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது.
2003ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரை தென் ஆப்ரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்தின. இந்த தொடரில் கங்குலி கேப்டன்ஷியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான அனைத்து தகுதிகளுடன் இருந்தது.
அதற்கேற்ப ஜாம்பவான்களான சச்சின், சேவாக், கங்குலி, யுவராஜ் சிங், முகமது கைப், திராவிட் இடம்பெற்று வலுவான அணியாக இருந்தது.
லீக், சூப்பர் சிக்ஸ் தொடரில் வென்று, அரையிறுதியில் கென்ய அணியை 91 ரன்களில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்திய அணி அப்போது இருந்த ஃபார்மைப் பார்த்து கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று கணிக்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டி தலைகீழாக மாறிப்போனது.
ஜோகன்னஸ்பர்க்கில் மார்ச் 23ம் தேதி நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 359ரன்கள் சேர்த்து இமாலய இலக்கு நிர்ணயித்தது. கேப்டன் ரிக்கி பாண்டிங்(140நாட்அவுட்), டேமியன் மார்டின்(88 நாட்அவுட்), கில்கிறிஸ்ட்(57) ஆகியோர் வலுவான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர்.
கேப்டன் கங்குலியும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஆஸ்திரேலிய ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 360 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ரன்களில் ஆட்டமிழந்து, 125 ரன்களில் தோல்வி அடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார், சச்சின் ஆட்டமிழந்ததை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்கள் மனது சுக்குநூறாக உடைந்தது. இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மருகத் தொடங்கியது.
கங்குலியும் 24 ரன்கள், கைப் டக்அவுட்டில் வெளியேற தோல்விபிடி இறுகத் தொடங்கியது. ஆனால், மனம் தளராத சேவாக் சதத்தை நோக்கி நகர்ந்து 84 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ராகுல் திராவிட் 47, யுவராஜ் சிங் 24, தினேஷ் மோங்கியா 12 என ஏமாற்றம் அளித்தனர்.
இந்திய அணியின் கைக்கு அருகே வந்த உலகக் கோப்பை கைநழுவிப் போனது. உலகக் கோப்பைத் தொடரிலேயே முதல்முறையாக இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதியதில் அதில் இந்திய அணி தோற்றது.

பட மூலாதாரம், Getty Images
கால் நூற்றாண்டுக்குப்பின் வரலாறு திரும்பியது
கால் நூற்றாண்டுக்குப்பின் 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி பழிதீர்த்துக் கொண்டது. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை யாராலும் மறக்க முடியாது. இந்திய அணி 2வது முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்த ஆண்டாகும். தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பல்வேறு மகத்தான வெற்றிகளைப் பெற்றது.
அதில் 2வது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணியின் ஆட்டம் ஆகச்சிறந்தது. அதிலும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் அனல் பறக்கும் பேட்டிங்கைப் பார்த்து ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் அதிர்ந்தனர்.
இந்த ஆட்டம் அகமதாபாத்தில் மார்ச் 24ம்தேதி நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்(104) சதத்தாலும், பிராட் ஹாடின் (53) அரைசதத்தாலும் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. அஸ்வின், யுவராஜ் சிங், ஜாகீர் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
261 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சேவாக், சச்சின் ஆட்டத்தொடங்கினர். சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால், சச்சின், கம்பீர் கூட்டணி அணியை மீட்டது. சச்சின் 53, கம்பீர் 50 ரன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி(24), தோனி(7) ரன்னில் வெளியேறினர். 187 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தது.
ஆனால், நேரம் செல்லச் செல்ல யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இருவரின் ஆட்டம் ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டது. இருவரும் இந்திய அணியை ஆஸ்திரேலியாவின் பிடியிலிருந்து மீட்டனர்.
ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான பிரட் லீ, ஷான் டெய்ஸ்ட், மிட்ஷெல் ஜான்சன், ஷேன் வாட்சன் ஆகியோர் இருந்தும் யுவராஜ் சிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் பேட்டிங்கை, அவரின் “மாஸ்டர் பீஸ்” என்று அழைக்கலாம். யுவராஜ் சிங் மட்டும் நிலைத்து ஆடாமல் இருந்தால், இந்திய அணியின் 2வது உலகக் கோப்பை என்பது கனவாகவே இருந்திருக்கும்.
ஆஸ்திரேலியப் பந்துவீச்சை பந்தாடிய யுவராஜ் சிங் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 47.4 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப்பின் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி வரலாற்றை திருத்தி எழுதியது.

பட மூலாதாரம், Getty Images
கோலி தலைமையில் கிடைத்த வெற்றி
2019ம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. விராட் கோலி தலைமையிலா களமிறங்கிய இந்திய அணி, உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாகவே திகழ்ந்தது. ஏனென்றால், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கேஎல்,ராகுல் என அனைவரும் ஃபார்மில் இருந்தனர், தோனி இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது.
2019, ஜூன் 9ம் தேதி ஒவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 2வது முறையாகப் புரட்டி எடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்தது. தவண்(117), ரோஹித் சர்மா(57),கோலி(82), ஹர்திக் பாண்டியா(48) என வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், கூல்டர் நீல் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும் இந்திய பேட்டர்களுக்கு எந்தவிதமான சிரமத்தையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் துவம்சம் செய்தனர். மிகப்பெரிய ஸ்கோரை சேர்த்தவிட்டபோதே இந்தியாவின் வெற்றி எழுதப்பட்டதாகிவிட்டது.
353 ரன்களைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்(56), ஸ்மித்(69), கவாஜா(42), கேரே(55) ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். அதிலும் வார்னர் ஆமை வேகத்தில் அரைசதம் அடித்தது விமர்சிக்கப்பட்டது, ஆனால், 50 ஓவர்களில் 316 ரன்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் புவனேஷ், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்