சாதி வாரியாக மக்கள் தொகையை தெரிந்து கொள்வதால் இந்திய அரசியல் எப்படி மாறப் போகிறது?

சாதி வாரியாக மக்கள் தொகையை தெரிந்து கொள்வதால் இந்திய அரசியல் எப்படி மாறப் போகிறது?

சாதி வாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. தமிழ்நாட்டுக்கு இது போன்ற கணக்கெடுப்பு அவசியமா? இது தேசிய அரசியலை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களை மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று அம்மாநில அரசு வெளியிட்டது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01 சதவீதமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும் பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும் இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும் பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதத்துடன் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றனர். பிஹாரில் மொத்தம் 113 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது பிகார் சட்டப்பேரவையில் 7 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பிகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் ஆரம்ப நாட்களில் உயர் சாதியினரே பிகாரின் அதிகார மையத்தில் ஆதிக்கம் செலுத்தினர். இதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலு-நிதீஷ் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

தற்போது சாதி வாரியான மக்கள் தொகையினரின் எண்ணிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், அம்மாநில அரசியலில் தங்களுக்கு உரிய பங்கைக் கோரலாம். கல்வி, வேலை வாய்ப்புகளிலும் இதே கோரிக்கை எதிரொலிக்கலாம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் 1865 ஆம் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

1865ல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872ல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது என்றாலும் வங்க மாகாணத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை. இதற்குப் பிறகு, 1881ல் முதல் முறையாக, அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1881 முதல் 1941வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 1941ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, இரண்டாம் உலகப் போர் காரணமாக முழுமையாக நடக்கவில்லை. ஆகவே, 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியதிலிருந்தே, இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. ஆகவே, இது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் ஒரு முறை மாறிவந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941ல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிகசான் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியலினத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜாதி ரீதியான கணக்கெடுப்பின் மூலமே ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில்தான் பிகார் மாநில அரசு, சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுத்து அதனை வெளியிட முடிவுசெய்தது. இப்போது அந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதுமே சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுத்து அவை வெளியிடப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்திருக்கிறது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் தனது அறிக்கையை 1980லேயே மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்த நிலையிலும், அவை அமலுக்கு வரவில்லை. இந்தியப் பிரதமராக வி.பி. சிங் இருந்தபோது, 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்பதாக அறிவித்தார். இதற்குப் பிறகு அவரது அரசு கவிழ்ந்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. ஒருவர் பிற்படுத்தப்பட்டவரா என்பதை அறிய, ஜாதியை ஒரு அளவீடாக ஏற்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் 1992ல் தீர்ப்பளித்தது. ஆனால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்றும் கூறியது. 2006ஆம் ஆண்டில் மத்திய கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் அமலுக்கு வரும்போது எதிர் தரப்பினர் ஒரு வாதத்தை முன்வைத்து வந்தனர். அதாவது, மண்டல் அறிக்கை, 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் எனக் கூறுகிறது. இதனை ஏற்கக்கூடாது என்கிறார்கள் அவர்கள்.

“1990ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டது. 2006ல் கல்வி நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அறிக்கை அமலாக்கப்பட்டவுடன், எல்லா இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. குறிப்பாக, நீதித் துறையில் உயர்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டோரின் சதவீதம் குறைந்துள்ளது. அதிகார அமைப்பில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே நீடிக்கிறது.

ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்கிறது நீதிமன்றம். ஆனால், வழங்கப்பட்ட இடங்களே நிரப்பப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், சாதிவாரியான கணக்கெடுப்பும் சமூக – பொருளாதாரக் கணக்கெடுப்பும் மிக முக்கியம். இந்த தரவுகள்தான் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும். அந்தச் செய்தி, புத்தரின் மண்ணான பிகாரிலிருந்து வந்திருப்பது மிக முக்கியமான குறியீடு” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் இருந்தாலும், அது முறைப்படி அமல்படுத்தப்படவில்லை என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். “க்ரூப் 3, க்ரூப் 4 பணியிடங்களில் மட்டும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு ஓரளவுக்கு பின்பற்றப்பட்டிருக்கிறது. க்ரூப் 1, க்ரூப் 2 மற்றும் அதற்கு மேல் உள்ள இடங்களில் இடஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்படவில்லை. இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தால், அதிகார வர்க்கத்தில் பெரும் மாற்றம் வந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆகவே, இப்போது நமக்குத் தேவை தரவுகள். அந்தத் தரவுகளைச் சேகரிக்க ஜாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம்” என்கிறார் அவர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்க முடியும் என மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வம் கூறுகிறார்.

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் நீதிமன்றங்கள் பல முறை குறுக்கிட்டிருக்கின்றன. “இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்கிறது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில், அப்படி எந்தத் தரவும் இல்லை. இருந்தபோதும், அதற்கு மட்டும் அனுமதி கிடைத்தது. தற்போதைய அமைப்பில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சில பிரிவினரே எல்லாவற்றையும் கைப்பற்றுகிறார்கள். பரந்துபட்ட மக்கள் எல்லா அதிகாரங்களையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு தேவை” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

1951ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது, சாதி வாரியாகக் கணக்கெடுப்புத் தேவையில்லை என டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறியது உண்மை என்றாலும், அந்தக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதால், அவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லாமல் இருந்தது; ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களையும் கணக்கெடுப்பதே சரி என்கிறார் ரவிக்குமார்.

