
பட மூலாதாரம், ANI
நாடாளுமன்ற மக்களவையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் கருத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரை சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
‘சந்திரயான் -3’ வெற்றி குறித்து மக்களவையில் வியாழக்கிழமையன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்பியான குன்வர் டேனிஷ் அலியை தாக்கும் விதத்தில், பாஜக எம்பி பிதுரி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது. தெற்கு டெல்லியை சேரந்த பிதுரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக எம்பி பிதுரிக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், ANI
டெல்லியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன்.
பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, பிதுரியின் கருத்துகள் வெளியானவுடன், சபையில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி டேனிஷ் அலி கூறுகையில், “எனக்கு நீதி கிடைக்கும் என்றும், சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறேன். இது நடக்கவில்லை என்றால், முழுமனதுடன் இந்த அவையை விட்டு வெளியேறுவது குறித்துப் பரிசீலிப்பேன்,” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலிக்கு எதிராக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, விளக்கம் கேட்டு, பாஜக எம்பி பிதுரி்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமைகளின் செய்திகள் கூறுகின்றன.
கட்சித் தலைவர் ஜேபி நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் பிதுரியின் பேச்சை ரசித்தாரா ஹர்ஷ் வர்தன்?
ரமேஷ் பிதுரி மக்களவையில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது, அவருக்குப் பின்னால் அமரந்திருந்த மற்றொரு பாஜக எம்பியான டாக்டர் ஹர்ஷ்வர்தன் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஹர்ஷ்வர்தனின் இந்தச் செயலுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ள சிலர், அவர் மீது கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, தமது சமூக ஊடக பக்கத்தில் ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
“இரு தரப்பிலிருந்தும் வந்த மன்னிக்க முடியாத வார்த்தைப் பிரயோகத்தை எங்கள் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்கெனவே கண்டித்துள்ளார்,” என்று ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் எழுதும் எனது இஸ்லாமிய நண்பர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், எந்த சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் மொழியைப் பயன்படுத்துபவர்களுடன் நான் இருப்பேன் என்று அவர்கள் நினைக்கிறார்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் லட்சக்கணக்கான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
எனது சிறுவயதில்கூட சாந்தினி சௌக்கின் பாதக் தெலியா பகுதியில் முஸ்லிம் நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன். அந்த காலம் எல்லாம் போய்விட்டது,” என்றும் ஹர்ஷ் வர்தன் உருக்கமுடன் கூறியுள்ளார்.
“சாந்தினி சௌக் தொகுதியில் எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்றேன், அனைத்து சமூகத்தினரும் எனக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் என் பெயரை சிலர் இழுக்கிறார்கள் என்பது எனக்கு வருத்தமாக உள்ளது,” என்றும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எதிர்வினை

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநெட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ்
பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், “டேனிஷ் அலியிடம் அவர் (ரமேஷ் பிதுரி) கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்டது போதாது. இதுபோன்ற வார்த்தைகளை சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“புதிய நாடாளுமன்ற கட்டடம் பெண் சக்தியுடன் தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோதி கூறுகிறார். ஆனால், அது ரமேஷ் பிதுரியால் தொடங்கப்பட்டுள்ளது. இது ரமேஷ் பிதுரியின் சிந்தனை அல்ல. பாஜகவின் சிந்தனை. பிதுரியின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநெட் கூறும்போது, “பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்.பி.யான டேனிஷ அலியை சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிட்டு அழைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
பாஜக எம்.பி பிதுரி மக்களவையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய வீடியோவை திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வீடியோவில், பிதுரி பல ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
சபையின் கண்ணியத்தைப் பாதுகாப்பவர்களான சபாநாயகர் ஓம் பிர்லா, விஷ்வகுரு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பிதுரி மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்,” என்று மஹுவா மொய்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர், “முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை துஷ்பிரயோகம் செய்வது பாஜகவின் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பெரும்பாலான மக்கள் தற்போது அதில் எந்தத் தவறையும் காண்பதில்லை.
நரேந்திர மோதி இந்திய முஸ்லிம்களை அவர்களின் சொந்த நிலத்தில் அச்சத்துடன் வாழ நிர்பந்தித்தார். அவர்கள் எல்லாவற்றையும் புன்னகையுடன் தாங்குகிறார்கள். ஆனால் மா காளி எனக்கு சக்தியைக் கொடுத்துள்ளதால் நான் இதைத் தொடர்ந்து கண்டிப்பேன்,” என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
‘அவர்கள் வெட்கப்பட வேண்டும்’ – உமர் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எவ்வளவு எளிதில் இந்த வெறுப்பு நிறைந்த எம்.பி.க்கள் இத்தகைய ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்?
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு இந்த அளவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. பாஜகவில் உள்ள முஸ்லிம்கள் இதுபோன்ற வெறுப்பாளர்களுடன் எப்படிச் செயல்பட முடியும்?” என்று உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
“பயங்கரவாதி’ என்று மட்டும் அவர் கூறியிருந்தால் அது நமக்குப் பழகிவிட்டது. இதுபோன்ற வார்த்தைகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன.
பாஜகவுடன் தொடர்புடைய முஸ்லிம்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது? இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்,” என்றும் ஸ்ரீநகரில் உமர் அப்துல்லா கூறினார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அமானதுல்லா கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரமேஷ் பிதுரியை உடனடியாக பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்