நியூஸ்க்ளிக் வழக்கு: பறிமுதல் செய்த செல்போன், லேப்டாப்பில் காவல்துறையே ஆதாரங்களை வைக்க முடியுமா?

நியூஸ்க்ளிக் வழக்கு: பறிமுதல் செய்த செல்போன், லேப்டாப்பில் காவல்துறையே ஆதாரங்களை வைக்க முடியுமா?

நியூஸ்க்ளிக் மீதான வழக்கு

பட மூலாதாரம், URMILESH

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கூற்றுபடி, நியூஸ்கிளிக் என்ற செய்தி இணையதளத்தில் அக்டோபர் 3ஆம் தேதி டெல்லியில் 88 இடங்களிலும் மற்ற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

“பெரிய எண்ணிக்கையில்” கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களில் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் நியூஸ்கிளிக் பத்திரிகையாளர்களின் பென் டிரைவ்கள் ஆகியவை அடங்கும், அவற்றை பறிமுதல் செய்ததன் மூலம் தனியுரிமைக்கான அடிப்படை உரிமை பற்றிய கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. இது தொடர்பான முதல் மனுவை 5 கல்வியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் 2021ல் தாக்கல் செய்தனர்.

ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் சாதனங்களை ஸ்கேன் செய்து பறிமுதல் செய்வதை எதிர்த்து, கடந்த ஆண்டு, ஊடக வல்லுநர்களுக்கான அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த சாதனங்கள் ‘தனிப்பட்ட தரவுகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றை பறிமுதல் செய்வது தனியுரிமைக்கு எதிரானது’ என்று ஒரு வாதம் அப்போது முன்வைக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா பண்டாரி கூறுகையில், “தற்போதைய சோதனைகள் கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமைகளை கடுமையாக மீறியுள்ளன,” என்றார்.

“எந்தவொரு அடிப்படையும் அல்லது வழிகாட்டுதலும் இல்லாமல் மின்னணு ஆதாரங்களைக் கைப்பற்றுவது மிகவும் தொந்தரவாக உள்ளது. இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

ஊடக வல்லுநர்களுக்கான அறக்கட்டளை, பத்திரிகையாளர்களின் தரவு மற்றும் மின்னணு சாதனங்கள் தன்னிச்சையாக கைப்பற்றப்பட்டன என்பதுடன் அவற்றின் குளோன் பிரதிகள், ஹாஷ் மதிப்புகள் மற்றும் சான்றுகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நேர்மையை உறுதிப்படுத்த தேவையான பிற முக்கியமான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது என்று கூறுகிறது.

நியூஸ்க்ளிக் மீதான வழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விசாரணை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பத்திரிகை துறையினரும், சட்ட நிபுணர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இது அப்பட்டமான தனியுரிமை மீறல்”

அக்டோபர் 3 ஆம் தேதி, நியூஸ்க்ளிக் உடன் தொடர்புடைய பத்திரிகையாளர் அபிசார் ஷர்மாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது என்பதுடன் அவரது இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அபிசார் ஷர்மா, இந்த சாதனங்களை கைப்பற்றும் போது, ​​தனக்கு எந்த உத்தரவும் காட்டப்படவில்லை என்றும், அல்லது எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், தான் ஒரு புத்தகம் எழுதி, ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இதெல்லாம் தனது லேப்டாப்பில் இருப்பதாகவும், அதனால் இந்த லேப்டாப் தனக்கு விலைமதிப்பற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத்தில் எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய முன்னாள் பத்திரிகையாளரிடம் பிபிசி பேசியது.

அக்டோபர் 3-ம் தேதி காலை, டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு அவரது வீட்டுக் கதவைத் தட்டியது. அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய போலீசார், செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

இந்த முன்னாள் பத்திரிக்கையாளர், “என்னுடைய போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தபோது, ​​அரசு ஆவணமோ, உத்தரவோ எதுவும் காட்டப்படவில்லை. இது நியூஸ்க்ளிக் தொடர்பான விவகாரம் என்றார்கள்” என்றார்.

இந்த முன்னாள் ஊடகவியலாளர், தாங்கள் கைப்பற்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி, நியூஸ்கிளிக் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அவருடைய சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப் ஆகியவை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 20 நாட்களுக்கு முன் திருப்பி தரப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், “இது தனியுரிமை மீறல். இந்த சாதனங்களில் எனது தனிப்பட்ட தரவு, நபர்களின் தொடர்பு எண்கள் உள்ளன. அவற்றைப் பறிமுதல் செய்தவர்கள், அவற்றில் எந்த ஒரு புதிய தகவலையும் வைக்க முடியும் என்பதற்கு ஏற்கெனவே ஆதாரங்கள் உள்ளன. மேலும், அந்த சாதனங்களில் என்ன இருந்தன என்பது குறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பதுடன், அவற்றை அவர்கள் எடுத்துச் சென்றதற்காக எந்த உத்தரவையும் வழங்கவில்லை. ஒரு மாதம் கழித்து, ஏதாவது புதிய தகவல்கள் அவற்றில் இருந்து கிடைத்தன என போலீசார் கூறினால் எதையும் செய்ய முடியாது,” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தையடுத்து பல முன்னாள் ஊடகவியலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நியூஸ்க்ளிக் மீதான வழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மின் அணு சாதனங்களில் விசாரணை அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான தகவல்களைக் கூட பதிவு செய்யமுடியும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

“போலீசாருக்குத் தேவையான ஆதாரங்களை எளிதில் அவர்கள் இந்த சாதனங்களுக்குள் பதிவு செய்யலாம்”

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுரேந்திர காட்லிங்கின் மடிக்கணினி 20 மாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளதாக 2021ல் ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. 100 நாட்களுக்கும் மேலாக அந்த மடிக்கணினியில் ஆட்சேபனைக்குரிய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த அறிக்கையின்படி, மசாசூசெட்ஸை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங், பாதுகாப்புத் துறையினரின் வழக்கறிஞர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கணினிகளின் மின்னணு நகல்களையும், சுரேந்திர காட்லிங் மற்றும் ரோனா வில்சன் ஆகிய இரு ஆர்வலர்களின் மின்னஞ்சல் கணக்குகளையும் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான ரோனா வில்சனின் மடிக்கணினியில் ஆதாரங்களை வைத்ததாகக் கூறப்படும் அதே நபருக்கு கேட்லிங்கும் இலக்கானார் என்றும் ஆர்சனல் கன்சல்டிங் கண்டறிந்தது.

ராம் ராமசாமி, சுஜாதா படேல், மாதவ் பிரசாத், முகுல் கேசவன் மற்றும் தீபக் மல்கான் ஆகிய 5 கல்வியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தனியுரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டை எழுப்பிய வழக்கை வழக்கறிஞர் பிரசன்னா நடத்திவருகிறார்.

பிரசன்னா கூறும்போது, ​​“போலீஸ் ஏஜென்சிகள் மின்னணு சாதனங்களை கைப்பற்றுவது அல்லது தேடுவது தொடர்பான கையேடு அல்லது நெறிமுறைகள் எதுவும் இல்லை. மின்னணு சாதனங்களை சேதப்படுத்துவது எளிது, ஆதாரங்களை வைப்பது எளிது. வயர்லெஸ் மூலம் கோப்புகளை அணுகலாம், மாற்றலாம். எனவே சாட்சியங்களின் ஒருமைப்பாடு இன்னும் முக்கியமானதாகிறது. எனவே மின்னணு சாதனங்களின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய காவல்துறைக்கு என்ன நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன?” எனக் கேள்வி எழுப்பினார்.

அந்த சாதனங்கள் கைப்பற்றப்பட்ட நேரத்தில், தரவுகளை குளோன் செய்து ஹாஷ் மதிப்பை வழங்கும் நிலையில் காவல்துறை இருக்க வேண்டும் என்று பிரசன்னா கூறுகிறார்.

“ஏனென்றால், சாதனங்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், கைப்பற்றப்பட்ட நேரத்தில் உள்ள ஹாஷ் மதிப்பும் சோதனையின் போது இருக்கும் ஹாஷ் மதிப்பும் வித்தியாசமாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

அதனால்தான் விசாரணையின் போது நிரூபிக்க எதுவும் இருக்காது என்பதால் இதுபோன்ற நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை என்றும் தோன்றுகிறது என்கிறார்கள்.

தொடர்ந்து அவர் பேசிய போது, “மின்னணு ஆதாரங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான அடிப்படை நெறிமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், விசாரணையின் போது உங்களால் எப்படி எதையும் நிரூபிக்க முடியும்? டிஜிட்டல் சாதனங்களில் ஏதேனும் குற்றச்சாட்டை காவல்துறை கண்டுபிடித்ததாக வைத்துக்கொள்வோம். பின்னர் அவர்கள் எப்படி செய்வார்கள்? அவர்கள் எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை என்றால் அதை எப்படி நிரூபிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மொபைல் போன்கள் போன்ற தனிப்பட்ட டிஜிட்டல் சாதனங்களில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன என்கிறார் பிரசன்னா. “உங்கள் மனைவி, உங்கள் வழக்கறிஞர், உங்கள் மருத்துவர், தனிப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றுடன் முக்கியமான கடிதப் பரிமாற்றங்கள் அவற்றில் இருக்கலாம். பத்திரிகையாளர்கள் அவர்களின் ஆதாரங்களுடன் கடிதப் பரிமாற்றம் செய்கிறார்கள். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள் எங்கே?”

