
பட மூலாதாரம், RSS
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கப் போகும் நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்தக் கோவிலுக்கான ராமர் சிலையைச் செதுக்க நேபாளம் சீதனமாகக் கொடுத்த கற்கள் பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது.
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, பிப்ரவரியில் நேபாளத்தின் கலிகண்டகி கடற்கரைப் பகுதியிலிருந்து இரண்டு கற்கள் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த இரண்டு கற்களின் எடை, 14 மற்றும் 27 டன்கள். காளி நதிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஜனக்பூர் ஜானகி கோவில் வழியாக அயோத்திக்கு அனுப்பப்பட்டது.
முதலில் இந்தக் கற்களைக் கொண்டு ராமர் சிலை செய்ய வேண்டும் என்ற பேச்சு வந்தது. ஆனால், ராமர் சிலை செய்வதற்கு ஏற்ற வகையில் இந்தப் பாறைகள் எடுக்கப்படவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்திய ஊடகங்களில் வெளியான சில செய்திகளின்படி, இந்தக் கற்களில் சிலை செய்யாததற்கு ராமர் கோவில் துறவிகள் தெரிவித்த எதிர்ப்பும் ஒரு காரணம்.
காளிநதியின் பாறைகள், சாளக்கிராமக் கற்களுக்கு சமமானவை என்பதால் அவை உடைக்கப்படக் கூடாது. எனவே சிலைகளை உருவாக்க இந்தக் கற்களைப் பயன்படுத்த முடியாது என்று சில துறவிகள் நம்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அயோத்திக்கு வந்த நேபாளப் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, இந்தக் கற்களின் தொழில்நுட்பப் பரிசோதனைக்குப் பிறகு, ‘இப்படிப்பட்ட கல்லில் சிலை வடிப்பது சாத்தியமில்லை’ என்று சிற்பிகள் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, மற்ற கற்களில் இருந்து சிற்பங்கள் செய்யப்பட்டன.
நேபாளப் பிரதிநிதிகளின் கூறியது, “27 டன் எடையுள்ள பாறையில் சிலையைச் செதுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் 14 டன் எடையுள்ள மற்றொரு கல் சாளக்கிராமக் கல்லாகக் கருதப்பட்டது.”
“ஆனால் 27 டன் எடையுள்ள கல்லும்கூட பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்டதால், இரண்டு கற்களும் ராமர் கோவில் கட்டும் இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டன,” என்றனர்.
ராமர் கோவிலின் கருவறையில் வைப்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் மூன்று சிலைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதில் சிறந்த சிலை தேர்வு செய்யப்பட்டு கருவறையில் நிறுவப்படும்.
கும்பாபிஷேகம் எப்போது?

பட மூலாதாரம், ANI
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் பணிகளைக் கவனித்து வரும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, பிரான் பிரதிஷ்டா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
அறக்கட்டளை இந்த நிகழ்ச்சிக்காக விருந்தினர்களை அழைக்கத் தொடங்கியுள்ளது.
கோவிலின் கருவறை கட்டுமானப் பணிகள் 24 மணிநேரமும் நடைபெற்று வருகிறது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோதி உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய கோவிலுக்கு அர்ச்சகர்கள் தேர்வும் நடக்கிறது.
நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்கள் எங்கே?

பட மூலாதாரம், ANI
நேபாளத்தில் இருந்து அனுப்பப்பட்ட கற்கள் சிலைகள் செய்ய பயன்படாததால், இந்த கற்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நேபாள மற்றும் இந்திய அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.
இந்தச் செய்தியை எழுதும் வரை, இந்தக் கற்களின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.
இந்தக் கற்களை நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பும் திட்டத்தைக் கொண்டு வந்த நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சரும், நேபாள காங்கிரஸ் தலைவருமான பிமலேந்திர நிதி, கற்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
“அந்தக் கல்லில் சிலை செய்ய முடியாது. அதனால் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
“சிலை அமைக்காவிட்டாலும், கோவில் வளாகத்தில், மக்கள் வழிபடும் வகையில், புனிதக் கல் கண்ணியமாக நிறுவப்படும்,” எனக் கூறினார் நிதி.
ராமரின் திருமண நாளில் அயோத்தியில் இருந்து ஜனக்பூரில் உள்ள ஜானகி கோயிலுக்கு மக்கள் வருவது வழக்கம். அதே பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான வழியை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு, நேபாள நாடு காளிகண்டகி கற்களை அனுப்ப முன்வந்தது.
கற்கள் எடுக்கப்பட்ட பெனி நகராட்சியின் மேயர் சூரத் கேசி கூறுகையில், “இந்தக் கற்கள் காங்கிரஸ் தலைவர் பிமலேந்திர நிதியின் முயற்சியால் அனுப்பப்பட்டதாகவும், அவை நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு சிலைகள் தயாரிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகிறார்.
ஆனால், சிலைகள் அமைக்கப்படவில்லை என்பதை அறிந்து வேதனை அடைந்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தக் கற்களை அனுப்பியவர்களிடம், இந்தக் கற்களால் சிலை செய்யப்படவில்லை என்றால் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளேன். இந்தக் கற்களால் சிலை செய்ய நாங்கள் வலியுறுத்தியும், சிலை செய்யப்படவில்லை.”
“நாங்கள் சொல்வது என்னவென்றால், நாங்கள் இந்தக் கற்களுக்கு கண்ணியமான ஒரு இடம் கொடுக்கப்பட வேண்டும்,” என்றார் சூரத் கேசி.
ஜானகி கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட கற்கள்

பட மூலாதாரம், KULRAJ CHALISE
நேபாளத்தால் முன்மொழிவு அனுப்பப்பட்ட பிறகு, அயோத்தியின் ராமர் கோயில் கட்டுமானக் குழு, கற்களை வழங்குமாறு ஜானகி கோவில் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் இந்தக் கற்களை இந்தியாவுக்கு அனுப்ப நேபாள அரசு முறையான முடிவு எடுத்தது.
இதற்குப் பிறகு, நேபாளத்தின் கண்டகி மாகாண அரசு, ஜானகி கோவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்தக் கற்களை அயோத்திக்கு அனுப்பியது.
இந்நிலையில், ராமர் கோவில் கட்டும் பணியைக் கவனித்து வரும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகளும் நேபாளம் வந்து சில நாட்கள் தங்கியிருந்து இந்த கற்களைத் தேடிக் கண்டுபிடித்து அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கற்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றுடன் செப்புத் தகடு ஒன்றும் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செப்புத் தகட்டின் மூன்று பிரதிகள் நேபாள மத்திய அரசு, கண்டகி மாகாண அரசு மற்றும் ஜானகி கோவிலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கற்கள் சிலை செய்ய அயோத்திக்கு அனுப்பப்படுவதாக இந்த செப்புத் தகட்டில் எழுதப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியிட்ட இந்த செப்புத் தகடு பின்வருமாறு கூறுகிறது, “நேபாள அரசின் ஒப்பந்தம் மற்றும் கந்தகி மாகாண அரசின் முடிவின்படி, இந்தியாவின் அயோத்தி தாமின் ஸ்ரீ காளிகண்டகி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து (பெனி நகராட்சி வார்டு எண். 6. தோல்பாகர்) ராம்லீலா சிலையை நிர்மாணிக்க இரண்டு கற்கள் மியாக்டியால் வழங்கப்படும். முதல்வர் ஸ்ரீ காக்ராஜ் அதிகாரியின் சார்பில் ஜனக்பூர்தத்தில் ஜானகி கோவிலில் கற்கள் வழங்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.”
கற்கள் குறித்து அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்

பட மூலாதாரம், KULRAJ CHALISE
கல்லை அனுப்பிய கண்டகி மாநில அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுசீலா சிங்கடாவிடம் கேட்டபோது, முதலில் சிலை செய்ய அனுப்பப்பட்டதாகவும், அது செப்புத் தகட்டிலும் குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் அயோத்தியை அடைந்த பிறகு சிலை செய்யப்படவில்லை, இது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது,” என்று கூறினார்.
ஜனக்பூரில் உள்ள ஜானகி கோவிலின் பூசாரி ராம்ரோஷன் தாஸிடமும் இது குறித்து பிபிசி கேட்டது. “நேபாளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கற்களின் சமீபத்திய நிலை குறித்து எனக்குத் தெரியாது,” என்று அவர் பதிலளித்தார்.
தேவ்ஷிலா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது
நேபாளத்தின் சில பிரதிநிதிகள் இந்தக் கற்களால் சிலை செய்யப்படாவிட்டாலும், அவை சாளக்கிராம வடிவத்தில் வழிபடப்படும் என்று கூறுகிறார்கள்.
இந்தக் கற்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட குல்ராஜ் சாலிசா என்பவர் கூறுகையில், “இந்தக் கற்கள் கோவில் வளாகத்தில் மட்டுமே வைக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது”
சாளக்கிராமக் கற்களின் கலாசார முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அறிஞர்களில் ஒருவராக சாலிசா கருதப்படுகிறார். சிறிய கல்லை சாளக்கிராமமாகவும், பெரிய கல்லை அடித்தளமாகவும் நிறுவப் போவதாக அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அறக்கட்டளை அதிகாரிகளிடம் அவர் அளித்த தகவலை பிபிசி உறுதிப்படுத்தவில்லை. அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயை தொடர்புகொள்ள பிபிசி பலமுறை முயன்றும் பலனில்லை.
சாலிசாவின் கூற்றுப்படி, அவர் கடந்த ஜூன் மாதம் நேபாள புவியியலாளர் ஒருவருடன் அயோத்திக்கு சென்றிருந்தார். அங்கு அவர் கற்களின் நிலையைப் பார்த்துள்ளார்.
சிற்பிகள் ஒரு பெரிய பாறையில் ஒரு சிலையைச் செதுக்க முயன்றபோது, அது மிகவும் கடினமாக இல்லை என்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறுகிறார்.
இந்தக் கற்கள் மரியாதைக்குரிய முறையில் வைக்கப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார். ஆனால், சிலைகள் செய்வதற்கு அனுப்பப்படும் கற்கள் வேறு வழியில் பயன்படுத்தப்படுகிறது என்றால், அதுபற்றி அரசு தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.
அவர் கூறியது, “இந்த கல் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு ஜானகி கோயில் நிர்வாகத்தால் ‘கோதுவா’ பரிசாக வழங்கப்பட்டது, அதில் நேபாள வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்பட்டது. மகளுக்கு கொடுத்த வரதட்சணையைத் திரும்பப் பெற முடியாது. ஆனால் கோதுவா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து மெய்தே தரப்புக்கு தெரிவிக்கப்பட வேண்டும்,” என்கிறார்.
ஒரு சிலையை உருவாக்கினால், அவை தங்களின் சாளக்கிராம அடையாளத்தை இழந்துவிடும். ஆனால் அதை ஒரு கல் வடிவத்தில் வைத்திருப்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்.
“தேவ்ஷிலா எவ்வாறு கொண்டு வரப்பட்டதோ அதே மரியாதையுடன் அங்கு வைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான முடிவு

பட மூலாதாரம், ANI
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 5 ஆகஸ்ட் 2020 அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை இந்து தரப்புக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையே நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு 2019 நவம்பரில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஒரு வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்தின் 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதும் இந்த முடிவில் அடங்கும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்