
பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பின்போது, ஆயுத ஒப்பந்தம் முடிவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பல தடைகளை எதிர்கொண்டு வரும் வட கொரியாவுக்கு உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ரஷ்யாவின் உதவி தேவைப்படும்.
அணு ஆயுதத்தில் தன்னை திறன் மிகுந்ததாக உயர்த்திக் கொள்ள, ரஷ்யாவின் தொழில்நுட்பம் வட கொரியாவுக்கு உதவியாக இருக்கும். யுக்ரேனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு வெடி மருந்துகள், குண்டுகள் அதிகம் தேவைப்படுகிறது.
கடந்த 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு போரில் ஈடுபடாத வட கொரியாவிடம் ரஷ்யாவுக்கு தேவைப்படும் வெடிமருந்துகள் அதிகம் இருப்பதாகவும் அதை வட கொரியா ரஷ்யாவுக்கு கொடுக்க முன்வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா, வட கொரியா இரு நாடுகளும் எதிர்க்கும் பொது சக்தியாக அமெரிக்கா உள்ளது. தென் கொரியாவில் அமெரிக்கா கால் பதித்துள்ள நிலையில், வட கொரியா ரஷ்யாவுடன் நெருங்குவதன் மூலம் இரு நாடுகளுக்குமே பலன் இருக்கும்.
ஆயுத ஒப்பந்தம் முடிவாகவுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
“உங்களது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியில் எங்களை அழைத்ததற்கு நன்றி” என்று கிம் ஜாங் உன், புதினிடம் கூறினார்.
இந்த சந்திப்பின்போது ஆயுத ஒப்பந்தங்கள் முடிவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று, இந்த சந்திப்பை உற்று நோக்கும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
ரஷ்யா, வட கொரியா இரு நாடுகளும் இதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், “அனைத்து விவகாரங்களும்” இந்த சந்திப்பின்போது பேசப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆயுதங்கள் ஏந்திய பச்சை நிற ரயிலில் இந்த சந்திப்புக்காக ரஷ்யா சென்றடைந்துள்ளார். அந்த ரயில் குண்டுகள் துளைக்காத கனமான உலோகத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ரயிலில், ஆயுதங்களும் தேவைப்பட்டால் தப்பித்துச் செல்வதற்கான ஹெலிகாப்டரும் இருக்கின்றன.
இந்த சந்திப்பு, ரஷ்யாவின் மையப் பகுதிகள் எவற்றிலும் நடைபெறாமல், கிழக்கு எல்லையில் உள்ள, வஸ்டாச்னி விண்வெளி மையத்தில் நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாதுகாக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய ரயிலில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் உள்ள விண்வெளி ஏவுதளத்தைச் சென்றடைந்தார்.
ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்தில் நடைபெறும் சந்திப்பு
கிம் ஜாங் உன் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்தபோது, அவருக்கு ரஷ்யர்களால் கசான் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிம் ஜாங் உன் ரயிலிலிருந்து சிவப்பு கம்பளத்தில் இறங்கி வந்து அந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.
ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பல மணிநேர பயணத்துக்குப் பிறகு, கிம் ஜாங் உன், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வஸ்டாச்னி விண்வெளி ஏவுதளத்தை அடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை அவர் நேரில் சந்தித்தபோது, “உங்களது பரபரப்பான வேலைகளுக்கு இடையில் எங்களை அழைத்தமைக்கு நன்றி” என்று கிம் ஜாங் புதினிடம் கூறினார்.
“நான் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று புதின் கிம் ஜாங் உன்னிடம் கூறினார். மேலும், 2016ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வஸ்டாச்னி ஏவுதளத்தைக் காண்பித்து, “இது எங்களின் புதிய விண்வெளி ஏவுதளம்” என்று கிம் ஜாங்கிடம் புதின் தெரிவித்தார்.
மனிதநேய உதவிக்காக இருநாடுகளுக்கு இடையில் ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம் முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வட கொரியா செயற்கைக்கோள்கள் தயாரிக்க, ரஷ்யா உதவுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்காகத்தான் வஸ்டாச்னி வந்திருக்கிறோம்” என புதின் பதிலளித்தார். கிம் ஜாங், “ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்” என்றும் புதின் தெரிவித்தார்.
“அனைத்து விவகாரங்களையும் பேசுவோம்” – புதின்

பட மூலாதாரம், Reuters
ரஷ்யாவுக்கு தேவையான வெடி மருந்துகளை, குண்டுகளை வட கொரியா ரஷ்யாவுக்கு வழங்க முன் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் ஆயுத பரிமாற்றம் குறித்தும், ராணுவ-தொழிலநுட்ப ஒத்துழைப்பு குறித்தும் பேசுவார்களா என புதினிடம் கேட்டதற்கு, “நாங்கள் எல்லாவற்றையும் பேசுவோம்” என்று பதிலளித்தார்.
மேலும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும், மனிதநேய அடிப்படையிலான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என புதின் தெரிவித்தார்.
வட கொரியா செயற்கைக் கோள்களை ஏவ முயன்றும் தோல்வியே கண்டுள்ளது. இதுவரை இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியாமல் தோல்வி அடைந்துள்ளன. இந்த ஆண்டு மே மாதம் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து மூழ்கியது.
அடுத்த செயற்கைக்கோள், ஏவப்படுவதற்கான மூன்றாவது கட்டத்தில் கடந்த மாதம் தோல்வியடைந்தது. மீண்டும் அக்டோபர் மாதம் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என வட கொரியா தெரிவித்திருந்தது.
இந்த சந்திப்பின் மூலம் உளவு செயற்கைக்கோள் வட கொரியாவுக்கு கிடைத்தால், அது வட கொரியாவுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் தாக்குதல்களை கண்காணிக்கவும் வட கொரியாவின் தாக்குதல்களைத் திட்டமிடவும் உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உலகில் தீவிரமாக ராணுவமயமாக்கப்பட்ட நாடு வட கொரியா. எனவே, யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தேவையான வெடி மருந்துகளை அதிக அளவில் வட கொரியாவால் வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
தோட்டாக்கள், குண்டுகள், பழைய ஏவுகணைகளைக்கூட வட கொரியா வழங்கக்கூடும். 1953இல் நடந்த கொரிய போருக்குப் பிறகு, வட கொரியா எந்த போரிலும் பங்கேற்காததால், வட கொரியாவிடம் அதிகமான ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
யுக்ரேன் போரில் ரஷ்யாவை ஆதரிக்கும் வட கொரியா

பட மூலாதாரம், KREMLIN
இந்த சந்திப்பின்போது ஆயுத பரிமாற்றம் குறித்துப் பேசப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு “எல்லாவற்றையும் பேசுவோம்” என ரஷ்ய அதிபர் புதின் பதிலளித்தார்.
“ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம்” என கிம் ஜாங் இந்த சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் ரஷ்யாவின்யுக்ரேனுக்கு எதிரான போரை கிம் ஜாங் ஆதரித்துப் பேசியுள்ளார்.
“ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்போரை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. புதினின் அனைத்து முடிவுகளையும் வட கொரியா ஆதரிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வட கொரியா மீதான தடைகள் இருந்தாலும் அது ரஷ்யா-வட கொரியா இடையிலான உறவை எந்த வகையிலும் தடுக்காது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் உடன் இருக்கிறார். அவர் கொரிய தொழிலாளர் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு செயல்பாட்டுக்கு எதிராக பல எச்சரிக்கைகளை அவர் விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே, ஆயுத ஒப்பந்தம் முடிவாகும் எனப் பேசப்படும் நிலையில், இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது இருந்தனர்.
இதற்கு முன்பு இரு தலைவர்களும் 2019ஆம் ஆண்டு, ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள வ்லாதிவோஸ்தொக் நகரில் சந்தித்தனர்.
மேலும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்த வாரம் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்