பிரசன்னா இன்னொரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறார். “விசாரணை முகமைகள் நாளை வாட்ஸ்அப் அரட்டைகளை கசியவிடாது என்று எங்களுக்கு எப்படித் தெரியும். ரியா சக்ரவர்த்தி மற்றும் அர்னாப் கோஸ்வாமி வழக்குகளில் அவர்களின் வாட்ஸ்அப் அரட்டைகள் கசிந்ததை நாங்கள் பார்த்தோம். இந்த வழக்குகளில் பொறுப்பேற்கும் சட்டங்கள் எங்களிடம் இல்லை. இதை எப்படி ஏற்பது?”

நியூஸ்கிளிக் வழக்கு

“ஒவ்வொரு குடிமகனும் தீவிரவாதியாக கருதப்படுகிறார்”

பிரசாந்த் டாண்டன் ஒரு சுதந்திரமான பத்திரிகையாளர். 2022 ஆம் ஆண்டில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஒரு வழக்கை விசாரிக்கும் போது அவரது மொபைல் போனையும் பறிமுதல் செய்தது. அந்த மொபைல் போன் இன்று வரை அவருக்கு திருப்பி தரப்படவில்லை.

“இதுபோன்ற போலீஸ் நடவடிக்கை சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதுதான் கேள்வி? நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மட்டுமே இந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒருவரின் டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீசார் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். அது ஏன்?” என அவர் கேட்கிறார்.

மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்களை பறிமுதல் செய்வது குறித்து ஆழ்ந்த கவலைகள் உள்ளன.

டாண்டன் கூறுகையில், “ஒருவரின் மொபைல் போனை பறிமுதல் செய்தால், அதில் போலீசார் என்ன போடுவார்கள் என்பது யாருக்குத் தெரியும். அது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. காவல்துறையை நம்ப முடியாது. பீமா கோரேகான் வழக்கில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைப் பார்த்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணினிகளில் ஆதாரங்கள் பதிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

தொலைபேசி மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று டாண்டன் கூறுகிறார். “தொலைபேசியில் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்த விரும்பாத செய்திகளும் இருக்கும். இங்கு தனியுரிமைச் சிக்கல் அதிக அளவில் உள்ளது.”

பிரசாந்த் டாண்டனின் கூற்றுப்படி, “ஒவ்வொரு குடிமகனும் ஒரு சாத்தியமான பயங்கரவாதியாக கருதப்படுவதே அடிப்படை பிரச்சனை.”

“இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரது தனியுரிமையைப் பாதுகாக்க உரிமை உண்டு. தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

நியூஸ்க்ளிக் மீதான வழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முறையான சட்டத்தின் அடிப்படையிலேயே விசாரணை அமைப்புகள் மின் அணு சாதனங்களைப் பறிமுதல் செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு என்ன சொல்கிறது?

இது தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சிபிஐ கையேட்டில் மின்னணு ஆதாரங்களைக் கைப்பற்றுவது தொடர்பான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சட்டம்-ஒழுங்கு மாநில அரசின் கையில் இருப்பதால் தேசிய அளவில் இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அமைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குற்றத்தின் தன்மை, குற்றவாளிகளின் செயல் முறை மற்றும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் உள்ள நடைமுறைச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நல்ல சர்வதேச நடைமுறைகளை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

பெரும்பாலான ஏஜென்சிகள் இந்த விஷயத்தில் சில வழக்கமான நடைமுறைகளைக் கொண்டுள்ளன. சிபிஐ வசம் இருக்கும் கையேடுகள் டிஜிட்டல் சான்றுகள் பற்றிய விஷயத்தை விரிவாகக் கையாள்வதாகவும், நாட்டின் சட்டப்பூர்வ வரம்புகளுக்குள் இருக்கும் முக்கியமான பாதுகாப்புகளுடன் அரசியல் சாசன விதிகளின்படி ஒரு செயல்முறையை வகுத்துள்ளதாகவும் அரசு கூறுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *