சென்னை வெள்ளம்: வெள்ளத்துக்கு பின் என்னென்ன நோய்கள் ஏற்படலாம்? அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?

சென்னை வெள்ளம்: வெள்ளத்துக்கு பின் என்னென்ன நோய்கள் ஏற்படலாம்? அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?

மழைக்கால நோய்கள்

பட மூலாதாரம், Getty Images

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், அதைத் தொடர்ந்து இரண்டு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற நீரை அருந்துவதன் காரணமாக காலரா, டைஃபாய்டு, எலிக் காய்ச்சல், ஹெபடிடிஸ் ஏ உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம். நீர் தேங்குவதன் காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

இதனால் கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதை தேசிய நோய் தடுப்பு மையத்தின் வெள்ளக் கால தொற்று நோய் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

எலி காய்ச்சல்

எலி காய்ச்சல் என்பது எலியின் சிறுநீர் கலந்த நீர் மனிதர்களின் சருமம் அல்லது அதற்கு கீழ் உள்ள சவ்வுகளில் தொடர்புகொள்வதால் ஏற்படுகிறது.

இந்தக் காய்ச்சலுக்கு தலைவலி, தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.

கால்களில் ஏதேனும் வெட்டு காயம் இருந்தால், எலி காய்ச்சல் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே வெளியே செல்லும் முன்பு காயத்திற்கு ஆண்டி செப்டிக் மருந்துகளை தடவிக் கொண்டு செல்ல வேண்டும்.

துப்புரவுப் பணியாளார்கள், மீட்பு பணியில் இருப்பவர்கள், விவசாயிகள் என நீரில் பணியாற்றும் கட்டாயம் உள்ளவர்கள் டாக்சிசிலின் என்ற மருந்தை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

மழைக்கால நோய்கள்

பட மூலாதாரம், Getty Images

காலரா

சுகாதாரமற்ற நீரினால் ஏற்படும் மற்றொரு நோய் காலரா.

இயற்கை பேரிடர்கள் அல்லது போர்க்காலங்களில் அதிக மக்கள் ஒரே இடத்தில் தங்க வேண்டிய சூழல்களிலும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காத நிலைமைகளிலும் காலரா நோய் ஏற்படுகிறது.

அரிசி கஞ்சி போன்ற வயிற்றுப் போக்கு ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். காலரா பாதித்தவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருக்கும். உடலில் நீர் சத்து வெகுவாக குறைந்து விடும். ORS எனப்படும் வாய்வழியாக நீர் சத்து எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும். நோய் பாதிப்பினை தாமதமாக கண்டறிந்தால் அது உயிருக்கே ஆபத்தாகக் கூடும்.

தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்கள் படி, நன்றாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ளுதல், காய்ச்சிய நீரை மட்டும் குடித்தல் ஆகிய இரண்டு தான் இந்த நோயை தடுப்பதற்கான முக்கிய வழிமுறைகள்.

சுகாதாரமற்ற தண்ணீரால் பரவும் நோய்களை தவிர்க்க, “நீரை சுத்தமான பாத்திரத்தில் காய்ச்சிய பின் குடிப்பது அவசியம். நீரை குளோரின் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். தேங்கியிருக்கும் நீரில் இருக்க வேண்டியவர்கள் எலி காய்ச்சலை தவிர்க்க கால்களிலும் கைகளிலும் உறைகள் அணிந்து கொள்ளலாம்,” என்று தேசிய நோய் தடுப்பு மையம் கூறுகிறது.

மழைக்கால நோய்கள்

பட மூலாதாரம், Getty Images

டைஃபாய்டு

இதே போன்று குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஏற்படக் கூடிய மற்றொரு நோய் டைஃபாய்டு ஆகும். அதீத காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறி. தலைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இதன் மற்ற அறிகுறிகளாகும். பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய் கல்லீரலை பாதிக்கும். இதை குணப்படுத்த ஆண்டி பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

“மலத்தின் மூலம் பரவும் நோய் என்பதால் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சுகாதாரமான முறையில் கவனித்துக் கொள்வது அவசியமாகும்,” என தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

டைஃபாய்டு மற்றும் காலராவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் இருந்தாலும் அவை முழுமையான பாதுகாப்பு தருவதில்லை எனவும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை கூறுகிறது.

மழைக்கால நோய்கள்

பட மூலாதாரம், Getty Images

மலேரியாவை விட டெங்குவே அதிகம்

மழைநீர் மற்றும் வெள்ள நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். எனவே ஏடிஸ் கொசுக்களினால் ஏற்படும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா, அதோடு அனஃபலிஸ் கொசுவினால் பரவும் மலேரியா ஆகியவை ஏற்படக்கூடும்.

தொற்று நோய் மருத்துவ நிபுணர் சுரேஷ் குமார், “இப்போதெல்லாம் மலேரியா நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லை. அனஃபலிஸ் கொசுக்களின் உற்பத்தியை விட ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியிருக்கலாம். இதன் காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா அதிகம் பாதிக்கின்றன. சென்னையில் வெள்ளத்துக்கு முன்பாகவே சிக்குன்குனியா பாதிப்பு தொடங்கிவிட்டது. வரும் வாரங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சுகிறோம்,” என்றார்.

அதீத காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, கண்களுக்கு பின்னால் வலி, தடிப்புகள் ஆகியவை டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறிகளாகும். பல வைரஸ் நோய்களை எதிர்கொள்ள எப்படி நேரடி மருந்து கிடையாதோ அதே போல டெங்கு நோய்க்கு அதை ஏற்படுத்தும் வைரஸை நேரடியாக தாக்கும் மருந்து கிடையாது. எனவே சீரான நீர்சத்து வழங்குவதே இந்த நோய்க்கான பிரதான சிகிச்சையாகும். தொடர் வாந்தி, வாய் அல்லது மூக்கிலிருந்து ரத்தம், மூச்சு திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாகிடும் வாய்ப்புள்ளது.

மழைக்கால நோய்கள்
படக்குறிப்பு,

தொற்று நோய் மருத்துவ நிபுணர் சுரேஷ் குமார்

குழந்தைகளை கொசுக்களிலிருந்து பாதுகாப்பது அவசியம்

டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். எனவே பச்சிளங் குழந்தைகளை கொசு வலைகளில் வைத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகம், கழுத்து தவிர, ஆடைகளால் மூடப்படாத பகுதிகளில் கொசு எதிர்ப்பு கிரீம் தடவலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இது குறித்து பொது மருத்துவர் அஷ்வின் பிபிசி தமிழிடம் பேசிய போது “கொசுவினால் பரவும் நோய்களை தவிர்க்க, கைகள் மற்றும் கால்களை முற்றிலும் மூடும் படியான ஆடைகள், குறிப்பாக குழந்தைகளுக்கு அணிய வேண்டும். மழைநீர், கழிவுநீர் தேக்கத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும். ஆர்.ஓ., மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீராக இருந்தாலும் அதன் மூலமும், கேன் தண்ணீர் வழியாகவும் நோய் பரவலாம். எனவே காய்ச்சிய நீரை மட்டுமே குடிக்க வேண்டும். முழுமையாக சமைத்த வீட்டு உணவை சாப்பிடுவதே பாதுகாப்பானது. கடைகளில் பழச்சாறு, மோர், குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

வைரஸ் கொண்ட கொசு கடித்து மூன்று முதல் ஏழு நாட்களில் சிக்குன்குனியாவின் அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல் மற்றும் மூட்டு வலி இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். கொசுவினால் பரவும் மற்றொரு நோயான மலேரியாவின் முக்கிய அறிகுறிகள் குளிர் நடுக்கம், விட்டு விட்டு காய்ச்சல் ஏற்படுவது, இருமல், தசைவலி ஆகியவை ஆகும்.

மழைக்கால நோய்கள்
படக்குறிப்பு,

பொது மருத்துவர் அஷ்வின்

2015-இல் பெருவெள்ளத்தின் போது பரவிய புதிய நோய்

2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்துக்கு பின், இந்த நோய்கள் தவிர புர்கோல்டெரியா எனும் பாக்டீரியாவால் ஏற்படும் Meliodosis என்ற நோயும் சென்னையில் பரவி வந்ததாக மருத்துவர் சுரேஷ்குமார் கூறுகிறார்.

“மண், தண்ணீர், விவசாய நிலம் என சுற்றுச்சூழலில் இருக்கும் அந்த பாக்டீரியா சுவாசத்தின் மூலம், அல்லது உடல்களில் உள்ள வெட்டு காயங்கள் மூலம் உடலின் உள்ளே செல்கிறது. அதன் பின் காசநோய் போன்ற பாதிப்பை உடலில் ஏற்படுத்தும். மூளை மற்றும் நுரையீரலை பாதிக்கும் இந்த நோய், கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் கொண்டவர்கள், மதுவினால் உடல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே அதிகம் பாதித்தது. இந்த நோயிலிருந்து முழுமையாக மீள நான்கு மாதங்கள் ஆகும்” என குறிப்பிட்டார்.

இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ரோடா வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகளும் ஏற்படக் கூடும் என மருத்துவர் அஷ்வின் கூறுகிறார். “சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளுதல், தரையில் இருக்கும் பொருளை வாயில் வைப்பது, பீரோ கண்ணாடிகளில் வாய் வைத்தல் போன்றவற்றால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரோடா வைரஸால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவை ஒரு சில நாட்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு சரியாகிவிடும்,” என்றார்.

பெரிய நோய் பரவல் இல்லை: சுகாதாரத்துறை

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நோய்கள் பரவாமல் தடுக்க, வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 300 மருத்துவக் குழுக்கள் களத்தில் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“ஒவ்வொரு மருத்துவக் குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் உள்ளனர். இது வரை நடத்தப்பட்ட முகாம்களில் மூன்று லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவை மாவட்ட சுகாதார துணை இயக்குநர்கள் தலைமையில் காண்காணிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளன. ஆனால் பெரிய நோய் பரவல் எங்கும் இல்லை. எந்த வகையான வைரஸ் பரவுகிறது, நீரின் தரம் எப்படி உள்ளது என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *