ரஜினி சந்தித்த ராஜா பையா யார்? எதிரிகளை முதலைக்கு இரையாக்குவாரா?

ரஜினி சந்தித்த ராஜா பையா யார்? எதிரிகளை முதலைக்கு இரையாக்குவாரா?

ரஜினிகாந்த் - ராஜா பையா  சந்திப்பு

பட மூலாதாரம், Raja Bhaiya

படக்குறிப்பு,

ரஜினிகாந்த் உடன் ராஜா பையா

சமீபத்தில் உத்தரபிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தவிர ராஜா பையா என்பவரையும் சந்தித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. யார் இந்த ராஜா பையா ?

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை உத்தரப்பிரதேசத்தின் லக்னௌ நகருக்குச் சென்ற ரஜினிகாந்த், சனிக்கிழமையன்று ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் ஆனந்தி பென்னைச் சந்தித்தார். இதற்குப் பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அன்று மாலை மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவுடன் ஜெயிலர் படத்தையும் பார்த்தார் ரஜினி.

அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமையன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்தார் ரஜினி. அப்போது இருவரும் கட்டி அணைத்துக்கொண்ட காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அகிலேஷ், “இதயங்கள் சந்தித்த போது” என்று குறிப்பிட்டிருந்தார். முதல் நாள் யோகியைச் சந்தித்தபோது, அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்த காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்தப் படத்தை அகிலேஷ் வெளியிட்டதாகக் கருதப்பட்டது.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு அயோத்தியாவுக்குச் சென்ற ரஜினி அங்குள்ள ராம் லல்லாவுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டப்படுவதையும் சென்று பார்த்தார். ஹனுமான் கர்கி கோவிலுக்குச் சென்ற அவர், அங்கும் பிரார்த்தனை செய்தார்.

ரஜினிகாந்த் - ராஜா பய்யா சந்திப்பு

பட மூலாதாரம், Raja Bhaiya

படக்குறிப்பு,

ரஜினிகாந்த் உடன் ராஜா பையா

அரசரை போன்ற வாழ்க்கை

நீண்ட நாட்களாக அயோத்திக்கு வர வேண்டுமென நினைத்திருந்ததாகவும் அந்த எண்ணம் தற்போது பூர்த்தியடைந்திருப்பதாகவும் அயோத்தியாவில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு திங்கட்கிழமையன்று ஜனசட்டா தள தலைவரும் குந்தா தொகுதியின் எம்எல்ஏவுமான ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பையாவைச் சந்தித்தார் ரஜினி. யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்ததைவிட, இந்தச் சந்திப்புதான் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

காரணம், ராஜா பையாவின் வரலாறு அத்தகையது.

ராஜா பையா வெறும் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. பழங்கால சமஸ்தானத்தின் அரசருக்குரிய வாழ்க்கையை, இந்த 21ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ரகுராஜ் பிரதாப் சிங். குந்தாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் சூழ்ந்திருக்க மிகப் பெரிய அரண்மனை போன்ற வீட்டில், வசிக்கிறார் ராஜா பையா .

இந்த மாளிகையில் தினமும் தர்பாரைக் கூட்டுவார் ராஜா. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளைச் சொன்னால் உடனடியாக நீதி வழங்குவார். அரண்மனைக்கு வெளியில் கிராமத்தினர் கூப்பிய கைகளோடு காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதெல்லாம் தொடர்ச்சியாக நடந்துவந்தது.

ரஜினிகாந்த்- அகிலேஷ் யாதவ் சந்திப்பு

பட மூலாதாரம், Akhilesh Yadav

படக்குறிப்பு,

ரஜினிகாந்த்- அகிலேஷ் யாதவ் சந்திப்பு

தனி நாடு அமைக்க ஆசைப்பட்ட உதய் பிரதாப் சிங்

ஆனால், 90களின் இறுதியில் ரகுராஜ் பிரதாப் சிங்கும் அவரது தந்தை உதய் பிரதாப் சிங்கும் குந்தா காவல்நிலைய குற்றவாளிகள் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றிருந்தவர்கள் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால், அதைவிட நம்புவதற்குக் கடினமான தகவல், உதய் பிரதாப் சிங்கின் தந்தையும் ரகுராஜ் பிரதாப் சிங்கின் தாத்தாவுமான பஜ்ரங் பகதூர் சிங், பந்த் நகர் விவசாயப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவர். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் தன் சகோதரர் மகனான உதய் பிரதாப் சிங்கை எடுத்து வளர்த்தார். ஆனால், உதய் பிரதாப் சிங் ஒரு துணை வேந்தரின் மகனைப் போல வளரவில்லை.

20 பேரைக் கொண்ட ஒரு கிரிமினல் கும்பலை வழிநடத்திவந்தார் உதய் பிரதாப் சிங். பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதில் ஆர்வம் கொண்ட உதய் பிரதாப் சிங், தனி நாடு அமைப்பதுதான் தனது நோக்கம் என்று கூறிவந்தார்.

இந்த உதய் பிரதாப் சிங்கிற்கு 1969ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார் ரகுராஜ். உதய் பிரதாப் புகழ்பெற்ற டூன் பள்ளியில் படித்தார் என்றாலும், தனது மகனுக்கு கல்வி அளிப்பதில் ஆர்வம்காட்டவில்லை. இருந்தபோதும் 1989ல் லக்னௌ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார் ரகுராஜ் பிரதாப். தனது 24வது வயதில் 1993ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் குந்தா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் ரகுராஜ். வெற்றி கிடைத்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை தொகுதி அவர் வசமே இருந்து வருகிறது.

ரஜினிகாந்த்- ராஜா பய்யா சந்திப்பு

பட மூலாதாரம், Raja Bhaiya

படக்குறிப்பு,

ராஜா பையா

பொடா சட்டத்தில் கைது

1996ல் தேர்தல் நடந்தபோது கல்யாண் சிங்கே இவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இவருடைய தொகுதிக்கு வந்தார். இருந்தபோதும் பா.ஜ.க வேட்பாளரைத் தோற்கடித்தார் ரகுராஜ் பிரதாப் சிங். தேர்தல் பிரச்சாரத்தின்போது, குந்தாவில் உள்ள குண்டர்களை விரட்டுவோம் என பிரச்சாரம் செய்த கல்யாண் சிங், முதலமைச்சரானவுடன் ராகுராஜ் பிரதாப் சிங்கை தனது அமைச்சரவையிலேயே சேர்த்துக்கொண்டார்.

2002ஆம் ஆண்டில் மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது ஒரு கடத்தல் வழக்கில் பொடா சட்டத்தின் கீழ் அவரது தந்தையோடு சேர்ந்து கைதுசெய்யப்பட்ட இவரை, ஒரு பயங்கரவாதி என அரசு அறிவித்தது. பல முறை இவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், 2003ல் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசு வந்த சில நிமிடங்களிலேயே இவர் மீதான பொடா சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இருந்தபோதும் 2004ல் பொடா சட்டமே நீக்கப்பட்டது. இந்த வழக்கில் தனது வீட்டை சோதனை செய்த காவல்துறை அதிகாரி, ஆர்.எஸ்.பாண்டே என்பவரை ரகுராஜ் பிரதாப் சிங் மறக்கவேயில்லை. விரைவிலேயே அவர் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

2005ஆம் ஆண்டில் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ரஜினிகாந்த்- யோகி ஆதித்யநாத் சந்திப்பு

பட மூலாதாரம், Yogi Adityanath

படக்குறிப்பு,

யோகி ஆதித்யநாத் – ரஜினிகாந்த் சந்திப்பு

காவலர் மரணத்தில் சந்தேகம்

2013ஆம் ஆணடு மார்ச் மாதம் காவல்துறையினருக்கும் குந்தா தொகுதியிலிருந்த கிராமத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காவல்துறை துணை கண்காணிப்பாளரான ஜியா உல் – ஹக் கொல்லப்பட்டார். ஜியாவின் மனைவி ரகுராஜ் பிரதாப் சிங் மீது குற்றம்சாட்டினார். வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரகுராஜ் பிரதாப் சிங். ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், இவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை எனக் கூறப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.

2018 நவம்பர் 16ஆம் தேதி ரகுராஜ் பிரதாப் சிங் ஜனசட்டா தள லோக்தந்த்ரிக் என்ற கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரகுராஜ் பிரதாப் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். இதன் மூலம் குந்தா தொகுதியிலிருந்து ஏழாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டார் ராஜா பையா .

ரஜினிகாந்த் - ராஜா பய்யா சந்திப்பு

பட மூலாதாரம், Raja Bhaiya Youth Brigade

படக்குறிப்பு,

ரஜினிகாந்த் உடன் ராஜா பையா

வீட்டில் முதலை வளர்த்து வருவதாக கூறப்படும் கதை

இந்த ராஜா பையா பற்றி பல கதைகள் உண்டு. அதில் பிரபலமான கதை, அவர் எதிரிகளைக் கொன்று முதலைக்கு வீசிவிடுவார் என்ற கதைதான்.

அதாவது ராஜா பையா தனது அரண்மனைக்கு அருகிலுள்ள குளத்தில் சில முதலைகளை வளர்த்து வருவதாகவும் தனது எதிரிகளை அந்தக் குளத்தில் தூக்கி வீசிவிடுவார் என்றும் அந்தப் பகுதியில் கதைகள் உண்டு.

ஆனால், ராஜா பையா இதை இட்டுக் கட்டப்பட்ட கதை என்கிறார். “இந்த முதலைக் கதை எங்கிருந்து வந்தது என்று எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. அந்தக் குளத்தில்தான் என் குழந்தைகள் நீந்தக் கற்றுக்கொண்டார்கள், நான் அங்கு மீன் வளர்க்கிறேன், முதலை இருந்திருந்தால், அது மீன்களைச் சாப்பிட்டிருக்காதா?” என்கிறார் அவர்.

“ராஜா பையா எளிதில் ஆட்களைக் கவரக்கூடியவர். அவரது கவர்ச்சி, அவரது மோசமான பக்கத்தை மறைத்துவிடும். பாலிவுட்டில் அவருக்கு சஞ்சய் தத் உட்பட பல நண்பர்கள் உண்டு. அதுபோலத்தான் ரஜினிகாந்தும் நண்பராக இருக்க வேண்டும்” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆனந்த்.

தன் மீதான கிரிமினல் வழக்குகளை பொய் வழக்குகள் என்று மறுத்துவருகிறார் ராஜா பையா . இதுபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய மனிதரை, ரஜினிகாந்த் சந்தித்ததுதான் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *