
பட மூலாதாரம், Getty Images
2021ஆம் ஆண்டின் ஒரு கட்டத்தில், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பை உருவாக்கும் வளர்ந்து வரும் நாடுகளாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஒரு அபிலாஷை கொண்ட குழுவாக இருப்பதை மாற்றி, சர்வதேச சமூகத்தில் ஒரு முழு அளவிலான புவிசார் அரசியல் கூட்டமைப்பாக உருவெடுத்தன.
அந்த ஆண்டுதான் இந்த நாடுகள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு வியப்படைந்தன. மேலும், BRICS இன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் G7 கூட்டமைப்பு நாடுகளை விட அதிகமாக இருந்தது .
G7 கூட்டமைப்பானது ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகளைக் கொண்டது. இது உலகின் ஏழு பெரிய “மேம்பட்ட” பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும். உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றில் இவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய உலக வல்லரசுகளையும், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற அவர்களின் கண்டங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளையும் பிரிக்ஸ் உள்ளடக்கியிருந்தாலும், அதன் உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நாடுகளுக்கு கடன் கொடுக்கும் உலக வங்கி போன்ற முக்கியமான அமைப்புகளை மேற்கத்திய நாடுகள் கட்டுப்படுத்துவதாக புகார் கூறுகின்றனர்.
எனவே, அவர்கள் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு “அதிக குரல் மற்றும் பிரதிநிதித்துவம்” மட்டும் கோரவில்லை. மாறாக, ஜனவரி 1, 2024 முதல், அவர்கள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகின்றனர்.
அன்றிலிருந்து, பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை நிர்ணயம் செய்யும் போது, இந்த பலதரப்பு கூட்டமைப்பு ஐந்து புதிய உறுப்பு நாடுகளைக் கூடுதலாகப் பெறும். இரான், எகிப்து, எத்தியோப்பியா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தான் அவை.

“உறுப்பினர்களின் எண்ணிக்கை விரிவாக்கம் என்பது முன்பிருந்தே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. இது புவிசார் அரசியல் விவாதத்திற்கான ஒரு மன்றமாக குழுவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும். குறிப்பாக சீனா பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் மத்திய கிழக்கில் இருந்து தான் பெரும்பாலான புதிய உறுப்பினர்கள் வருகிறார்கள்,” என Abrdn-இல் வளர்ந்து வரும் சந்தை ஆய்வாளராக உள்ள மைக்கேல் லாங்ஹாம் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.
“சர்வதேச அரசியல் விவாதம் மற்றும் G7, G20 மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வெளியே உள்ள சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதில் இந்த கூட்டமைப்பு தன் விரிவாக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் என்பதும் எதிர்நோக்கத்தக்கது,” என்று அவர் மேலும் பேசுகையில் கூறினார்.
அர்ஜெண்டினாவின் முடிவில் திடீர் மாற்றம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உச்சிமாநாட்டில், அர்ஜெண்டினா இந்த கூட்டமைப்பில் சேர அழைக்கப்பட்டது. ஆனால் அதிபர் தேர்தலில் ஜேவியர் மிலியின் வெற்றி எல்லா விஷயங்களையும் மாற்றியது. அந்த கூட்டமைப்பில் சேரப்போவதில்லை என புதிய அதிபர் அறிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் இந்த புதிய நிர்வாகம், “ஜனவரி 1, 2024 அன்று அர்ஜென்டினா குடியரசை பிரிக்ஸ் குழுவில் முழு உறுப்பினராக இணைப்பது பொருத்தமானதாக கருதவில்லை,” என்று புதிய அதிபர் மிலி அந்த கூட்டமைப்புக்கு அதிகாரப்பூர்வமாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இது சீனாவுடனான அரசியல் உறவுகளை துண்டிக்க நினைக்கும் அவருடைய விருப்பத்துடன் ஒத்துப்போகிறது. மிலி அமெரிக்க வலதுசாரிகளின் முக்கிய நபர்களை ஆதரிப்பதுடன் அவர்களுடன் நட்பாக இருக்கிறார்,” என்று ‘அமெரிக்காஸ் சொசைட்டி’ பகுப்பாய்வு மையத்தின் நிபுணர்கள் நினைவு கூர்ந்தனர்.
பிரிக்ஸ் வருடத்திற்கு ஒருமுறை முடிவுகளை எடுக்கிறது என்பதுடன் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரு வருடத்திற்கு ஒருவராக தலைவர் பதவியை மாறிமாறி பெறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் எனப்படும் இந்த கூட்டமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மேற்கத்திய எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.
ஒரு புதிய உலகளாவிய ஒழுங்கை கட்டமைக்க முயற்சி
இந்த மன்றத்தின் மூலம் சீனா அடைய விரும்பும் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், அதன் சக்தியையும், செல்வாக்கையும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் அதிகரிப்பது தான் என டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் புவியியல் சார் வளர்ச்சித் துறை நிபுணரான பேராசிரியர் பாட்ரைக் கார்மோடி குறிப்பிடுகிறார். சீனா தெற்குலக நாடுகளில் முன்னோடியாக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ள மற்றுமொரு பெரிய உலக வல்லரசான ரஷ்யாவின் நோக்கம் வேறு.
“ரஷ்யா அதை மேற்கு நாடுகளுக்கு எதிரான அதன் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது. யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை முறியடிக்க அதன் அங்கத்துவம் உதவுகிறது என்று அது நம்புகிறது,” என்று லண்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸின் கிரியோன் பட்லர் கூறுகிறார்.
அதேநேரம், இரான் அதில் உறுப்பினராக இருப்பது, மேற்கத்திய எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கக் கூடும் என்றும் பட்லர் கூறுகிறார்.
தற்போது விரிவாக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு புதிய பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அது “BRICS+” ஆக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பிரிக்ஸ் கூட்டமைப்பின் பல உறுப்பு நாடுகள் எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன.
பிரிக்ஸ் கூட்டமைப்பு ஏன் முக்கியமானது?
“சர்வதேச நாணய நிதிய கணிப்புகளின்படி, G7 அமைப்பின் 27% உற்பத்தியுடன் ஒப்பிடும் போது பிரிக்ஸ் நாடுகள் 2028 ஆம் ஆண்டில் உலக உற்பத்தியில் 33.6% அளவுக்குப் பங்கைக் கொண்டிருக்கும்,” என சிங்கப்பூரைச் சேர்ந்த பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் ஆய்வாளர் கிளாடியோ பைரோன் விளக்குகிறார்.
தற்போது விரிவாக்கப்பட்ட குழுவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 45 சதவிகிதம் பேர் உள்ளனர்.
அதன் ஒட்டுமொத்த பொருளாதாரம் 28.5 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது, இது உலகப் பொருளாதாரத்தில் 28% ஆகும்.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 44% அளவுக்கு பிரிக்ஸ் நாடுகள் உற்பத்தி செய்கின்றன.
” பிரேசில் போன்ற உத்தி ரீதியான மூலப்பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நன்மை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். முதலீடு மற்றும் வர்த்தகத்தில் சீனா முக்கியத்துவம் பெற்றாலும், ஏறக்குறைய அனைத்து வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் மேற்கத்திய நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளன,” என்கிறார் பைரோன்.

பல சந்தர்ப்பங்களில், சௌதி அரேபியாவும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளன .
“தற்போதைய பிரிக்ஸ் பொருளாதாரங்கள் மற்றும் எரிசக்தி பொருளாதாரத்தில் புதிய உறுப்பினர்களின் குரல்களைக் கேட்கும் திறனை இது நிரூபிக்கிறது என்பதுடன் பொருட்கள் மற்றும் அரசியலுக்கு இடையே உள்ள இடைவெளி எவ்வளவு மெல்லியதாக உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது,” என்று VMA- இன் தலைமைப் பொருளாதார நிபுணர் டான் ஸ்காட் விளக்குகிறார்.
ஆனால் இக்குழுவிற்குள் எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.
அவர்களின் புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பது, தற்போதுள்ள உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை மறுவடிவமைத்தல் மற்றும் சவால்களை ஏற்படுத்துதல் என்பதுடன் அமெரிக்க டாலரின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற தெளிவான பொதுவான நோக்கங்கள் இருந்தாலும், அனைவரின் புவிசார் அரசியல் நோக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
“உண்மையில், பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை மேற்கு நாடுகளுக்கு நேரடி சவாலாக பிரிக்ஸ் கருதப்படுவதை எதிர்க்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த குழு சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு பாதையாக இருப்பதாக கவலைகள் உள்ளன. புதிய உறுப்பினர்களை அதிகரிப்பது மேலும் சிக்கல்களை அதிகரிக்கும் என்பதுடன் குழுவிலிருந்து வெளிவரும் எந்த பெரிய சீர்திருத்தத் திட்டங்களின் வாய்ப்புகளையும் குறைக்கும்,” என்கிறார் லாங்ஹாம்.

பட மூலாதாரம், Getty Images
2023-ல் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியது.
“இது சம்பந்தமாக, உள்ளூர் நாணயங்களின் அதிக பயன்பாடு உட்பட உறுப்பினர்களிடையே வர்த்தகம் மற்றும் நிதி உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். வளர்ந்த சந்தைகளுக்கு சாதகமானதாகக் கருதப்படும் தற்போதைய சர்வதேச நடைமுறைகளை சவால்களை அதிகரிக்கச் செய்யும் சாத்தியம் ஆகியவையும் அடங்கும்.”
அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய நாணயமா?
இந்த நாடுகள் பெரும்பாலும் தங்களது வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைப் பயன்படுத்துகின்றன.
பிரேசில் மற்றும் ரஷ்யாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க மாற்று நாணயத்தை உருவாக்க பரிந்துரைத்துள்ளனர். எனினும், இந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்படவில்லை.
பிரிக்ஸ் நாடுகள் பொதுவான நாணயத்தை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஏனெனில் அவற்றின் பொருளாதாரங்கள் மிகவும் வேறுபட்டவை என்று பேராசிரியர் கார்மோடி கூறுகிறார்.
பிரிக்ஸ் தலைவர்களின் கூற்றுப்படி, டாலர் உலகளாவிய அளவுகோலாக அதன் பங்கை நிறைவேற்றவில்லை என்பதுடன் உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு ஓரளவு பொறுப்பேற்க வேண்டும். தற்போது, அமெரிக்காவுக்கும், சர்வதேச நாணயமாக திகழும் டாலருக்கும் சவால் விடும் உலகளாவிய சக்தியாக பிரிக்ஸ் எழுந்து நிற்கிறது.
“எனினும்டாலரின் மேலாதிக்கத்துக்கு பிரிக்ஸ் சவால் விடும் என்ற கவலை தற்போது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. உறுப்பு நாடுகளிடையே நிலவும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட புவிசார் அரசியல் நோக்கங்கள் மற்றும் அவர்களின் மாற்று விகிதங்கள் அல்லது பொருளாதார அரசியலில் எந்தவித கட்டுப்பாட்டையும் இந்த நாடுகள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை” என்று லாங்ஹாம் தெளிவுபடுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை முறியடிக்க பிரிக்ஸில் தனது உறுப்பினர் பதவி உதவுவதாக ரஷ்யா நம்புகிறது
பிரிக்ஸ் தலைவர் பதவியை ரஷ்யா எவ்வாறு பயன்படுத்தும்?
ரஷ்யா அக்டோபரில் கசானில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது . விளாடிமிர் புதின், ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பை கீழ்கண்டவற்றிற்காகப் பயன்படுத்தப் போவதாகத் கூறினார்:
- சர்வதேச நிதி அமைப்பில் பிரிக்ஸ் அமைப்பின் பங்கை அதிகரித்தல்.
- வங்கிகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்த்து, பிரிக்ஸ் நாணயங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல்.
- வரி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.
“ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்த போதிலும் பிரிக்ஸ் உடன், உலகின் பிற நாடுகளில் தனக்கு இன்னும் நண்பர்கள் மற்றும் நட்பு சக்திகள் இருப்பதை மேற்கத்திய நாடுகளுக்கு காட்ட ரஷ்யா விரும்புகிறது ” என்று லண்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் ஐரீன் மியா கூறுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்