“பட்டியலினத்தினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டபோது பத்து ஆண்டுகளுக்கு மட்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித காலவரம்பும் அளிக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டுகிறார் து. ரவிக்குமார்.

சாதி ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. “இட ஒதுக்கீடு அளிக்க சரியான தரவுகள் தேவை. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக – பொருளாதார பின்னணி தெரியவேண்டும். அடுத்ததாக, பல்வேறு ஜாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும்” என்கிறார் கோ. கருணாநிதி.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தபோது, அந்த இட ஒதுக்கீடு எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது என பல முறை நீதிமன்றங்கள் கேள்வியெழுப்பியதையும் 1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஏற்க மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பரந்துபட்ட மக்கள் எல்லா அதிகாரங்களையும் பெற ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பிகார் மாநில ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது அம்மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘INDIA’ நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமெனக் கோரியிருக்கிறது.

மேலும், 2011ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் ராகுல் காந்தி பேச ஆரம்பித்திருக்கிறார்.

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டைக் கோருவதன் மூலம், பட்டியலினத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும் வாக்குகளை தனக்கு ஆதரவாகக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இது பா.ஜ.கவின் இந்து வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், எதிர்க் கட்சிகள் இதிலிருந்து பெரிய அரசியல் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாது என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். “மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தி வி.பி. சிங் அடுத்த தேர்தலில் வெற்றிபெறவில்லை. பெரிய மாற்றங்களைக் கொண்டுவருபவர்கள் வெற்றி பெறுவார்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மிக முக்கியமான, அடிப்படையான ஜனநாயகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது இந்திய அரசியலில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இருந்தாலும், எங்கெல்லாம் சமூகநீதி என்பது அரசியலாக மாறியுள்ளதோ, அங்கெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் அவர். “குறிப்பாக, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தாக்கம் ஏற்படலாம். எல்லா மாநிலங்களிலும் இல்லாமல், இதுபோன்ற, முக்கியமான மாநிலங்களில் மாற்றம் எதிரொலித்தாலே போதும், அது எதிர்க் கட்சிகளுக்கு உதவலாம்” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. பிரதமர் நரேந்திரமோதியே, அது குறித்துப் பேசிவருகிறார். ஆகவே, 2024ஆம் ஆண்டுத் தேர்தலில், இது ஒரு முக்கியமான விஷயமாக மாறக்கூடும். “வி.பி. சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முடிவுசெய்தபோது, அது இந்திய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல இப்போதும் அமையும். முதன்முதலில் 1921ல் ஒடுக்கப்பட்டோரை கணக்கெடுப்பு செய்தபோது, அதனைச் செய்யக்கூடாது என சனாதனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனென்றால், எண்ணிக்கை தெரிந்தால், அவர்களுக்கு அதே அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம் என்று கருதினார்கள். அதனால், இம்மாதிரி கணக்கெடுப்பு மக்களை பிளவுபடுத்தும் என்றார்கள். இப்போதும் அதையே சொல்கிறார்கள். 1921ல் அவர்கள் பேசியதையே பிரதமர் இப்போது பேசுகிறார். பெரும்பான்மை மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெற்றுவிடக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம். இனிமேல் இதைத் தடுக்க முடியாது” என்கிறார் து. ரவிக்குமார்.

இருந்தபோதும், அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து இதனை அணுக வேண்டியதில்லை என்கிறார் அவர். “பிஹாரில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஜாதி எண்ணிக்கை அடிப்படையில் சிறியது. யாதவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். அப்படிக் கணக்குப் போட்டிருந்தால், நிதீஷ் குமார் இதனைச் செய்திருக்கமாட்டார். ஆகவே, பெரும்பான்மை மக்கள் பலன் பெற்றார்களா, பயனடைந்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி” என்கிறார் ரவிக்குமார்.

ஆனால், தற்போது பிஹார் இந்த எண்ணிக்கையை வெளியிட்டிருப்பது மத்திய அரசுக்கு பெரும் அழுத்தமாக மாறும் என்கிரார் கோ. கருணாநிதி. “குறிப்பாக, காங்கிரஸ் இப்போது இதனை முன்னெடுப்பது பா.ஜ.கவுக்கு பெரும் சவாலாக மாறும். மேலும், பிஹாரில் தற்போது இட ஒதுக்கீடு 34 சதவீதம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டைப் போல அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற கோரிக்கைகள் எழலாம்” என்கிறார் அவர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசு ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தும்போது ஒரு விஷயத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் ரவிக்குமார். “ஒடுக்கப்பட்டோரை ஆதிதிராவிடர் என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1919-20ல் இருந்தே இருந்துவந்தது. இது தொடர்பாக எம்.சி. ராஜா கொண்டுவந்த தீர்மானம் ஏற்கப்பட்டு, 1922ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் ஆதிதிராவிடர் என அறிவித்துக்கொண்டது பறையர் மட்டும்தான்.

1921ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 23.87 லட்சம் பேர் பறையர்கள் எனத் தங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அரசாணை வந்த பிறகு நடந்த 1931ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பறையர் எண்ணிக்கை 11.17 லட்சமாகக் குறைந்தது. காரணம், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பறையர்கள் தங்களை ஆதிதிராவிடர் என வகைப்படுத்திக் கொண்டனர். அடுத்து நடக்கும் கணக்கெடுப்பில், பறையர்களை ஆதிதிராவிடர் என்று மட்டுமே கணக்கிட வேண்டும்” என்கிறார் து. ரவிக்குமார்.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021ல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *