
பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கிவிட்டது, ஆனால் கூட்டம் எங்கே போனது?
இதுதான் சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் எழுந்த கேள்வி.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை.
ஆட்டம் குறித்து பேசப்படும் அளவுக்கு, காலி இருக்கைகள் குறித்தும் மக்கள் பேசினர்.
1,32,000 இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் நிரம்பிய இருக்கைகளின் சரியான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் போட்டிக் காட்சிகளிலும் புகைப்படங்களிலும் காலியான ஸ்டாண்டுகள் தெளிவாகத் தெரிகிறது.
போட்டி நடந்தது வாரத்தின் மத்தியில். பிற்பகல் நேரமாக இருந்ததாலும், இந்தியா விளையாடாததாலும் போட்டிக்கு குறைவான ஆட்களே திரண்டிருந்ததாக கூறப்பட்டது.
சிலரின் கூற்றுப்படி, ஆமதாபாத்திற்கு பதிலாக மும்பை வான்கடேவில் போட்டியை நடத்தியிருந்தால், இது போன்ற ஒரு சூழ்நிலை வந்திருக்காது, ஆனால் இது உண்மையா? ஆமதாபாத்தின் மைதானத்தில் காலியாக உள்ள இருக்கைகள் உண்மையில் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
மோதி மைதானத்தில் ஏன் கூட்டம் கூடவில்லை?
பிபிசி குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா போட்டிக்கு முன்னதாக மோதி மைதானத்திற்கு வெளியே சென்று அங்குள்ள ரசிகர்களுடன் உரையாடினார்.
“இரண்டு மணிக்குப் போட்டி தொடங்கியது, மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போது நாங்கள் நான்கு முப்பது வரை அங்கே இருந்தோம். ஆனால், மைதானம் நிரம்பியிருக்க வேண்டிய அளவு இல்லை” என்று அவர் கூறினார்.
ஆமதாபாத்தில் 33-34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக, சிலர் மைதானத்திற்கு வெளியே இருந்துவிட்டு வெப்பம் தணிந்ததும் உள்ளே செல்வார்கள் என்று கூறப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, பாஜகவின் அரசியல் தலைவர் ஒருவர் இந்தப் போட்டிக்காக நாற்பதாயிரம் பெண்களுக்கு இலவச பாஸ் கொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட பாஸ் பெற்றவர்கள் காலை 11-11.30 மணிக்கே காத்திருந்ததாக தேஜாஸ் கூறுகிறார். இவ்வளவு நேரம் காத்திருப்பவர்களுக்கு உற்சாகம் குறைந்திருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
பெரிய மைதானம் என்பதால் காலியாகத் தெரிந்ததா?
“இரண்டாவதாக, மொபைல் மற்றும் பணப்பையைத் தவிர வேறு எதையும் மைதானத்திற்குள் கொண்டு செல்ல முடியாது. பா.ஜ.க.வினர் டீ, சாப்பாடு கூப்பன்களை பாஸ்களுடன் கொடுத்ததாக சிலர் எங்களிடம் சுட்டிக்காட்டினர். ஆனால் டிக்கெட் இலவசம் என்றாலும், உள்ளே தண்ணீர் பாட்டில் வாங்குவதும் விலை அதிகம். அதனால்தான் பலர் வருவதில்லை.” என்றும் அவர் கூறினார்.
சில ரசிகர்கள் போட்டியுடன் தொடக்க விழாவும் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எந்த தொடக்க விழாவும் இல்லாததால், போட்டியை புறக்கணித்திருக்க வேண்டும் என்று கருத முடிகிறது.
எனினும் அக்டோபர் 14ஆம் தேதி இங்கு நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மைதானம் முழுவதும் நிரம்பி வழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக நரேந்திர மோதி ஸ்டேடியம் 2020 ஆம் ஆண்டில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 1,32,000 பேர் அமரும் வசதி உள்ளது.
எனவே 20 ஆயிரம் பார்வையாளர்கள் இருந்தாலும், இந்த மைதானம் ஒப்பீட்டளவில் காலியாக இருப்பதாகவே தெரியும்.

பட மூலாதாரம், Getty Images
ஏன் ஆமதாபாத்தில் மட்டும் முக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன?
அதே நேரம் வேறு மைதானத்தில் போட்டியை நடத்தியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மும்பையின் வான்கடே, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ், சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகியவை இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று சின்னமான மைதானங்கள்.
ஆனால் உலகக் கோப்பை தொடக்க ஆட்டம், இறுதிப் போட்டி, மிக முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி ஆகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
உண்மையில், இது இந்திய கிரிக்கெட் மற்றும் பிசிசிஐயின் அதிகார மையம் மாறிவிட்டதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.
2019 ஆம் ஆண்டில், அப்போதைய குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐயில் நுழைந்தார்.
ஜெய் ஷா இப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், ஐசிசியின் நிதிக் குழுவின் தலைவராகவும் உள்ளார். அதன் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, மும்பை அல்லது கொல்கத்தாவை விட ஆகமதாபாத்தின் ஸ்டேடியம் விரும்பப்படுவது புதிய விஷயம் அல்ல.
இதற்கு முன்பும், டால்மியா காலத்தில் ஈடன் கார்டனும், சரத் பவார் காலத்தில் வான்கடே மைதானமும் முக்கியமான போட்டிகளை நடத்தியது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்